என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே 6 நாட்கள் போர் நடந்தது. 6-வது நாள் சூரன் அழிக்கப்பட்டான்.
    • சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும் இங்கும் அசைத்தபடி வருவான்.

    திருச்செந்தூரில் நாளை மறுநாள் (7-ந்தேதி) சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. திருச்செந்தூரில் நடக்கும் விழாக்களில் இது முதன்மையானது. உணர்வுப்பூர்வமானது.

    முருகப்பெருமானுக்கு நாம் எடுக்கும் திருவிழாக்களுள் சிறப்புமிக்கது கந்தசஷ்டி. சூரனை முருகப்பெருமான் வதம் செய்த நாளே சஷ்டியாகும். இந்த திருவிழா சூரசம்கார திருவிழாவாக திருத்தணி தலம் தவிர முருகன் எழுந்தருளி அருள்பாலிக்கும் மற்ற அனைத்து தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அலைபாயும் செந்திலம்பதியாகிய திருச்செந்தூ ரில் இவ்விழா சீரும் சிறப்புமாக நடத்தப்படும். அந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்று கோஷமிடும் ஒலி விண்ணை பிளக்கும்.

    அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு.

     

    சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார்.

    சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் 'வைதாரை யும் வாழவைப்பவன் முருகன்' என்று போற்றி வழிபடுவர்.

    கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள செய்து அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது.

     

    முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே 6 நாட்கள் போர் நடந்தது. 6-வது நாள் சூரன் அழிக்கப்பட்டான்.

    இந்த 6 நாள் போர் திருச்செந்தூர் கடலில் நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    முதல் நாள் போரில் சூரபத்மன் மகன் பானுகோபன் போரிட வந்து தோல்வி கண்டு புறமுதுகிட்டுத் திரும்பினான்.

    இரண்டாம் நாள் சூரபத்மனும், சிங்கமுகாசுரன், அதிசூரன், தாரகாசுரன் மகன் அசுரேந்திரனும் உடன் வந்தனர். வீரபாகுத் தேவர் அசுரேந்திரனைக் கொன்றார்.

    மூன்றாம் நாள், சூரபத்மன் தன் மற்றொரு மகனான இரணியனைப் போரிடச் சொன்னான். அவன் அறிவுரைக் கூறியும் சூரபத்மன் ஏற்கவில்லை. இருப்பினும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்னும் திருவாக்கினை ஏற்றுப் போரிடச் சென்றான் இரணியன்.

    சிங்கமுகாசுரன் ஆயிரம் முகங்கள் கொண்டவன். அவன் தேவர்களையும், வீரபாகுவையும் தன் தாய் கொடுத்த பாசத்தை கொண்டு கட்டிக் கடலில் விட்டான்.

    பாலசுப்பிரமணியருடன் போரிட வந்த படைகள் அனைத்தையும், கோர ரூபம் கொண்டு விழுங்கினான். குமரக் கடவுளால் பலமுறை வெட்டப்பட்ட வெட்டுண்ட சூரனின் தலை மீண்டும் மீண்டும் முளைத்தது.

    சூரபத்மன் திறமையாகப் போரிட்டான். முடிவில் இந்திர ஜாலத் தேரைக் கொண்டு சஞ்சீவியால் உயிர்ப் பித்த, பானுகோபன், சிங்கமுகன், தருமகோபன் முதலிய வீரர் களைக் கொண்டு மீண்டும் போரிட்டான்.

    முருகப் பெருமான் பாசுபதத்தால் மீண்டும் அவர்கள் அனைவரையும் கொன்றார். சூரபத்மன் எடுத்த மாமர உருவை வேலாயுதத்தால் இரு பிளவாக்க, அவன் பெற்ற வரத்தால் மீண்டும் நல்லுருவுடன் வந்தான். மீண்டும் அவனை இருபிளவாக்க, அவ்விரு பிளவும், மயிலும், சேவலுமாக மாறின.

    மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் பிடித்துத் தேவர்களை சிறை மீட்டார். பின் செந்தூரை அடைந்து சிவபூஜை செய்தார். இவ்வாறாக சூரபத்மனை அழித்ததனால் மும்மூர்த்திகளின் குறைகளைப் போக்கினார்.

    தேவேந்திரன் தனக்கும், தேவர்களுக்கும் உதவிய முருகனுக்குத் தம் நன்றியைப் புலப்படுத்த விரும்பி தன் மகளான தேவசேனா தேவியை திருமணம் செய்து கொடுத்தார்.

    அதை பிரதிபலிக்கும் வகையில் திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் சூர சம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது.

    பல வேடங்களில் வரும் சூரனை முருகர் அழிக்கும் காட்சிகள் நாளை மறுநாள் சூரசம்ஹார தினத்தன்று தத்ரூபமாக நடத்தி காட்டப்படும்.

    இந்த ஆண்டு நடைபெறும் சூரசம் ஹாரத்தை நேரில் காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சூரசம்ஹார விழா எப்படி நடைபெறும் தெரியுமா?

    சூரசம்ஹாரம் தினத்தன்று (7-ந்தேதி) மாலை முதலில் சூரன் தலையை ஆட்டிக் கொண்டு வருவான். அவனை பல்லக்கில் சுமந்து வருவார்கள்.

    திருச்செந்தூர் ஊரின் மையப்பகுதியில் உள்ள சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்படும் சூரன் திருச்செந்தூர் நகரில் ரத வீதிகளை வலம் வருவான்.

    அப்போது சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும் இங்கும் அசைத்தபடி வருவான். சூரன் முன்னே முரசு ஒலித்தபடி செல்வார்கள்.

    சூரன் கடற்கரைக்கு வந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரனும், முருகரும் போர் செய்யும் காட்சியை காண ஒன்று திரண்டு நிற்பார்கள். கந்த சஷ்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள். இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருள்வார். அப்போது இயற்கை காட்சியில் கூட மாற்றங்கள் ஏற்படும்.

    கடல், ஆகாயத்தின் செந்நிறமாக மாறும். கடற்கரையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அசாதாரண அமைதி நிலவும். லட்சக்கணக்கான மக்கள் சூரசம்ஹாரத்தை காண்பதற்கு கடலும் சற்று உள்வாங்கும் என்று சொல்வார்கள்.

    போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வரும். பின்னர் சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின் வாங்கி செல்லும்.

    இதைத் தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும். அது சூரனை சென்று தாக்கும்.

    சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான். முதலில் யானை முகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக சாமியைச் சுற்றி வருவான். முருகன் சார்பாக அர்ச்சகர் ஒருவர் அவன் நெற்றியில் வேலால் குத்தி வீழ்த்துவார்.

    இதைத் தொடர்ந்து சூரன் உடலில் சிங்கமுகாசுரன் தலை பொருத்தப்படும். சிங்கமுகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துவார்கள். அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப் படும். சூரபத்மனும் வீழ்த்தப்படுவான்.

    இந்த போரின்போது பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும்.

    சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றி கொண்டே இருப்பான். அவனை ஜெயந்தி நாதர், வதம் செய்வதை பக்தர்கள் கண்டு களிப்பார்கள். போரின்போது ஜெயந்தி நாதருடன் தேவர் படையும், சூரனுடன் அசுரர் படையும் இருப்பது போல் பக்தர்கள் இரண்டு பிரிவாக எதிர் எதிரே வேல் மற்றும் ஆயுதங்களை வைத்து கொண்டு செல்வார்கள்.

    இந்த போரின்போது ஒரு கட்டத்தில் சூரன், விநாயகர் தலையுடன், ஜெயந்தி நாதர் முன்பு தோன்றுவான். அவனது மாயத்தை கண்டு சற்று தடுமாறும் ஜெயந்திநாதர், சூரனின் தந்திரத்தை புரிந்து கொண்டு அவனது யானை தலையையும் துண்டித்து விடுவார்.

    கடைசியாக மாமரமாக தோன்றும் சூரனை, ஜெயந்தி நாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக ஆட்கொள்வார். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அத்துடன் சூரசம்கார நிகழ்ச்சி முடிவடையும். 6 நாட்களாக சஷ்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் கடலில் குளித்து விட்டு விரதத்தை முடித்து உணவு உட்கொள்வார்கள்.

    திருச்செந்தூர் தலத்தில் பல நூறு ஆண்டுகளாக இது நடக்கிறது. இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆதிகாலத்தில் திருச்செந்தூர் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்த வாரம் இது பற்றி பார்க்கலாம்.

    • நீங்கள் நினைப்பது மட்டுமே எப்போதுமே சரியானது என்று நீங்கள் நினைப்பது தவறு என்று புரியும்.
    • உங்களுக்கென்று ஒரு எல்லை, வேலி அமைத்துக் கொள்வது நல்லது.

    துறு துறு வென்று செயல்படுவது தவறல்ல. அதற்காக அவசரமாக செயல்படுவது தவறாக அமைந்து விடும். கொஞ்சம் நம்மை நாமே அமைதிப் படுத்திக் கொள்ள வேண்டும். எளிதானதுதான். இதை எந்த நேரத்திலும் செய்யலாம். வசதியாக சில நிமிடங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாய் உங்கள் மூச்சை கவனியுங்கள். அவ்வளவுதான். ஒரு சில நிமிடங்களிலேயே அமைதி ஆகி விடுவீர்கள். மேலும் ஒரு சில நிமிடங்கள் தொடரலாம். இப்போது உங்களுக்கு எல்லாம் புரிந்து விடும்.

    * உங்களை மற்றவர்களுக்காக நாறாய் பிய்த்துக் கொள்வது கருணை ஆகாது என்று அறிவு சொல்லும்.

    * நீங்கள் நினைப்பது மட்டுமே எப்போதுமே சரியானது என்று நீங்கள் நினைப்பது தவறு என்று புரியும்.

    * நான் இப்படித்தான் என்ற வீர வசனமோ, பிடிவாதமோ உங்களைப் பற்றிய நல்ல எண்ணங்களை பிறருக்குக் கொடுக்காது என்பதை உணர முடியும்.

    * உங்களுக்கென்று ஒரு எல்லை, வேலி அமைத்துக் கொள்வது நல்லது.


    * பிறர் உங்கள் கருத்துக்களை ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் அவர் உங்கள் எதிரி அல்ல என்பதை உணருங்கள்.

    * நீங்கள் நியாயமாய் இருக்கும் வரை பிறரின் தவறான கருத்துகளுக்கு காது கொடுக்க வேண்டாம்.

    சில பழக்கங்கள் அவரை அறியாமலேயே

    அவரை பலவீனப்படுத்தி விடும்.

    * அளவுக்கு அதிகமாக குடிப்பதால் காலப் போக்கில் ஒருவரின் உடல் நலம், மன நலம் இரண்டுமே வீணாகி விடும். முன்னுக்குப்பின் முரணாக பேசுவார்கள். தான் சொன்னதையே இல்லை என்பர். இவரது பேச்சை நம்பி அடுத்தவர் எந்த செயலிலும் இறங்க முடியாது. மது பழக்கத்திற்கு ஒருவர் ஆளாகாமல் இருப்பது நல்லது.

    * இதே அளவு பாதிப்பினை தருவது ஒருவரின் இந்த குணம் ஆகும். அது என்ன? எப்போதும் தன்னை பிறரோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டு தன்னை குறைவாக மதிப்பிட்டு சங்கடப்படுவர்களைப் பற்றி தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களால் தானும் நிம்மதியாக வாழ முடியாது. இவரால் இவரைச் சார்ந்தவர்களும் நிம்மதியாக வாழ முடியாது. இந்த குணம் ஒருவருக்கு இருந்தால் அவரது குடும்பத்தினர் நல்ல மனநல மருத்துவரிடம் அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.

    * நம்மை சுற்றியோ அல்லது நாம் இருக்கும் இடத்தை சுற்றியோ ஆக்கப் பூர்வமான சிந்தனை, செயல்கள் கொண்ட மனிதர்களாக இருக்க வேண்டும். அழிவுப்பூர்வ சிந்தனை, செயல்கள், கொண்டவர்கள்-விஷ வாயு போன்றவர்கள், அந்த பக்கம் திரும்பி கூடப்பார்க்கக் கூடாது.

