search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தினர்
    X
    தஞ்சை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தினர்

    தஞ்சை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் திடீர் போராட்டம் - 253 பேர் கைது

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 253 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தொடர்ந்து மறுத்து வரும் மத்திய அரசை கண்டித்து பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் சாமிநடராஜன், மாதவன், பொன்னுசாமி, உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தொடர்ந்து காலம் கடத்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பி ரெயில் நிலையத்தை முற்றுகையிட பேரணியாக வந்தனர். அங்கு ஏற்கனவே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த வல்லம் டி.எஸ்,பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரெயில் நிலையம் முன்பு பேரிகார்டு வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ரெயில் நிலையம் முன்பு அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். அவர்களிடம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் பேச்சு வார்த்தையில் உடன்படவில்லை. இதனால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 253 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகள் சங்கத்தினர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சை ரெயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை உச்சநீதி மன்றம் கண்டிக்க வேண்டும். மேலும், மேலும் கால அவகாசம் கேட்டு தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. மத்திய அரசிற்கு சாதகமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

    இதனால் ஜூன் 12-ந் தேதிக்குள் மத்திய அரசு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. டெல்டா மாவட்டத்திற்கு முறையாக தண்ணீர் வராத காரணத்தினால் 7 ஆண்டுகள் குறுவை சாகுபடி செழிக்கவில்லை.

    உச்சநீதி மன்றம் வழங்கும் உத்தரவை பொறுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அடுத்த கட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×