என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

மிட்செல் ஸ்டார்க் எங்களிடம் இருந்து போட்டியை பறித்துவிட்டார்: சஞ்சு சாம்சன்
- டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.
- இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான் என தெரிவித்தார் சஞ்சு சாம்சன்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், நிதிஷ் ரானா அரை சதம் கடந்து அவுட்டாகினர்.
இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:
காயம் ஏற்பட்டதால் என்னால் பேட் செய்ய முடியவில்லை. இதனால் நான் களத்திற்கு மீண்டும் வரவில்லை. தற்போது நல்ல முறையில் உணர்கின்றேன். என் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துவிட்டு அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
உண்மையில் நாங்கள் நன்றாகத்தான் பந்து வீசினோம். போட்டியின் சில கட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடினார்கள். எனினும் அதையும் சமாளித்து நாங்கள் பேட்டிங் செய்தோம்.
என்னுடைய பீல்டர்களுக்கும், பவுலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அணி வீரர்கள் இன்று களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான். அந்த அளவுக்கு எங்கள் அணியில் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாங்கள் பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தோம்.
ஆனால் டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் மிட்செல் ஸ்டார்க் என்ற ஒரே வீரரால் தான் நாங்கள் தோற்றோம். உலகின் மிகச் சிறந்த பவுலர் என்று மீண்டும் ஸ்டார்க் நிரூபித்து இருக்கின்றார். இதனால் மிட்செல் ஸ்டார்க்கிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் தான் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.
நாங்கள் பேட்டை கடுமையாக சுற்றி ரன்கள் அடிக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் போட்டியை எங்களிடமிருந்து ஸ்டார்க் கவர்ந்து சென்று விட்டார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் எங்கள் அணியில் ஒரு நல்ல உத்வேகம் கிடைத்திருக்கும். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என தெரிவித்தார்.






