search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tanjore Railway station"

    அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் தஞ்சை ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்தது. திருச்சி- விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைப்பதற்கு முன்பு தஞ்சை வழியிலான ரெயில் பாதை தான் முக்கியத்தடமாக விளங்கியது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இந்த வழியாகத்தான் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    திருச்சி - விழுப்புரம் ரெயில்பாதை செயல்பாட்டுக்கு வந்த பின்னர் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை ரெயில் நிலையம் திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மொத்தம் 5 நடைமேடைகள் உள்ளன. தஞ்சையில் இருந்து திருச்சி இடையே தற்போது இரட்டை ரெயில்பாதை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் 23-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னை, கோவை, திருச்செந்தூர், எர்ணாகுளம், கோயம்புத்தூர், திருப்பதி, ராமேஸ்வரம், புதுச்சேரி, கன்னியாகுமரி, மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர 15-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் களும் இயக்கப்பட்டு வரு கின்றன.

    இதனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதில் இருந்து ரெயில்களில் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது. மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (தஞ்சை, நாகை, திருவாரூர்) சுற்றுலா தலங்கள், புண்ணிய தலங்கள் போன்றவை உள்ளன. இங்கு வருவோர்களும் ரெயில் பயணத்தையே அதிக அளவில் விரும்புகிறார்கள்.

    தஞ்சை ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் டிக்கெட் வழங்கும் மையங்கள் உள்ளன. தற்போது முன்பதிவு மையங்களிலேயே, முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பிட்ட ஒரு மையத்தில் தான் வழங்கப்படுகிறது. இதனால் டிக்கெட் எடுப்பதற்காக கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதை பயன்படுத்தி திருடர்களும் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். குறிப்பாக பயணிகள் வரிசையில் டிக்கெட் எடுக்க நிற்கும் போது அவர்களை போல் திருடர்களும் வரிசையில் நின்று கொண்டு பயணிகளை ஏமாற்றி பணம், செல்போன் போன்றவற்றை பறித்து சென்று விடுகிறார்கள்.

    தஞ்சை ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாதது திருடர்களுக்கு மிகவும் வசதியாகி விட்டது. முன்பு ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவி வைக்கப்பட்டு ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தற்போது மெட்டல் டிடெக்டர் கருவியும் இல்லை. போலீசாரும் பாதுகாப்பு பணியில் இல்லாதது திருடர்களுக்கு துணிச்சலை கொடுப்பதால் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பயணிகள் அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்கும், ரெயில்களில் வரும் பயணிகளை அழைத்து செல்வதற்கும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களில் வருகின்றனர். அவர்கள் தங்களது வாகனங்களை ரெயில் நிலையத்தின் முன்பு நிறுத்தி விட்டு செல்கின்றனர். அந்த வாகனங்களை குறி வைத்து சிலர் திருடிச் செல்கின்றனர். ரெயில் நிலையத்திற்கு பின்பகுதியிலும் ஒரு வழி உள்ளது. அந்த வழியில் எந்த பாதுகாப்பும் கிடையாது. திறந்தவெளி மைதானம் போல் காணப்படுகிறது. இதனால் பின்பகுதியில் இரவு நேரங்களில் வேண்டபடாத சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    எனவே தஞ்சை ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் மையம் இருக்கும் நுழைவு பகுதி, ரெயில் நிலையம் முகப்பு, 5 நடை மேடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்து பயணிகளின் அச்சத்தை போக்க ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசாரும் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப் பாகும்.

    இது குறித்து ரெயில் பயணிகள் சிலர் கூறியதாவது:-

    திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நுழைவு பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சுற்றுலா தலமாக விளங்கும் தஞ்சையில் உள்ள ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாதது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களில் ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தால் பதற்றத்துடன் தான் நடைமேடையில் நிற்க வேண்டி உள்ளது.

    ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் கூட கண்காணிப்பு கேமரா இருந்தால் குற்றவாளிகளை எளிதாக கண்டு கொள்ள முடியும். சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டார். அங்கே கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளியை கண்டறிய காலதாமதம் ஏற்பட்டது. அந்த சம்பவத்திற்கு பிறகு ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதன்பின்னரும் தஞ்சை ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், அந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறியவும் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ரெயில்வே போலீசார் கூறும்போது, ஒவ்வொரு நடைமேடையிலும் காவலர் உதவி மையம் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நடைமேடைகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் வழங்கும் மையம், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் பகுதியில் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினர். 
    ×