    * சுய ஒழுக்கம் என்பது ஒருவருக்கு அவசியமான ஆடை. இது இல்லாமல் இருப்பது ஆடை இல்லாமல் இருப்பது போன்றது. சொல், சிந்தனை, செயல் இந்த மூன்றிலும் சுய ஒழுக்கம் வேண்டும்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    * எப்போதுமே சிலர் 'அவர்கள் இப்படி நினைப்பார்களோ', 'இப்படி பேசுவார்களோ' என்று நினைத்து பயந்து பயந்தே வாழ்வினை துணிந்து நாம் வாழ முற்பட்டால் அவர்களும் நம்மைப் போல் மாற முற்படுவார்கள், குறைந்தபட்சம் நம்மைப் பற்றி 'ஊர் வம்பு' பேசாமலாவது இருப்பார்கள். * பிறரைப் பற்றி எப்போதுமே குற்றம், குறை கூறி வாழும் மனிதர்களையும் அழிவுப்பூர்வ சிந்தனை கொண்டவர்கள் பட்டியலில் கொண்டு வரலாம்.

    * ஒரு வேலை, செயலினை செய்து முடித்த அடுத்த நொடியே ஊதியம் கிடைக்கலாம். விருதுகள் கிடைக்க சற்று கூடுதல் காலம் பிடிக்கும்.

    * தன்னை தானே இகழ்ந்து, மட்டம் தட்டி பேசிக் கொள்வது அடக்கம் என்று பொருள்படாது. இதுவும் எண்ணத்தின் கோணலே, குளறுபடியே ஆகும்.

    * தோல்வியை சந்திக்காத மனிதன் இருப்பது அரிது. அதனை வெற்றியாக்குவது தான் மனித வாழ்க்கை.

    * ரொம்பவும் ஆழ்ந்து, ஆழ்ந்து அணு, அணுவாக ஒரு விஷயத்தினைப் பற்றி யோசித்தால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. உரிய கவனம் கொடுக்கலாம். பிரபஞ்சம் மற்றதனை கவனித்துக் கொள்ளும்.

    * பழைய தவறுகளையே நினைத்து, நினைத்து அதில் மூழ்கக் கூடாது. அது ஒருவரின் வாழ்க்கையினை உருக்கிவிடும். * பிறர் மேல் பழிகளை சுமத்தியே வாழ்பவர் தன் திறன் இன்மையை நன்கு வெளிப்படுத்துவார்.

    * எந்த ஒரு வேலையினையும், முயற்சியினையும் தேவையின்றி நாளை செய்யலாம், நாளை செய்யலாம் என தள்ளிப் போடக் கூடாது. அது மனதில் ஒரு சுமையினைக் கொடுத்து விடும்.

    உங்களுக்கு அடிக்கடி மனச்சோகம் ஏற்படுகின்றதா? தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றதா? ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பற்றிய இந்த உண்மை நிகழ்வுகளை அடிக்கடி படியுங்கள்.

    * ஐன்ஸ்டின் அவர்கள் பிறக்கும் போது அவரது தலை அமைப்பு சற்று மாறுபட்டதாக இருந்ததாம். அவரது குடும்பத்தினர் இது பிறவி கோளாறு என கவலைப்பட்டனராம்.

    * சுமார் 10 வயது வரை அவர் முழுமையான வாக்கியம் பேச போராடுவாராம். பேச்சும் ரொம்பவும் மெதுவாக இருக்குமாம்.

    * கணிதம், விஞ்ஞானம் பரிட்சையில் தேர்வு பெறும் இவரால் மறற பிரிவுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால் அவரால் பல்கலைக்கழக படிப்பினைத் தொடர முடியவில்லை.

    * விஞ்ஞானத்தின் மீது அதிக ஆர்வம் இருந்தது.

    * மிகுந்த அமைதிவாதி அமைதி விரும்பி. ஆயினும் அமெரிக்காவினை பல விஞ்ஞான ஆய்வுகளுக்குத் தூண்டியவர்.

    * மூன்று நாடுகளின் தேச உரிமை பெற்றவர்.

    * மிக நன்கு வயலின் வாசிப்பவர்.

    * இவரது மூளையினை இன்று வரை பத்திரப்படுத்தி ஆய்வு செய்கின்றனர்.

    அத்தனை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இவரால் நிகழ்ந்துள்ளன. இதனை அடிக்கடி படித்தால் மனதில் கண்டிப்பாய் புத்துணர்ச்சி எழும்.

    ஆக நாம்தான் நம் வாழ்க்கையினை மாற்றி அமைத்துக் கொள்வதில் முழு முனைப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் சாக்குபோக்கு சொல்லும் வழியில் மட்டுமே செல்ல முடியும்.

    இயற்கையில் செலவில்லாமல் கிடைக்கும். இந்த மருந்துகளை பயன்படுத்தினாலே உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

    * சுறுசுறுப்பாய் இருத்தல், நிதானமான ஆழ்ந்த மூச்சு பயிற்சி, தியானம், உடற்பயிற்சி, 8 மணி நேர தூக்கம்.

    * சூரிய ஒளி உடலில் படுதல் போன்றவற்றினை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாமே.

    * இந்த மூன்றும் ஒருவரை கட்டுப்படுத்தக் கூடாது. பணம், கடந்த கால வாழ்க்கை இவற்றுள் ஒருவன் சிக்கி விட்டால் மீள்வது கடினம். இதனை ஒவ்வொரு வரும் நினைவில் கொள்ள வேண்டும்.

    * கர்மாவுக்கென்று ஒரு தனி ஸ்டைல் உண்டு. ஒரு தனி வழி உண்டு. நம் வாழ்வின் கூடவே, பக்கத்திலேயே தொடரும் தொடர் கதை அது. அதனை யாராலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒவ்வொருவர் வாழ்விலும் விதவிதமான பிரச்சனைகள். தீர்க்க முடியாத பிரச்சனைகள் உள்ளன. அமைதியாய் நாம் நகர்ந்து கொண்டேதான் இருக்க வேண்டும். இதுதான் வாழ்வின் நிலை.

    * உண்மையான சுதந்திரம் என்பது இந்த பிறப்பு, இறப்பு இவற்றில் இருந்து விடுபடுவதுதான்.

    * நேற்று என்பது வரலாறு

    * நாளை என்பது புரியாத புதிர்.

    * இன்று என்பதே இயற்கையின் பரிசு.

    * நீங்கள் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்ய நினைக்கலாம்.

    * ஆனால் சிலவை நடக்கும். சிலவை நடக்காது. இது புரியாமலே மனிதன் வாழ்ந்து வருகின்றான்.

    ஒருவர் தன் வாழ்வில் எளிதாய் மற்றவர்களின் முன்னால் உயர்ந்து நிற்க முடியுமாம். எப்படி என்று பார்ப்போமோ?

    * நேரம், காலத்தினை சரியாக கையாள வேண்டும்.

    * நாம்தான் எதிலும் மிகச் சரியானவர் என்பது போல் காட்டிக் கொள்ளக் கூடாது.

    * குறைவாக பேசினாலே போதும். மிகவும் மதிக்கப்படுவோம்.

    * அளவுக்கு அதிகமாக யாரையும் நம்ப வேண்டாமே * பகைவர்களை கூட பயன்படுத்திக் கொள்ள தெரிய வேண்டும். அதுதான் திறமை.

    * நம்மை சுற்றி பாதுகாப்பு கோட்டை கட்டி உலகில் இருந்து நம்மை மறைத்து வாழ்வது. சாதாரண வாழ்க்கை வாழ்பவருக்கு இயலாத காரியம்.

    * வாய் சண்டையால் வெற்றி பெறுவதனை விட நம் செயல்களின் மூலம் வெற்றி பெறுவதே சிறந்தது.

    * கவனம்... கவனம்... கவனம்... எதிலும் கவனம் என்பதே சிறந்தது.

    * ரொம்ப கவலையா இருக்கா? 10 முறை ஆழ்ந்து மூச்சு விடுங்கள்.

    * சக்தி குறைவா தெரியுமா? கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாமே,

    * குற்ற உணர்வால் தவிக்கின்றீர்களா? உங்களை நீங்களே மன்னித்து விடுங்கள்.

    * படபடப்பாக இருக்கின்றதா? ஐந்து நிமிடம் தியானம் செய்யுங்கள்.

    மேலே கூறப்பட்ட கருத்துக்கள் நான் படித்தவை. சேகரித்தவை. பகிர்ந்துக் கொள்கிறேன். பயன் பெறுவோமே.

    • சினேகாவின் குடும்பம் அப்போது சார்ஜாவில் இருந்தது. அவரது தந்தை அங்கு உயரிய பதவியில் இருந்தார்.
    • வாழ்க்கை எவ்வளவோ பாடங்களை நமது பயணத்தில் கற்றுத்தருகிறது.

    வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்களை சந்தித்து இருப்போம். அதில் பல சம்பவங்கள் எதிர்பாராததாக இருந்திருக்கும்... இன்னும் சில சம்பவங்கள் எதிர்பாராத ஆச்சரியங்களையும் கொடுத்து இருக்கும்.

    அப்படி என்னை ஆச்சரியப்படுத்திய இரண்டு சம்பவங்கள்...

    நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஏற்பாடு செய்து இருந்த மலையாள கலை நிகழ்ச்சிக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு நாள் துபாய் ஓட்டலில் தங்கி இருந்தேன்.

    எப்படியாவது மீனாவை பார்க்க வேண்டும் என்று ஒரு சின்ன பொண்ணு அடம் பிடித்து இருக்கிறது. அவரது பெற்றோர் அந்த பெண்ணை ஓட்டலுக்கு அழைத்து வந்திருந்தார்கள்.

    என்னை பார்த்ததும் அந்த பொண்ணுக்கு முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்க்கணுமே...! அடேயப்பா முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் தெரிந்தது. இமை மூடாமல் என்னையே பார்த்து பரவசப்பட்டு கொண்டிருந்தார்.

    ஆனால் நானோ அந்த பெண்ணை பார்த்து பரவசப்பட்டேன். எவ்வளவு அழகான முகம்..? குழி விழும் கன்னங்களோடு உதிர்த்த புன்னகை...! அவற்றை பார்த்து 'இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கால்ல...' என்று என் அம்மாவிடமே கூறினேன். அதை கேட்டதும் என் அம்மாவும் 'ஆமாம்.. ரொம்ப அழகா இருக்கிறாள்' என்றார்.

    அழகை ஆராதிக்காதவர்கள் யார்? அழகான அந்த பெண் பிற்காலத்தில் சினிமாவுக்கும் வருவார். தனது வசீகர புன்னகையால் பலரை கட்டிப்போடுவார் என்று நான் நினைக்கவில்லை.

     

    சினிமாவுக்குள் நுழைந்து பலரை ஆச்சரியப்படுத்திய அந்த முகத்தை பார்த்ததும் அந்த நாள் ஓட்டல் சந்திப்பு கண் முன் வந்தது. அவர் தான் சினேகா...

    சினேகாவின் குடும்பம் அப்போது சார்ஜாவில் இருந்தது. அவரது தந்தை அங்கு உயரிய பதவியில் இருந்தார். படத்தில் என்னை பார்த்தவருக்கு நான் துபாயில் இருக்கிறேன் என்பதை அறிந்ததும் நேரில் பார்க்க ஆசைப்பட்டு உள்ளார். பார்த்து விட்டார்.

    அந்த முதல் நாள் சந்திப்பில் வைத்தே அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விருந்தும் கொடுத்தார்கள். அன்று முதல் சினேகாவின் சினேகிதம் தொடர்ந்தது.

    இன்னொரு முன்னணி கதாநாயகியை நான் சந்தித்ததும் மறக்க முடியாதது. மலையாளத்தில் 'நாட்டு ராஜாவு' என்ற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நான் நடித்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு சின்ன பொண்ணு 'மேக்-அப்' போட்டு கொண்டு அமர்ந்திருந்தார்.

    அவரும் பார்ப்பதற்கு லட்சணமாக நல்ல அழகாக இருந்தார். அவரையும் ரொம்ப 'க்யூட்டாக இருக்கிறாரே...?' யார் இவர் என்று கேட்டேன்.

    அப்போது தான் அவரும் அந்த படத்தில் கதாநாயகனின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறினார்கள்.

    அந்த காலக்கட்டத்தில் மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி நான் முன்னணி நட்சத்திரமாக நேரம்.

    அந்த படத்தில் நாங்கள் இருவரும் நடித்து இருந்தாலும் நாங்கள் ஒன்றாக நடிக்கும் வாய்ப்பு இல்லை. எனவே பெரிய அளவில் எங்களுக்குள் பழக்கம் ஏற்படவில்லை.

