என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபாரம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
- அவர் 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் களமிறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட அலிசா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் வீரர்கனைகள் முதல் இந்திய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவரது விக்கெட்டை முதலிலேயே வீழ்த்தியதால் அணியின் ஸ்கோர் பெரிய அளவில் வராது என நினைத்த நிலையில் அடுத்த விக்கெட்டுக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்டுடன் எலிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டு விளையாடினர். குறிப்பாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிரயாக விளையாடி சதம் விளாசினார். அவர் 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் இருந்து பெர்ரி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் 77 ரன்னில் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் (63) அடித்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 49.5 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
339 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் கடினமான பந்துவீச்சை லாவாகமாக எதிர்கொண்ட இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 341 ரன்கள் எடுத்தது.
கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் பத்து பவுண்டரி இரண்டு சிக்சர் என 88 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதேபோன்று நடுவரிசையில் தீப்தி சர்மா 24 ரன்களும், ரிச்சா கவுஸ் 26 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிலைத்து நின்று விளையாடி சதம் கடந்து 127 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 14 பவுண்ரிகள் அடங்கும்.
இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா இறுதிப்போட்டியில் மோதுகிறது.






