search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்: மு.க.ஸ்டாலின்
    X

    அ.தி.மு.க. ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்: மு.க.ஸ்டாலின்

    அ.தி.மு.க. ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    கோவை:

    தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது-

    தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 2007-ல் இருந்து அண்ணா பிறந்த நாளையொட்டி பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்படுகிறது. 10-வது ஆண்டாக இந்த ஆண்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 14 ஆயிரத்து 625 மாணவ-மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 25 லட்சத்து 35 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவ சமூகத்தை சேர்ந்தவர்களை ஊக்கப்படுத்தி எதிர்காலத்தில் சமுதாய பணியில், பொதுப்பணியில் விழிப்படைய செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இதே போல தலைவர் கலைஞர் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 ஆயிரத்து 857 பேருக்கு ரூ. 3 கோடியே 79 லட்சத்து 73 ஆயிரம் வழங்கப்படுகிறது. அண்ணா மற்றும் கலைஞர் பிறந்தநாளையொட்டி மொத்தத்தில் இதுவரை 19 ஆயிரத்து 482 பேருக்கு ரூ.7 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறோம்.

    2007-ல் திருநெல்வேலியில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கலைஞர் மற்றும் அண்ணா பிறந்த நாளில் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்தி பரிசு வழங்கவேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் தி.மு.க. இளைஞர் அணிக்காக அறக்கட்டளை தொடங்கினோம். பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் வசூலித்து வங்கியில் செலுத்தி அதன் மூலம் கிடைக்கும் வட்டியை பயன்படுத்தி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கொண்டு இருக்கிறோம்.


    எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், மாணவர்களை ஊக்கப்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மறக்க முடியாத ஒன்று. மாணவ சமுதாயம் இன்று நாட்டின் அரசியல் நிலையை, பொருளாதார நிலை மற்றும் பல்வேறு பிரச்சினைகளை தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை உள்ளது. மொழியை காக்க, இனத்தை காக்க, போரிட்டு வெற்றிபெற்றது தமிழினம், தமிழினத்து மாணவர்கள், 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வர காரணமே மாணவர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்தி திணிக்கப்பட்ட போது பல தலைவர்கள் போராடி கொண்டு இருந்தார்கள். என்றாலும் அந்த போராட்டம் முழு வெற்றி பெற காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள் தான். சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் உங்களுக்கு தெரியும். இனத்தை காக்க, கலாச்சாரத்தை காக்க, மாணவர்கள் நடத்திய மெரினா புரட்சி போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று வெற்றிபெற வைத்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

    இனத்தை காக்க, மொழியை காக்க, எந்த தியாகத்தையும் செய்ய மாணவ சமுதாயம் முன்வரவேண்டும். தி.மு.க., ஆட்சி காலத்தில் மாணவர்கள் முன்னேற்றத்திற்காக எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி காட்டிய பெருமை கலைஞரை சேரும். கலைஞரின் பொது வாழ்க்கையே மாணவர் மன்றம் என்ற அமைப்பின் மூலம் தான் தொடங்கினார். அதன்பின்பு பத்திரிக்கை, நாடகம், அரசியல், என சென்று 5 முறை முதல்-அமைச்சராகவும் இருந்தார். தி.மு.க. ஆட்சி காலத்தில் பி.யு.சி. வரை இலவச கல்வி அறிவித்த ஆட்சி தி.மு.க. தான். அதன்பிறகு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, தொழிற்கல்வியில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும் தி.மு.க. ஆட்சியில் தான். 10, 12-ம் வகுப்பு படித்து வெளியேறும் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்கியதும் தி.மு.க. ஆட்சியில் தான். 1989-ல் நான் முதன் முதலாக சட்டமன்றத்தில் அமர்ந்த போது எனது முதல் பேச்சே மாணவர்களுக்காக அமைந்தது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவ்வாறு வழங்கினால் போக்குவரத்து கழகத்துக்கு பலகோடி இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் மாணவர்கள் முன்னேற்றத்துக்காக போக்குவரத்து கழகம் எவ்வளவு நஷ்டத்தை சந்தித்தாலும் கவலை இல்லை என கூறி முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் அதை நிறைவேற்றினார்.

    அனைவருக்கும் சமமான கல்வி தரவேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வியை நிறைவேற்றி தந்தவர் கலைஞர். ஆனால் இன்றைக்கு மருத்துவ கல்வியில் சேரவேண்டும் என்றால் எவ்வளவு இடையூறுகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா உயிரை மாய்த்து கொண்டார். 1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தி.மு.க. முதல் குரல் கொடுத்தோம். அதையே சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வந்தோம். அதன்பிற்கு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி வைத்தால் மத்திய அரசு அதைப்பற்றி கவலைப்படவில்லை. மாநில அரசும் அந்த தீர்மானத்தின் மீது அக்கறை காட்டவில்லை. 50 எம்.பி.க்களை வைத்திருக்கும் அ.தி.மு.க. ஜனாதிபதி தேர்தல் வந்தபோது பா.ஜனதா வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமானால் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும். உரிய அழுத்தம் கொடுத்து இருந்தால் விலக்கு கிடைத்திருக்கும். இந்த ஆட்சி எப்போது கவிழும் என்ற நிலை தான் உள்ளது. இவர்களின் சுயநலத்துக்காக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு மாணவர் சமுதாயம் எப்படி காரணமாக இருந்தார்களோ, அதே போல வரும் காலத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு நாங்களும் உறுதுணையாக இருந்தோம் என்ற உணர்வு உங்களுக்கு வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×