    நேரில் சந்திக்கும்போது மட்டும் ஹாய்... என்று சிரித்துக் கொள்வேன். அதன் பிறகு எங்களுக்குள் அவ்வளவாக தொடர்பு இருந்ததில்லை.

    அந்த படமும் வித்தியாசமானது. அந்த படத்தில் இடம் பெற்ற 'மே மாசம்..' மனசினுள்ளே மழைத்துளியாய்... என்ற பாடல் அருமையாக இருக்கும். அந்த காட்சிகள் ஒவ்வொன்றிலும் ரசித்து ரசித்து நடித்தேன். ஏனெனில் நானும் மோகன்லாலும் நடித்த அந்த காட்சிகளில் காஸ்ட்யூம் புதுமையாக இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்தது.

    மலையாளத்தில் அந்த பாடலும் ரொம்ப 'ஹிட்' ஆச்சு.

    ரொம்ப நாளைக்கு பிறகு வளரும் தலைமுறையாக திரை உலகில் ஒரு நட்சத்திரம் ஜொலித்து ரசிகர்களை பரவசப்படுத்தியது. யார் அவர் என்று நினைத்தபோது தான் நாட்டு ராஜாவு படத்தில் சந்தித்த அந்த முகம் மனக்கண்ணில் வந்தது. அவர் தான் நயன்தாரா!

    இவர்கள் மட்டுமல்ல நடிகர் சிம்புவை நினைத்தால் இப்போதும் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளுக்காக மொத்த கலைஞர்களும் சென்றிருந்தோம்.

    அந்த குழுவில் சிம்புவும் வந்திருந்தான். சிம்பு அப்போது ரொம்ப குட்டி பையனாக இருப்பார். அவர் தான் அப்போது எங்கள் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை.

    நாங்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கு வருவார். துறுதுறு என்று ஓடிக்கொண்டே இருப்பார். இப்போது அவரும் வளர்ந்து மிகப்பெரிய நடிகராக மாறியிருப்பது ஆச்சரியமும், சந்தோசமாகவும், இருக்கிறது. எத்தனை மாற்றங்கள்...? எத்தனை முன்னேற்றங்கள்...?

    ஒவ்வொன்றையும் நினைக்கும்போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வாழ்க்கை எவ்வளவோ பாடங்களை நமது பயணத்தில் கற்றுத்தருகிறது. அது வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் மறக்க முடியாத அனுபவத்தை பதிவு செய்து விடுகிறது.

    மற்றுமொரு மறக்க முடியாத அனுபவத்துடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொட ரும்...)

    கலைஞர் தந்த பேனா பரிசு

    அரசியலில் மிகப்பெரிய தலைவராக இருந்தாலும் திரை உலகில் அவரும் ஒரு கலைஞர் என்பது தமிழ் திரையுலகுக்கு கிடைத்த பெருமை.

    கலைஞரின் கை வண்ணத்தில் தீட்டப்பட்ட அந்த கால வசனங்கள் எந்த காலத்திலும் பேசப்படுகிறது. அவரது வசனத்திலும் எனக்கும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது தான் 'கண்ணம்மா' படம். கலைஞர் எழுதிய அந்த வசனம் முழுக்க தூய தமிழில் இருந்தது. அந்த பட டயலாக்குகளை பேசியபோது ஒரு சில சிறுசிறு வார்த்தைகளை காலத்துக்கு ஏற்ற வகையில் கொஞ்சம் மார்டனாக மாற்றினால் நல்லாயிருக்குமே! அப்போது தான் இளைஞர்கள் மத்தியில் எடுபடும் என்று எனக்கு தோன்றியது.

    ஆனால் கலைஞரின் வசனமாச்சே...

    அதை திருத்தும் தைரியம் எப்படி வரும்? திருத்தத்தை சொன்னால் கூட தவறாக நினைப்பார்களோ..? என்ற பயம். யோசித்து கொண்டிருந்தேன். அப்போது தான் வசனங்களை சொல்லிப்பார்த்தபோது சில இடங்களில் இப்படி மாற்றினால் நல்லா இருக்குமல்லவா என்று டைரக்டர் கேட்டார்.

    அப்போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. நம்மைப்போல் தான் அவரும் நினைக்கிறார் என்று நினைத்து கொண்டேன். பின்னர் ஒரு சில மாற்றங்களை அவரே செய்தார். அப்போதும் பயந்து 'சார், இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என்று கூறினேன்.

    படப்பிடிப்பு போளூரில் நடந்தது. அங்கு தான் தங்கி இருந்தோம். போளூர் எனக்கு பிடித்த ஊர். அந்த ஊருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த ஊர் தான் என் அப்பா பிறந்த ஊர். அது எனக்கு கூடுதல் சந்தோசத்தை கொடுத்தது. ஓய்வு நேரத்தில் தாத்தா-பாட்டியை பார்க்க செல்வேன். பிசியாக ஓடிக் கொண்டிருந்த என்னை பார்த்ததும் தாத்தா-பாட்டிக்கும் உறவினர்களுக்கும் ரொம்ப சந்தோசம். அவர்களுடன் அமர்ந்து பேசியதில் எனக்கும் மகிழ்ச்சி. இப்படியாக கண்ணம்மாவும் மறக்க முடியாதவளாகி விட்டார். இந்த படத்தில் நடித்தபோது கலைஞர் எனக்கு ஒரு பேனா பரிசளித்தார். அந்த பேனாவை இன்றும் பத்திரமாக வைத்துள்ளேன்.

    • மனிதர்களின் மனநிலை தொடங்கி வாழ்நிலை வரை பெரும்பாடு படுத்தி வருகிறது.
    • நம்முடைய உழைப்பிற்கு நமக்குக் கிடைக்கவேண்டியது சரியாகக் கிடைத்தாலே போதுமானதுதான்.

    பணத்தின் அருமை பெருமைகளை அறிந்து கொள்வதில் ஆர்வத்தோடு காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

    பணம் தொடர்பான பழமொழிகள் பணம் தொடங்கிய காலம்தொட்டே நம் தமிழில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. "பணம் பத்தும் செய்யும்!" என்பதில் தொடங்கி, "பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்" என்பது வரை பழமொழிகள் நிறைந்தே கிடக்கின்றன. நமக்குத் தேவைப்படுகிற பொருள்களை, நம்மிடம் இருக்கும் பொருள்களைக் கொடுத்து, மாற்றிப் பெற்றுக்கொள்ளும் 'பண்டமாற்று முறை' முன்னொரு காலத்தில் இருந்தது. நம்மிடமிருக்கும் பொருள்களைக் கொடுத்துத் தான் பெறமுடியும் என்கிற அவசியநிலை இருந்த காலத்தில், அத்தியாவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்தி வந்தோம். உணவு, உடை, உறைவிடம் ஆகிய அத்தியாவசியங்கள் மூன்றினுள், அவ்வப்போது முக்கியத் தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துப், பண்டமாற்று முறையில் பொருள்களைப் பெற்று வந்தோம்.

    ஆனால், பணப்புழக்கம் பெருகிவிட்ட காலங்களில், எது அவசியம்? என்பதை மறந்து, எதுவசதி? என்பதில் லயித்து அனாவசியங்களிலும், ஆடம்பரங்களிலும் பணத்தைத் தண்ணீராய்ச் செலவழித்து வருகிறோம். அதிலும் சொந்தமாகச் சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்றால், அடுத்தவரிடமிருந்து பணத்தைக் கடன் வாங்கியாவது, தவணை முறைகளிலாவது பொருள்களைப் பெற்று நுகர்ந்தே ஆகவேண்டும் என்கிற வெறியோடு மனிதன் நுகர்வு மோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறான். இங்கே பணம் என்பது பொதுப்பொருள் ஆகிவிட்டபடியால், தன்னுடைய பணத்தைக் கொண்டுதான், தனக்குரிய பொருள்களை வாங்க வேண்டும் என்பது மாறி, யார் பணத்தைக் கொண்டும், தனக்குரிய பொருள்களைப் பெற்று அனுபவிக்கும் ஆசை பெருகிவிட்டது.

    பணம் என்பது ஒரு பொருளையோ அல்லது ஒரு சேவையையோ அடுத்தவரிட மிருந்து பெற்றுக்கொள்வதற்கு விலையாகத் தரப்படுகிற ஒரு கருவி அல்லது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தாள் அல்லது நாணயம் ஆகும். பண்டமாற்று முறை மாறிய பின்னர், மக்கள் மதிப்புமிக்க தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களைப் பணமாகத் தந்து பொருள்களையும் சேவைகளையும் பெற்றுவந்தனர். அதன்பிறகு வெற்றுத் தாள்களிலும், உலோகக் காசுகளிலும், பணத்தின் மதிப்புகளை அச்சடித்து, அவற்றைப் பணமாக ஆட்சி செய்வோரின் சான்றொப்பத்துடன் புழக்கத்தில் விட்டனர். அரசாங்க முத்திரை பெற்றவுடன் பணம் பல்வேறு மதிப்புகளை உடையதாக மாறத் தொடங்கி விட்டது.

    இன்று கத்தரிக்காய் பயிரிடுபவர் தொடங்கி, கார் உற்பத்தி செய்பவர் வரை எல்லாரிடத்திலும் பணம் இருக்கிறது. அவரவர் உற்பத்தி செய்யும் பொருள்களைக் கொண்டு பண்டமாற்றுச் செய்து வாழ்க்கைப் பிழைப்பை நடத்திக்கொள்ளலாம் என்கிற நிலை தற்போது மாறிவிட்டது. கத்தரிக்காய் விவசாயியிடம் கார் முதலாளி தன்னுடைய காரைக்கொடுத்து, தனக்கு வேண்டிய வீட்டு உபயோகப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதேபோல ஒரு கார் வியாபாரியிடம் தன்னுடைய கத்தரிக்காய்களைக் கொடுத்துத், தனக்கு வேண்டிய நெல் முதலிய உணவுப் பொருள்களையும் பெற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில்தான், பண்டமாற்று முறையினைத் தாண்டிப், பணத்தை மதிப்புமிக்க பொதுப்பொருளாக்கிப், பொருளாதார நிலையை உருவாக்கும் கட்டாயம் உண்டானது.

    பணத்தின் மதிப்பைப் பொறுத்து, அதனை வைத்திருப்போரின் மதிப்பு அளவிடப்படும் சமூகநிலை இன்று உருவாகி இருப்பதால், பணத்தை எப்படியாவது சம்பாதித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாய நிலைக்கு மனிதர்கள் எல்லாருமே தள்ளப்பட்டிருக்கின்றனர். பணம் வைத்திருப்போர் பணக்காரர், அது இல்லாதோர் ஏழை என்னும் பிளவுபடுத்தும் ஏற்றத் தாழ்வுப் பாகுபாடு, சமூகத்தில் மனிதர்களின் மனநிலை தொடங்கி வாழ்நிலை வரை பெரும்பாடு படுத்தி வருகிறது.

