என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இப்படி ஒரு சாதனை படைத்த 3-வது இந்திய வீரர்: சப்ராஸ் கான் அசத்தல்
- முதல் இன்னிங்சில் சப்ராஸ் கான் டக் அவுட்டில் வெளியேறினார்.
- 2-வது இன்னிங்சில் 150 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
பெங்களூரு:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் 'டாஸ்' ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து 'ஆல்-அவுட்' ஆனது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்னும், டிவான் கான்வே 91 ரன்னும், டிம் சவுதி 65 ரன்னும் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்ப்ராஸ்கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக ஆடிய சப்ராஸ் கான் 110 பந்துகளில் சதத்தை எட்டினார். 4-வது டெஸ்டில் ஆடும் 26 வயது சர்ப்ராஸ்கான் அடித்த முதல் சதம் இதுவாகும். தொடர்ந்து ஆடிய சர்ப்ராஸ் கான் (150 ரன், 195 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்) டிம் சவுதி பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் கான், ரிஷப் பண்ட் ஜோடி 177 ரன்கள் திரட்டினர்.
இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 99.3 ஓவர்களில் 462 ரன்கள் குவித்து 'ஆல்-அவுட்' ஆனது. கடைசி 7 விக்கெட்டுகள் 54 ரன்களுக்குள் சரிந்தன.
முதல் இன்னிங்சில் 'டக்-அவுட்' ஆன சர்ப்ராஸ் கான் 2-வது இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ரன்னின்றி ஆட்டம் இழந்து விட்டு 2-வது இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற சிறப்பை சர்ப்ராஸ் கான் பெற்றார். ஏற்கனவே இந்திய வீரர்களில் மாதவ் ராவ், நயன் மோங்கியா இதனை போல் சாதித்துள்ளனர்.






