என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • அனைவருக்கும் வாழ்வில் பல சவால்கள் ஏற்படும் தான்.
    • தர்ம பாதையினை விட்டு அதர்ம பாதையில் செல்லக்கூடாது.

    நல்ல கருத்துக்களை கேட்பதற்காக பல வருடங்களுக்கு முன்பு மக்கள் ஒன்று கூடுவதற்கு நல்ல இடங்கள் இருந்தன. அங்கு மக்களுக்கு படித்தவர்கள், குருமார்கள் பல நல்ல செய்திகளை 'பிரசங்கம்' செய்வார்கள். இது பல காலமாக நடந்து வரும் நிகழ்வு. இந்த நிகழ்வுகள் இன்றும் தொடர்கின்றன.

    காலத்தின் முன்னேற்றம் காரணமாக பல அறிஞர்களின் சொற்பொழிவுகளை உட்கார்ந்த இடத்திலேயே ஒரு சிறிய செல்போன் உதவியுடன் கேட்கின்றோம். இது மிக நல்லதே. வால்மீகியின் ராமாயணம் என்கின்றோம்.

    வேத வியாசரின் மகாபாரதம் என்கின்றோம். இவை நடந்தது நடந்தபடியே சிறிதும் மாறாமல் அப்படியே இருக்கின்றது என்று நம்மால் உறுதி அளிக்க முடியாது. காலம் செல்ல செல்ல சில நீக்கல்கள் இருக்கலாம். சில இடைச் செருகல்கள் இருக்கலாம். மையக் கருத்து மாறாமல் இருக்கின்றது எனலாம்.

    அவ்வகையில் சில உரையாடல்களாக நாம் சில பகுதிகளை நாம் அறிந்த மொழியில் படிக்கின்றோம். அவற்றி னை நிரூபணம் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. மனிதனுக்கு நல்லவை ஆற்றுபவையாயின் அவையும் வரவேற்கத்தக்கதே.

    மகாபாரதத்தில் கர்ணன், கண்ணன் இடையே நிகழ்ந்த உரையாடலாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளதனைப் படிப்போம்.

    கர்ணன்- 'நான் முறையான உலக வழக்கப்படி பிறக்காதது என் தவறா?

    'என் அன்னை நான் பிறந்த உடனேயே என்னை பரிதவிக்க விட்டுச் சென்று விட்டாள்.

    'நான் சத்ரியன் அல்ல என்று கருதப்பட்டதால் எனக்கு தகுதி யோடு படிப்பு கற்றுத் தரப்பட வில்லை.

    'குரு பரசுராமன் அவர்கள் எனக்கு வித்தைகள் கற்றுத் தந்தாலும் அவை எனக்கு மறந்து போகும் என சாபமளித்தார். அவ ருக்கு அப்போது நான் குந்தியின் மகன் என்று தெரியாது.

    'திரவுபதியின் சுயம் வரத்தில் நான் அவமானப்படுத்தப்பட்டேன்'

    'என் அன்னை குந்திதேவி கூட தனது மற்ற மகன்களை காப்பாற்ற வேண்டியே என்னிடம் வந்தாள்'

    ஆக என் வாழ்வில் எனக்குக் கிடைத்த உணவு, உடை, அந்தஸ்து இவை அனைத்தும் துரியோதணன் மூலமாகவே கிடைத்தது. அதனால் தான் நான் அவனுக்கு பக்க பலமாக, உறுதுணையாக நிற்கின்றேன்.

    இது தவறா கண்ணா? சொல் என்றான்.

     கிருஷ்ணர் கூறிய பதில்கள்

    "கர்ணா நான் பிறந்தது ஜெயிலில். இறப்பு என் பிறப்பிற்கு முன்பே காத்திருந்தது.

    'மாடு, சாணி இவைகளோடு நான் நடப்பதற்குள் என்னை கொல்ல பல முயற்சிகள் என்ற சூழ்நிலை'

    'படிப்பு என்பதே கிடையாது'

    'மக்களில் பலர் அவர்கள் வாழ்வின் பிரச்சனைக்கு நானே காரணம் என்று கூறினர்.'

    'உன் திறமைகளுக்காக நீ பாராட்டப்பட்டாய். எனக்கு எந்த கல்வியும் சிறு வயதில் கிடைக்க வில்லை. ரிஷி சண்டியானி குருவிடம் நான் 16 வயதில் தான் சென்றேன்.

    'நீ விரும்பிய பெண்ணை மணந்தாய்' நான் விரும்பிய பெண் எனக்கு கிடைக்க வில்லை. அரக்கர்களிடம் இருந்து மீட்ட பெண்களையும் மணக்க வேண்டியது ஆயிற்று.

    'என் சமூகத்தினை ஜராசந்திடம் இருந்து காப்பாற்ற யமுனை கரையில் இருந்து மாற்ற வேண்டி இருந்தது. என்னை பலரும் தைரிய மில்லாதன், ஓடி விட்டான்' என்றனர்.

    ' நீ யுத்தத்தில் ஜெயித்தாலும், தோற்றாலும் உனக்கு புகழ் கிடைக்கும்.

    'எனக்கோ குற்றம், குறைகளே கிடைக்கும்.

    ஆக பிறந்த அனைவருக்கும் வாழ்வில் பல சவால்கள் ஏற்படும் தான். அதனை காரணம் காட்டி தர்ம பாதையினை விட்டு அதர்ம பாதையில் செல்லக்கூடாது. வாழ்க்கை அனைவருக்கும் எளிதான தாகவும், நேர்மை பாதை யாகவும் இருக்காது.

    ஆனால் அதற்காக உள்ளு ணர்வு கூறும் தர்ம பாதை யில் இருந்து மாற இவை சாக்கு போக்காகாது. எத்தனை முறை அவமானப் பட்டாலும், விழுந்தாலும் வாழ்க்கை உன்னை அதர்ம பாதைக்குச் செல்லும் மனதினை தரவில்லை.

    விதி என்பது நாம் அணியும் காலணியை பொறுத்து அல்ல. நாம் வைக்கும் அடிகளைப் பொறுத்தே' என பதிலளித்தார்.

    இதில் பூச்சுகள் இருக்க லாம். மிகைப்ப டுத்தல் இருக்கலாம். இருந்து விட்டு போகட்டும். எத்தனை பெரிய கருத்து எத்தகைய அறிவுரை, அன்னபறவை போல் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோம். தெரிந்து கொள்வோம்.

    இதிகாசங்கள், புராணங்கள், புனித நூல்கள் (எந்த மதமாயினும் சரி) திருக்குறள் இவை அனைத்துமே அனைவராலும் அறியப்பட வேண்டியவைதான். அததன்படிதான் ஒருவர் நடக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. ஆனால் கிடைக்கும் அறிவு, ஞானம் இவை மனிதனின் மனதினை தூசு தட்டிக் கொண்டே இருக்கும். பல செய்திகளை நாமே நம்முன் தேடி அறிய முடியும். செய்து பார்ப்போமே. அறிந்து கொள்வோமே.

    மகாபாரதம் இதனை வேத வியாசர் தொடர்ந்து கூற பகவான் கணபதி (பிள்ளையார்) தொடர்ந்து எழுதினாராம். இதில் வேத வியாசரோ, பிள்ளை யாரோ சின்ன இடைவெளி கூட எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் வேத வியாசரின் கடின சுலோ கங்களை எளிமைப்படுத்தி எழுத பிள்ளை யாருக்கு சற்று கூடுதல் நேரம் ஏற்பட்டது என்பர்.

    நாம் கீதை என்றாலே 'பகவத் கீதை' என்பதனைத்தான் முதலில் ஞாபகத்தில் கொள்வோம். ஆனால் சிவ கீதை, அஷ்டவக்ர கீதை என சுமார் 10 கீதோபதேசங்கள் இருக்கின்றன.

    * மகாபாரதத்தில் விதுரர் மிக நேர்மையானவர். விதுரநீதி என்றே சொல்வார்கள். இந்த விதுரரை எமதர்மராஜாவின் அவதாரமாக குறிப்பிடுகின்றனர்.

    * துரியோதனன் பிறந்த போது அவனது அழுகை கழுதையின் கத்தல் போல் இருந்ததாம். பறவைகள், காகங்கள் பயந்து அங்கும், இங்கும் ஓடினவாம். பல அபசகுன நிமித்தங்கள் தோன்றின. விதுரர் துரியோ தனனை அழித்து விடும்படி திருதிராஷ்டி ரரிடம் கூறினார். துரியோதனனால் வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு விளையும் என்றார். ஆனால் திருதிராஷ்டிரர் தன் மகன் மீது கொண்ட பாசத்தி னால் அவ்வாறு செய்யவில்லை.

    * மகாபாரதத்தின் மைய கருத்தே 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பதுதான்.

    * மகாபாரதம் சொல்லும் பாடம் 'நியாய மானதற்கும், சரியானதற்கும், முறையான திற்கும் மட்டுமே உடன் இருக்க வேண்டும்.

    * ராமாயணத்தில் விஷ்ணு பகவான் ராமராக அவதரிக்கின்றார். மகாபாரதத்தில் விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதரிக் கின்றார்.

    * இரண்டிலும் பரசு ராமன் உள்ளார்.

    * பரசுராமர், ராமர், கிருஷ்ணர் இந்த மூன்றி லும் மகா விஷ்ணு மனித அவதா ரம் எடுத்துள்ளார்.

    ராமாயணத்தினை முதன் முதலில் ஆதி ராமாயணம் என சிவ பிரான் சக்திக்கு கூறி உள்ளார் எனப்படு கின்றது. அதனைக் கேட்ட காகம் கபுசந்தி யின் மூலம் பரவியது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

    இவைகளை நம்ப வேண்டும் என்று அவசி யம் கிடையாது. அறியலாம் அல்லது அவரவர் விருப்பப்பட்ட நிரூபிக்கப்பட்ட நூல் களை படிக்கலாம். அவரவர் விருப்பத்தினைப் பொறுத்ததே. பொதுவில் ஆன்மீக புத்தகங்கள் அனைத்துமே (மதசார் பற்று) மனிதனின் பட படப்பினை குறைக்கும். மனித நேயத்தினைக் கூட்டும். இயற்கையோடு இணைந்து வாழச் செய்யும். இது ஒருவருக்கு கிடைக்கும் பெரிய பரிசு ஆகும்.

    • மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தவறுகள் நேர்வது என்பது இயல்பான செயல் ஆகும்.
    • ஒருவர் பிழையை மற்றவர் பொறுத்துக் கொள்வது.

    மன்னிப்பது மறப்பது ஆகிய மாபெரும் மனித மாண்புகளைப் பற்றி வாசிக்கக் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    அடுத்தவர்கள் மீது நமக்கிருக்கும் பகை உணர்வைப் போக்கவும், எப்போதும் அடுத்தவர்கள் மீது குறை சொல்லிக்கொண்டே இருக்கும் தீயபழக்கம் நம்மைவிட்டு அகலவும் ஒரே சிறந்தவழி, அவர்கள் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றை மன்னித்து விடுவது ஆகும். மன்னிப்பதோடு மட்டுமில்லாமல் அவற்றை மறந்துவிடவும் செய்தால் அதைவிட மிக உன்னதமான செயல் வேறு இல்லவே இல்லை என்றே சொல்லி விடலாம்.

    மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தவறுகள் நேர்வது என்பது இயல்பான செயல் ஆகும்; அந்தத் தவறுகளால் தாம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர்களும் பாதிக்கும்படி நேர்ந்துவிட்டால் அதற்கு வருந்துவதோடு மட்டுமல்லாமல், அதே தவறுகள் மீண்டும் நிகழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இருதரப்பினரிடையே பகை, இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி வசைமாரி பொழிந்துகொள்ளும் நிலை.. இப்படி இருந்தால் ஒருவர் மட்டுமே மன்னித்து மறந்து விடுவதால் அந்தப்பகை தீர்ந்துவிடாது. இருதரப்பினருமே முழுமையாக மன்னித்து மறந்துவிடுவதால் மட்டுமே பரஸ்பரம் அன்புகனிந்து நேசம் மலரும்.

    மன்னிப்பது, மறத்தலில் தொடங்குகிறது என்று பலர் கருதுவர். ஆனால் திருவள்ளுவர், மன்னித்தல் நினைத்தலில் நிறைவு பெறுவதாகக் கூறுகிறார். ஒருவரைப்பற்றிய வெறுப்புணர்வு பகையாக மாறுகிறது; அவர் செய்துவரும் அடாத செயல்களால் அவர்மீது வெறுப்புப் பெருகுகிறது. திருவள்ளுவர் சொல்கிறார், ஒருவர் நமக்கு மன்னிக்க முடியாத அளவுக்குக் கெடுதல் செய்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் அவரை நமக்கு மன்னிக்கத் தோன்றாது; மாறாக அவர் இதற்குமுன் நமக்கு யாதேனும் ஒரே ஒரு நன்மை செய்திருந்தாலும் அந்த ஒரு நன்மையை நினைவில் வைத்துக்கொண்டு, இப்போது கொலைபாதகக் கொடுமைகள் செய்திருந்தாலும் அவற்றை மன்னித்து விடுங்கள் என்கிறார்.

    தவறு செய்வது மனிதகுணம் என்றால் அடுத்தவர் நமக்கிழைத்த தவறுகளை மன்னித்து மறந்து விடுவது என்பது தெய்வகுணமாகும். சிலருக்கு மனது சல்லடைபோல இருக்கும். நல்லவற்றையெல்லாம் வடிகட்டிக் கீழே அனுப்பிவிட்டுக் கசடுகளை மட்டுமே தேக்கி வைத்திருக்கும். இக்குற்றம் பார்க்கும் கசடுமனம் கழிவதற்குக் கசடு இல்லாத நல்ல நூல்களைக் கசடின்றித் தெளிவாகக் கற்கவேண்டும்.

    மூத்தோர்கள் மீது இளையவர்களுக்கும், இளையவர்கள் மீது மூத்தோர்களுக்கும், மேலதிகாரிகள் மீது கீழதிகாரிகளுக்கும், கீழதிகாரிகள் மீது மேலதிகாரிகளுக்கும் ஒருவிதக் குற்றம்பார்க்கும் மனப்பான்மை இருந்துகொண்டே இருக்கும். இது தலைமுறை இடைவெளி காரணமாகவும் அலுவல் ரீதியான மேல்கீழ்த் தன்மை காரணமாகவும் ஏற்படுகிறது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மதிக்கக் கற்றுக்கொண்டால் இந்தக் குற்றம்காணும் தீங்குமுறை ஏற்படுவதில்லை.

    குடும்பங்களில் தாய் தந்தையிடமும், தந்தை தாயிடமும், பெற்றோர்கள் பிள்ளை களிடமும், பிள்ளைகள் பெற்றோர்களிடமும் குற்றம் காண்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். குடும்பம் தவிர உறவு, சுற்றம், நட்பு என எந்நிலையிலும் ஒருவருக்கொருவர் குறைசொல்லி வெறுப்புணர்வை வளர்த்தபடியே தான் வருகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!" என்கிற பழமொழியும் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கூடங்களில் பல ஆசிரியர்கள் குற்றம் கண்டுபிடிக்கும் புலவர்களாகவே காணப்படுகின்றனர். விடைத்தாள்களில் 'சரி' என்னும் குறியீடுகளைவிடத் 'தப்பு' என்னும் குறியீடுகளை அதிகமாகப் போடும் ஆசிரியர்களே பெருகி வருகின்றனர். வளரும் மாணவத் தலைமுறையைக் குற்றம் கூறித் திருத்த முயல்வதைவிடக், குற்றமற்றவர்களாக அவர்களை உணரவைத்து வளர்த்தெடுப்பதே நேர்முறை அணுகுமுறை ஆகும்.

    ஓர் இளைஞன், தனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியராய் இருந்த பெருமகனை ஒரு பொதுநிகழ்வில் சந்தித்தான். ஓடிச்சென்று காலில் விழுந்து வணங்கி," ஐயா! நான் தங்கள் மாணவன்; அந்த ஊரில் தங்களிடம் ஐந்தாம் வகுப்புப் படித்தேன்!; என்னைத் தங்களுக்கு நினைவில் இருக்கிறதா?" என்று கேட்டுத் தனது பெயரைச் சொன்னான். யோசிக்கத் தொடங்கினார் ஆசிரிரியர்; உடன் படித்த மாணவர்கள் பெயர்களையெல்லாம் சொன்னான் இளைஞன்; அவர்களில் சிலரை நினைவில் இருக்கிறது, ஆனால் நீ நினைவுக்குள் வரவில்லையே! என்று இழுத்தார் ஆசிரியர்.

    "ஐயா! அவ்வளவு சுலபமாக நீங்கள் என்னை மறந்திருக்க முடியாது!; நானும் உங்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன்!; நீங்கள்தான் எனக்கு உயரிய ஒழுக்கம் கற்பித்த ஆசான்!" என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டே போனான் இளைஞன். "என்னப்பா நீ என்னென்னமோ சொல்லிக் கொண்டு போகிறாய்! எனக்கு எதுவுமே நினைவுக்கு வரமாட்டேன்கிறதே!" என்றார் ஆசிரியர்.

    "ஐயா ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் வகுப்பறையில் நடந்த அந்த சம்பவத்தைச் சொன்னால் நிச்சயம் உங்களுக்கு என்னை நினைவுக்கு வரும். அன்று வகுப்பறைக்குத் தனது மாமா சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து தனக்குப் பரிசாக வழங்கியிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்துடன் முருகன் என்கிற மாணவன் வந்திருந்தான். அந்தக் கடிகாரத்தின் அழகில் மயங்கிப் போயிருந்த நான் எப்படியாவது அதனைத் திருடிவிட வேண்டும் எனத் திட்டம் போட்டேன்.