    'நில்லாதவற்றை நிலையானது என்று நம்பி விடாதே!' என்றும், 'பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும்' என்றும், பணத்தாசை தேவையற்றது என்பதைக் குறிப்பிடும் வள்ளுவர், ஒரு பொருட்டாக மதிக்கத் தகுதியில்லாதவரைக்கூட மதிப்பு மிக்கவராக மாற்றிக் காட்டுவது பணம் என்று மற்றோர் இடத்தில் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாது, "செய்க பொருளை!" என்று கட்டளை பிறப்பித்துப் பொருள் சம்பாதிக்கும் வழிமுறைகளில் விடாது கவனம் செலுத்தவும் சொல்கிறார்; அப்படிப் பணக்காரர் எனும் மதிப்புமிக்கவராக மாறினால்தான், உன்னை ஏழை என்று ஏளனம் செய்யும் பகைவர்களின் செருக்கை உன்னால் அறுத்தெரிய முடியும் என்கிறார் வள்ளுவர்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    பண்டமாற்று முறையில் தம்மிடமிருக்கும் உற்பத்திப் பொருள்களை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் கையிருப்பு வைத்துக் கொள்ள முடியும்; பொருள் காலாவதி ஆவதற்குள், வேறு பொருள்களை மாற்றாகப் பெற்று, அவற்றையும் பயன்படுத்தித் தீர்த்துவிட வேண்டும்; அடுத்தாண்டுக்கு ஆகும்! அடுத்த தலைமுறைக்கு ஆகும்! என்று சேமித்து வைக்க முடியாது. ஆனால் பணம் அப்படி இல்லை. அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தியது போக, மீதப் பணத்தைச் சேமித்து வைக்க முடியும்; அடுத்த தலைமுறைக்கும் பயன்படக் கூடிய அளவுக்குத் தங்கம், நிலபுலன்கள் போன்றவற்றை வாங்கி இருப்பில் வைக்கவும் முடியும். பணம் மதிப்புக் குறையாதது; அதே நேரத்தில் தன்னை வைத்திருப்போரையும் மதிப்பில் உயர்ந்தவராக உயர்த்திக்கொண்டே இருப்பது. அதனால்தான் பணம் சம்பாதிக்க வேண்டியது வாழ்க்கையின் கடமை என்பது மாறி, ஒவ்வொரு மனிதரையும் பணத்தாசை பிடித்த வெறியர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

    பணம் என்பது, உழைப்பிற்குக் கிடைத்த ஊதியமாகவும், சிந்திய வியர்வைக்குக் கிடைத்த வெகுமதியாகவும், கடுமையாகப் பார்த்த பணிக்குக் கிடைத்த கூலியாகவும், அன்றாட ஜீவிதத்திற்குக் கிடைத்த சம்பளமாகவும் கருதப்பட்ட பெருமைக்குரிய காலம் தற்போது இல்லை. எப்படியாவது பணத்தைச் சம்பாதித்தே ஆகவேண்டும்; குறுக்கு வழியோ நேர் வழியோ எந்த வழியாக இருந்தாலும் அது பணம் சம்பாதிக்கும் வழியாக இருக்க வேண்டும்! என்றே பெரும்பான்மையோர் கருதத் தொடங்கி விட்டனர். பணம் என்பது நமது வாழ்நிலைத் தேவைகளுக்கு உதவி செய்கிற புனிதப்பொருள் என்பது மாறி, நிமிடத்திற்கு நிமிடம் மனிதர்களை மாற்றிக் காட்டும் மாயப்பொருள் என்று எண்ணப்படுகிறது.

    காலில் தட்டுப்படுவது மண்ணாங்கட்டியா? அல்லது தங்கக் கட்டியா? என்பதைக்கூட யோசிக்காமல், கானகங்களில் வாழ்ந்து வரும் முற்றும் துறந்த துறவிகளுக்கு வேண்டுமானால் பணம் வெற்றுக் காகிதமாக இருக்கலாம்; ஆனால் உலகியலில் சகல ஆசாபாசங்களுக்கும் அடிமையாகிப்போன சாதாரண மனிதர்களுக்கு?!...

    காட்டில் பல்லாண்டுகாலம் தவமிருந்து விட்டு நாட்டுப்பகுதிக்குள் வந்தார் ஒரு துறவி; தலை முகமெல்லாம் நீண்டு வளர்ந்த உரோமக் காடாக இருந்தது. அந்தத் துறவி, மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்கிற கோட்பாடு உடையவர். எனவே சிகையை ஒழுங்கு செய்வதற்காக ஒரு சிகை திருத்தும் நிலையம் நோக்கிச் சென்றார்.

    வழியில், ஒரு பெரும்பணக்காரர், கையில் நிறைய தங்க நாணயங்களைக் கொண்ட ஒரு பையோடு வந்து துறவியின் கால்களில் விழுந்தார்." சுவாமி நான் நிறையப் பாவங்களைச் செய்துவிட்டேன்; அதற்குப் பிராயச்சித்தமாய் நான் கொண்டு வந்துள்ள இந்த தங்க நாணயப் பையைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று மன்றாடிக் கேட்டார். துறவியும் எந்தவிதமான சலனமும் இல்லாமல், தனது இடது கையால் அந்தப் பையை எடுத்துக்கொண்டு முடிதிருத்தும் நிலையத்திற்குள் புகுந்தார்.

    மிகுந்த பணிவோடு வரவேற்ற சிகைதிருத்தும் தொழிலாளி, துறவியை நாற்காலியில் அமரவைத்தார். துறவி தன்னுடைய இடதுகையில் இருந்த பையைக், கடையில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, இதைக் கூலியாக எடுத்துக்கொண்டு எனக்கு முடிதிருத்தும் வேலையைச் செய்துவிடுங்கள்! என்று கூறினார். தொழிலாளியும் மிகுந்த சிரத்தையோடு துறவிக்கு சிகைதிருத்திவிடும் வேலையைச் செய்யத் தொடங்கினார்.

    அப்போது கடையின் வாசலில் நின்றுகொண்டு ஒரு ஏழை புலம்பிக் கொண்டிருந்தார்; அவருடைய புலம்பல், கடைக்குள்ளிருந்த சிகைதிருத்தும் தொழிலாளிக்கும் துறவிக்கும் மிகத் தெளிவாகவே கேட்டது. " குடும்பம் பெரிய குடும்பம்; இனிமேல் கடன் வாங்க முடியாத அளவுக்குக் கழுத்துவரை கடன்; இனிமேல் வாழ்வது என்பது எந்த வகையிலும் சாத்தியமில்லை; யாராவது திரும்பக் கேட்க முடியாத அளவுக்குப் பிச்சையாகப் பணம் தந்து உதவினால் உண்டு; இல்லையென்றால் தற்கொலையைத் தவிர வேறு வழியே இல்லை" என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

    துறவிக்கு முடிவெட்டிக்கொண்டிருந்த தொழிலாளி, எதுவும் பேசாமல், ஒருநிமிடம் வேலை செய்வதை நிறுத்திவிட்டு, அந்தப் புலம்பல் ஏழையை சைகைசெய்து உள்ளே அழைத்தார்; வந்தவுடன், துறவி மேஜையில் வைத்த பையைக் காட்டி, இதை எடுத்துப்போ! என்று சைகையாலேயே கூறினார். பதறிப்போன துறவி அந்த சிகைதிருத்தும் தொழிலாளியிடம், " நீ எடுத்துப்போகச் சொல்லியிருக்கும் பைக்குள் என்ன இருக்கிறது தெரியுமா? அத்தனையும் மதிப்புமிக்க தங்க நாணயங்கள்!" என்றார்.

    சிரித்துக்கொண்டே தொழிலாளி சொன்னார்; "ஐயா துறவியாரே! நீங்கள் என் கடைக்குள் நுழைந்தபோதே, உங்களிடம் கூலி எதுவும் வாங்கக்கூடாது என்று முடிவெடுத்து விட்டேன். அதனால் நீங்கள் கூலி என்று கூறி வைத்த பையை ஏறெடுத்தும் நான் பார்க்கவில்லை. எனவே எனக்குச் சொந்தமில்லை என்று ஒதுக்கிவிட்ட அந்தப்பையில் தங்கம் இருந்தால் என்ன? வேறு நாணயங்கள் எவை இருந்தால்தான் என்ன?. அவற்றின் மதிப்பைப்பற்றி எனக்குக் கவலையே இல்லை!. அதனால்தான் தேவைப்படுவோருக்கு அது பயன்படட்டுமே என்று எடுத்துப் போகச் சொன்னேன்!".

    இங்கே முற்றும் துறந்த முனிவருக்கே பணத்தின் மதிப்புமீது அக்கறை வந்து ஒட்டிக்கொண்டாலும், அதைத் துச்சமாக மதித்த அந்தத் தொழிலாளியின் பணம் குறித்த பற்றுதலில்லாத சித்தாந்தம்தான் சிறப்பானது. நமக்குச் சொந்தமில்லையென்றால் அந்தப்பணத்தின்மீது ஆசைப்படுவது தேவையற்ற செயல் தானே!. நம்முடைய உழைப்பிற்கு நமக்குக் கிடைக்கவேண்டியது சரியாகக் கிடைத்தாலே போதுமானதுதான்.

    தொடர்புக்கு 9443190098

    • மனம் நினைத்தால் தான் உடல் செயல்களைச் செய்கிறது.
    • நம் மனம் ஐம்புலன்களுடன் நெருங்கிய தொடர்புடையது.

    மனம் ஒரு குரங்கு என்று கூறுகிறோம். சிந்தித்துப் பார்த்தால் இச்சொல்லில் உள்ள உண்மை புரியும். உடலால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லச் சில வரையறை உண்டு. ஆனால் மனதிற்கோ எல்லைகள் இல்லை.

    நினைத்தவினாடியே, எட்டுத்திக்கில் எங்கு வேண்டுமானாலும் செல்லும், வானில் பறக்கும், கடல்கடந்து பல தேசங்கள் செல்லும். இருப்பது திருச்சியாக இருந்தாலும் அமெரிக்காவில் இருக்கும் ஒருவரை நினைக்கும்.

    நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கற்பனை செய்யும், நடந்த ஒன்றை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருக்கும். மனம் நினைத்தால் அனைத்தையும் நடத்திக் காண்பிக்கும்.

    இப்படி அளப்பரிய ஆற்றல் கொண்டது நம் மனம். ஆனால் நாமோ மனத்தை நெறிப்படுத்தத் தவறி, வாழ்வியல் முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் சிக்கித்தவிக்கின்றோம்.

    மனம் நினைத்தால் தான் உடல் செயல்களைச் செய்கிறது.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    மனம் நம் ஐம்புலன்களுடனும் மற்றும் நாம் பேசும் சொற்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஒருவர் பேசும் சொல்லில் இருந்துதான் அவரின் வாழ்க்கை உறுதிசெய்யப்படுகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? சொற்களின் வலிமைதான் ஒருவரை வெற்றிபெறச் செய்வதா? தோல்வியுறச் செய்வதா? என்பதை உறுதி செய்கிறது.

    ஒரு செயலைச் செய்ய நிறையப் பேர் ஆசைப்பட்டாலும், யார் செய்து முடிக்கிறார்கள் என்பதுதான் வரலாற்றில் இடம்பெறும்.

    எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, நாம் மன அமைதியுடனும், மனமகிழ்ச்சியுடனும் இருப்போம்.

    ஆனால் சிலர் நிறையச் சிந்தித்தாலும், அதைச் செயல்வடிவத்திற்குக் கொண்டுவராமல் கற்பனையில் வாழ்வார்கள். இவர்கள் தம் வாழ்வில் நிறைய ஏமாற்றங்களை எதிர்கொள்வார்கள்.

    மனத்தின் ஆசைகள் சரிதானா? என ஆராய்ந்து முடிவெடுக்காமல் விட்டுவிடும்போது, மனிதன் பல இன்னல்களுக்கு உள்ளாகிறான்.

    ஆறு விதமான விலங்குகளை எடுத்துக்கொள்வோம். பாம்பு, முதலை, பறவை, குரங்கு, நரி, நாய் ஆகியவை அனைத்தும் ஒரே கயிற்றில் கட்டப்பட்டுள்ளன என்று வைத்துக்கொள்ளுங்கள், அவை என்ன செய்யும்?


    பாம்பு நிலத்தில் ஊர்ந்து செல்லப் பார்க்கும், முதலை நீரினுள் செல்ல முயலும், பறவை பறந்து சென்றுவிட எண்ணம் கொள்ளும், குரங்கு தாவி மரத்தில் ஏற நினைக்கும், நரி காட்டுக்குள் செல்ல அனைத்தையும் இழுக்கும், நாய் ஊருக்குள் செல்லத் துடிக்கும். இதில் யார் வெற்றி பெறுவார்கள்? தன் எண்ணத்தை ஈடேற்ற வலிமை கொண்ட விலங்கு, மற்ற அனைத்து விலங்குகளையும் இழுத்துக் கொண்டு தன் இருப்பிடம் தேடிச் செல்ல முயலும்.

    இந்த ஆறு விலங்குகளின் திறமையும் தனித்துவம் வாய்ந்தவை. இந்த ஆறு விலங்குகளும் நம்முள்ளும் இருக்கின்றன. சில நேரங்களில் பாம்புபோல் சீறுகிறோம், முதலை போல், இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்கிறோம், மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் பறவையைப் போல் வானில் பறப்பதுபோன்று கற்பனை செய்கிறோம்,

    நம் மனம் குரங்குபோல் அங்குமிங்கும் அலைந்து திரிகிறது, சில நேரங்களில் நரிபோல் தந்திரமாகச் செயல்படுகிறோம், கோபமாக இருக்கும்போது நாய்க் குணம் வெளிவருகிறது. இப்படிப் பலவிதமான குணங்களோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

    நாம் ஐம்புலன்களின் (கண், மூக்கு, காது, வாய், மெய்) விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறோம். அதற்காகத்தான் வாழ்கிறோம் என்ற எண்ணம் இன்றைய சமுதாயத்தில் வேரூன்றி உள்ளது. மேற்கூறிய ஆறு விலங்குகளில் ஐந்தை நம் ஐம்புலன்களோடு ஒப்பிடலாம்.

