search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி விழாவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
    X

    ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி விழாவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதா பாணியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    சென்னை:

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது அவர் செல்லும் இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதுண்டு. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் அவர் இருந்ததால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஜெயலலிதா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன் வழி நெடுகிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பார்கள்.

    இந்த நிலையில் முதல்- அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அதே பாணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை அடையாறு ராஜா அண்ணாமலைபுரம் கிரின்ஸ்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி வசித்து வருகிறார்.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்-மணிமேகலை தம்பதியினரின் மூத்த மகன் ஆர்.சந்தோஷ்குமாருக்கும், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த டி.செந்தில்குமார்-ராஜஸ்ரீ தம்பதியினரின் மகள் எஸ்.ஸ்வர்ணாம்பிகாவுக்கும் இன்று காலை ஆரணியை அடுத்த சேவூரில் திருமணம் நடந்தது.

    நேற்று மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

    ஆரணியை அடுத்த சேவூரில் நடந்த இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி காரில் சென்றதால் அடையாறில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக அவரது வாகனம் சென்றது.

    இதையொட்டி சென்னையில் இருந்து சேவூர் வரை சாலையில் இரண்டு புறமும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

    பூந்தமல்லியில் இருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாவட்டம் ஒச்சேரியில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லையான தாமரைப்பாக்கம் வரை சாலையில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். 7 டி.எஸ்.பி., 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    சாலை சந்திப்புகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆற்காடு நகருக்குள் முதல்-அமைச்சர் வாகனம் சென்றபோது மற்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.


    திருவண்ணாமலை மாவட்டம் அப்பந்தாங்கல் கூட்ரோடு முதல் சேவூர் வரை திருவண்ணாமலை மாவட்ட போலீசார் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சில இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைத்திருந்தனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பூந்தமல்லி முதல் ஆரணி வரை சாலையின் இருபுறமும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வந்த போது சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்கள் அவரை கையசைத்து வரவேற்றனர். அவர்களை கண்டதும் காரை நிறுத்தி இறங்கி சென்று எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

    வாலாஜா டோல்கேட்டில் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் வேலூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் வரவேற்றனர். ஆற்காட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் தலைமையில் வரவேற்றனர்.

    திருவண்ணாமலை மாவட்ட எல்லையான அப்பந்தாங்கல் கூட்ரோட்டில் அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகள் மேள, தாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி வழிநெடுகிலும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 6.30 மணியளவில் திருமண மண்டபத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். மணமக்களை நேரில் வாழ்த்தி பரிசு பொருள் வழங்கினார்.

    இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார், காமராஜ், எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி, பெஞ்சமின், தங்கமணி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, நிலோபர்கபில், ராஜேந்திரபாலாஜி, சரோஜா, வளர்மதி, ராஜலட்சுமி, பாஸ்கரன், பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கோகுலஇந்திரா, வளர்மதி, வி.ஜி.பி.சந்தோஷ், புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், செஞ்சி ஏழுமலை எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×