    பாட இடைவேளை நேரத்தில், முருகன் தனது கைக்கடிகாரத்தைக் கழற்றி தனது மேசைக்குள் வைத்துவிட்டுக் கழிவறைக்குச் சென்றுவிட்டான். அந்த நேரம் பார்த்து, யாருக்கும் தெரியாமல் அதனைத் திருடி எனது கால்சட்டைப் பாக்கெட்டுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டேன். வகுப்பறைக்குத் திரும்பிய முருகன், தனது கடிகாரம் காணாமல் போனதை வகுப்பாசிரியராகிய உங்களிடம் புகார்க் கூறினான். இதற்காகப் பதற வேண்டாம்; கடிகாரம் வேறு எங்கும் போயிருக்காது; இங்குதான் இருக்கும்; கண்டுபிடித்து விடலாம் என்று முருகனிடம் கூறிய நீங்கள் வகுப்பிலிருந்த மாணவர்களாகிய எங்களைப் பார்த்து ஓர் அறிவிப்புச் செய்தீர்கள்.

    "மாணவச் செல்வங்களே! நமது முருகனுடைய வெளிநாட்டுக் கைக்கடிகாரம் இப்போது தொலைந்து விட்டது; உங்களில் யாராவது ஒருவர் அதனைக் கண்டெடுத்துப், பத்திரமாக உங்கள் சட்டை அல்லது கால் சட்டைப்பைகளில் போட்டு வைத்திருக்கலாம். நீங்களாகத் தாருங்கள் என்று கேட்டால், தரும்போது, வீண்பழி உங்களை வந்து சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் எல்லோரும் இங்கு முன்னால் வந்து கண்களை மூடிக்கொண்டு வரிசையாக நில்லுங்கள்; நான் ஒவ்வொருவர் பைகளிலும் தேடுவேன்; கடிகாரத்தைக் கண்டெடுத்து விடுவேன்; கட்டாயம் முருகன் உட்பட எல்லோரும் நான் சொல்லும் வரை கண்களைத் திறக்கவே கூடாது".

    எனது அன்பான ஆசிரியரே! எல்லா மாணவர்களும் கண்களை மூடிக்கொண்டு நிற்க, நீங்கள் அந்தக் கடிகாரத்தை எனது கால்சட்டைப் பாக்கெட்டில் இருந்துதான் எடுத்தீர்கள்; ஐயா! இப்போது என்னை உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். அந்த அறியாப் பருவத்தில் நான் வேடிக்கை யாகச் செய்த அந்தத் திருட்டுப்பழியை என்மீது படியாமல் பாதுகாத்த தெய்வ மையா நீங்கள்!" என்று கண்கலங்கச் சொன்னான்.

    அப்போது அந்த இளைஞனைப் பார்த்து அந்த ஆசிரியர் சொன்னார், "தம்பி அந்த சம்பவம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; ஆனால், அந்தக் கடிகாரத்தை உனது பையிலிருந்துதான் நான் எடுத்தேன் என்பது எனக்கு நினைவில்லை. ஏனெனில் கடிகாரத்தை தேடும் அந்த நேரத்தில் நானும் உங்களைப் போலவே கண்களை மூடித்தான் இருந்தேன்!" .

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    எவ்வளவு பெரிய ஒழுக்க முறையை அந்த ஆசிரியர் கடைப் பிடித்திருக்கிறார் பாருங்கள்!. தவறுவது மனித இயல்பு!; அதிலும் அறியாப் பருவமாகிய குழந்தைப் பருவத்தில் மனம்பிறழத் தவறுகள் செய்வது சர்வ சாதாரணம். ஆயினும் திருடப்பட்ட அந்தக் கடிகாரத்தைத் தொலைந்து போனது போலவும், அதனைக் கண்டெடுப்பது போலவும், யாரிடமிருந்து கண்டெடுக்கப்பட்டது என்று தெரிந்து விட்டால் அந்த அழியாத திருட்டுப் பட்டம் அந்த மாணவனைச் சூழ்ந்து சிதைத்துவிடும் என்பதால் கண்களை மூடிக்கொள்ளச் சொன்னதோடு, அந்தக் கசப்பான உண்மை தனக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று தனது கண்களையும் மூடிக்கொண்ட மகத்தான மனம் அந்த ஆசிரியருடையது!. இதுவன்றோ ஆகச்சிறந்த மன்னிக்கும் மறக்கும் திறம்!.

    மன்னிக்கும் மனப்பான்மை மனித மனங்களுக்குள் குடியிருக்கும் வெறுப்புணர்வை அகற்றுகிறது; மனிதர்களுக்கு இடையே இருக்கும் பிரிவினைகளையும் இடைவெளிகளையும் அகற்றி உறவு நிலையை

    உறுதியாக்கி ஒன்றிணைக்கிறது. எந்நேரமும் கொதிநிலையில் இருக்கும் மனம் அமைதிநிலையை அடைந்து ஆனந்தம் கொள்வதற்கு மறக்கும் மனப்பான்மை பெரிதும் உதவுகிறது.

    எப்போதும் புதிதுபுதிதாய்ச் சிந்திக்கும் மனநிலையே மனிதனை எப்போதும் 'இன்று புதிதாய்ப் பிறந்தவர்களைப் போல' வைத்திருக்க உதவுகிறது. அடுத்தவர் இழைத்த தீங்குகளைப் பற்றியே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நெஞ்சம், அந்த இடத்திலேயே நின்றுபோய் விடுகிறது; சாக்கடைச் சகதிக்குள் உழன்றுகொண்டிருக்கும் பன்றியைப்போல மனம் வாசமிழந்து போகிறது. மன்னிக்காமலும் உடனே மறக்காமலும் விட்டுவிட்டால் நம்முடைடைய வளர்ச்சி என்பது நிகழாமல் அங்கேயே தேங்கிப் போய் நின்று விடுகிறது.

    இருவருக்குள் மனவேறுபாடு வந்து, இருவருமே ஒருவருக்கொருவர் வசைமாரி பொழிந்து கொண்டிருந்தால் யார் முதலில் யாரை மன்னிப்பது? என்னும் கவுரவப் பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பு உண்டு. சமாதானமாகப் போய்விடுவது, அதற்கு, ஒருவர் பிழையை மற்றவர் பொறுத்துக் கொள்வது. என்கிற நிலை வரும்போது, யார் முதலில் இறங்கி வருகிறார்களோ அவர்களே உயர்ந்த மனிதர்கள் ஆகின்றனர். மறைந்திருந்து தன்னைக் கொல்வதற்கு அம்பை எய்த இராமனை, மரணத்தறுவாயில் ஏசித்தீர்த்துக் கொண்டிருந்தான் வாலி. எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்ட ராமன் ஒரே வரியில், 'நீ இது பொறுத்தி' என்று கூறி மன்னிப்பும் கேட்டான்; வாலியினது மகனை ஏற்றுக்கொண்டு மன்னித்தும் விட்டான். ராமன், பொறுத்துக் கொள் என்றவுடன் வாலியும் முந்திக்கொண்டு மன்னித்துத், தன் மகனை அடைக்கலமாக ராமனிடம் ஒப்படைத்தும் விட்டான்.

    உலகில் நிகழும் அத்தனைக் கொடுஞ்செயல்களுக்கும் மன்னிக்கும் தன்மை இல்லாத மனங்கள் பெருகியிருப்பதே முக்கியக் காரணமாகும். தானே பெரியவர் என்கிற மிகப்பெரும் ஆணவத் தலைப்பாகைகளைச் சுமந்துகொண்டு ஒவ்வொருவரும் உலா வந்துகொண்டிருப்பதால், சிறுசொல்கூடப் பொறுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கோபம் கொப்பளிக்கத் தொடங்குகிறது; மனம் பரபரப்பாகி மன அழுத்தத்தில் உழல்கிறது; அமைதியின்மை நெஞ்சில் குடியேறி, உறக்கமின்மையில் கொண்டுபோய்த் தள்ளிவிடுகிறது.

    பிறகு பெருகிடும் மனநோயிலும் உடல் நோயிலும் இடையறாது அல்லல்பட்டு உழலவேண்டியது அவசியமா? என ஒருநொடி யோசிக்க வேண்டாமா?.

    மன்னித்தலில் தொடங்கிவிடுகிற மன அமைதி, அடுத்தவர் இழைத்த தீங்குகளை மறந்துவிடும்போது ஆனந்த அமைதியாகி விடுகிறது.

    தொடர்புக்கு 9443190098

    • 108 வர்ம புள்ளிகள் ஆனது நமது உடலிலே எப்படி எங்கு தொடர்பு உடையது என்று பார்போம்.
    • நமது உடலிலே உயிர் ஆற்றல் ஆனது சிறு அசைவுகளோடு இருக்கும் போது காலம் எனப்படுகிறது.

    அன்பார்ந்த வாசகர்களே, கடந்த பகுதியில் வர்மத்தை பற்றிய அறிமுகத்தை சிறிது பார்த்தோம். ஒரு காலத்தில் போர் கலைகளில் ஒன்றாக இருந்தது. பிறகு பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆனால் இதன் அடுத்த வடிவமாக இந்த கலையானது ஆசிய கண்டம் முழுவதும் பரவி, பிறகு கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு இந்த கலையே கராத்தே, குங்பூ, அக்குபிரஷர், அக்கு பஞ்சர் என்று பரவியது.

    இந்த வா்மக்கலை நம் உடலில் உள்ள நரம்புகளை இயக்கி, நோயை போக்கும் ஒரு அற்புத கலை ஆகும். ஒருவர் எதிர்பாராத விபத்து ஏற்பட்டு சுயநினைவை இழந்துவிட்டால், மயக்க நிலையில் உள்ளவரை, மீண்டும் சுயநினைவுக்கு வரவைக்கும் ஒரு அற்புத கலையாகும்.

    இந்த வர்மக்கலையை கற்பதற்கு அடிப்படை தேவைகளாக மனக் கட்டுப்பாடு, தவம், அறவாழ்க்கை (ஒழுக்கம், கடமை, ஈகை) மற்றும் சாத்வீக குணம் உடையவர்களாக இருந்தால் இதில் வெற்றி பெற முடியும்.

    இந்த 108 வர்ம புள்ளிகள் ஆனது நமது உடலிலே எப்படி எங்கு தொடர்பு உடையது என்று பார்போம்..

    தலை உச்சி முதல் கழுத்து வரை - 25 வர்ம புள்ளிகள் உள்ளது.

    கழுத்து முதல் தொப்புள் வரை - 45 வர்ம புள்ளிகள் உள்ளது.

    தொப்புள் பகுதி - 9 வர்ம புள்ளிகள் உள்ளது.

    கை பகுதி - 14 வர்ம புள்ளிகள் உள்ளது.

    கால் பகுதி - 15 வர்ம புள்ளிகள் உள்ளது.

    மொத்தம் - 108

    இந்த வர்ம புள்ளிகள் 46 இடங்களில் ஒற்றை வர்மமாகவும், 62 இடங்களில் இரட்டை வர்மமாகவும் உள்ளது.

    நமது உடலிலே மேல் பகுதி, உள் பகுதி, உள் உறுப்புகளிலும், தசைகள், நரம்புகள், எலும்புகள், இணைப்புகள், மூட்டுகள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்து உள்ளது.

    மனித உடலில் உள்ள ரத்த குழாய் பரவும் நரம்புகளின் முடிச்சு தான் உயிர் ஆற்றல் மையம் அல்லது வர்ம புள்ளிகள் என்று வர்மக்கலை குறிப்பிடுகிறது. இதற்கு காலம், சுவாசம், பிராணன், கலை, சரம், யோகம், புரவி, சிவம், வாசி என்று பல காரண பெயர்கள் உண்டு.

    நமது உடலிலே உயிர் ஆற்றல் ஆனது சிறு அசைவுகளோடு இருக்கும் போது காலம் எனப்படுகிறது. மூச்சு பாதையில் இருக்கும் வர்ம ஆற்றலை தான் சுவாசம் என்கிறோம். நுரையீரல் மற்றும் இருதயம் சார்ந்த வர்மங்களை தான் பிராணன் என்கிறோம்.

    நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழு முனை இதனோடு தொடர்பு கொள்ளும் போது கலையாகும். மூளை சார்ந்த நரம்பு மண்டலத்தோடு தொடர்பு கொள்ளும் போது சரம் எனப்படுகிறது. குதிரை போன்று வேகமாக சுழன்று ஓடும் ஆற்றலை புரவி என்கிறோம்.

    மூளை சார்ந்த வர்மமே சிவம். மூல காற்று உயிருக்கு வலு சேர்க்கும் வஸ்து. இது ஒவ்வொறு முறையும் சுவாசத்திலும் தன்னை புதுப்பித்து கொள்ளும் போது இது வாசி எனப்படுகிறது.

    இந்த உடல் ஆனது, பஞ்ச பூதங்களின் கூட்டு கலவையாகும். பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் சரியான விகிதத்தில் இருக்கும் போது தான் ஒரு உயிர் உருவாகிறது. அந்த விகிதாசாரம் சரியாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் மாற்றம் ஏற்படும் போதோ, ஏற்றத் தாழ்வுகள் வரும் போதோ உடலில் வாதம், பித்தம், கபம் சார்ந்த நோய்களாக உருவெடுக்கிறது.

    பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் யோக சாஸ்திரம் ஆனது நம் உடலில் பஞ்ச பூதங்கள் கீழ்கண்ட விகிதா சாரத்தில் உள்ளதாக சொல்கிறது. நிலம் 12 சதவீதம், நீர் 72சதவீதம், நெருப்பு 4சதவீதம், காற்று 6சதவீதம், ஆகாயம் 6சதவீதம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

    இதை சரிபடுத்தவும், சமன் படுத்தவும் நமது கை விரல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலத்திற்கு நமது மோதிர விரலும், நீருக்கு சுண்டு விரலும், நெருப்புக்கு கட்டை விரலும், காற்றுக்கு ஆள்காட்டி விரலும், ஆகாயத்திற்கு நடு விரலும் தொடர்பு உடையது.

    இந்த விரல்கள் மூலமாக நாம் உடற்பயிற்சி செய்யும் போது வான்காந்த ஆற்றல் (Cosmic Energy) ஆனது ஜீவ காந்த ஆற்றலாக (Biomagnetism) மாற்றம் பெற்று, உடல், மனம், உயிர் இயக்கத்திற்கு உதவி செய்கிறது.

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    எனவே நமது உடல் நலமாக இருப்பதற்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனங்கள், முத்திரைகள், பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் மிகவும் அவசியம் ஆகிறது. ஒருவர் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    குறிப்பாக நமது உடலில் சொல்லாமல் வரும் ஒரு பிரச்சனை எது என்றால் இதய கோளாறு தான். இதை தடுப்பதற்கு வரும் முன்காப்பது போன்று தினமும் உடற்பயிற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். மரபியல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பு, சிறு வயதில் இருந்தே மெதுவாக ஆரம்பிக்கும். வெளிப்படுவது இரண்டு அல்லது மூன்று விதங்களில் இருக்கலாம்.

    குறிப்பாக 30-40 சதவீதம் அடைப்பு இருக்கும் போதே எதிர்பாராமல் வெடித்து, ரத்த குழாய் மூடலாம். இது தான் ஹாட்-அட்டாக். ஒரு சிலருக்கு இந்த அடைப்பு எரிமலை குழம்பு போல் உள்ளேயே அமைதியாக இருந்து நாள்பட நாள்பட சிறிது சிறிதாக ரத்த குழாயை மூடலாம்.

    அடைப்பை ஏற்படுத்தும் ரத்த கட்டியில், கொழுப்பு, ரத்தத்தில் உள்ள வேதி பொருட்கள், சில சமயத்தில் கால்சியமும் சேர்ந்து, நாள்பட மெதுவாக இந்த அடைப்பை பெரிதாக்கி சட்டென்று அது சிதைந்து உடைந்தால் மாரடைப்பு வரும்.

    சிலருக்கு இந்த அடைப்பு பெரிதாகி ரத்த குழாயை 70 சதவீதத்துக்கு மேல் அடைக்கும். இது போன்ற நிலையில் ஒய்வாக இருந்தால் பிரச்சனை வராது. நடந்தால் நெஞ்சுவலி வரும். நின்றால் சரியாகிவிடும். ஆனால் மூச்சு திணறலாம்.

    நம்முடைய மரபணுவிற்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்பதால், அடைப்பை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்க்க வேண்டும். நம்மால் மரபணுவை மாற்ற முடியாது. வாழ்க்கை முறையில் தான் நாம் மாற்றம் செய்ய வேண்டும். இதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் பிரச்சனையை தள்ளி போடலாம்.

    எனவே உடற்பயிற்சி மூலமாக மரபணுவில் கூட நம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று யோக பயிற்சிகள் சொல்கிறது. குறிப்பாக ஒருவர் தொடர்ந்து 9 வருடங்கள் யோக பயிற்சிகள் செய்து வந்தால் நம்முடைய மரபணுவிலே மாற்றம் ஏற்படும் என்கிறது யோக சாஸ்திரங்கள். இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உடற்பயிற்சி செய்வதால், நம்முடைய கர்ம வினை பதிவுகள் அகன்று, விலங்கின பதிவுகள் நீங்கி நோயின்றி வாழலாம் என்று கூறுகிறார்.

    எனவே உடற்பயிற்சி என்பது நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இனி நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால், 50 வருடத்திற்கு முன்னால், நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள், ஆனால் நாம் இன்று எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? இன்று நாம் மூன்று விதங்களில் நம்முடைய முன்னோர்களுக்கு எதிர்மறையான வாழ்க்கையில் இருக்கிறோம்.

    முதலில் இன்று நாம் பரபரப்பான வாழ்க்கை வாழ்கிறோம். நம் முன்னோர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

    இரண்டாவதாக நாம் வேகமான வாழ்க்கை வாழ்கிறோம். நம் முன்னோர்கள் நிதானம் தவறாமல் யோசித்து முடிவுகள் எடுத்து வாழ்ந்தார்கள்.