    குரங்கை நம் மனத்தோடு ஒப்பிடலாம். நம் மனம் ஐம்புலன்களுடன் நெருங்கிய தொடர்புடையது. கண்கள் எதைப் பார்க்க வேண்டும், சுற்றிப் பலபேர் பேசினாலும், யார் பேசுவதைக் கேட்க வேண்டும், பல வகையான உணவுகள் இருக்கும்போது, எதை நாம் சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்வது நம் மனம் தானே,

    மனம் என்பது எண்ணங்களின் கோர்வை என்பதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். அப்படி என்றால் எண்ணங்கள் உருவாவதற்கான விதை எது? ஐம்புலன்கள் மூலம் நாம் உள்வாங்குகின்றவை தாமே!

    நீங்கள் நாளும் எதிர்மறை எண்ணங்களைத் தூண்டுகின்ற நாடகங்களைப் பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் அது நடந்துவிடுமோ என்ற பயம் எழுகிறது. படிக்கும் செய்திகள் நம்முள் சில தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நம்முள் தோன்றுகின்ற எண்ணங்கள் சில உணர்வு நிலைகளை ஏற்படுத்துகின்றன, அதற்கேற்றாற்போல் நாம் செயல்களைச் செய்கிறோம். நம் செயல்களுக்கான விதையை எண்ணங்கள்தாம் தருகின்றன. இந்த எண்ணங்கள் யாருடைய கட்டுபாட்டில் உள்ளன? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

    சில நேரங்களில் நாம் செய்கின்ற செயல்களினால் ஏற்படும் பின்விளைவு பற்றிச் சிந்திக்காமல் இருந்துவிடுகிறோம். அதனால் நம் வாழ்க்கை சிக்கல்களில் மாட்டிக் கொண்டுவிடுகிறது. எனவே மனம் செம்மையுற, நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிப் பார்ப்போம்.

    1.மனித வாழ்க்கை என்பது மூச்சுக் காற்று மற்றும் எண்ணங்களினால் தான் இயக்கப்படுகிறது என்பதை முதலில் உணர வேண்டும்.

    2.அமைதியாக அமர்ந்து மூச்சுக்காற்று உள்செல்வதையும், வெளிவருவதையும் நாளும் ஐந்து நிமிடங்களாவது கவனிக்க வேண்டும். மூச்சுக்காற்றின் பின் நம் கவனம் செல்லும்போது நம் மனம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

    3.ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, நாம் எண்ணங்களைக் கவனிக்கத் தொடங்க வேண்டும். எந்த விதமான எண்ணங்களாக இருந்தாலும் சரி, அதற்கு விடையளிக்காமல் அவற்றைக் கவனிக்க மட்டுமே செய்ய வேண்டும்.

    4.மன அழுத்தத்தாலோ அல்லது மனஅச்சத்தாலோ பாதிக்கப்பட்டவர்கள், ஐந்து மணி நேரத்துக்கு ஒருமுறை அமைதியாக அமர்ந்து மூன்று நிமிடங்களுக்கு மூச்சை மட்டும் கவனிக்க வேண்டும்.

    5.ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நம் உணர்வுகளின் வெளிப்பாடு எப்படி இருந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    6.நான் மனஅமைதியுடனும், மனமகிழ்ச்சியுடனும் இருக்கிறேன் என்று இரவு உறங்குவதற்கு முன்னும், காலை எழுந்தவுடனும் குறைந்தது மூன்று முறையாவது உங்களுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும்.

    7.பேசும் சொற்களில் நேர்மறையான சொற்களைப் பயன்படுத்திப் பேச முயல வேண்டும்.

    8.எதிர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துபவராக இருந்தாலும் சரி, நாடகங்களாக இருந்தாலும் சரி அதைத் தவிர்த்துவிடுங்கள்.

    9.அன்றன்று சமைத்த இயற்கை உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

    10.நாளும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

    மேற்கூறிய 10 வழிமுறைகளும் மனத்தைச் செம்மையுறச் செய்வதற்கான வழிமுறைகள் என்பதை மனத்தில் பதியவைத்து நம்பிக்கையுடன் செய்ய முயலுங்கள்.

    எது செய்யத் தொடங்கினாலும் நம்பிக்கையின்மை தலைதூக்க முயலும். உடனே அதன் தலையில் தட்டிவிட்டு, "நான் வாழ்கின்ற வாழ்க்கை எனக்கானது, அதை நான் மட்டுமே வாழ முடியும், அதை நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்ச்சியாகவும், மனஅமைதியுடனும் வாழப்போகிறேன்" என்று கூறுங்கள்.

    நாட்கள் செல்லச் செல்ல அவநம்பிக்கை குறைந்து, மனத்தெம்பு அதிகரித்து, உங்கள் மனம் செம்மையுறுவதை உணர்வீர்கள்.

    உடலுக்காகத் தினமும் குளிப்பது, தூய்மையான ஆடைகளை அணிவது, நல்ல உணவுகளை உண்பது என்று நாளும் செய்கிறோம். ஆனால் மனதை அதன் போக்கில் விட்டுவிடுகிறோம். இனி இந்தத் தவறைச் செய்யாமல் மனதிற்காக 15 நிமிடங்களாவது ஒதுக்குவோமா?

    போன்: 75980-01010, 80564-01010.

    • பொது கல்விக்கூடங்கள் இல்லாத காலச்சூழலில் முத்துக்குட்டியின் இளமை வாழ்வு தொடங்கியது.
    • தனது இருபத்திரண்டாவது வயதில் கடுமையான சரும நோயால் அல்லலுற்று வருந்தினார்.

    அய்யா வைகுண்ட சுவாமிகள் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 5 கல் தொலைவில் வடமேற்காக அமைந்துள்ள தாமரைக்குளம் என்னும் ஊருக்கருகாமையில் உள்ள பூவண்டன் தோப்பு என்னும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் கி.பி.1809-ம் ஆண்டு பொன்னு என்பவருக்கும், வெயிலாள் அம்மையாருக்கும் 2-வது மகனாக தோன்றினார்.

    வைகுண்ட சுவாமிகளின் பெற்றோர் சமுதாய நலனில் மிக்க ஆர்வம் உடையவர்களாயிருந்தனர். சாதியின் பெயரால் சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததை கண்டு மனம் வெதும்பினர். உயர் சாதி மக்களின் கொடுமைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே சமய மாற்றம் நடைபெறுகிறது என அறிந்து, ஒரு சாதியினர் பிறிதொரு சாதியினர் மீது ஆதிக்கம் செலுத்தாத ஒரு சமதர்ம சமுதாயம் ஏற்பட இறைவனை வேண்டினர்.

     

    சிறந்த விஷ்ணு பக்தர்களாகையால் தீயோர்களிடமிருந்து நல்லோர்களை காத்திட புவியில் இறைவன் திரு அவதாரம் செய்வான் என உறுதியுடன் இருந்தனர். குழந்தையின் முகத்தில் தெய்வீக ஒளி வீசுவதை கண்டு பெற்றோர் பூரிப்படைந்தனர். ஊராரும் உற்றாரும் இக்குழந்தை திக்கெட்டும் புகழ் பரப்பத் திகழ்வான் எனப் பெருமிதம் கொண்டனர். தங்கள் ஓய்வுப் பொழுதினை குழந்தையுடன் கழிப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

    முத்துக்குட்டி

    ஊரறிய, தன் உற்றார் உறவினருடன் கலந்து பெற்றோர் முடிசூடும் பெருமாள் என்று குழந்தைக்கு பெயர் சூட்டினர். எனினும், அக்காலச் சூழ்நிலை முடி சூடும் பெருமாள் என பெற்றோரிட்ட பெயர் நிலைத்திட அனுமதிக்கவில்லை. அன்றைய நாட்களில் ஒடுக்கப்பட்ட சாதியினர் மன்னர்களின் பெயர்களையோ, அல்லது அவர்களுடைய சிறப்புப் பெயர்களையோ சூட்டிக்கொள்ள உரிமையின்றி இருந்தனர்.

    எனவே, உயர் சாதியினர் முடிசூடும் பெருமாள் எனப் பெயர் சூட்டிக்கொண்டதை எதிர்த்தனர். அரசாங்க அலுவலர்களிடம் தெரியப்படுத்திப் பெயர் நீக்கம் செய்திட வேண்டினர். அலுவலர்களும் முடிசூடும் பெருமாள் என்னும் பெயரை மாற்றிட ஆணையிட்டனர். பெயர் சூட்டலால் வரும் குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு ஊர் மக்கள் பொன்னு வீட்டில் கூடி பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தனர். எனவே, முடிசூடும் பெருமாள் முத்துக்குட்டி என்னும் பெயர் பெற்றார்.

    பெயரிடுதலில் கூட அதிகார வர்க்கத்தின் ஆதிக்க வெறி சதிராட்டம் ஆடியது. இழிகுலத்தவர்கள் என்று இடும்பைக்குள்ளாக்கப்பட்டவர்களின் இழிநிலை அவர்களின் பெயர்களிலேயே உணர்த்தப்பட்டது. அரசாங்கத்தின் சமத்துவமற்ற கொடுமையான-ஏகாதிபத்தியக் கொள்கைகள் இளம் பருவத்திலேயே முத்துக்குட்டியின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்தது. எவ்வாறேனும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை காத்தே தீர வேண்டும் என்ற திடமான எண்ணம் முத்துக்குட்டியின் மனதில் வேரூன்றித் தழைத்திட இந்நிகழ்ச்சி ஒரு காரணமாய் அமைந்தது.

    இளமைக்கல்வி

    பொது கல்விக்கூடங்கள் இல்லாத காலச்சூழலில் முத்துக்குட்டியின் இளமை வாழ்வு தொடங்கியது. ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும், கல்விக் கூடங்களுக்கும் இருந்த இடைவெளி மிக அதிகமாகவே இருந்தது. ஏனெனில் தொழில் வர்க்கத்தினருக்கு கல்வி கற்கும் உரிமை வழங்கப்படவில்லை. உயர்சாதிக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில், இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கோவிலையடுத்து மேட்டுக் குடியினரின் கல்விக் கூடங்கள் அமைந்திருந்தபடியால், அவற்றை கீழ்த்தட்டு மக்கள் பார்ப்பதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் தாம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி அறிவை வளர்க்க முயற்சித்தன. கிறிஸ்தவ சமய போதகர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சாதி பேதம் கற்பிக்காது சில பள்ளிக்கூடங்களை நிறுவி நடத்தி வந்தனர்.

    சிறுவனான முத்துக்குட்டிக்கு அங்கு சென்று பயில வாய்ப்புக் கிட்டவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றிலேயே கல்வி பயின்றார். சட்டம் என்ற மனிதன் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளையும், கணக்கு வாய்ப்பாடுகள், பண்டைய புராணங்கள், காவியங்கள், நீதிநூல்கள் முதலியவற்றையும் கசடற கற்றறிந்தார். ராமாயண, மகாபாரத இதிகாசங்கள் திருமாலின் அவதாரங்களின் நோக்கத்தினை அவருக்கு எடுத்தியம்பின. அன்றாடத் தெருக்கூத்து நிகழ்ச்சியில் தலையாய இடம் வகித்த அரிச்சந்திரனின் கதை உண்மையின் உயர்வினை முத்துக் குட்டிக்கு தெளிவு படுத்தியது. எல்லா வுயிர்க்கும் பிறப்பொக்கும் நிலையையும், ஒரு நல்லரசு எங்ஙனம் செயல்பட வேண்டும் என்பதையும், மக்கள் எவ்விதம் வாழ வேண்டுமென்பதையும், திருக்குறளில் இருந்து அறிந்து ஒரு புதிய எழுச்சியை பெற்றார்.

