என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய போது எடுத்த படம்.
    X
    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய போது எடுத்த படம்.

    மக்கள் இனி மாட்டு வண்டியில் தான் போக வேண்டும்: இளங்கோவன் பேச்சு

    மக்கள் இனி மாட்டு வண்டி, குதிரை வண்டியில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கோபி நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

    அறக்கட்டளை தலைவர் டாக்டர் தில்லைநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் நல்லசாமி வரவேற்றார். காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதில் கலந்து கொண்டு புதியகட்டித்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி நன்கு வளர்ந்து வருகிறது. நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. அடுத்து வரும் 8 மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி வெளி நாடுகளுக்கு செல்வதிலேயே குறிக்கோளாக உள்ளார். நாட்டு மக்களின் கஷ்டங்களை எண்ணிப் பார்ப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், விலைவாசி உயர்ந்து வருகிறது.

    மேலும் ஜி.எஸ்.டி. போன்ற வரிகளைப் விதித்ததால், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அதிமுக எம்.பி.க்கள் தமிழக மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை.

    தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. ஓட்டை உடைசல் பஸ்கள் தான் ஓடுகின்றன. ஆனால், பஸ் கட்டணத்தை வி‌ஷம் போல் உயர்த்தியுள்ளார்கள். இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    இனி மாட்டு வண்டி, குதிரை வண்டியில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பஸ் கட்டண குறைப்பு என்பது கண் துடைப்பு வேலை. மக்களை ஏமாற்றும் செயலாகும். மீண்டும் அரசு பஸ்களில் பழைய கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதியடைவார்கள்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஒருவர் வெற்றி பெற்று இருக்கிறார். இது மிக கேவலமாக உள்ளது. இவர்கள் எல்லாம் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தான் கொடுத்துள்ளார்கள் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஓட்டுக்காக பணம் வாங்கும் போது நாம் நமது சுய மரியாதையை இழக்கிறோம். அதன் பிறகு நாம் அவர்களிடம் நமது குறைகளை போய் கூற முடியாது. பணம் வாங்கிக் கொண்டு தான் ஓட்டு போட்டாயல்லவா எனக்கூறி நம்மை மதிக்க மாட்டார்கள், இழிவுபடுத்துவார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதன் மூலம் அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களுக்கும் நம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள முடியும்.

    என்னைப் பொருத்த வரை நான் சாதாரண காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக இருந்து உங்களோடு ஒருவராகப் பணியாற்றவே விரும்புகிறேன். நான் பதவிக்கு ஆசைப்படுவதில்லை. எம்.எல்.ஏ. எம்.பி. மத்திய அமைச்சர், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் போன்ற அனைத்து பதவிகளையும் வகித்து விட்டேன். அதை எல்லாவற்றையும் விட உங்களின் பாசமும், அன்பும் தான் நிரந்தரம்.

    காங்கிரஸ் கட்சியில் சிலருக்கு பதவி கிடைக்கும். பலருக்கு கிடைக்காது. இதை கட்சியில் உள்ளவர்கள் வேற்றுமை பாராமல் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். மேலும், இதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் 3 வாரங்களில் நான் ஒவ்வொரு நகர, வட்டாரமாக வந்து உங்களை சந்தித்து பேச உள்ளேன்.

    கோபியில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் அரசியல் கேள்விகளுக்கு பதில் கூறமாட்டார். ஏனென்றால் அவருக்கு அரசியல் தெரியாது.

    இவ்வாறு இளங்கோவன் பேசினார்.  #tamilnews



    Next Story
    ×