    மூன்றாவதாக நாம் மனதுக்கு அழுத்தத்தை தரக்கூடிய வாழ்க்கை வாழ்கிறோம். நம் முன்னோர்கள் மனதிற்கு இதம் தரக் கூடிய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

    இதை விட முக்கியம் என்னவென்றால் நம் முன்னோர்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு மற்றவற்றை பற்றி யோசிக்க நேரம் இல்லை. இன்று நாம் யாரும் வேண்டாம். தனியாக இருக்க வேண்டும் என்று தனி குடும்பமாக வாழ்கிறோம்.

    ஒரு சிறு பிரச்சனை உடல் சார்ந்து, மனம் சார்ந்து வந்தால் தனிமை பல விதமான எதிர்மறை சிந்தனைகளை ஏற்படுத்தி உடல் மற்றும் மன நோயை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக தனிமை என்பது ஒரு கொடிய நோய்.

    எனவே நம்முடைய உடலை பாதுகாக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய இறுதி மூச்சு வரை, எந்த எந்த உறவுகள் மற்றும் பொருள்களோடு உறவாடி கொண்டு இருக்கிறோமோ, அவை எல்லாம் ஒவ்வொரு நாள், ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலகும். ஆனால் கடைசி வரை நம்மோடு இருக்க கூடியது இந்த உடல் மட்டுமே. இதை தான் திருமூலர் அவர்கள்,

    "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

    திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

    உடம்மை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே."

    அதாவது உடம்பு அழிந்தால் உயிரும் அழியும். இதனால் உறுதியான மெய்ஞானத்தை அடைய முடியாது. ஆகவே இந்த உடலை வளர்க்கும் உபாயத்தை அறிந்து கொண்டேன். எனவே உடம்பை வளர்த்து உயிரையும் நீண்ட ஆயுள் ஆக்கினேன் என்கிறார். அது எப்படி என்பது நமது உடல் ஆராய்ச்சி தொடரும்.

    போன்: 9444234348

    • அம்பாளுக்கு உகந்ததாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி.
    • வாராகி என்ற தெய்வம் சப்த மாதர்களில் ஒருவர்.

    அண்டம் முழுவதும் பரவி உள்ள இறைவனின் அருட்தன்மையை மானுடர்கள் உணர்ந்து கொள்ள ரூப வடிவமாக இறைவன் எழுந்தருளுவது உண்டு. அதனால்தான் அருவமான இறைவனும், இறைவியும் பற்பல உருவம் தாங்கி வருகின்றனர்.

    கருணையின் பிறப்பிடமான அம்பாள் எண்ணற்ற உருவம் கொண்டு நமக்கு அருள் தருகிறாள். அந்த அம்பாளின் கருணையைப் போற்றும் வண்ணம் ஆண்டுதோறும் பல விரதங்கள், வழிபடும் நாட்கள் என இருந்தாலும், அவை அனைத்தையும் விட அம்பாளுக்கு உகந்ததாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி.

    நான்கு வகையான நவராத்திரிகள் அம்பாளுக்கு சிறப்பானது:

    1. பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி

    2. ஆனி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரி

    3. புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்தி

    4. தை மாதத்தில் வரும் சியாமளா நவராத்திரி

    இவற்றில் ஆனி மாதத்தில் வருவது வாராகி நவராத்திரி என்று சொல்லப்படும் ஆஷாட நவராத்திரி.

    ஆடிப் பட்டம் தேடி விதை என விவசாயிகள் தங்களது விவசாய வேலையைத் துவங்கும் முன்பு ஆனி மாதத்தில் வாராகியை வழிபடும் காலம் இது.

    வாராகி என்ற தெய்வம் சப்த மாதர்களில் ஒருவர். பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என்னும் சப்த கன்னியர்களான இந்த ஏழு தெய்வங்களும் இல்லாத கிராமங்களே இல்லை.

    விவசாயிகள் அன்றாடம் தங்களது விவசாய வேலைகளை கவனிக்கச் செல்லும் முன் இந்த சப்த மாதர்களை வணங்கி செல்வது வழக்கம்.

    இப்படி ஏழு பேரில் ஒருவராக இருந்த வாராகியின் வழிபாடு இன்று எல்லாருக்கும் தெரிந்து, தனியே வணங்கும் அளவிற்கு அன்னையின் அருள் பரவி உள்ளது. முன்பு அபூர்வமாக ஒரு சில இடங்களில் மட்டுமே அம்பிகையின் திருக்கோயில் இருந்தது. ஆனால் இன்று பல கோவில்களைக் காண முடிகிறது.

    தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராகி பிரசித்தி பெற்ற அம்பாள். "சோழ நாடு சோறுடைத்து" என்பதற்கு ஏற்ப விவசாய மக்களுக்கு கண்கண்ட தெய்வம் இந்த வாராகி.

    விவசாயம் மட்டும் அல்லாது, மனித வாழ்வில் ஏற்படும் பலவித பிரச்சனைகளை வேரோடு அகழ்ந்து எடுப்பதில் இவள் வல்லவள். இவளின் ரூபமே வராக முகம், அதாவது காட்டுப் பன்றியின் முகம். கொம்பால் எப்படி பூமியை அகழ்ந்து வேரோடு உள்ள கிழங்குகளை உண்ணும் குணம் காட்டுப் பன்றிக்கு உண்டோ, அதுபோல நமது ஆழ்ந்த வினை களைக் கூட வேரோடு நீக்கி, நமக்கு நலம் தரும் நாயகி வாராகி.

    அன்னை ராஜ ராஜேஸ்வரியின் படைத் தளபதியும் இவளே. ஒரு படையைக் காக்க எத்தனை வலிமை அதன் தலைவிக்குத் தேவை. படையை நோக்கி எதிரி, தாக்க வரும் முன்னரே தன் படைகளை எச்சரித்து, எதிரியைத் தடுத்து, அழிக்கும் ஆற்றல் பெற்றவள் அன்னை வாராகி.

    நம்பிக்கையோடு இவளின் பாதம் பற்றி நம் கண்ணீரை இவளுக்கு காணிக்கை யாக்கி வழிபட்டால் வாழ்வில் எதிரிகளே இன்றி பீடுநடை போடச் செய்பவள் வாராகித் தாய்.


    இந்த அம்பாளின் நவராத்திரி காலம் இந்த ஆண்டு 2024 ஜூலை 6-ந் தேதி முதல் 15-ம்தேதி வரை நடைபெறுகிறது. அம்பாளுக்கு இந்த காலத்தில் செய்யும் வழிபாடு மிகவும் புனிதமாக கருதப்படுவது உண்டு. பொதுவாக, வாராகியின் வழிபாட்டினை மேற்கொள்ளும் போது கடைபிடிக்கும் முறைகளை இந்த நவராத்திரி காலத்திலும் கடைப்பிடிக்கலாம்.

    வாராகி அம்பிகையின் திருவுருவப் படமோ, சிலையோ இருந்தால் அதை வைத்து வழிபடலாம். சிலையோ, படமோ இல்லையென்றாலும் கவலைப்பட வேண்டாம். அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி, அன்னையின் மந்திரங்களை ஓதி வாராகி அம்பிகையை வழிபாடு செய்யலாம். மந்திரங்கள் மிகவும் எளிமையானதே.

    வாராகி மூல மந்திரம்:

    "ஓம் க்லீம் வாராக முகி கிரீம் சித்தி

    சொரூபிணி

    ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா:"

    வாராகி காயத்ரி மந்திரம்:

    "ஓம் மகிஸத்வஜாயை வித்மகே

    தந்தஹஸ்தாயை தீமகி

    தன்னோ வாராகீப் பிரசோதயாத்"

    வாராகி மஹா மந்திரம்:

    "ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

    ஐம் க்லெளம்

    ஐம் நமோ பகவதி

    வார்த்தாளி வார்த்தாளி

    வாராகி வாராகி வராகமுகி வராகமுகி

    அந்தே அந்திணி நம:

    ருந்தே ருந்தினி நம:

    ஜம்பே ஜம்பிணி நம:

    மோகே மோகினி நம:

    ஸ்தம்பே ஸ்தம்பினி நம:

    சர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் சர்வேஷாம்

    சர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி

    ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு

    சீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்

    ட: ட: ட: ட: ஹீம் அஸ்த்ராய பட்"

    மேற்கூறிய மந்திரங்களைப் பாராயணம் செய்வதற்கு சிரமமாக இருந்தால், "ஓம் வாராகி தாயே போற்றி" என்று சொல்லி வழிபடலாம். சிவப்பு மற்றும் நீல நிற மலர்கள் வாராகியை வழிபட சிறப்பானது. இல்லையேல் கிடைக்கும் மலர்களை கொண்டும் வழிபாடு செய்யலாம் தவறில்லை.


    மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, நிலக்கடலை, மாதுளம் பழம், வாழைப்பழம், கருப்பு உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல், புளி சாதம் போன்ற நைய்வேத்தியங்கள் அம்பிகைக்கு பிரியமானவைகள். இவற்றில் உங்களால் என்ன முடிகிறதோ அதைப் படைக்கலாம்.

    இந்த நவராத்திரி காலத்தில் காலையும், மாலையும் வழிபடலாம். கோவில் அருகே இருந்தால் அங்கு சென்று அன்னையின் அபிஷேக, அலங்காரத்தைக் கண்டு வழிபடலாம்.

    தினமும் வழிபாடு செய்ய முடியவில்லை என்றால் பஞ்சமி (10.07.2024) அன்றும், அஷ்டமி (13.7.2024) அன்று மாலையிலும், 14.7.2024 அன்று காலையிலும் அஷ்டமி நேரத்தில் வாராகியை சிறப்பாக வழிபடலாம். காரியம் ஆகும் வரை ஒருவருடன் பழகுவது, காரியம் ஆன பிறகு அவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பது சிலரது வழக்கம். பக்தியில் கூட இன்று சிலர், தேவைக்கு இந்தக் கடவுள்.. இல்லையென்றால் இன்னொரு கடவுள் என மாறும் நிலையைப் பார்க்கிறோம். அப்படி அல்லாமல் உண்மையான அன்பும், பக்தியும், நம்பிக்கையும் கொண்டு வழிபடும் அன்பருக்கு வாராகி பேசும் தெய்வமாகவே விளங்குகிறாள். இந்த ஆஷாட நவராத்திரியில் அம்பிகையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்.

    • புராணங்கள் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 4 தடவை நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • ஆஷாட நவராத்திரி நாட்களில் வாராகியையும் சப்த மாதர்களையும் வழிபட வேண்டும்.

    ஆதிபராசக்தியின் அம்சமான துர்க்கை அம்மன். அசுரர்களை அழித்து மக்களை காத்து அருள்வதை கொண்டாடும் வகையில் அமைந்ததே நவராத்திரி. புராணங்கள் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 4 தடவை நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    இதில் சித்திரை மாதம் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரியும் புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்திரியும் முக்கியமானது. அதுபோல ஆனி மாதம் ஆஷாட நவராத்திரியும் தை மாதம் சியாமளா நவராத்திரியும் முக்கியமானதுதான்.

    சாரதா நவராத்திரியில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு தலா 3 நாட்கள் வழிபாடு செய்வது வழக்கம். சியாமளா நவராத்திரி நாட்களில் ராஜமாதங்கியை வழிபட வேண்டும். வசந்த நவராத்திரி நாட்களில் லலிதா திரிபுர சுந்தரியை 9 நாட்களும் வழிபட வேண்டும்.

    ஆஷாட நவராத்திரி நாட்களில் வாராகியையும் சப்த மாதர்களையும் வழிபட வேண்டும். சிறப்புக்குரிய இந்த நவராத்திரியை வாராகி நவராத்திரி என்றும் சொல்வார்கள்.

    ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் கையில் உள்ள பஞ்ச பாணங்களில் இருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மகாவாராகி எனப்படும் அம்மன். சேனைகளுக்கு தலைவியாக அன்னையை பாதுகாப்பவளாக விளங்கும் இவள், வராக முகத்துடன் இருப்பதால் வாராகி என்று அழைக்கப்படுகிறாள். பிராஹ்மீ, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணீ, சாமுண்டீஸ்வரி என்னும் சப்த மாதர்களில் இவள் ஆறாவதாக பூஜிக்கப் படுபவள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களில் நெற்றியில் இரண்டு கண்புருவங்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஞா சக்கரப்பகுதிக்கு வாராகியே தேவதையாவாள்.

    ஆனி (ஆஷாட) மாதம் வளர் பிரதமை முதல் நவமி வரையில் உள்ள 9 நாட்களும் வாராகி நவராத்திரி எனப்படுகிறது.

    அந்த நவராத்திரி நாளை (6-ந் தேதி) தொடங்குகிறது. நாளை முதல் 10 நாட்களுக்கு அதாவது 15-ந் தேதி வரை இந்த வாராகி நவராத்திரியை கொண்டாட வேண்டும். இந்த நாட்களில் சப்த கன்னியர் வழிபாடு குறிப்பாக வாராகி வழிபாடு மிகுந்த புண்ணியங்களை தரும்.


    குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் நிகழும் பஞ்சமி திதி (10-7-2024 புதன்) ஸ்ரீ வாராகி தேவியை தரிசிக்க சிறப்பான நாளாகும்.

    இந்த நாட்களில் ஸ்ரீ மகா வாராகியை அபிஷேகம் அர்ச்சனை, பூஜை, மந்திர ஜபம், ஸ்தோத்ர பாராயணம் ஹோமம் செய்து வழிபாடு செய்யலாம். இதனால் சிறந்த பேச்சுத் திறன் கிடைக்கும், ஜாதகப்படி செவ்வாய், ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். எங்கும் எதிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

    மேலும் ஸ்ரீ மகாவாராகியை தரிசிப்பவருக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதையொட்டியே வாராகிக்காரனோடு வாதாடாதே என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    இந்த நவராத்திரி 9 நாட்களும் ஸ்ரீ மகாவாராகியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரைத் தண்டு அல்லது வாழைத் தண்டால் திரி செய்து நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பட்டுத் துணி சாத்தி, 1. பஞ்சம்யை நம:, 2. தண்டநாதா'யை நம:, 3. சங்கேதாயை நம:, 4.சமயேஸ்வரியை நம:, 5. சமய சங்கேதாயை நம 6.வாராகியை நம:, 7.போத்ரிண்யை நம:, 8. சிவாயை நம:, 9. வார்த்தாள்யை நம:, 10.மகாசேனாயை நம:, 11. ஆக்'ஞா சக்ரேஸ்வர்யை நம:. 12.அரிக்'ன்யை நம:, என்னும் 12 நாமங்களைச் சொல்லி சிவப்பு பூக்களால் பூஜை செய்ய வேண்டும்.

    தோல் உரிக்காத கருப்பு உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும், சக்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு வந்தே வாராக வக்த்ராம் என்னும் மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு முறையாக பக்தியுடன் ஸ்ரீ வாராகியை நவராத்திரி 9 நாளும் பூஜை செய்பவர்கள், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் நோய், எதிரி மற்றும் அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.


    பூஜை அறையில் வாராகி அம்மனின் திருவுருவப் படம் அல்லது சிலை முன்பு விளக்கேற்றி தினமும் இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் வாராகி அம்மனை வணங்கி வரலாம். இரவு நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் கூட செய்யலாம். வாராகி அம்மன் வழிபாட்டை புதியதாக தொடங்கும் பக்தர்கள் வாராகி அன்னை பிறந்த திதியான வளர்பிறை பஞ்சமி அன்று வழிபாட்டினை தொடங்கினால் மிக சிறப்பு.

    வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து 108 முறை வாராகி அம்மனின் காயத்ரி மந்திரம் அல்லது வாராகி அம்மனின் மூல மந்திரத்தை கூறி அன்னையை மனதார வேண்டி ஜெபிக்கலாம்.

    தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம், அன்னை நிச்சயமாக நம் எண்ணத்தை நிறைவேற்றி நம்மை ஆசீர்வதிப்பாள். பெண்கள் மாதவிடாய் காலத்தில் 4 முதல் 5 நாட்கள் இடைவெளி விட்டு, பிறகு விட்ட நாட்களிலிருந்து வழிபாட்டினை தொடரலாம்

    வாராகியிடம் எனக்கு இது வேண்டும் தாயே கொடு என்று கேட்கலாம். ஆனால், வேறொருவரை கெடு என்று தேவியிடம் வேண்டக்கூடாது. ஏனெனில், கண்ணிமைப்போல் காக்கும் அன்னைக்கு நம் சத்ருபக்தி தெரியாமலா போய்விடும். நமக்கு தீங்கு செய்பவர்களை வாராகி பார்த்து கொள்வாள். நம் மனத்தில் பொய், வஞ்சம், இதெல்லாம் இருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், வாராகி அதில் உடனே அமர்ந்து அருள்புரிவாள்.

    வாராகியை வழிபடுபவர்களுக்கு மூவுலகிலும் எதிரிகள் இல்லை. வாராகியை வழிபட்டால், எடுத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். எல்லாமே வெற்றியைத் தரும். அனைத்து எதிர்ப்புகளும் மறைந்துவிடும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்! வாராகியை வழிபடுபவர்களை தீய சக்திகள் தொடாது. வாராகியை சரணடைவதன் மூலம் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விரைவில் விடுபடலாம். வாராகி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளை எல்லாம் துவம்சம் செய்து தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் அனைத்திலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம். வாராகி அன்னை கூப்பிட்ட குரலுக்கு வந்து நமக்கு உதவுவாள்.