    பெற்றோரை போன்று முத்துக்குட்டியும் சிறந்த திருமால் பக்தராக விளங்கினார். இந்து சமய பக்தி இலக்கியங்களையும் துதிப் பாடல்களையும் மிகுந்த ஆர்வமுடன் கற்றார். தனது வீட்டிலேயே திருமாலைப் போற்றி, பீடம் அமைத்து, தினந்தோறும் வழிபாடு நடத்தி வந்தார். அறிவு வளர்ச்சியுடன், ஆன்மீக உணர்வும் கொண்டு, நல்ல உடற்பயிற்சியும் செய்து, சொல்லில் மட்டும் வல்லவராக அன்றி மல்யுத்தத்திலும் தேர்ச்சியுடன் திகழ்ந்தார்.

    இளமைப்பருவத்திலேயே தனது செயல்களில் ஒரு மகானுக்குரிய அறிகுறிகளையும், தனித்தன்மைகளையும் கொண்டு விளங்கினார். 'உழைத்தே உண்ண வேண்டும்' என்னும் உயரிய கொள்கையுடன், தொழில்கள் பலவற்றை கற்று, உற்றார் உறவினரை பேணி வாழ்ந்தார். மேலும், சாதி என்னும் குறுகிய எல்லைக்குள் நின்று விடாது எச்சாதியாருக்கும் நல்லவர் எனவே வாழ்ந்து வரலானார்.

    கொண்டார் கற்றோரைத் தேடித் தொடர்பு கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏழைகளிடம் அன்புடன் பழகினார். அவர்களின் ஏழ்மையை போக்குவதில் பேரார்வம் கொண்டார். நல்லவர்களை தோழமையோடு நேசித்தும், தீயோர்களை வெறுத்தும் நல்லொழுக்கம் உடையவராய் விளங்கினார். அறம் செய்வதில் மிக்க விருப்பம் கொண்டவராய் இருந்தார். தனது சிறிய வருவாயில் ஒரு பகுதியை எளியோர்க்கு ஈந்தார்.

    எங்கும் பேர் கேட்க வைப்பான்...பல்லக்கு ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான் எல்லோர்க்கும் வல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி எல்லோரும் கொண்டாடிடும் வண்ணம் இன்பமுடனே வளர்ந்தார்.

    அகவாழ்வு

    1825-ம் ஆண்டு தனது 17-வது அகவையில் பரதேவதை என்னும் நங்கையுடன் கருத்தொருமித்துத் தனது வாழ்வை இணைத்துக் கொண்டார். இருவரும் அகமகிழ்வுடன் வாழ்ந்த போதிலும், அகிலம் இதைப்பற்றிக் கூறுகையில் "நாணமில்லாமல் நாயகம் போல் வளர்ந்தார்" எனவும், "முன்னாள் அமைத்த ஊழ்விதி" எனவும் குறிப்பிடுகின்றது.

    இவ்வாறு மன்றறிய மங்கையோடு வாழ்க்கை நடத்தி வருகையில் தனது இருபத்திரண்டாவது வயதில் கடுமையான சரும நோயால் அல்லலுற்று வருந்தினார். நோய் தீர்க்க மருத்துவர்கள் பலரை நாடியும் நோயின் கடுமை குறையவில்லை. எனவே தனது வழிபாடு கடவுளான திருமாலிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு கவலையின்றி இருந்தார். ஒரு வருடம் நோயிலேயே தனது வாழ்வைக் கழித்தார். நோய் தீராது இருந்தமையால், தாங்கொணாத் துயருற்ற வேளையில் அவரது அன்னையின் கனவில் திருமால் தோன்றி 'இவ்வருடம் மாசி பத்தொன்பதாம் நாள் திருச்செந்தூரில் திருவிழா நடைபெற இருக்கிறது. அங்கு உன் மகனை அழைத்து வருவாயானால் எல்லோருமறிய இப்பிணியும் தீர்த்து நல்ல பேறும் கொடுப்போம்'" என அருளிச் செய்தார்.

    கனவு கண்ட தாயார் மனம் மகிழ்ந்து, 'இக்கனவு கண்டதற்கு இங்கிருந்து செந்தூர் போய் வந்தால் நோய் தீரும்' என உற்றாரிடம் உரைக்க எல்லோரும் கேட்டு அகமகிழ்ந்து, 'செந்தூர் செல்வதே நன்று' எனப் பயணத்திற்கு ஆயத்தமாயினர். துணித்தொட்டிலில் முத்துக்குட்டியைக் கிடத்தி இருவர் தூக்கி வர, உற்றாரும் உறவினரும் சுமார் 80 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருச்செந்தூருக்கு நடைப்பயணத்தை மேற்கொண்டனர். செந்தூர்ப்பயணம் முத்துக்குட்டியின் உடல் நோயைக் குணப்படுத்தும் என உடன் சென்றவர்கள் எண்ணினார்களே ஒழிய, தென்திருவிதாங்கூரில் அந்நிகழ்ச்சி ஒரு திருப்பு முனையாக அமையக்கூடும் எனவோ, ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் புரையோடிய பிணிகளை அகற்றிப்புதுமைகள் பலவற்றை படைக்கும் அருமருந்தாக அமையும் எனவோ யாரும் எதிர்பார்க்கவில்லை. செந்தூரில் நடந்த அற்புதம் என்ன என்பதை வரும் தொடரில் காண்போம்.

    • ஒரு பைக்‌ சத்தம்‌ கேட்டு எல்லோரும்‌ திரும்பி பார்த்தனர்‌.
    • மேரியின் அம்மா லிசாவின் முகத்தில் குழப்ப ரேகை கூடியது.

    கடிதத்தைப் படித்து முடித்தவுடன் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல், அந்த கடிதத்தை நான்காக மடித்து, தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு எழுந்து, டைனிங் டேபிள் நோக்கி சென்றவர், தண்ணீரை எடுத்து குடித்தார். இதையெல்லாம் திறந்து இருந்த தனது ஜன்னல் கதவின் இடுக்கு வழியாக கவனித்துக் கொண்டிருந்தாள் திவ்யா.

    மெதுவாக தொண்டையைக் கனைத்துக் கொண்ட திவ்யாவின் அப்பா, கிச்சன் பக்கம் திரும்பி, "ராஜேஸ்வரி!"- என அழைக்க.. அம்மா, என்னங்க என்று கேட்டபடி ஹாலுக்கு வர, "உன் பொண்ணு மேரியோட அண்ணன் டேவிட்டை விரும்புகிறாங்கிற விஷயம் உனக்கு தெரியுமா?"- என கேட்க, "மேரி வீட்டுக்கு போக வர இருப்பான்னு தெரியும். ஆனா டேவிட்டை பத்தி என்கிட்ட ஒரு நாள் கூட சொன்ன தில்லையே…"அம்மா 'அந்தர் பல்டி' அடித்தது திவ்யாக்கு திக் என்றது.

    "சரி! அப்பா என்னதான் சொல்கிறார்.?'- என்று கூர்ந்து மீண்டும் கவனிக்க ஆரம்பித்தாள். வாசலுக்கு சென்று செருப்பை போட்டவர், அம்மாவை திரும்பிப் பார்த்து, "இனிமே அந்த மேரி பொண்ணு நம்ம வீட்டுக்கு வரக்கூடாது. திவ்யாவும் அவ வீட்டுக்கு போக கூடாது.

    பாளையாங்கோட்டையில நான் ஒரு வரன் பார்த்திருக்கிறேன். இந்து பையன். கை நிறைய சம்பளம் வாங்குறான். நல்ல குடும்பம். அவனைத் தான் இவளுக்கு முடிக்கலாம் என்று இருக்கிறேன். உன் பொண்ணுகிட்ட சொல்லி வை"- என கூறியபடி வெளியேறினார் அப்பா.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    இயக்குநர் A. ெவங்கடேஷ்


    "என்னம்மா... ஏதோ யோசனையில இருக்குற?" - அப்பா, தோளை தட்டவும் டக்குன்னு சகஜ நிலைக்கு வந்த திவ்யா," ஒண்ணும் இல்லப்பா...!" என்று கூற, இப்போது அவர்கள் போய்க் கொண்டு இருந்த டாக்ஸி, ஒரு வீட்டின் முன்னால் நின்றது.

    "ஹோட்டல்ல டிபன முடிச்சிட்டு கார் ஏறுன உடனே, நேரா இங்க கொண்டு வந்து இருக்கேன்னு பாக்குறியாமா... இதுதான் நீயும் மாப்பிள்ளையும் இனிமே வசிக்க போற வீடு! அட்வான்ஸ் கொடுத்துட்டேன். வீட்டுக்கு வேண்டிய ஜாமான்கள் எல்லாம் எங்க சீரா இருக்கட்டும்ன்னு வாங்கி வச்சுட்டோம்..." என அப்பா சொல்ல,

    தன் கல்யாணத்தை எதிர்த்த அப்பா, இப்போது இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்ற நெகிழ்ச்சியில் கண்கலங்கி திவ்யா நின்றாள். அப்போது... ஒரு பைக் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பி பார்த்தனர்.

    அந்த வீட்டுக்கு சற்று தள்ளி பைக் நிறுத்தி இறங்கினான் பெருமாள். இவன் எதற்கு திரும்ப வந்தான்?- அத்தனை பேரும் ஷாக்காக, அவன் இவர்களை நோக்கி வருவதையே,பார்த்துக் கொண்டிருந்தனர்.

    பெருமாள் இவர்களை நோக்கி வருவதை அனைவரும் ஷாக் ஆகி பார்த்துக் கொண்டிருக்க, அந்த சூழலிலும் பதட்டமே இல்லாமல், பெருமாள் வருவதையே பார்த்தபடி சகஜமாக நின்று கொண்டிருக்கும் தன் அப்பா ரங்கராஜனை பார்த்தாள் திவ்யா. அவளுக்கு தெரியும், அவளது அப்பாவை பற்றி!


    'அவள், தான் டேவிட்டை காதலிப்பதாகவும், அவனைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்'- என்பதையும் கடிதம் மூலம் அப்பாவுக்கு சொன்ன போது, கடிதத்தைப் படித்து முடித்த அவளது அப்பா, 'பாளையங்கோட்டையில் ஒரு வரன் பார்த்து இருப்பதாக 'சொல்லிவிட்டு கிளம்பி போனார் அல்லவா? அவர் கிளம்பி போன அந்த நாள் தான், அவள் ஞாபகத்துக்கு இப்போது வந்தது.

    "வணக்கம் சார்... இங்க தேவசகாயம்ங்கிறது...? அந்த வீட்டின் கிரில் கேட்டை பிடித்தபடி மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்து கேட்டார் திவ்யாவின் அப்பா ரங்கராஜன்.

    "யாரு...?"- உள்ளே இருந்து வெளியே வந்த தேவசகாயம் வேற யாரும் அல்ல, திவ்யாவின் காதலன் டேவிட்டின் அப்பா.

    "என் பேரு ரங்கராஜன்... திவ்யாவோட அப்பா!" என்று சொல்லவும், அடையாளம் கண்டு கொண்ட தேவசகாயம், "சார்... உள்ள வாங்க" என ஒரு அதிர்ச்சியும், ஆச்சரியம் கலந்த குரலில் உள்ளே அழைக்க, பேசும் குரல்கள் கேட்டு, உள்ளே இருந்து வந்தாள் மேரி.

    அவளைப் பார்த்ததும் திவ்யாவின் அப்பா ரங்கராஜன், "நல்லா இருக்கியாமா மேரி?" எனக் கேட்க, மேரி தலையாட்ட "என்னமா திடீர்னு உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன் பாக்குறியா, நான் தான் உங்க அப்பாவை பார்த்து பேசிட்டு போலான்னு வந்தேன்"- கூறியபடி அந்த வீட்டிற்கு நுழைந்தார் ரங்கராஜன்.

    "யாருங்க...?"- என கேட்டபடி வந்த லிசா, ஹாலில் அமர்ந்திருக்கும் ரங்கராஜனை பார்த்தவுடன் சற்று மரியாதையாக முந்தானையை எடுத்துப் போர்த்தியபடி, வாங்க... என கூற பக்கத்தில் இருந்த மேரி கிசுகிசுப்பான குரலில், "அம்மா... இவர்தான் திவ்யாவோட அப்பா!" என சொல்லவும் மேரியின் அம்மா லிசாவின் முகத்தில் குழப்ப ரேகை கூடியது.

