என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோடு கோவிலில் திருடப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு - 3 பேர் கைது
    X

    திருச்செங்கோடு கோவிலில் திருடப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு - 3 பேர் கைது

    திருச்செங்கோடு சிவன் கோவிலில் ரூ.7 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம், நந்தி சிலையை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் மர்ம நபர்கள் சிலர் தாங்கள் கடத்தி வந்த விலை மதிப்புமிக்க மரகத லிங்கத்தை விற்பனை செய்ய பேரம் பேசி வருவதாக, டி.ஜி.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கருணாகரன் ஆகியோர் நேற்று காலை ஈரோட்டுக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் மாறு வேடத்தில் சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அறை எண் 21-ல் சந்தேகப்படும்படியாக சிலர் தங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

    அப்போது அறையில் மரகதலிங்கம் மற்றும் மரகத நந்தி சிலை மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த அறையில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மணிராஜ் (வயது 50), ஈரோட்டை சேர்ந்த கஜேந்திரன், சந்திரசேகரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இந்த மூவரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சிவன் கோவிலில் இருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலைகளை திருடியதும், அந்த 2 சிலைகளையும் ரூ.7 கோடிக்கு பேரம் பேசி விற்க முயன்றதும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து போலீசார் அந்த 2 சிலைகளையும் அவர்களிடம் இருந்து மீட்டதுடன் 3 பேரையும் கைது செய்தனர்.

    இதுகுறித்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறியதாவது:-

    மீட்கப்பட்ட மரகதலிங்கம் மற்றும் மரகத நந்தி சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. இதில் மரகதலிங்கம் 3 அங்குல உயரமும், மரகத நந்தி சிலை 1 அங்குல உயரமும் கொண்டது.

    மீட்கப்பட்ட மரகத சிலைகளின் மதிப்பு ரூ.7 கோடிக்கும் அதிகமாகவே இருக்கும். இந்த 2 மரகத சிலைகளும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகள் நடைபெறும் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். அதுமட்டுமின்றி இந்த திருட்டு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது. எனவே அவர்களை பிடித்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×