    வாராகி தேவி, பார்ப்பதற்குத் தான் கரடுமுரடான முகம் கொண்டிருக்கிறாள். ஆனால் உண்மையில் சாந்த நாயகிதான் இவளும். வீட்டுப் பூஜை அறையில் வாராகி தேவியின் படத்தையோ, சிலையையோ தாராளமாக வைத்து வணங்கலாம் மற்றும் பூஜித்து வரலாம்.

    வெள்ளிக்கிழமையன்று வாராகி அம்மனை வழிபடுவதன் மூலம், மாங்கல்ய பாக்கியமும், உங்கள் வியாபாரத்தில் லாபமும் அதிகரிக்கும்.

    ஞாயிற்றுக் கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டு வந்தால், நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். திங்கட்கிழமை நன்னாளில் விரதம் இருந்தால் மனநலம் தொடர்பான பிச்சனைகள் அனைத்தும் நீங்கும் என கூறப்படுகிறது.

    செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்தால் வீடு, நிலம், வழக்கு போன்ற சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.புதன்கிழமைகளில் விரதம் இருப்பவர்களுக்கு கடன் சிக்கல்கள் நீக்கி விடிவாள் இந்த வாராகி.

    வியாழக்கிழமையில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், கல்வியில் முன்னேற்றம், குழந்தை பாக்கியம் போன்றவை கிடைக்கும். மேலும், கையில் எடுத்த எந்த காரியத்திலும் வெற்றி பெற வாராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நினைக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

    வாராகி அம்மனுக்கு விரதம் இருக்க நினைப்பவர்கள், வாராகி தேவியை வணங்கி விரதத்தை ஆரம்பிக்கலாம். விரத நாட்களில், கேசரி, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் புராணம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் வாராகி தேவிக்கு நைவேத்தியம் செய்யலாம். மேலும், வெள்ளரிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றையும் வைவேத்தியமாக செய்து வழிபடலாம்.

    வாராகி அம்மனுக்கு உகந்த நிறம் பச்சை நிறம் என்பதால், விரதம் இருக்கும் நாட்களில் பச்சை நிற விரிப்பின் மீது அமர்ந்து, இலுப்பை எண்ணையைத் தீபமாக ஏற்றி வழிபடலாம். அப்படி தீபம் ஏற்றும் பொழுது கிழக்கு நோக்கி ஏற்றினால், வடக்குப் பக்கம் அமர வேண்டும். வளர்பிறை பஞ்சமி திதி திருநாளன்று வாராகி அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால் தீய சக்திகள் விலகி நன்மைகள் ஏற்படும்.

    வளர்பிறை பஞ்சமி திதியில், வாராகி தேவியை மனதார வணங்குங்கள். குடும்பமாக வீட்டில் அமர்ந்து தீபம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி, காத்தருள்வாள் வாராகி தேவி.

    • ஆலயத்தின் நான்கு புறங்களிலும் தேரோடும் அழகிய வீதிகள் உள்ளன.
    • திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் பேரளம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது திருமீயச்சூர் திருத்தலம்,

    தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள் பெருங்கோவில், மாடக்கோவில், மணிக்கோவில் என பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஆலயத்தினுள்ளேயே மற்றொரு ஆலயம் உள்ள அமைப்பை இளங்கோயில் என்று சொல்வார்கள்.

    கும்பகோணம் அருகே திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் ஆலயம் இத்தகைய இளங்கோவில் அமைப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தில் அருணாசலேஸ்வரரை மேகநாதசுவாமி என்றும், லலிதாம்பிகையை சாந்த நாயகி என்றும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு பார்த்த மேகநாத சுவாமி ஆலய ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் நான்கு புறங்களிலும் தேரோடும் அழகிய வீதிகள் உள்ளன. தேர்நிலைக்கு அருகில் தென்திசை நோக்கி சித்தி விநாயகர், தனி ஆலயத்தில் கோவில் கொண்டிருக்கிறார்.

    அதன் அருகில், சந்ததித் தெருவில் சூரியன் உருவாக்கிய சூரிய தீர்த்தம் உள்ளது. சூரியன் இத்தலத்தில் கஜவாகனனாக ஈசனை வழிபட்டதால் ஆலய விமானம் யானையின் பின்பாகம் போன்ற கஜப் ருஷ்ட அமைப்புடன் மூன்று கலசங்களுடன் காட்சி அளிக்கிறது.

    வெளிப்பிரகாரம் கடந்து உள்ளே சென்றால் மேகநாதர் கலைநயத்துடன் காட்சி தருகிறார். கோவிலில் லலிதாம்பிகைக்கு தனி சந்நதி உள்ளது. அங்கு அகலமான கருவறையில் நடு நாயகமாக வலதுகாலை மடித்து, இடதுகாலை கீழே பீடத்தில் ஊன்றி திருவாசி பளபளக்க, வெள்ளி சிம்மாசனத்தில் பேரெழிலுடன் அமர்ந் திருக்கிறாள் லலிதாம்பிகை.


    லலிதா சகஸ்ர நாமம் இந்த தலத்தில்தான் உருவாக்கி அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    காசியப்ப முனிவரின் மனைவிகளான கத்துருவும் வினதையும் மழலை வரம் வேண்டித் தவம் இருந்தார்கள். வினதைக்கு பட்சி ராஜனான கருடனும் கத்துருவுக்கு உடற் குறையுள்ள அருணனும் பிறந்தனர். அதனால் மனம் நொந்த

    அவர்கள் இறைவனிடம் மீண்டும் சரணடைந்தனர். அப்போது பறவை குழந்தை மகா விஷ்ணுவின் வாகனமான கருடனாக பெரிய திருவடியாகும் பேறு பெற்றது.

    கத்துருவின் குழந்தை அருணன் சூரியனின் சாரதியாக பதவி பெற்றார். அருணன் உடற் குறையுள்ளவராக இருந்ததால், அதை நிவர்த்தி செய்து கொள்ள விரும்பினார். தன் விருப்பத்தை நிறைவேற்றவல்ல ஈசனை தரிசிக்க, மோகினி வடிவம் கொண்டு அருணன் சென்றபோது, அவள் அழகில் மயங்கிய இந்திரன் அவள் மீது முறையற்ற காதல் கொண்டான்.

    இதனால் இறைவனின் சாபத்தை இந்திரன் பெற்றான். இந்த செய்தி அறிந்த சூரியனுக்கோ தன் சாரதியை மோகினியாக பார்க்க ஆசை வந்தது. கதிரவனுக்கு காமம் தலைக்கேற, மீண்டும் மோகினி வடிவமெடுக்க அருணனை வற்புறுத்தினான்.

    இதைத் தெரிந்துகொண்ட ஈஸ்வரன் சூரியனை சபித்தார். சூரியன் உடல் கறுமையாகி உலகம் இருண்டு விட்டது. தன் தவறை உணர்ந்து ஈசனிடம் மனமுருக வேண்டிக் கொண்டான் சூரியன். மீண்டும் மீண்டும் இறைவனை சரணடைந்து மனமுருக வேண்டினான்.

    அதற்கு இறைவன், 'திருமீயச்சூர் சென்று சூர்ய புஷ்கரணி என்னும் நீர்நிலையை உருவாக்கி, பூஜைகள் செய்' என்று ஆணையிட்டார். அதன்படி தலையில் எருக்கு இலை, அறுகம்புல், பசுஞ் சாணம் முதலியவற்றை வைத்துக் கொண்டு சங்கல்பம் செய்து விசேஷமாக பூஜைகள் செய்தான். ஏழு மாதம் இப்படிச் செய்தும் அவன் உடலின் கறுமையும், கடுமையும் மாறவில்லை. ஈஸ்வரனை நோக்கி கதறினான்.


    சுவாமியும் அம்பாளும் ஏகாந்தமாக இருக்கும் ஒரு அமைதியான வேளையில் சூரியனின் அலறல் அபஸ்வரமாக ஒலித்தது. அம்பாளுக்கு கோபம் வந்து சூரியனை சபிக்க நினைத்தபோது ஈசன் அவளைத் தடுத்தார்.

    'இப்போதுதான் சாப விமோசனம் பெறும் நிலைக்கு வந்திருக்கிறான் சூரியன், மீண்டும் சபித்தால் உலகம் இருளில் மூழ்கிவிடும். எனவே நீ சாந்தமடைந்து, உலகம் பிரகாசிக்கத் தவமிருப் பாயாக!' என்று கேட்டுக் கொண்டார்.

    அம்பிகையும் சாந்த நாயகியாக அதாவது லலிதையாக திருமீயச்சூர் பகுதியில் தியான கோலம் கொண்டாள். அன்னை பராசக்தியின் உத்தரவின் பேரில் வசின்யாதி வாக் தேவதைகள் தோன்றி லலிதா சகஸ்ரநாமம் எனும் லலிதையைப் புகழும் தோத்திரத்தை இத்தலத்தில் பாடி அரங்கேற்றினர்.

    அதில் வரும் ஸ்ரீமாதா எனும் முதல் நாமத்தின்படி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய், இந்த அகிலத்திற்கே அன்னையாய் திருயேச்சூர் தேவி அருள்கிறாள்.

    ஹயக்ரீவர் சொற்படி அகத்திய முனிவர், திருமீயச்சூர் வந்தார். சூரியன் அப்போது சாந்த நாயகிக்கு பூஜை செய்து கொண்டிருந்ததை பார்த்தார். தானும் அள்னையை வணங்கி, லலிதா நவரத்ன மாலை' என்கிற பாடல் தொகுப்பைப் பாடினார்.

    லலிதா நவரத்ன மாலையை இத்தலத்தில் பாடினால் லலிதா சகஸ்ரநாம பாராயண பலன் கிட்டும் என்பார்கள். இத்தேவியின் சந்நதி, கொலுமண்டபம் போல, ஒரு ராஜதர்பார் போல் தோற்றமளிக்கிறது. அழகு, கம்பீரம், கருணை தவழ பேரெழிலுடன் தேவி அமர்ந்திருக்கும் காட்சியில் நம் மனம் கரைந்து போகும்.

    காண்பவரைப் பரவசப்படுத்தும் தரிசனம் இந்த தலத்தில் கிடைக்கும். சாந்நித்யம் நிறைந்த இந்த சந்நதி பக்தர்களை நெக்குருக வைத்து கண்களில் நீர் திரள வைப்பது நிஜம். மனதில் நினைக்கும் கோரிக்கைகளை எல்லாம் நிறை வேற்றித் தருவது மனோன்மணி, அந்த மனோன்மணி வடிவில் பக்தர்களின் கோரிக்கை எதுவானாலும் நிறைவேற்றித் தருகிறாள் இந்த லலிதாம்பிகை.

    சித்ரா பவுர்ணமியும் சுவாதி நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாள் மிக விசேஷமானது. அன்று வானில் இருந்து விழும் மழைத்துளி சிப்பியினுள் நுழைந்தால் அது நல்முத்தாக மாறிவிடும். அந்நாள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அந்த நந்நாளில் இத்தல லலிதாம்பிகைக்கு ருயேச் ஆரம் அணிவிக்கப்பட்டு வழி பாடுகள் நடைபெறுவது வழக்கம்.

    விஜயதசமியின் போது நான்கு மூட்டை அரிசியில் சர்க்கரைப் பொங்கல் தயாரித்து, அதன் நடுவில் நெய்க்குளம் அமைத்து தேவியின் முன்பு படைப்பார்கள். அர்ச்சகர் கற்பூர ஆரத்தி காட்டும் போது அந்த நெய்க்குளத்தில் தேவியின் பிம்பத்தைத் தரிசிப்பது அபூர்வமான வாய்ப்பு.

    சூரியன் பூஜை செய்ததால் சித்திரை மாதம் 21 முதல் 27ம் தேதிவரை தினமும் அதிகாலையில் பெறும் சூரிய கிரகணங்கள் ராஜகோபுரம் வழியாக கொடிக்கம்பம், பலிபீடம், மகாமண்டபம், ஸ்நபன மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து கருவறையில் ஈசனின் மீது படர்வது அற்புதமான நிகழ்வு.

    இந்த பூஜையில் அகத்தியர் எந்த வடிவிலாவது வந்து கலந்து கொள்வதாக ஐதீகம், அப்போது மேகநாத சுவாமிக்கு நெல்லிக்கட்டைகள் ஊறிய நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. சூரியனைப் போலவே எமதர்மராஜனும் சனீஸ்வரரும் மேகநாத சுவாமியிடம் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தனர்.

    அதனால் எமனுக்கு உகந்த சதய நட்சத்திரத்தன்று சுவாமிக்கு எமலோக விருட்சமான பிரண்டையை உணவாக்கி சாதத்துடன் கலந்து அன்னதானம் செய்து, தாமரை இலையில், சங்கு புஷ்பத்தை வைத்து அர்ச்சனை செய்தால் உடல் நோய்களும் பாவங்களும் அகலும் என்பது ஐதீகம், திருமியச்சூரில் ஈசனுக்குத்தான் செய்த விசேஷ பூஜை பற்றியும் அதனால் தான் பெற்ற பலனையும் நசிகேதனுக்கு எமதர்மன் சொன்னாராம். இக்கோவிலைப் பற்றியும் அதில் உறையும் ஈசன் பற்றியும் நாவுக்கரசர் பாடி இருக்கிறார். திருஞான சம்பந்தப் பெருமானாலும் பாடல் பெற்ற தலம் இது.

    பிரதானக் கோவிலும் இளங்கோவிலும் பிற்கால சோழர்காலத்து திருப்பணியாகும். திருச்சுற்றை வலம் வரும்போது கோபத்துடன் எழுந்து செல்லும் அம்பிகையை அரவணைத்து வலக்கரத்தால் அம் பிகையின் முகவாயைப் பிடித்து சாந்தப்படுத்தும் ஈசனின் சிற்பம் மனதை கவர்கிறது. பக்தர்கள் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நின்று பார்த்து அந்த சிற்பத்தை ரசித்து விட்டுத்தான் செல்வார்கள். அவ்வளவு அழகு.

    இவரை ஷேத்ரபுராணேஸ்வரர் என அழைக்கின்றனர். கோவிலைச் சுற்றியுள்ள கோஷ்ட சிற்பங்கள் சில பிரமிப்பூட்டுகின்றன. அதில் ரிஷபாருட சிற்பத்தை குறிப்பிட்டுக் கூறலாம்.

    வடக்குப் பிரகாரத்தில் அஷ்டபுஜ துர்க்கை, அன்னை லலிதையைப் போலவே சாந்த வடிவாக தரிசனம் அளிக்கிறாள். பக்தர்களுக்கு இல்லற நலம், குழந்தைகளின் கல்வி, செய் தொழிலில் மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள், குறைவற்ற உடல்நலம், போன்றவற்றை அருளி பாதுகாக்கிறாள் இத்தலத்து லலிதாம்பிகை.

    கும்பகோணத்திலிருந்தோ மயிலாடுதுறையிலிருந்தோ திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் பேரளம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது திருமீயச்சூர் திருத்தலம். அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    • வசனத்தை கூட ராகமாக்கி பெரிய ஹிட் பாடல் ஆக்கிவிட்டார்.
    • முதல் பின்னணி பாடியவர் இவர்.

    "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்திற்கு இசையமைக்க எம்.எஸ்.வி. எடுத்துக்கொண்டது 15 நாட்கள் மட்டுமே! வெளிநாடு எங்கும் சென்று பார்க்காமல் ரிகார்டிங் தியேட்டரில் உட்கார்ந்த இடத்திலேயே போட்ட மெட்டுகள் தான் காற்றலைகளில் இன்றும் அசைந்துக் கொண்டு நம் காதுகளில் விழுந்து, மனதில் நுழைந்து மயிலிறகாய் நம்மை வருடிக் கொண்டிருக்கிறது!!

    அதுவரை வாங்காத சம்பளத்தை எம்.எஸ்.வி.க்கு கொடுத்தும் அவர் முகத்தில் உற்சாகமில்லை.

    எம்.ஜி.ஆர். சொன்னார், "எல்லாப் பாடலும் நல்லா வந்திருக்கு விசு".

    "இது வேண்டாம்", "நான் நினைச்ச மாதிரி வரலை", "நேற்றுப் போட்ட டியூனே நல்லாயிருந்தது" என்றெல்லாம் எம்.ஜி.ஆர். தான் போட்ட டியூன்களை மறுத்தது நினைவிலாடியது எம்.எஸ்.விக்கு.

    "பாடல்கள் சிறப்பா வரணுமேனு தான் நீ தந்த சில டியூன்களையெல்லாம் தட்டிக்கழிச்சேன். உண்மையில் நீ போட்ட எல்லா டியூனுமே நல்லா இருந்தது" என்று சொல்லி அவரைக் கட்டியணைத்துக் கொண்டார், எம்.ஜி.ஆர்!

    எம்.எஸ்.வி.யின் இசைத் திறனை மெச்சி எம்.ஜி.ஆர். எப்போதும் சொல்லும் வார்த்தை, "ஒலிப்பதிவின் நேரத்தில் விசுவிடம் தினந்தந்தி பேப்பரைக் காட்டாதீங்க, அதுக்கும் அவர் மெட்டுப் போட்டு விடுவார்!!!"

    உண்மையில் அப்படியொன்றும் திறைத்துறையில் நடந்தேவிட்டது! என்ன அது என்கிறீர்களா?

    யாராவது திருமண அழைப்பிதழுக்கும் மெட்டமைத்து இசையமைத்து பாடலாக்குவார்களா? அதையும் செய்தவர் தான் எம்.எஸ்.வி.!

    "நெஞ்சிருக்கும் வரை" என்ற ஒரு திரைப்படம் புதுமை இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1967ல் வந்தது. சிவாஜி கணேசன் ஒருதலையாக கே.ஆர்.விஜயாவை காதலிப்பார். அவரோ, சிவாஜியின் நண்பர் முத்துராமனை காதலிப்பார். இடையில் கே.ஆர்.விஜயாவின் அப்பா இறந்துவிட சிவாஜி காப்பாளராக பொறுப்பில் நின்று முத்துராமனுக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். இந்த சூழலில் வரும் பாடல் தான், "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி" என்றப் பாடல்!