    இப்போது மெதுவாக ரங்கராஜன் பேச ஆரம்பித்தார் "என் பொண்ணு திவ்யா என்கிட்ட விஷயத்தை சொன்னா... உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன். அதான், மேரியோட அண்ணன் டேவிட்டும், திவ்யாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறார்களாம்... இருவருக்கும் மனம் ஒத்து போனதால் உங்கள் வீட்டிலும் சரி என்று சொன்னீர்களாம்... நான் சம்மதிப்பேனா? என்று உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம் இருக்கிறது என்றும் என்கிட்ட சொன்னா... உங்களுக்கு தெரியும், என்னை விட இந்து மதத்தின் மீது அதிக பற்றுள்ளவன் எனது மகன் பெருமாள். அவன், திவ்யா உங்கள் பையனை திருமணம் செய்து கொள்ள நிச்சயமாக ஒத்துக் கொள்ள மாட்டான். அதனால் தான் நான் நேரில பார்த்து உங்களிடம் சில விஷயங்களை பேச வந்திருக்கிறேன்..."

    இப்போது அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் அவர் பேசுவதையே தேவசகாயம், லிசா, மேரி கவனித்துக் கொண்டிருக்க, ரங்கராஜன் தொடர்ந்தார்...

    "நான் சுத்தி வளைக்காம நேர மேட்டருக்கு வர்றேன்... நிச்சயமா நம்ம இரண்டு விட்டார் சம்மதம் இருந்தா கூட, என் பையன் பெருமாள் சம்மதிக்க மாட்டான்... ஆனா, என் பொண்ணு டேவிட் கல்யாணம் பண்ணிக்கணும்... அதுக்கு நாம எல்லாம் சேர்ந்து ஒரு விஷயம் பண்ணனும்..." -சொல்லிவிட்டு இவர்களை ஒரு பார்வை பார்த்தவர் மீண்டும் தொடர்ந்தார்.

    "இப்ப கூட என் வீட்ல என் பொண்ணு கிட்ட பாளையங்கோட்டையில் வரன் பாக்கற போறேன்னு சொல்லிட்டு தான், நான் இங்க வந்து இருக்கிறேன்..."

    ரங்கராஜன், "அதாவது... நீங்க சம்மதித்தது, நாங்களும் சம்மதித்து விட்டது என்பது, பெருமாளுக்கு தெரிய கூடாது. நாங்க பெருமாள் கிட்ட சம்மதம் இல்லாத மாதிரி தான் நடந்து கொள்வோம்... நான் சொல்றது உங்களுக்கு புரியும் நினைக்கிறன்..." என கேட்டு ரங்கராஜன் தேவசகாயத்தை பார்க்க, அவர் 'புரிந்தது' என்பது போல் தலையே ஆட்டினார்.

    "அவங்க ரெண்டு பேரும், ஒருவேளை நாம சம்மதிக்காம இருந்தா, எங்கயாவது போய் தான் கல்யாணம் பண்ணி இருப்பாங்க இல்லியா...?" ரங்கராஜன் கேட்க, தேவசகாயம் "ஆமா" என்பது போல் தலையை ஆட்ட, ரங்கராஜன் தன் மனசுல இருக்கும் திட்டத்தை சொல்ல ஆரம்பித்தார்.

    "அப்படியே அவங்க போய் கல்யாணம் முடிக்கட்டும். அவளோட அப்பா அம்மாவா நாங்க நேரில போய் ஆசிர்வாதம் பண்ணிக்கிறோம். நீங்க அவங்க கல்யாணம் முடிச்சு வந்ததுக்கு அப்புறம் உங்க சர்ச்சுக்கு கூட்டிட்டு போய் ஆசிர்வாதம் பண்ணிக்கோங்க... எதுக்கு சொல்றேன்னா, ஒருவேளை கல்யாணத்தப்போ பெருமாள் வந்துட்ன்னா, எங்கள பார்த்தா கூட நாங்க அவனை கன்வின்ஸ் பண்ணிடுவோம்... உங்கள அங்க பார்த்தா அவன் இன்னும் கொதிப்பான்... சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்? 'புரிகிறது' என்பது போல் தேவசகாயம் தலை ஆட்டினார்.

    "வாழப் போறவங்க ஆசைய நிறைவேற்றி வைக்கணும் தவிர, வாழ்ந்து முடித்த நம்ம ஆசைப்படி அவங்கள வாழனும்னு சொல்றது நியாயம் இல்லேல்ல..." சொல்லி முடித்தார் ரங்கராஜன்.

    இப்போது,தேவசகாயம் பேச ஆரம்பித்தார். "நிச்சயமா... இத நாங்க எதிர்பார்க்கல... உங்க சம்மதம் கிடைத்தது பெரிய விஷயம்! உங்க பையன் பெருமாளு அவங்களுடைய கல்யாணம் முடிஞ்சு, கொஞ்ச நாள்ல, அவனே மனசு மாதிரி சரியாயிடுவான்... அதை பத்தி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நீங்க நினைச்ச மாதிரியே அவங்க ரெண்டு பேரு கல்யாணம் நடக்கட்டும்! நீங்க நேர்ல போயி ஆசிர்வாதம் பண்ணுங்க... கல்யாணம் முடிச்சுட்டு வந்ததுக்கப்புறம்... நாங்க எங்க ஆசிர்வாதத்தை அவங்களுக்கு கொடுத்துக்கிறோம்... கொடுக்கறது என்ன.? ஏற்கனவே எங்க ஆசீர்வாதம் அவங்களுக்கு பரிபூரணமா இருக்கு..." என கூற,

    "அப்ப சந்தோஷம்... மத்த விஷயங்கள் நாம போன்ல பேசிக்கலாம்... நானே உங்கள போன்ல கூப்பிடுவேன்... நீங்க கூப்பிட வேண்டாம். பெருமாள் எப்ப, என் பக்கத்துல இருப்பான், எப்போ இருக்க மாட்டான் என்று எனக்கே தெரியாது... அப்ப கெளம்புறேன்..." ரங்கராஜன் கைகூப்ப, மூவரும் சந்தோஷமாக அவரை வழி அனுப்பி வைத்தனர்.

    அந்த த்ரீ ஸ்டார் ரெஸ்டாரன்ட் வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து, திவ்யாவும் டேவிட்டும் இறங்கினர். உள்ளே, ரிசர்வ் பண்ணி வைத்திருந்த டேபிளில் இருவரும் எதிர் எதிரே அமர்ந்தனர். லேசான பதட்டத்துடன் திவ்யா இருப்பதை கவனித்த டேவிட், "எதுக்கு திடீர்னு தனியா பேசணும்னு இங்க கூட்டிட்டு வந்திருக்க? உங்க அப்பா தான் எங்க வீட்டுல வந்து பேசிட்டு போயிட்டாரே... அப்புறம் என்ன? "என்று கேட்க...

    சுற்று முற்றும் ஒரு முறை பார்த்த திவ்யா, மெதுவாக அவனிடம் "நம்ம கல்யாணம் நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை டேவிட்..." என கூற "என்ன உளர்ற?" என டேவிட் கேட்க, "நேத்து எங்க வீட்ல எங்க அண்ணனுக்கும், எங்க அப்பாவுக்கும் சரியான வாக்குவாதம் நடந்தது! எங்க அப்பா எவ்வளவு எடுத்துச் சொல்லியும், அண்ணன் நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கவே இல்லை... கடைசியா எங்க அப்பா, "சரிடா நீ உன் இஷ்டத்துக்கு அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பாரு! நீ பாக்குற மாப்பிளைக்கே,அவளை கல்யாணம் முடிச்சு வைப்போம்..." - அப்படின்னு சொன்னாரு. அப்புறம் தான் அவன் அமைதி ஆனான்.

    இப்ப எனக்கு அவன் தீவிரமா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கான். எந்த நேரத்தில் மாப்பிள்ளை ரெடி! நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்னு வீட்ல வந்து சொல்ல போறான்னே தெரியல...

    தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட திவ்யா தொடர்ந்தாள்... அவன் போனதுக்கப்புறம் எங்கப்பா என்கிட்ட சொன்னாரு... அவன் போற வழியில போய் தான் அவனை நம்ம வழிக்கு கொண்டு வரணும். அவன் பாட்டுக்கு, மாப்பிள்ளை பார்க்கட்டும்... அதுக்குள்ள வர்ற முகூர்த்தத்தில், நீயும்,டேவிட்டும் போய் ஏதாவது ஒரு கோவில்ல கல்யாணத்தை பண்ணிக்கோங்க... அதுக்கப்புறம் நடக்கிறத ஆண்டவன் பாத்துக்குவான்.. அப்படின்னு அப்பா சொல்லிட்டாரு. எனக்குத்தான் பயமா இருக்கு!" - திவ்யா சொல்லி முடிக்க,

    "ஆக... உங்க அண்ணன் கூட சேர்ந்துகிட்டு உனக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலைய ஒரு பக்கம் பண்ணிக்கிட்டு, இந்த பக்கம் நம்ம கல்யாணத்துக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கிறார்கள்... இப்படி எல்லாம் உங்க அப்பா பண்றார்னு, உங்க அண்ணனுக்கு நாளைக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?- டேவிட் கேட்டான்.

    அன்று டேவிட் கேட்டது, இன்று நடக்கப்போகிறது, இதோ எங்களுக்கு கல்யாணமும் முடிச்சு, நாங்க தனி குடித்தனம் பண்ண, ஒரு வீட்டையும் பிடிச்சு, அந்த வீட்டுக்கும் எங்களை கூட்டிட்டு வந்து நிற்கிற, அப்பாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என் அண்ணனான பெருமாள்.

    'இந்நேரம் எல்லாம் தெரிஞ்சுருக்கும்... என்ன நடக்க போகுதோ...' திவ்யா பழைய நினைவுகளைளில் இருந்து வெளியே வந்து, யோசித்தபடியே நின்று கொண்டு இருக்க...இவர்கள் அருகில் வந்து கொண்டிருந்த பெருமாள் முகத்தில் கோபம் நன்றாகவே கொப்பளித்தது...

    (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com

    7299535353

    • மனப்பக்குவம் இருந்தால்தான் விட்டுக் கொடுக்க முடியும். பக்குவம் மிக முக்கியம்.
    • கடின மனம் எதையும் விட்டுக்கொடுக்காது. ஆணவம் தலைதூக்கி நிற்கும்.

    மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது, தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை'.

    - ஹெலன் கெல்லர்

    இல்லற வாழ்வில் வெள்ளி விழா கண்ட தம்பதியருக்காக, ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகச்சிறந்த தம்பதியரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கும் விழா.

    ஏராளமான தம்பதியர் ஆவலுடன் வந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்தது. மேடையில் நடுவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள். வரிசைப்படி பெயர்கள் வாசிக்கப்பட, ஒவ்வொரு ஜோடியும் மகிழ்ச்சியுடன் மேடை ஏறினர்.

    அவர்களிடம் வெற்றிமிகு இல்லற வாழ்வைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் எல்லோருமே, தாங்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பையும், ஒருமித்த கருத்தையும் குறித்து சிலாகித்துப் பேசினர். தங்களுக்குள் ஒருநாளும் சண்டையே வந்ததில்லை; அதுதான் தங்களின் நீண்டகால இல்லற வாழ்வின் வெற்றிக்கான காரணம் என்று பெருமித்ததுடன் கூறினர்.

    அந்நேரம் எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, அந்த அரங்கத்திற்கு வந்தார். எல்லோரும் தம்பதியராக வந்திருக்க, அந்தப் பெண் தனிநபராய் வந்திருப்பதைப் பார்த்து, அரங்கத்தில் இருந்த மற்ற தம்பதியர் ஏளனமாகச் சிரித்தனர். சிலர் கேலியாகக் கூச்சலிட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய நடுவர், அந்த முதிர்வயதுப் பெண்ணை மேடைக்கு அழைத்தார்.

    அவர் தயங்கியபடி மேடைக்குச் சென்றார். எல்லோரும் ஆரவாரம் செய்தனர்.

    நடுவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, 'இந்த நிகழ்ச்சியைப் பற்றிய விபரம் உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்.

    'தெரியும்' என்றார் அவர்.

    'அப்படியானால் உங்கள் கணவர் எங்கே?'

    'அவர் வரவில்லை'.

    'ஏன்?'

    'இன்று காலை எங்களுக்குள் ஒரு சின்ன சண்டை. அதனால் அவர் வரவில்லை'.

    'என்ன! சண்டை போடுவீங்களா?'

    'அது சகஜமான விஷயம்தான். அடிக்கடி சண்டை வரும்'.