    பாடலின் இடையே, "நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணி திங்கள் இருபதாம் நாள்... திருவளர் செல்வன் சிவராமனுக்கும் திருவளர்செல்வி ராஜேஸ்வரிக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்! தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன், ரகுராமன், ரகுராமன்..." என்ற வரிகள் வரும்.

    பாடல் என்றால் எதாவது ஒரு ராகத்தில் அமைத்து விடலாம். வசனத்தை கூட ராகமாக்கி கூடவே நாதஸ்வரம், தவில் இசையை சேர்த்து பாடலை பெரிய ஹிட் பாடல் ஆக்கிவிட்டார். திருமணத்தின் நேரலைக் காட்சியை அப்படியே கிரிக்கெட் கமெண்ட்ரி போல பாடி கைத்தலம் பிடித்துக் கொடுப்பது வரை இந்தப் பாடல் போகும்!

    திரைத்துறையில் இப்படியொரு அடையாளத்துடன் கூடிய பாடல் இதற்கு முன்னுமில்லை. இந்தப் பாடலுக்கு பின்னுமில்லை. சவாலான பாடல் அது?

    "பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி,

    புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி"-

    முதல் வரிசையில் நான்கு சீர்கள் (சொற்கள்) இருக்கின்றன. இரண்டாம் வரிசையில் ஐந்து சீர்கள் இருக்கின்றன. அதாவது புதியதாக ஒரு சீர் சேருகிறது. புதிதாக ஒரு சீர் சேருவதையும், மணமகள் திருமணம் வழியே புது சீர் போன்ற வாழ்க்கையை பெறுவாள் என்று இரு பொருள் பட எழுதி தமிழில் விளையாடியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்!! பாடல் முழுக்க ஒவ்வொரு வரியுமே நிறைய பேசப்பட வேண்டிய சுவை நிரம்பியவை தான்!

    நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடனான படத்தில் எம்.எஸ்.வி. இசையமைக்க வந்ததும் மிகவும் சுவரஸ்யமானது தான்!

    1952-ல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 'பணம்' என்றத் திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்திற்கு இசையமைக்க அப்போது பிரபலம் ஆகாத எம்.எஸ்.வி.யிடம் கேட்கிறார்.

    எம்.எஸ்.வி. "நான் தனியாக இசையமைப்பதைவிட சி.ஆர்.சுப்பாராமனிடம் முதன்மை உதவியாளராகவும், நல்ல அனுபவமுள்ள, திறமையான வயலினிஸ்ட்டா கவும் உள்ள அண்ணன் டி.கே.ராமமூர்த்தியும் இசையமைத்தால் நன்றாக இருக்கும்" என சொல்கிறார். சொல்வதுடன் நில்லாமல் டி.கே.ஆரிடம் கேட்கவும் செய்கிறார்.

    டி.கே.ராமமூர்த்தி, "தம்பி நீங்கள் இசையமைப்பதில் வல்லவர், கடுமையாக உழைக்கிறீர்கள். நீங்களே தனியாக இசையமைக்கலாமே என சொல்லியும் எம்.எஸ்.வி. ஒப்புக் கொள்ளவில்லை. "நீங்களே துறையில் சீனியர். நீங்களும் நானும் இணைந்து இசையமைப்போம் என்று வற்புறுத்தி டி.கே.ஆரை சம்மதிக்கவும் வைத்து விட்டார்.

    புதிய இரட்டையர்களுக்கு தன் இயக்கத்தில் வாய்ப்பு கொடுத்த என்.எஸ்.கே. படத்தில் டைட்டில் கார்டு வரும் போது யார் பெயரை முதலில் போடுவது என்பதையும் தீர்மானித்தார். வயதில் மூத்தவரான டி.கே.ராமமூர்த்தி பெயரை முதலிலும், தன் பெயரை அடுத்துக் காட்டவேண்டும் என்பது எம்.எஸ்.வி.யின் விருப்பம்.

    ஆனால் கலைவாணர், "தம்பி விசு, உங்களுக்கு பக்கபலமாக உங்களுக்கு பின்னாலிருந்து டி.கே.ராமமூர்த்தி உங்களை வழி நடத்துவார். நீங்கள் இளையவர், உங்கள் பெயரே முதலில் இருக்கட்டும்" என்று சொல்லி விட்டார்.

    கலைவாணர் வாக்கே இறுதியாகவும், உறுதியாகவும் ஆனது! திரையுலகில் "விஸ்வநாதன், ராமமூர்த்தி" என்ற பெயர் புதிய அதிர்வலையை ஏற்படுத்திய மந்திர சொல்லாக ஆனது வரலாறு!!

    'பணம்' படம் தயாரித்தவர் அமரர் ஏ.எல்.சீனிவாசன். இவரது 'மதராஸ் பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் 1951ல் ஆரம்பிக்கப்பட்டு எடுத்த முதல் திரைப்படம் அதுதான்!

    ஏ.எல்.சீனிவாசனின் சகோதரர்தான் கவியரசர் கண்ணதாசன். தனது சகோதரர் தயாரிப்பில் வந்த 'பணம்' படத்தில் மொத்தம் 11 பாடல்களையும் கவியரசரே எழுதினார். கவியரசருக்கு திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழில் நடித்த இரண்டாம் படம் 'பணம்'.

    சிவாஜியும் நடிகை பத்மினியும் முதன் முதலில் இணையாக சேர்ந்து நடித்தப் படம், 'பணம்'.

    முதல் படத்திலேயே இரட்டையர்கள் பல புதுமைகளைப் பாடல்களில் தந்தார்கள். இந்துஸ்தானியில் இரண்டு பாடல்கள், 'ஏழை நின் கோவிலை நாடினேன்' என்ற ஒரு வால்ட்ஸ் ஸ்டைல் பாடல்!

    "ஒங்கொப்பனை கேட்டே முடிப்பேன்" என்ற கர்நாடக வகைப்பாடல், "எங்கே தேடுவேன் பணத்தை" என்ற கிராமிய பாடல், பிறப் பாடல்களை ஜனரஞ்சகமான மெல்லிசையிலும் தந்து முதல் படத்திலேயே தங்களை மொத்த திரையுலகமும் திரும்பி பார்க்க செய்தார்கள் 'எம்.எஸ்.விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி' என்ற வெற்றி இரட்டையர்கள்!!

    1953-ல் இரண்டு படங்கள், 1954-ல் இருந்து 1958 வரை வருடத்திற்கு நான்கு படங்கள், 1959-ல் இருந்து 1961 வரை ஐந்து அல்லது ஆறு படங்கள் இசையமைத்த இவர்களின் கிராப் 1962-ம் ஆண்டில் மட்டும் பதினைந்து படங்கள் என்று எகிறுகிறது!! தெலுங்குப் படங்களிலும் கூட இசையமைக்கிறார்கள். பட பூஜைகளின் போதே, பத்திரிக்கைகளில் இசை விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையமைப்பு என்று வர ஆரம்பிக்கிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் எகிற ஆரம்பிக்கிறது.

    பின்னணி ஒலிப்பதிவு வசதி இல்லாத காலக்கட்டத்தில் கர்நாடக இசையைப் பாட தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்றும், அதனால் அந்த இசையைத் தெரிந்தவர்கள் நடித்தபோது அவர்களின் தலைமுடி அலங்காரம் பாகவதர் பாணியில் தான் இருந்தது என்றும் பார்த்தோம்.

    இதெல்லாம் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா காலத்தில் சரியாகப் பொருந்தியது. ஆனால் நவீன சமூக கால கதைகளின் நாயகர்களுக்கு பொருந்தாது இல்லையா? அரசர் கால கதைகளில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாகரீகமாக பேண்ட், சட்டை, கோட் அணிந்து நடிக்க ஆரம்பித்தார்கள். இந்த கெட்-அப்புக்கு பாகவதர் கால பாட்டு முறை பொருந்துமா? எழுச்சியான,உற்சாகமான, பரபரவென, துள்ளலான பாடல் முறை வேண்டுமல்லவா? அப்படியொரு பாணி உருவாக வேண்டுமில்லையா?

    இசையமைப்பாளர்கள் ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு, சி.ஆர்.சுப்பாராமன், கே.வி.மகாதேவன் உள்ளிட்ட எல்லோரும் கொஞ்சம் இசையை மெல்லிசைப் படுத்துகிறார்கள்.

    இந்த காலத்தில்தான் டி.எம்.சவுந்திர ராஜன் பின்னனி பாடகரின் அறிமுகம் ஆரம்பிக்கிறது. பக்திப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த அவர் திரையுலகிலும் வாய்ப்புகள் தேடுகிறார்.

    "தூக்குதூக்கி" திரைப்படத்தில் பாட அப்போது மிகப் பிரபலமான பின்னணி பாடகர் திருச்சி லோகநாதனை அழைக்கிறார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன். சம்பளத்தொகை உடன்படாததால், "புதியதாக டி.எம்.சவுந்திர ராஜன் என்று ஓர் இளைஞன் வந்திருக்கிறார். அவரை பாட வையுங்கள்" என்று சொல்லிவிட்டார் திருச்சி லோகநாதன். தமிழ்த் திரையுலகில் பின்னனி குரல் ஒலிப்பதிவு தொழில் நுட்பம் வந்தபோது, முதல் பின்னணி பாடியவர் இவர்.

    சிவாஜி கணேசனுக்கு அதுவரை சி.எஸ். ஜெயராமன் பின்னணி பாடிக்கொண்டிருந்தார். அதனால், புதுக்குரல் பொருந்துமா என்று சிவாஜி யோசிக்கிறார். உடனே, ஜி.ராமநாதன் மாதிரிக்கு, டி.எம்.சவுந்திர ராஜனை வைத்து, "ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு" -என்ற ஒரு பாடலை பதிவு செய்து போட்டுக் காட்டுகிறார்.

    சிவாஜி தனக்கு இந்த புதிய குரல் பிரமாதமாகப் பொருந்தியதைக் கேட்டு விட்டு சம்மதம் சொல்கிறார். பிறகு டி.எம்.சவுந்திரராஜனை வைத்தே, "சுந்தரி சவுந்தரி நிரந்தரியே", "பெண்களை நம்பாதே கண்களே", "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" அபாய அறிவிப்பு - என்றப் பாடல்களையும் பாடவைத்துவிட்டார் ஜி.ஆர். பாடல்கள் எல்லாம் படு பிரபலம். இனி எனக்கு டி.எம்.எஸ். தான் பின்னணி பாட வேண்டும் என்று சிவாஜி சொன்னதில் டி.எம்.எஸ்-க்கு ஏக குஷி!

    இந்தப் பாடல்களை கேட்டுப்பார்த்த எம்.ஜி.ஆர். தனக்கும் டி.எம்.எஸ். பின்னணி பாட வேண்டுமென நினைத்தார். அதுவரை எம்.ஜி.ஆருக்கு சீர்காழி கோவிந்தராஜனும் ஏ.எம். ராஜாதான் பின்னணிகுரலில் பாடிக் கொடுத்து வந்தார்கள். 'குலேபகாவலி' படத்தில் ஏ.எம்.ராஜா பாடிய 'மயக்கும் மாலை பொழுதே நீ போ போ'-என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது.

    ஒரே படத்தில் டி.எம்.எஸ்.சை வைத்து வேறு பாடல் எப்படி பின்னணி பாட வைப்பது? குரல் வித்தியாசம் தெரியுமே?

    இதற்கு சாமர்த்தியமாக எம்.எஸ்.வி. ஒரு உத்தியைப் பாடல்களில் வைக்கிறார். எம்.ஜி.ஆர். மாறு வேடங்களில் பாடும் இரண்டு பாடல்களையும், பொது வெளியில் உரக்கப்பாடும் எழுச்சி மற்றும் தத்துவப் பாடல்களை டி.எம்.எஸ்.சின் பின்னணி குரலில் பாட வைக்கிறார். குரல் எம்.ஜி.ஆருக்கு கதாநாயகத் தனத்துடன் பொருந்திப் போகிறது!

    டி.எம்.சவுந்திர ராஜனால் திரையுலகின் இருபெரும் கதாநாயகர்களுக்கும் முதல்முறையாக நாயகத்தன்மையுடன் கூடிய ஒரு திடகாத்திரமான குரல் கிடைத்திருப்பது வரமானது!! இதிலும் கொஞ்சம் மாற்றங்கள் வந்தது. அது என்ன?

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

     இணைய முகவரி:

    banumathykrishnakumar6@gmail.com

    • இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் இயல்பானவைதான்.
    • சண்டையே இல்லாத இல்லறம் இனிக்காது.

    தெய்வ சக்தி மண்ணுலக மக்களை நெறிப்படுத்துவதற்காக மண்ணில் அவதாரம் செய்து ராமனாகவும் கண்ணனாகவும் வாழ்ந்து காட்டி உள்ளது.

    எதை செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்பதையெல்லாம் அவதாரங்களின் வாழ்க்கை மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

    நம் இல்லற வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதை தெய்வங்கள் நடத்திய இல்லறம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

    இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் இயல்பானவைதான். சண்டையே இல்லாத இல்லறம் இனிக்காது. தெய்வீக இல்லறத்திலும் சண்டை உண்டு.

    ஆனால் ஊடல் நேர்ந்தால் பிடிவாதத்தால் ஊடலை நீட்டிக்கக் கூடாது. உடனடியாக இயல்பான அன்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். இது தெய்வீக இல்லறங்கள் நமக்குப் புகட்டும் முக்கியமான நீதிக் கருத்து.

    துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் இடைக்காலத்தில் வாழ்ந்த சைவப் புலவர். காவடிச் சிந்து எழுதிய அண்ணாமலை ரெட்டியாரின் சமகாலத்தவர்.

    ரெட்டியார் சந்தத்தால் புகழ்பெற்றார் என்றால் சுவாமிகள் அபாரமான கற்பனைத் திறத்தால் புகழ்பெற்றார். அவர் `கற்பனைக் களஞ்சியம்` என்றே அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகிறார்.

    சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடைபெற்ற ஊடல் காட்சி ஒன்றைக் கவிதை நயத்தோடு விவரிக்கிறார் சிவப்பிரகாசர்.

    ஊடல் தோன்றிவிட்டால், தலைவியை சமாதானம் செய்வதற்காக அவள் காலிலும் தலைவன் விழுந்து வணங்கலாம் என்கின்றன இலக்கியங்கள்! (இதெல்லாம் இன்றும் உள்ளதுதானே என்று தோன்றுகிறதா?!)

    பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையே ஊடல். பார்வதியை என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்தப் பார்க்கிறார் சிவபெருமான். பார்வதி சமாதானமாகவில்லை.

    இனி வேறென்ன வழி? மனைவி காலில் விழ வேண்டியதுதான். `நான் செய்ததெல்லாம் தவறுதான், மன்னித்துக் கொள்!' எனப் பார்வதியின் பாதங்களில் தலைவைத்து வணங்கி இறைஞ்சுகிறான் இறைவன்.

    கணவன் தன் காலில் விழுந்ததும் பார்வதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவள் அத்தனை மகிழ்ச்சி அடையக் காரணம், கணவன் தன் காலில் விழுந்தான் என்பதல்ல.

    அப்படி அவன் விழுந்தபோது அவன் தலையில் உள்ள, பார்வதியின் சக்களத்தியான கங்கையும் அவள் காலில் விழுந்தாள் இல்லையா? அதனால்தான் பார்வதிக்கு அளவற்ற மகிழ்ச்சி என இதற்கு விளக்கம் தருகிறார் சிவப்பிரகாச சுவாமிகள்!

    ஒரு துறவி கூர்ந்து கவனித்து விவரிக்கும் இந்த நடைமுறை இல்லறம், படிக்கும்போது நம் முகத்தில் ஒரு புன்முறுவலை வரவழைக்கிறது!

    இன்னொரு முறையும் இப்படித்தான். பார்வதிக்கும் பரமசிவனுக்கும் ஊடல். அவள் சிவனை விட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டு விட்டாள்.

    அதற்காக சிவன் சிவனே என்றிருக்க முடியுமா? `என் சீற்றத்தை மாற்றி என்னை சமாதானப்படுத்தக் கூட உங்களுக்குச் சக்தி இல்லையா?' என்று அவள் கேட்டு விடுவாளே?

    சிவன் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால் பார்வதி ஊடலை விட்டுக் கொடுப்பதாக இல்லை. என்ன செய்வது இப்போது?

    அப்போதுதான் ராவணன் இமயமலைப் பகுதிக்கு வருகிறான். சிவபக்தனான அவன் இமய மலையோடு சிவனைத் தூக்கிக்கொண்டு இலங்கையில் கொண்டுபோய் வைத்துக் கொள்ள முடிவு செய்கிறான்.

    தன் இருபது கரங்களால் இமயமலையைத் தூக்கவும் செய்துவிட்டான். அவன் தூக்க முற்பட்டபோது மலை நடுங்கியது.

    மலை திடீரெனக் குலுங்குகிறதே என அஞ்சிய பார்வதி, ஊடலை மறந்தவளாய், ஓடிவந்து சிவனைத் தழுவிக் கொள்கிறாள். அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் சிவனின் உடலில் பாதியாகவே இருப்பவள்தானே அவள்?

    இப்படியாக அவள் ஊடல் தணிந்ததில் சிவபெருமானுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன் கட்டை விரலால் அவர் மலையை அழுத்த மலை நடுக்கம் நீங்கி நிலை பெறுகிறது.

    ஆனால் இப்போது மலையின்கீழ் சிக்கிக் கொண்ட ராவணன் உடல் நடுங்கத் தொடங்குகிறது. இசையில் வல்லவனான அவன் தன் கைநரம்புகளையே வீணை நரம்புகளாக்கி சாம கானம் இசைக்கிறான். சாம கானப் பிரியனான சிவன் மனம் இளகுகிறது.

    ராவணனை மலையின் அடியிலிருந்து விடுவித்ததும் அல்லாமல், அவனுக்குப் பல வரங்களைத் தந்து யாராலும் வெல்ல முடியாத சந்திரகாசம் என்னும் வாளையும் தருகிறார் சிவபெருமான். சிவன் இந்த அளவு மனம் குளிர்ந்து ராவணனுக்கு வரங்கள் தந்ததற்கு ராவணன் இசைத்த சாம கானம் மட்டும்தான் காரணமா? அல்ல.

    தன் மனைவியின் மாறாத ஊடலை மாற்றி அவள் சமாதானம் அடைய உதவியது ராவணனின் மலையைத் தூக்கிய மலைக்க வைக்கும் செயல். அதன்பொருட்டே ராவணனுக்கு வரங்கள் அருளினாராம் சிவன்!

    ராமனுக்கும் சீதைக்கும் இடையேயான ஊடலை ராமாயணம் விவரிக்கிறது. சுந்தரகாண்டத்தில் சீதையிடம் அனுமன் ராமன் கொடுத்தனுப்பிய கணையாழியைத் தருகிறான்.

    மோதிரத்தைப் பார்த்ததும் ஆனந்த பரவசம் அடைகிறாள் சீதை. அனுமனிடம் கணையாழி தொடர்பான ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசுகிறாள்.

    ராமனுக்கும் சீதைக்கும் இடையே மணமான புதிதில் ஏதோ சின்னச் சண்டை ஒன்று தோன்றிவிட்டது. ஆனால் சண்டை நீடிப்பதை ராமனும் விரும்பவில்லை. சீதையும் விரும்பவில்லை. மறுபடி சகஜமாகப் பேசிக் கொள்ள என்ன வழி என ஆராய்கிறது ராமனின் மனம்.

    அவன் தன் விரலில் உள்ள மோதிரத்தை வேண்டுமென்றே கீழே போடுகிறான். பிறகு,

    `எனக்கு சீதை என்ற பேரழகியை மணம் செய்துகொடுத்தபோது என் மாமனார் ஒரு மோதிரத்தை என் விரலில் அணிவித்தாரே? இப்போது அந்த மோதிரத்தைக் காணோமே? என்ன செய்வேன் நான்?`

    என்று வெளிப்படையாகச் சொல்லியவாறே தேடுகிறான் ராமன்.

    எந்தப் பெண்ணும் அவள் அழகைப் புகழ்ந்தால் உள்ளம் குளிர்வாள் என்ற உளவியல் ரகசியத்தை ராமன் அறிந்து வைத்திருந்தான்.

    அவன் எதிர்பார்த்தபடியே தன்னைப் பேரழகி எனக் கூறித் தன் அழகைக் கணவன் புகழ்ந்ததில் சீதைக்கு வெட்கம் கலந்த மகிழ்ச்சி. அவளுக்கு ஊடல் பற்றிய நினைவே மறந்துவிட்டது.

    `இதோ அந்த மோதிரம் இங்குதானே இருக்கிறது பிராணநாதா! அது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம் தேடுகி றீர்களே?' என்று, ராமனின் கண்ணுக்கு எதிரேயே தென்பட்ட மோதிரத்தை சீதை எடுத்து அவன் கையில் கொடுக்க அவர்கள் சண்டை தீர்ந்து சமாதானம் ஆனார்களாம்!

    இல்லறம் தொடர்பான இந்த அழகிய நினைவை தன் மகனைப் போன்ற அனுமனிடம் ராமனுக்குச் சொல்ல வேண்டிய அடையாளச் செய்தியாக விவரித்து மகிழ்கிறாள் சீதாப்பிராட்டி. பிறகு கவலையோடு கேட்கிறாள்:

    `குழந்தாய் அனுமா! என் பிராணநாதர் இந்த மோதிரத்தை விரலிலிருந்து கழற்றி உன்னிடம் தந்தாரா அல்லது இடுப்பின் ஆடை முடிச்சிலிருந்து எடுத்துத் தந்தாரா?`

    எதற்கிந்த விசாரணை என்று தெரியாத அனுமன், யோசித்துவிட்டு, `தாயே! இடுப்பின் ஆடை முடிச்சிலிருந்துதான் எடுத்துத் தந்தார்.` எனச் சொன்னதும் சீதையின் விழிகளில் கண்ணீர் திரையிட்டது.

    `அனுமனே! விரலில் அணியும் மோதிரத்தை இடுப்பின் ஆடை முடிச்சில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? காரணம் அவர் என் பிரிவால் சரியாகச் சாப்பிடாததால் அவர் உடல் மெலிந்து விரலும் மெலிந்துவிட்டது. மோதிரம் விரலில் நிற்காமல் நழுவத் தொடங்கி விட்டது.

    அதனால் ஆடையில் முடிந்து வைத்துக் கொள்கிற நிலை நேர்ந்திருக்கிறது. நீ திரும்பிச் சென்று அவரைச் சந்தித்ததும் அவரை நன்கு உணவு உண்ணச் சொல். போரில் ஈடுபட்டு என்னைச் சிறை மீட்கவும் உடலில் வலிமை வேண்டுமல்லவா?`

    சீதையின் கூர்மையான மதிநுட்பத்தை எண்ணி அனுமன் பிரமித்தான் என்கிறது ராமாயணம்.

    கண்ணனைப் பற்றி என்ன சொல்ல! அவன் காதலுக்கென்றே படைக்கப்பட்ட கடவுள். திருட்டு அவன் தொழில். பொய் அவன் பொழுதுபோக்கு! எல்லாப் பெண்களின் இதயங்களையும் ஒருசேர அள்ளித் திருடுவான் அவன்.

    ஒருத்தியைத் தேடிப் போகும்போது இன்னொருத்தியை ஏங்கித் தவிக்க வைப்பான். `சொன்னபடி நேற்று நீ ஏன் என் வீட்டிற்கு வரவில்லை?` என்று ஒரு கோபிகை கேட்டால் அதற்கு பதில் அளிப்பதற்குக் கண்ணனிடம் ஆயிரம் பொய்கள் தயாராக இருக்கும்.

    அப்படித்தான் ஒரு கோபிகை இல்லத்திற்குச் சொன்னபடி ஓர் இரவு அவன் செல்லவில்லை. மறுநாள் `நேற்று வாக்களித்தபடி ஏன் என் இல்லத்திற்கு நீ வரவில்லை?` என்று அவள் ஊடல் கொண்டாள்.

    அதற்கு அவன் சொன்ன சமாதானம் என்ன தெரியுமா? `நேற்றிரவு கொஞ்சம் மழையாக இருந்ததே? தெரியாதா? அதனால்தான் உன் வீட்டுக்கு வர முடியவில்லை!`

    இந்த சமாதானத்தைச் சொன்ன கண்ணன் எந்தக் கண்ணன்? கனமழை பிடித்துக் கொண்டபோது கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்து அனைவரையும் காத்தானே அதே கண்ணன்!

    பாவம் அந்தக் கோபிகையும் கண்ணன் சொன்ன பொய்யை நம்பினாள். பெண்கள் ஆண்களின் பொய்களை நம்புவதற்கென்றே படைக்கப் பட்டவர்கள் அல்லவா?

    மனித வாழ்க்கையைப் போலவே தெய்வீக வாழ்க்கையைச் சித்திரித்து அதன்மூலம் மனிதனை நெறிப்படுத்துகின்றன புராணங்கள். இல்லறத்தில் ஊடல் இருக்கலாம், உணவில் உப்பைப் போல.

    உப்பில்லாத உணவு சுவைக்காது. எனவே ஊடல் தேவைதான். அளவை மீறிய உப்பு கரிக்கும். ஆகையால் ஊடலை ஓர் அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இல்லறத்தில் சண்டை இயல்பானது என ஏற்று உடனுக்குடன் சண்டையை விட்டுவிடத் தொடங்கினால் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும். ஊடலில் விட்டுக்கொடுத்துத் தோற்பவர்களே இல்லறத்தில் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெறுகிறார்கள்!

    தொடர்புக்கு-

    thiruppurkrishnan@gmail.com

    • ரஷியா அவரது கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் காட்டியது.
    • புறாக்களின் மீது அபாரமான அன்பு கொண்டவர் டெச்லா!

    மனிதனுக்கு எல்லையற்ற ஆற்றல் உண்டு என்பதைக் கண்டுபிடித்ததோடு உலகையே ஒளிவெள்ளத்தால் நிரப்பிய ஒரு அதிசய மனிதர் யார் தெரியுமா? மிகப் பெரும் விஞ்ஞானியான நிகோலா டெச்லா தான் அவர்!

    பிறப்பும் இளமையும்: குரோஷியா என்று இப்போது அழைக்கப்படும் நாட்டில் ச்மில்ஜன் என்ற ஒரு சிறு கிராமத்தில் 1856-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் நாளன்று நிகோலா டெச்லா பிறந்தார். இவரது முன்னோர்கள் செர்பியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். இடைவிடாத போரினால் ஒரே உக்கிர பூமியாக விளங்கிய நாட்டில் போரின் சித்ரவதைகளையும் கொலைகளையும் பார்த்தவாறே அவர் வளர்ந்தார்.

    டெச்லா பிறந்த அதே நேரத்தில் ஒரே இடியும், பளீர் பளீர் என்ற மின்னலுமாக வானம் ஒளிர்ந்தது. அவரை பிரசவம் பார்த்த நர்ச், இந்த வேளையில் பையன் பிறந்திருக்கிறானே, 'இவன் இருள் குழந்தையாக இருப்பான்' என்றார். ஆனால் உடனே இதை மறுத்த டெச்லாவின் தாயார், "இல்லை, இல்லை, வானம் ஒளிர்கிறதே, அதனால் இவன் ஒளி மயமாக விளங்குவான் என்றார். அவர் வாக்கு அப்படியே பலித்தது! மின்னல் ஒளி மன்னனாகவே விளங்கினார் டெச்லா!

    டெச்லாவின் தந்தை மிலுடின் உள்ளூர் சர்ச்சில் பாதிரியாராக இருந்தார். பல மொழிகளைப் பேசவல்ல அவர் ஒரு கவிஞரும் கூட. அவரது தாயார் ஜோவ்கா தான், புதிது புதிதாக எதையாவது கண்டுபிடிக்கும் அவரது திறமையைக் கண்டு அதை ஊக்குவித்தார். தாயாருக்கு சமையலுக்கு உதவியான புது சாதனங்களை டெச்லா செய்து தந்தார்.

    அவரது புத்திகூர்மையைக் கண்டு வியந்த தந்தை அவருக்கு நினைவாற்றல் உத்தி உள்ளிட்ட பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். 1863-ல் குதிரை ஒன்று அவரது சகோதரனைத் தாக்கவே அதில் அவன் இறந்து விட்டான். இதனால் மிகவும் வருந்திய குடும்பம் காச்பிக் என்ற இடத்திற்குக் குடி பெயர்ந்தது.

    அங்கு டெச்லாவை அனைவரும் அறிவாளி என்றே அழைத்தனர். பின்னர் ஆச்திரியா பாலிடெக்னிக்கில் பயின்றார். அவரது தந்தை இறக்கவே அவர் ஹங்கேரிக்குச் சென்று புடாபெச்ட் நகரில் ஒரு டெலிபோன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதிலிருந்தே டைரக்ட் கரண்ட் (D.C.) என்பதை விட ஆல்டர்னேடிங் கரண்ட் (A.C) மிகுந்த சக்தி வாய்ந்தது என்பதை அவர் உணர்ந்தார். அதில் பல சோதனைகளைச் செய்து புதியனவற்றை இனம் கண்டார். அந்த டெலிபோன் கம்பெனி விற்கப்படவே அவர் பாரிசுக்குச் சென்று அங்குள்ள எடிசனின் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார்.

    அமெரிக்கா வருகை: டெச்லா 28-ம் வயதில் 1884, ஜூன் 6-ம் தேதி நியூயார்க்கிற்கு வந்தார். அவர் பையில் இருந்தவை நான்கு செண்ட் நாணயம், ஒரு சூட், நண்பர் ஒருவரின் முகவரி. அவர் நேராக எடிசனைச் சென்று சந்தித்தார். எடிசன் தன் முன்னே நின்று கொண்டிருந்த நெடிய உருவத்தைப் பார்த்தார். அவரிடம் டெச்லா ஒரு சிறிய குறிப்புள்ள பேப்பரைக் கொடுத்தார். அதில் புடாபெச்டில் அவரை வேலைக்கு அமர்த்தியிருந்த முதலாளி எடிசனுக்கு தனது குறிப்பை எழுதி இருந்தார் இப்படி: "எனக்கு இரண்டு பெரிய மனிதர்களைத் தெரியும். ஒருவர் நீங்கள். இன்னொருவர் இந்த இளைஞர்"

    உடனே எடிசன் அவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டார். உழைப்பு, உழைப்பு, கடுமையான உழைப்பு. எடிசனுக்கு டி.சி மோட்டார் மீது அடங்காத பற்று. டெச்லாவோ மின்சக்தியை தொலைதூரங்களுக்கு எடுத்துச் செல்ல வசதியானது ஏ.சி.யே என்றார்.

    எடிசன் அவரிடம் எலக்ட்ரிக் ஜெனரேட்டரின் வடிவமைப்பை மாற்றும் படி சிக்கலான ஒரு புராஜெக்டைக் கொடுத்து இதை நீ முடித்தால் உனக்கு ஐம்பதினாயிரம் டாலர் தருகிறேன் என்றார். எவ்வளவு பெரிய தொகை அது! உடனே டெச்லா தனது நேரம் முழுவதையும் செலவழித்து 24 நவீன வடிவமைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்து அதை எடிசனிடம் காட்டினார். எடிசன் பிரமித்தார். டெச்லாவைப் பாராட்டினார். ஆனால் டெச்லா, "எனக்குத் தருகிறேன் என்றீர்களே, அந்த ஐம்பதினாயிரம் டாலரைத் தர முடியுமா?" என்று கேட்டார்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    "ஓ"வென்று சிரித்த எடிசன், "அட, அதை உண்மை என்று நினைத்து விட்டாயா, அது ஒரு அமெரிக்க ஜோக்" என்றார்.

    திகைத்துப் போன டெச்லா அன்றே எடிசன் நிறுவனத்தில் இருந்து விலகினார். டெச்சல் என்பவர் டெச்லாவிடம் அவரது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுமாறு செய்ததோடு இரு தொழில் அதிபர்களையும் அவருக்கு அறிமுகப்படுத்தினார். பல நிறுவனங்களும் அவரது நுட்பமான அறிவுத்திறனை அறிந்து பண உதவியைத் தாராளமாகச் செய்தன.

    மரணக் கதிர் கண்டுபிடிப்பு: டெச்லா தன்னுடைய கண்டுபிடிப்புகள் போர்முறையையே மாற்றவல்லவை என்றார். 1934-இல், துகள் கற்றை என்ற அவருடைய ஆயுதம் - மரணக் கதிர்- டெத் ரே என அனைவராலும் அறியப்பட்டது. பத்தாயிரம் எதிரி விமானங்களை ஆகாயத்திலேயே அது அழித்து விடும் என்றார் அவர். இந்தக் கண்டுபிடிப்பானது உலகில் போர்களுக்கு ஒரு முடிவைக் கட்டும் என்றார் அவர்.

    ரஷியா அவரது கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் காட்டியது. அவரது சில திட்டங்களுக்காக இருபத்தைந்தாயிரம் டாலர் செக்கை உடனே தந்தது.

    சந்திரனையே தாக்க முடியும்!

    டெச்லா பல அபூர்வ காட்சிகளை மனக்கண்ணால் கண்டதுண்டு. அயல் கிரகவாசிகளிடம் இருந்து வந்த பல சமிக்ஞைகளைத் தான் பெறுவதாக அவரே கூறியதுண்டு. ஆற்றல் மிக்க அலைக்கற்றையை வீசி சந்திரப் பரப்பை இடைஞ்சலுக்குள்ளாக்க முடியும் என்றார் அவர்.

    வெச்டிங்ஹவுச் ஆதரவு: டெச்லாவிற்கு தனது கனவுத் திட்டங்களை நிறைவேற்ற நிறைய பணம் தேவைப்பட்டது. அவரது இந்தத் தேவையையும் அவரது மேதாவிலாசத்தையும் நன்கு புரிந்து கொண்ட தொழில் அதிபரான வெச்டிங்ஹவுச் என்பவர் அவருக்குத் தேவையான பணத்தைத் தந்தார்.

    1893-ல் டெச்லாவும் வெச்டிங்ஹவுசும் சிகாகோ உலகக் கண்காட்சியை விளக்குகளால் அலங்கரிக்கும் வாய்ப்பை கடும் போட்டிக்கு இடையே ஏலம் எடுத்துப் பெற்றனர். இதுவே உலகின் முதலாவது மின்சாதன கண்காட்சி ஆகும். இந்த ஏலத்தில் தோற்ற எடிசன் தனது பல்புகளை இந்தக் கண்காட்சியில் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டார். 2,50000 பல்புகளை ஆறே மாதத்தில் டெச்லா தயாரித்தார். மே மாதம் முதல் தேதியன்று அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளிவ்லெண்ட் ஒரு பட்டனை அமுத்த இரண்டு லட்சம் டெச்லா பல்புகள் ஒளியை அள்ளி வீசின. உலகமே பிரமித்தது. இதுவே ஒளிவெள்ளப் பாதையில் உலகம் புகும் முதல் விழாவாகத் திகழ்ந்தது,

    நியூயார்க் அருகே லாங் ஐலேண்டில் முதல் வயர்லெச் ச்டேஷனை நிறுவ எண்ணிய டெச்லா ஜே.பி.மார்கன் என்ற பிரபல தொழில் அதிபருடன் சேர்ந்து 200 ஏக்கர் நிலப்பரப்பில் வார்டன்கிளிப் டவர் என்ற நிலையத்தை அமைக்க ஆரம்பித்தார். அட்லாண்டிக் மகா சமுத்திரம் வழியே இங்கிலாந்திற்கு தகவல்களை அனுப்புவது அவர் திட்டம். ஆனால் ஏராளமான நிதி தேவையாக இருந்தது. மார்கன் அதை தர மறுக்க 1917-ல் திட்டம் நிறுத்தப்பட்டது. டவரை அழித்து டெச்லா தனது கடனை அடைத்தார். இன்றும் டெச்லா டவர் என்றால் அமெரிக்காவில் அனைவரும் அறியும் அளவு அது புகழ் பெற்ற ஒரு டவர்!

    சுமார் 42 கண்டுபிடிப்புகளில் அவருக்கு வர வேண்டிய ராயல்டி மட்டும் பல லட்சம் டாலர்களாக இருந்தது. என்றாலும் ஒரு சொற்பத் தொகையையே அவர் பெற்று வந்தார்.

    புறாக்களுடன் தோழமை: புறாக்களின் மீது அபாரமான அன்பு கொண்டவர் டெச்லா!

    அவர் தனது லாபரட்டரிக்கு அருகில் இருந்த ஒரு பூங்காவில் ஏராளமான புறாக்களுக்கு தினம்தோறும் தீனியைப் போட்டு வந்தார். ஒரு நாள் அவற்றுள் ஒன்றிற்கு ஒரு காலும் ஒரு இறக்கையும் உடைந்திருந்ததைக் கண்டார். இரண்டாயிரம் டாலர் செலவழித்து புது சாதனம் ஒன்றைச் செய்தார். அதன் மூலம் புறாவின் உடலைத் தாங்குவதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்து அது முழு குணம் அடையும் வரை அதைத் தீவிர கவனத்துடன் பாதுகாத்து வந்தார். இன்னொரு சமயம் ஒரு புறாவை அவர் வளர்க்க ஆரம்பித்தார். அதைப் பற்றிக் கூறுகையில், "ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிப்பது போல் அதை நான் நேசித்தேன். அதுவும் என்னை நேசித்தது. வாழ்க்கையின் அர்த்தத்தை அப்போது தான் நான் புரிந்து கொண்டேன்" என்றார் அவர்!

    குடும்பம்: டெச்லா வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாகவே திகழ்ந்தார். பெரும் கண்டுபிடிப்புகள் திருமணமானவர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஒரு முறை அவர் கூறினார்.

    ஒரு நாளைக்கு 19 மணி நேரம் அவர் உழைத்தார். தனது வசிப்பிடமாக பெரிய ஓட்டல்களை அவர் தேர்ந்தெடுத்தார். உரிய பணத்தைக் கொடுக்க வசதி இல்லாத போது சிறிய ஓட்டலுக்கு மாறுவார். இறுதியாக 33 அடுக்குமாடி ஓட்டலான ஓட்டல் நியூயார்க்கரில் அவர் வசிக்க ஆரம்பித்தார்.

    மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அவரது கொள்கை. சாப்பிடும் டேபிளில் 18 நாப்கின்களை அவர் உபயோகிப்பது வழக்கம், 3, 6, 9 என்ற எண்களே அவருக்குப் பிடித்தமான எண்கள். எதைச் செய்தாலும் இந்த எண்கள் வரும்படி பார்த்துக் கொள்வார்.

    எதிர்கால உலகத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் திறமையுடன் எதையும் நிர்வகிப்பார்கள் என்பது அவரது கணிப்பு.

    மனதில் வைத்திருந்த மர்மங்கள்!

    அனைத்துக் கண்டுபிடிப்புகளையும் மனதிலேயே மர்மமாக அவர் வைத்திருந்ததற்கான ஒரு காரணம் உண்டு. ஒரு சமயம் சோதனை ஒன்றைச் செய்யும் போது உருவான அதீத சக்தி அவரது சோதனைச் சாலைக் கட்டிடத்தையே பிரமாண்ட சப்தத்துடன் தூள் தூளாக்கி அழித்தது. இப்படிப்பட்ட சக்தி வெளிஉலகில் அனைவருக்கும் தெரிந்தால், இதை துர்நோக்கத்துடன் பயன்படுத்துவோரால் உலகம் அழியும் என்ற முடிவுக்கு வந்த அவர் அந்தக் கண்டுபிடிப்புகளை இறுதி வரை சொல்லாமலேயே மறைந்தார்.

    மறைவு: 1943-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி மன்ஹாட்டனில் தனது ஓட்டல் அறையிலேயே, இதயத்தில் ரத்த உறைவின் காரணமாக 86-ம் வயதில் டெச்லா மரணமடைந்தார்.

    அறிவுரை: "எனது வாழ்க்கை சம்பவங்களைத் திருப்பி மதிப்பீடு செய்து பார்க்கும் போது, நமது விதியை உருவாக்கும் செல்வாக்குகள் எவ்வளவு நுட்பமாக இருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன்."

    "ஒருவருடைய தீர்வானது (எந்த விஷயத்திற்கும்) அவரது சொந்த முயற்சியினாலேயே கொண்டு வரப்பட முடியும்!"

    ஒளிவெள்ளம் தந்தவர்: ஒவ்வொரு நாளும் இருள் கவியும் நேரத்தில் மின்விளக்கைப் போட்டு ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி உலகத்தினர் அனைவரும் பணிகளைச் செய்ய காரணமாக அமைந்தவர் டெச்லா. அவரை நினைத்து நன்றி சொல்லலாம், இல்லையா!

    • அனைத்து கோவில்களிலும் தூய்மையும் அமைதியும் காக்கப்படுகிறது.
    • சத்தியத்தை மீறாமல் நடந்து கொள்வதை கடைப்பிடிக்கின்றனர்.

    மகிழ்வான மங்களூர் நகர கட்டுரையில் கர்நாடகத்தில் உள்ள தக்ஷண கனடா என்று அழைக்கப்படுகின்ற தென் கன்னட மாவட்டத்தின் தலைநகரான மங்களூரை பற்றியும் அங்குள்ள பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டோம். இப்போது தென் கன்னடம் என்றாலே தொன்மை மிகு கோயில்கள் பெயர் பெற்றவைகளாக உள்ளன. அவைகளை அறிவோம்.

    கர்நாடகத்தின் முக்கிய புண்ணிய தலமாக உள்ள "தர்மஸ்தலா மஞ்சுநாதர் ஆலயம்" மற்றும் "குக்கே சுப்பிரமணிய ஆலயம் (காளஹஸ்தி போல் நாக தோஷம் போக்குகின்ற பக்தர்கள் குவியும் பரிகாரத் தலம்) பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

    இவை மட்டுமல்லாது இன்னும் பல கோவில்களும் இந்த மாவட்டத்திலேயே உள்ளன. இந்த மாவட்டத்தில் மங்கலாதேவி உள்ளிட்ட ஏழு அம்மன்கள் (சகோதரிகள்) அங்கு வாழக் கூடிய மக்களை காவல் காப்பதாக ஐதீகம்.

    இவற்றில்... மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து நெளிந்து ஓடி வரும் நந்தினியாற்றின்அருகே அமைந்துள்ள "கட்டில்" என்ற ஊரிலுள்ள "துர்கா பரமேஸ்வரி அம்மன்" அங்கு வருகை புரியும் பக்தர்களுக்கு கேட்ட வரத்தை அருள் பாலிப்பவளாக காட்சியளிக்கிறாள்.

    சுயம்புவாக எழுந்ததாக கருதப்படும் அம்மன் "மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி அதிகம்" உடையவளாக இருப்பது உண்மை.

    இந்த அம்மனுக்கு சாற்றப்படும் புடவைகள் எண்ணிலடங்கா.... அத்துடன் கண்ணாடி வளையல்களை, வேண்டுதல் கோரிக்கை நிறைவேற்றியதும் அங்கு வரும் பக்தர்களுக்கு அளிப்பது வாடிக்கை.

    ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக் காலங்களில் அதிக மழை பெய்யும் நாட்களில் இந்த கோவிலினுள் ஓடும் நந்தினியாற்றின் அழகை ரசிப்பதே தனி ஆனந்தம். பல்குணி நதிக்கரையில் நம் நாட்டின் பழமையான கோவில் ஒன்று "பொலலி"என்ற இடத்தில் உள்ளது.

    ஸ்ரீ ராஜராஜேஸ்வரி இங்கே எழுந்தருளியுள்ள தெய்வம். நம்மூரில் உள்ள மாரியம்மன் போல் ஆளுயரத்திற்கும் மேல் சிவப்பு நிறத்தில் 9 அடி உயரத்தில் மூலிகை மருந்துகளால் உருவாக்கப்பட்டு அமர்ந்திருப்பதை காண்பது அற்புதமான அனுபவமாக இருக்கும்.

    இங்கு வருடத்திற்கு ஒருமுறை அருகில் உள்ள வயல்வெளியில் "பொலலி செண்டு" என்று கொண்டாடும் திருவிழாவிற்கு மக்கள் வெள்ளம் கூட்டம் கூட்டமாக திரள்கிறது. இத் திருத்தலம் மங்களூருவிற்கு 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    மங்கலாதேவி ஆலயத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே மாரி குடியும் (மாரியம்மன் கோயில்) உருவா மார்க்கெட் என்ற இடத்தில் ஒரு மாரி குடியும் உள்ளது.

    மேலும் 30 கிலோமீட்டர் தொலைவில் உடுப்பி செல்லும் வழியில் உள்ள "முல்கி" என்ற இடத்தில் "துர்கா பரமேஸ்வரி" அருள்பாலிக்கிறாள்.

    இந்த சக்தி மிகுந்த தெய்வங்கள் தென் கனடா மாவட்டத்தை காவல் காப்பதாக மக்களின் தெய்வீக நம்பிக்கை.

    இந்த மாவட்டத்தில் பல கிறித்துவ தேவாலயங்கள் இருந்தாலும் மங்களூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இன்பான்ட் ஜீசஸ் சர்ச், கார்மல் குன்றில் உள்ள கிறிஸ்தவ குழந்தை இயேசு தேவாலயம் அமைதி ததும்பும் இடமாக இருக்கிறது.

    தென் கன்னடாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ள "உல்லால்" கேரளா காசர்கோடு செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    மதினாவில் இருந்து 400 வருடங்களுக்கு முன்பு வந்த புனித சையது சரி என்பவர் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உருஸ் திருவிழாவிற்கு பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் திரளாக வந்து பங்கேற்கின்றனர்.

    தென் கன்னட மாவட்டத்தில் சமண வழிபாடும் அதிகமாக இருந்திருப்பதை ஆங்காங்கேயுள்ள பசதிகள் அதாவது சமண ஆலயங்கள் நிரூபிக்கின்றன.

    ஜெயின் சமயத்தவரின் தென்னிந்தியாவில் உள்ள வாரணாசியாக கருதப்படும் மூடுபத்திரியில் உள்ள ஆயிரம் தூண் ஆலயம் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் ஒரு தூண் போன்ற அமைப்பு இன்னொரு தூணில் காணப்படுவது இல்லை.

    மங்களூர் மாவட்டத்தில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் இருந்தாலும் துளு பேசக்கூடிய மக்களே அந்த மண்ணின் மைந்தர்களாக இருக்கிறார்கள். அவர்களின் தெய்வ வழிபாடு என்பது கர்நாடகத்தில் இருந்தாலும் முற்றிலும் வேறுபட்டு இருப்பது ஆச்சரியமே.

    "யக்ஷகானா" என்கின்ற நடன நாடகம் அக்டோபர் முதல் அறுவடை முடிந்த வயல்வெளிகளில் வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய உடைகள் மற்றும் அலங்காரத்தோடு மகாபாரதம் ராமாயணத்தில் உள்ள கிளை கதைகள் போன்றவை சொல்லப்படுகின்றன. விடியும் வரை மக்கள் அமர்ந்து விரும்பி பார்க்கக்கூடிய அளவில் சிறப்பாக நடைபெறுகிறது.

    துளு மக்கள் நாக வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள "குடுப்பு" என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் பஞ்சமி.. சஷ்டி திதிகளில் ஆயிரக்கணக்கான இளநீர்கள் அபிஷேகத்திற்கு பக்தர்களால் வழங்கப்படுகிறது. அதைப்போன்றே அனைத்து கோவில்களிலும் அரச மரத்தை ஒட்டியுள்ள நாக சிலைகளுக்கும் இதே பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

    "நாகமண்டலா" என்ற பெயரில் லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு பொதுவெளியில் இரவு நேரத்தில் ஒரு பூஜை நடத்தப்படுகிறது.

    நாகம் போன்று வேடமிட்டு ஆண் சுழன்றும் நெளிந்தும் ஆடும் முறையை தரிசிக்க அனைத்து மக்களும் பயபக்தியுடன் கலந்து கொள்வதை நாம் காணலாம். அங்கு அனைவருக்கும் உணவு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தினரும் கூட இந்த பூஜையை வேண்டிக் கொண்டு தனிப்பட்ட முறையில் செய்வதும் இங்கு வழக்கத்தில் உள்ளது.

    யக்ஷ கானாவை போலவே இங்கு பூத கோலா அல்லது நேமா என்ற ஒரு வழிபாட்டு முறை இங்கு கொண்டாடப்படுகிறது. 'கொரகஜ்ஜா' என்ற தெய்வத்திடம் (நம் முனீஸ்வரர் கருப்பசாமி போல்) அதிகம் பயம் உள்ளவர்களாக இந்த ஊர் மக்கள் இருக்கின்றனர். அவர் மீது செய்யப்படும் சத்தியத்தை மீறாமல் நடந்து கொள்வதை கடைப்பிடிக்கின்றனர்.

    "புலி வேஷம்" ,இது நம்ம ஊர் போன்று புலி வேஷம் என்றாலும் இதற்கான ஒப்பனை என்பது சற்று வேறுபட்டுள்ளது.

    இங்கு கிருஷ்ண ஜெயந்தி உரியடி ஊர்வலங்கள்... விநாயகர் சதுர்த்தி... தசரா போன்ற பண்டிகைகளின் ஊர்வலங்களில் மக்கள் புலிவேஷம் அணிந்து தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடிக்கொண்டு வருவது மிகவும் ரசிக்கத் தக்க வகையில் இருக்கும். வேடிக்கைக்காகவும் வேண்டிக் கொண்டும் இந்த வேடம் போடுகின்றனர்.

    இவ்வாறு வித்தியாசமான வழிபாடுகள் முறைகள் இருந்தாலும் தென் கன்னட மாவட்ட மக்கள் அனைவரும் 'பரசுராம ஷேத்திரம்' என்ற புண்ணிய பூமியில் இருப்பவர்களாக உணர்ந்து நியாயம் தவறாது நடப்பவர்களாக உள்ளனர்.

    இங்குள்ள அனைத்து கோவில்களிலும் வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்பது அவர்கள் ஆலயத்தை எந்த அளவிற்கு பக்தியுடனும் அறநெறியுடனும் பராமரிக்கிறார்கள் என்பதை உணர முடியும்.

    அனைத்து கோவில்களிலும் தூய்மையும் அமைதியும் காக்கப்படுகிறது. கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்வதில் பக்தர்களின் பங்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல இடங்களுக்கும் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து பயணிப்போம்.

    இணைய முகவரி:

    thaenmozhi27@gmail.com

    • விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதயே நமஹ என்பதாகும்.
    • சேலம் உடையார்பட்டி கந்தாஸ்ரமத்தில் விநாயகரும், ஆஞ்சநேயரும் இணைந்து காட்சி தருகிறார்கள்.

    ஒவ்வொரு மாத ரோகிணி நட்சத்திரத்தின் போதும் சந்தனத்தை தங்கள் கைகளாலேயே அரைத்து இரட்டை பிள்ளையார்கள் செய்து வணங்கினால் கடன் தொல்லைகள் நீங்கும். ஒவ்வொரு மாத சதுர்த்தியின் போதும் தம்பதியர்கள் இரட்டைப்பிள்ளையாருக்கு கொழுக்கட்டையை நைவேத்தியமாக செய்து அந்த கொழுக்கட்டையை பக்தர்களுக்கு தானமாக கொடுத்தால் தங்கம் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

    குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டுமென்று விரும்புபவர்கள் திருவோண நட்சத்திரத்தின் போது இரட்டைப் பிள்ளையாருக்கு பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்து, இரண்டு மாம்பழங்களை ஏழ்மை நிலையில் உள்ள தம்பதியர்க்கு தானமாகக் கொடுத்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும்.

    சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து இரட்டைப் பிள்ளையாரை வழிபடுபவர்கள் லட்சுமியின் அருளுக்குப் பாத்திரமாவார்கள். மேலும் இரட்டை விநாயகரை தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

    விநாயகர் பெண் உருவத்தில் காட்சியளிக்கும் சிற்பம் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் உள்ளது.

    இக்கோவிலில், மூலவரான தாணுமாலைய சுவாமிக்கும் சன்னிதிக்கு செல்லும் வழியில் மூலஸ்தானத்திற்கு எதிரே உள்ள அணையா விளக்கு அருகே ஒரு கல் தூணில் தான் இந்த பெண் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இந்த விநாயகருக்கு விக்னேஷ்வரி என பெயரிட்டு பக்தர்கள் வணங்கி செல்கின்றனர். இந்த விநாயகர் தோஷங்களை விரட்டி பிரச்சனைகளை தீர்த்து, நினைத்த காரியத்தை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.


    வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் அனைத்து விதமான பேறுகளையும் பெறலாம்.

    விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை செய்து அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்வதனால் நமக்குள்ள திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

    அவிட்ட நட்சத்திரத்தன்று வள்ளி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

    கணபதிக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்தி விட்டு எந்த ஒரு காரியத்திற்கும் சென்றால் செல்லுமிடத்தில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியும்.

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணை, நல்ல எண்ணை, இலுப்ப எண்ணை, விளக்கு எண்ணை, பசு நெய் ஆகிய ஐந்து வகை எண்ணைகளால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் மனதிற்கேற்ற இல்லற வாழ்வு அமையும், செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும்.

    பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும். உறவினர்கள் மனம் மகிழ்ந்து உதவி புரிவார்கள். பணக்கஷ்டங்கள் நீங்கி செழிப்பான வாழ்க்கை வாழ வழிவகை செய்வார் கணபதி. மூல நட்சத்திரத்தன்று சுந்தர விநாயகருக்கு, பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்து அந்த பால்கோவாவை தானமாக அளித்தால் பதவி மாற்றம், இட மாற்றம் போன்றவை எளிதாகும்.

    திருவாதிரை நட்சத்திரத்தன்று நர்த்தன விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவைக் கொண்டு காப்பிட்டு வந்தால் அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் மீண்டும் இழந்த பதவியையும் மன நிம்மதியையும் பெறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப் போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன் பெறலாம்.

    சேலம் உடையார்பட்டி கந்தாஸ்ரமத்தில் விநாயகரும், ஆஞ்சநேயரும் இணைந்து காட்சி தருகிறார்கள். அந்த உருவத்தின் பெயர் ஆத்யேந்தய பிரபு. இதே போல் சென்னை மத்திய கைலாஷ் கோவிலிலும் ஆத்யேந்தய பிரபு உள்ளார். இவரை வழிபட்டால் சனி பகவானால் வரும் தோஷங்கள் நம்மை அணுகாது. கண் திருஷ்டிப் பிள்ளையார் படத்தை வீட்டில் வைத்து வணங்குவதுடன் முடிந்த போதெல்லாம் திருஷ்டி சுற்றிப் போட்டால் தேவையற்ற திருஷ்டிகள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும்.

    சங்கடஹர சதுர்த்தியன்று மாணவர்கள் அருகம்புல் மாலை சார்த்தி விநாயகரை, வழிபட்டால் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடையலாம். வியாபாரம் நன்றாக நடைபெற்று அதிக லாபம் பெற்று மனநிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு கிழக்குப் பார்த்த பால் விநாயகரை ஐந்து வித எண்ணை சேர்த்து பஞ்சமுக தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவழத்தால் செய்யப்பட்ட விநாயகரை செவ்வாய்கிழமை தோறும் தவறாமல் வணங்க வேண்டும். பவழத்தால் விநாயகர் செய்ய வசதி இல்லாதவர்கள் செம்மண் அல்லது குங்குமத்தில் விநாயகர் செய்தும் வழிபடலாம். சிறப்பான கனிகளை நைவேத்தியமாகப் படைத்து வணங்கினால் ஆனைமுகன் அருள்புரிவான். செவ்வாய் தோஷம் நீங்கி சவுபாக்கியத்துடன் வாழ்வு அமையும்.

    பில்லி சூனியம் போன்ற கொடுமையான தீய சக்திகள் விலகுவதற்கு அரசும், வேம்பும் பின்னியபடி உள்ள மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட வேண்டும். மாதம் தோறும் பவுர்ணமி நான்காம் நாளான (நான்காம் பிறை) ஸ்ரீவிநாயகரை வழிபடுவோர் சங்கடம் நீங்கி, சந்தோஷம் அடையலாம். விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதயே நமஹ என்பதாகும். காலை, மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

    கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம், எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனி பகவான் தொல்லைகள் நீங்கும்.

    • 12 பாவகங்களில் ராகு, கேதுகள் அமர்ந்த கர்ம வினைப் பதிவுகளுக்கான விளக்கங்களை பார்க்க இருக்கிறோம்.
    • இரண்டு கட்டங்களை தன் கட்டுக்குள் வைத்துக் கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு/கேதுக்கள்.

    மனித குலத்தையே அச்சுறுத்தலோடு, பதட்டத்தோடு வைத்திருக்கும் ஒரு தோஷம் உள்ளது எனில் அது ராகு/கேது தோஷமாகும். ஒரு ஜாதகத்தில் உள்ள பன்னிரெண்டு கட்டங்களில் ஏதேனும் இரண்டு கட்டங்களை தன் கட்டுக்குள் வைத்துக் கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு/கேதுக்கள்.

    ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலையே பிரம்மாண்டப்படுத்தும் .கேது சுருக்கும். ராகு | கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகத்தையோ அல்லது அவயோகத்தையோ சந்திக்கின்றார்கள். மனிதனுடைய வாழ்வியல் மாற்றங்களை வழி நடத்தக் கூடிய கர்ம அதிகாரியாக ராகு, கேதுக்களை கூறலாம். ஏற்கனவே கடந்து வந்த ஜென்ம வாசனையின் அனைத்து நல்ல,கெட்ட சம்பவங்களையும் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிற ஜென்மத்தில் நடக்கும் அனைத்து நல்ல, கெட்ட செயல்களுடன் இணைத்து புதிய பதிவுகளை பதிவு செய்யும் வினைப் பதிவாளராகவும் அதற்கேற்றபடி வினை தூண்டும் கர்ம வினைகளைத் ஊக்கியாகவும் ராகு, கேதுக்கள் செயல்படுகின்றன. 12 பாவகங்களில் ராகு, கேதுகள் அமர்ந்த கர்ம வினைப் பதிவுகளுக்கான விளக்கங்களை பார்க்க இருக்கிறோம். இவை அனைத்தும் முன்ஜென்ம வினையின் தொடர்ச்சி. இதில் கொடுக்கப்பட்ட பலன்கள் அனைத்தும் அவரவர் ஜென்ம லக்னத்திற்கே உறியது. ராசிக்கு அல்ல.

    லக்னத்தில் ராகு 7-ல் கேது

    ஒருவரை வாழ விடாமல் செய்வது, தவறாக வழி நடத்துவது, கெட்ட பழக்கங்கள் ஏற்பட காரணமாக இருப்பது, தொழில் கூட்டாளியை ஏமாற்றிய குற்றம், திருமண விஷயத்தில் கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் ஏமாற்றிய வினையை தீர்க்க எடுத்த பிறப்பு என்று கூறலாம். இதன் பலனாக இந்த ஜென்மத்தில் கோச்சாரத்தில் லக்னத்தில் ராகு 7 ல் கேது வரும் போது சம்பந்தமே இல்லாத நபரால் பாதிக்கப்படுவது, மனவேதனைபடுவது, தொழில் கூட்டாளியால் ஏமாற்றப்படுவது, களத்திரத்துடன் கருத்து வேறுபாடு, திருமணம் தள்ளிப் போவது போன்ற பலன்கள் நடக்கும்.

    பரிகாரம்

    இது போன்ற பிரச்சனையை அனுபவிப்பவர்கள் பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைப்பதுடன் இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகரை செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல்-9 மணிக்குள் வழிபாடு செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

    2-ல் ராகு 8-ல் கேது

    நல்ல கணவன், மனைவியை பிரித்தவர்கள், தம்பதியினரை வாழ விடாமல் செய்தவர்கள், பொய் சாட்சி சொல்லி ஒரு குடும்பத்தை கெடுத்த வினையை தீர்க்க பிறந்த கர்ம வினைப் பிறப்பாகும். மேலும் ஒருவரை கெடுக்க மாந்தரீகம் செய்தவர்கள். உழைத்த கூலியை கொடுக்காதவர்கள், பொய் சொல்ல அஞ்சாதவர்களுக்கு இத்தகைய அமைப்பு ஏற்படுகிறது. இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு கோச்சாரத்தில் இரண்டில் ராகு 8-ல் கேது வரும் போது குடும்பத்தை விட்டு பிரியும் நிலை, தவறான வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் மனவேதனை தரும் மறு விவாகம் ஏற்படும். இதன் பலனாக இந்த அமைப்பு உடையவரின் திருமண வாழ்க்கையில் நெருடல், மனவேதனை, களத்தரத்துடன் பிரச்சனை இருக்கும்.

    பரிகாரம்

    இதற்கு பரிகாரமாக பொருளாதார பற்றாக்குறையால் திருமணம் செய்ய முடியாமல் இருப்பவர்களின் திருமணத்திற்கு உதவி செய்வதுடன் ஊரின் வடக்கு பகுதியில் உள்ள புற்றை செவ்வாய் கிழமைகளில் வழிபாடு செய்ய வேண்டும்.


    3-ல் ராகு 9-ல் கேது

    உடன் பிறந்தவர்களுக்கு உரிய பங்கை அபகரித்தவர்கள், உதவி செய்யக் கூடிய சக்தி இருந்தும் உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்யாதவர், அவர்களின் வாழ்க்கை அழிய காரணமாக இருந்தவர், வீண் வதந்தியை பரப்புதல் பேய், பிசாசு, செய்வினை என்று கூறி பணம் பறித்த குற்றம், நல்லவர் மனதை நடுங்க வைப்பது , தானம் கொடுப்போரை தடுப்பது போன்ற குற்றங்கள் அடங்கும். இதன் பலனாக இந்த பிறவியில் தங்களின் உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்மை செய்தால் அவப் பெயரே மிஞ்சும். கோச்சாரத்தில் 3-ல் ராகு 9-ல் கேது வரும் போது உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் முன்னோர்களின் சாபமும் ஏற்படும்.

    பரிகாரம்

    உடன் பிறந்தவர்களின் வாரிசுகளுக்கு தேவையான உதவியை செய்தல், வயதானவர்களுக்கு உணவு, ஆடை தானம் செய்தல், முன்னோர்களுக்கு முறையான திதி, தர்பணங்களை செய்து வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும்..

    4-ல் ராகு 10-ல் கேது

    தாயை பராமரிக்காத குற்றம், தாய் வழி உறவினர்களை அவமதித்த குற்றம், வீட்டில் வாடகைக்கு இருப்பவரை துன்புறுத்துதல், அதிக வாடகை வாங்குதல், தன்னிடம் வேலை பார்ப்பவரை அடிமைப்படுத்தி முன்னேனேற்றத்தை முடக்குதல், ஒருவரின் தொழிலை பாதிக்க செய்தல், ஒருவர் ஊரை விட்டு வெளியேற காரணமாக இருத்தல், மண் புற்றுக்களை இடித்தல் ஆகிய குற்றமுடைய அமைப்பாகும். இதன் பலனாக இந்த ஜென்மத்தில் சொந்த வீடு பாக்கியமின்மை, பல வீடு இருந்தும் வாடகை வீட்டில் வாழும் நிலை, தனது சொத்துக்களை பயன்படுத்த முடியாமல் வைத்து வேடிக்கை பார்க்கும் நிலை, அடிமைத் தொழில் செய்து கஷ்ட ஜீவனம் செய்யும் நிலை, சாதாரண தொழிலை கூட கடும் போராட்டத்துடன் நடத்த வேண்டிய நிலை வரும். கோச்சாரத்தில் 4-ல் ராகு/-10-ல் கேது வரும் போது வீடு வாகன பராமரிப்பால் இழப்பு அல்லது சொந்த வீட்டை இழத்தல், தொழிலை இழுத்து மூடும் நிலை போன்றவை ஏற்படும்.

    பரிகாரம்

    தாயை பராமரித்தல், தாய் வழி உறவினர்கள் வயதான பெண்களுக்கு தேவை அறிந்து உதவுதல் தெருவோரம் வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு குடிசை அமைக்க உதவுதல். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க செய்தல். ஜீவனத்திற்கு சிரமப்படுபவர்களுக்கு அடிப்படை தேவையை நிறைவு செய்ய உதவி வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    5-ல் ராகு 11-ல் கேது

    குல தெய்வத்தை குழி தோண்டி புதைத்தவர்கள், கோவில் சொத்தை கொள்ளையடித்தவர்கள், குரு காணிக்கை கொடுக்க மறுத்தவர்கள், குரு துரோகம் செய்தவர்கள், ஒருவரின் பூர்வீக சொத்தை அபகரித்தல், ஒருவருக்கு தொழிலில் லாபத்தை இழக்க செய்தல், காதலித்து ஏமாற்றிய குற்றம், ஒருவருக்கு வாரிசு உருவாக முடியாமல் செய்த கர்ம வினைப் பதிவாகும். இதன் பலனாக குழந்தை பிறப்பில் தடை, உடல் நலக் குறைவுடன் கூடிய குழந்தை பிறப்பது, குல தெய்வம் தெரியாமல் போவது , குல தெய்வ அனுக்கிரகமின்மை, பூர்வீக சொத்தை பயன்படுத்த முடியாதமை போன்றவைகள் ஏற்படும். இவர்களுக்கு கோச்சாரத்தில் 5ல் ராகு 11-ல் கேது வரும் போது குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு, குழந்தைகளால் மன உளைச்சல், மூத்த சகோதரர்களுக்காக பொருள் இழக்க நேருதல் அல்லது மூத்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு, குல தெய்வ வழிபாடு செய்ய முடியாமல் போகுதல் அல்லது வழிபாட்டு தலங்களுக்கு சென்று வரும் போது விபத்து ஏற்படும். தொழிலில் பெரும் பொருள் இழப்பு ஏற்படும்.

    பரிகாரம்

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை தானம் செய்வதுடன் வயதில் மூத்தவர்களின் நல்லாசி பெற வேண்டும். அத்துடன் தங்களுக்கு தொழிலில் வரும் லாபத்தில் சிறு பகுதியை வயதான முதியோர் இல்லங்களுக்கு தர வேண்டும். பராமரிப்பு இல்லாத கோவில்களை பராமரிக்க நிதி உதவி செய்ய வேண்டும்.

    6-ல் ராகு 12-ல் கேது

    அநியாயமாக ஒருவரின் மேல் ஏற்படுத்தும் தவறான வழக்கு, தன் கடனை மற்றவர் மேல் திணிப்பது, அல்லது பண மோசடி ஏற்படுத்துதல், ஒருவரின் திம்மதியை கெடுத்தது, நோயுள்ளவர்களுக்கு உதவாமை , நோய்க்கு தவறான மருந்து கொடுப்பது ஆகிய காரணங்களே இந்த வினைப் பதிவிற்குரிய அமைப்பாகும். இதன் பலனாக இந்த ஜென்மத்தில் வழக்கிற்கு மேல் வழக்கு, கடன், நோய், எதிரி தொல்லை இருந்து கொண்டே இருக்கும். கோச்சா ரத்தில் 6-ல் ராகு 12-ல் கேது வரும் போது கடுமையான கடன் பிரச்சினை, பண இழப்பு, இனம் புரியாத நோய் , செய்வினை தாக்கம் ஏற்படும்.

    பரிகாரம்

    கருட வழிபாடு, காளி வழிபாடு, கால பைரவர் வழிபாடு செய்வதுடன் தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கடும் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை செய்பவர்களுக்கு மருத்துவ செலவிற்கு உதவ வேண்டும்.

    7-ல் ராகு லக்னத்தில் கேது

    பிறர் மனைவியை விரும்பியவர்கள், களத்திரத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், பெண் பித்தர்கள், கூட்டாளியை ஏமாற்றுதல், சட்டத்திற்கு புறம்பான செயல்களை ஆதரித்தது போன்ற செயல்களால் தோன்றிய வினைப் பதிவாகும். இதன் பலனாக திருமண வாழ்வில் குழப்பம், தம்பதியினர் கருத்து வேறுபாடுடன் வாழ்வது கூட்டாளிகளால் ஏமாற்றப்படுதல், பணத்தை பறிகொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் ஏற்படும். கோச்சாரத்தில் 7-ல் ராகு லக்னத்தில் கேது வரும் போது களத்திரத்தை பிரிதல், வம்பு, வழக்கு தொழில் கூட்டாளிகளால் பிரிவினை வம்பு வழக்கு , ஏமாற்றபடுதல் , மரியாதைக்கு பங்கம் எற்படும்.

    பரிகாரம்

    சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு மாலை நேரத்தில் அருகம்புல் அர்ச்சனை செய்வதுடன் ஞாயிறு தோறும் ராகு காலத்தில் கால பைரவருக்கு உளுந்த வடை மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். சுமங்கலி பெண்களிடம் நல்லாசி பெற வேண்டும்.

    8-ல் ராகு 2-ல் கேது

    பேராசையை தூண்டி ஒருவரின் வாழ்வை கெடுத்தல், தவறான வார்த்தைகளால் பிறருக்கு மனவேதனை செய்தல் , பொய் சொல்லி பணம் பறித்தல் , நம்பிக்கை துரோகம், நம்பிக்கை மோசடி ஆகிய செயல்களால் தோன்றிய கர்ம வினையாகும். இதன் பலனாக அடிக்கடி விபத்து, கண்டம், தற்கொலை உணர்வு , பண இழப்பு ஏற்படலாம். கோச்சாரத்தில் 8-ல் ராகு 2-ல் கேது வரும் போது வருமானக் குறைவு, வருமானம். நின்று போகுதல், கொடுத்த பணம் வராமல் போவது, குடும்பத்தில் நிம்மதியின்மை வறுமை, தகுதி குறைவான இடத்தில் வேலை பார்க்கும் நிலை, விபத்து ஏற்படும்.

    பரிகாரம்

    தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை நித்திய பிரதோச வேளையில் சிவ தரிசனம் செய்வதுடன் சனிக்கிழமைகளில் உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    (தொடர்ச்சி அடுத்த வாரம்...)

    செல்: 98652 20406

    ×