    'உங்களுக்குத் திருமணமாகி எத்தனை வருஷமாகுது?'

    'நாற்பது வருஷம்'.

    'வாழ்த்துகள். ஆனா, சண்டைகளோடே எப்படி இத்தனை வருஷங்கள் சேர்ந்து வாழ முடியுது?' - நடுவர் வியப்புடன் கேட்டார்.

    'குடும்பம்னா சண்டைகள் வரத்தான் செய்யும். மோதினாலும் சீறினாலும், உறவு விடுபடாமல் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சி வாழ்றதுதானே குடும்ப வாழ்க்கை. சில சமயம் அவரும், சில சமயம் நானும் விட்டுக்கொடுத்திடுவோம். சண்டை தணிஞ்சிடும். சமாதானம் ஆயிடுவோம். அன்புதானங்க முக்கியம்'.

    'உங்க புள்ளைங்க?'

    'ஒரு பையன் ஒரு பொண்ணு. ரெண்டு பேரும் டாக்டர்ஸ். பையன் குடும்பம் லண்டனில், பொண்ணு குடும்பம் துபாயில்'.

    'ரொம்ப சந்தோஷம். உங்க கணவரை வற்புறுத்தி இங்க கூட்டி வந்திருக்கலாமே'.

    'அவர் சார்பாகவும்தான் நான் வந்திருக்கேன். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஆசைப்பட்டேன். அதனாலதான் வந்தேன். வீட்டுக்குப் போனதும் அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவேன்' என்று சொல்லிவிட்டு, அமைதியாக மேடையிலிருந்து இறங்கினார் அந்தப் பெண்மணி.

    நடுவர் எழுந்து வந்து மைக் முன்னால் நின்றார். சிலநொடி நிசப்தத்திற்குப்பின் பேசத் தொடங்கினார்.

    'தம்பதியர் அனைவருக்கும் என் பாராட்டுகள். எல்லோரும் உங்க வெற்றிமிகு குடும்ப வாழ்வைப் பற்றி ரொம்ப அழகா சொன்னீங்க. என்றாலும், மிகச்சிறந்த தம்பதியர்க்கான விருதை, இறுதியாக இங்கு வந்து பேசிய அந்தப் பெண்மணிக்குக் கொடுக்க விரும்புகிறேன். மேடைக்கு அவரை அன்புடன் அழைக்கிறேன்' என்றார்.

    அரங்கமே வியப்பில் ஆழ்ந்தது. மற்ற தம்பதியர்க்கு ஒன்றும் புரியவில்லை. முதிர்வயதுப் பெண்மணி மேடைக்குச் சென்றார். நடுவர் கைகுலுக்கி அவரை வரவேற்று, தன் பேச்சைத் தொடர்ந்தார்.

    'ஒரே கருத்துடைய கணவனும் மனைவியும் குடும்பத்தை வெற்றிகரமா நடத்துறது ரொம்ப ஈஸி. ஆனால் கருத்து வேறுபாடுகள், மோதல்கள், சண்டை சச்சரவுகள் இருந்தும் உறவு விடுபடாமல் நாற்பது வருஷங்களைக் கடந்தும் பொறுப்புணர்வோடு குடும்பத்தை நடத்துறதுதான் மிகச்சிறந்த சாதனை. விட்டுக்கொடுத்து வாழும் பண்புதான் உன்னதமானது. எனவே, மிகச்சிறந்த தம்பதியர்க்கான விருதை இவர்களுக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்' என்று சொல்லி, அந்தப் பெண்மணியிடம் விருதினை வழங்கினார்.

    'விட்டுக்கொடுத்தல்'தான் உள்ளங்களை வெல்லும். எதையும் எளிதாக்கும். ஆனால் 'ஈகோ' அதற்கு எதிரானது. வாழ்க்கையைக் கடினமாக்கும்.

    மனப்பக்குவம் இருந்தால்தான் விட்டுக் கொடுக்க முடியும். பக்குவம் மிக முக்கியம். ரவா பணியாரம் செய்வதற்குக்கூட மாவுப் பக்குவம் சரியாக அமைய வேண்டும். கெட்டியாகவும் இருக்கக் கூடாது. தண்ணீரின் அளவும் அதிகமாகிவிடக் கூடாது. மாவு சரியான பக்குவத்தில் இருந்தால்தான், பணியாரம் சரியாக வரும்.

    நம் வாழ்க்கைக்கும் அது பொருந்தும். பக்குவப்படாத வாழ்க்கை பயன்படாது. வாழ்க்கையே ஒரு சமன்பாடுதான். மனதை சமப்படுத்திக் கொள்ளாதவர்கள் பிரச்சனைகளை மேற்கொள்ள முடியாது. புயலுக்கும் அமைதிக்கும் நடுவில், வெயிலுக்கும் நிழலுக்கும் நடுவில், வரவுக்கும் செலவுக்கும் நடுவில் - இப்படி எல்லாவித இரட்டைத் தன்மைகளுக்கும் நடுவில், சமநிலையில் நம்மால் இருக்க முடிகிறதா? அது சாத்தியமானால், எந்தச் சூழ்நிலையும் நமக்குச் சாதகமே.

    'நான் சொல்வதுதான் சரி, எல்லாம் எனக்கானவை, எனக்குதான் முதலிடம்' போன்ற எண்ணங்கள் பக்குவப்படாத மனதிலிருந்து எழுபவை. அத்தகைய எண்ணங்களே தனிமனித மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கான மூல வேர்கள்.

    பேருந்து வந்து நின்றதும் முண்டியடித்துக்கொண்டு ஏறுவார்கள். எதற்காக? ஜன்னல் ஓர இருக்கையைப் பிடிப்பதற்காக. அதைப் பிடித்துவிட்டால், தேர்தலில் நிற்பதற்கு 'சீட்' கிடைத்ததுபோல் அவர்களுக்கு ஒரு பெருமிதம். அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

    உட்கார இடம்கிடைக்காமல் சில முதியவர்கள் நின்று கொண்டே பயணிப்பார்கள். எழுந்து இடம்கொடுக்க மனம்வராது. அங்கு ஒருசில நல்லவர்கள் இருப்பார்கள். அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள். அதன்மூலம் பெறுகின்ற உண்மையான மகிழ்ச்சியை உள்ளூர அனுபவிப்பார்கள்.

    சில குடும்பங்களில், உடன்பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். சொத்துத் தகராறு. பாகப் பிரிவினைப் பிரச்சனை. ஒரு சென்ட் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பார்கள். காலம் முழுவதும் பகையோடே வாழ்ந்து, வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் காலமாகிப் போய்விடுவார்கள். என்ன பிரயோஜனம்!

    அதை யாரும் சிந்திப்பதில்லை. வீம்புக்கு விதண்டாவாதம் செய்வார்கள். பொல்லாத வார்த்தைகளை வீசுவார்கள். ஒருவர் பேச்சை நிறுத்தினால், பிரச்சனை தணிந்துவிடும். ஆனால் நிறுத்த மாட்டார்கள். உறவுகளுக்குள் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு, விட்டுக்கொடுக்காத மனோபாவம்தான் காரணம்.

    சாலையில் இரண்டு வாகனங்கள் உரசிக் கொள்கின்றன. உடனே தகராறு. பின்னால் ஏராளமான வாகனங்கள் நகர முடியாமல் நின்று கொண்டிருப்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட மாட்டார்கள். வாய்ச்சண்டை முற்றி இறுதியில் கைகலப்பில் முடியும்.

    எல்லாவற்றிற்கும் காரணம், கடின மனம்.

    கடின மனம் எதையும் விட்டுக்கொடுக்காது. ஆணவம் தலைதூக்கி நிற்கும். 'நான்' 'எனது' என்னும் சுயநலச் சீர்கேடு அங்கிருந்துதான் ஆரம்பமாகும். அதனால் நிம்மதி ஏற்படுமா? கிடையாது! திருப்தியின்மையும் அலைக்கழிப்பும்தான் ஏற்படும். மனக்குறை இருந்துகொண்டே இருக்கும்.

    ஒரு மன்னன் மன அமைதியின்றித் தவித்தான். அதற்காக ஏங்கினான். அவனுடைய நாட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நாடு செழித்திருந்தது. கலைகள் தழைத்தோங்கின. மக்கள் களிப்புடன் வாழ்ந்தனர். எனினும், தனக்குள் அமைதியின்மையை மன்னன் உணர்ந்தான். என்ன செய்வது? யாரிடம் சென்று கேட்பது? குழம்பிக் கொண்டிருந்தான்.

    அந்நிலையில் ஒருநாள், அவன் ஆட்சிக்குட்பட்ட ஒரு ஊருக்கு ஜென் குரு ஒருவர் வந்திருப்பதை மன்னன் அறிந்தான். அவரிடம் போனால் தனது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பிய மன்னன், அந்த ஜென் குருவிடம் சென்றான்.

    ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார் குரு. மன்னனைக் கண்டதும் அவனுடைய குழப்ப நிலையை அவர் புரிந்து கொண்டார்.

    'அரசே! நாடு சிறப்பாக இருக்கிறதல்லவா?' என்று கேட்டார்.

    'ஆம், ஸ்வாமி. அதில் ஒரு குறையும் இல்லை. எனினும், என் மனதில் அமைதியில்லை' என்றான் வருத்தத்துடன்.

    'சரி, உனது நாட்டை எனக்குக் கொடுத்துவிடு' என்றார் குரு.

    'எடுத்துக் கொள்ளுங்கள் ஸ்வாமி'.

    'நாட்டை என்னிடம் கொடுத்துவிட்டாய். எனவே, கஜானாவும் என்னுடையது. இனி நீ என்ன செய்வாய்?'

    'ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் ஸ்வாமி'.

    'அந்த வேலையை என்னிடமே செய்யலாமே. நீ என்னுடைய பிரதிநிதியாக இந்த நாட்டைப் பராமரித்து வா. உன் செலவுக்கு அரசு கஜானாவிலிருந்து ஊதியம் பெற்றுக்கொள். நான் வரும்போது கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார் குரு.

    இரண்டு ஆண்டுகள் கடந்தன. திடீரென ஒருநாள் மன்னனைப் பார்க்க வந்தார் குரு. மன்னன் அவரை வரவேற்று, மன்னனுக்கான ஆசனத்தில் அமரச் செய்தான்.

     

    கவிஞர் தியாரூ, 9940056332

    கவிஞர் தியாரூ, 9940056332

    'அரசே! நாடு எப்படி இருக்கிறது?' புன்னகையுடன் கேட்டார் குரு.

    'சுபிட்சமாக இருக்கிறது ஸ்வாமி. கணக்கு வழக்குகளைக் கொண்டு வருகிறேன், பாருங்கள்'.

    'அது இருக்கட்டும். இப்போது உன் மனநிலை எப்படி இருக்கிறது?'

    'என் மனம் மிக அமைதியாக இருக்கிறது ஸ்வாமி'.

    'அதே அரண்மனை, அதே அதிகாரம், அதே படை, அதே மக்கள். ஆனால், அப்போது இல்லாத நிம்மதி இப்போது உன்னிடம் இருக்கிறது. காரணம் என்ன?'

    மன்னன் விழித்தான். குரு விளக்கினார்.

    'அப்போது இந்த ஆட்சி அதிகாரம் உன்னுடையது என்று நினைத்திருந்தாய். ஆனால் இப்போது இது வேறொருவருடையது; நீ அவரின் பிரதிநிதி என்றிருக்கிறாய். 'எதுவும் எனதல்ல' என்று நீ உன்னையே விட்டுக்கொடுத்தபோது, ஓர் அற்புதமான அமைதி உனக்குள் வந்துவிட்டது. இனி, இதே மனநிலையோடு ஆட்சி செய்' என்று சொல்லிச் சென்றார் குரு.

    ஒரு பேருண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 'விட்டுக்கொடுத்தல்' என்பது தெய்வீகப் பண்பு. அதனை நாம் பழக்கப்படுத்திக் கொண்டால் - குடும்பத்தில், நட்பில், சமூகத்தில் அன்பும் அமைதியும் நிலவிடாதா!

    • சஷ்டி என்பவள் ஓர் திதி தேவதை ஆவாள்.
    • இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும்.

    கந்த சஷ்டி விழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. கந்த சஷ்டி என்பது ஓர் திதி விரதம். இது ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்குப் பிறகு வருவதாகும்.

    சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது ஓர் புராதனத் தமிழ்ப் பழமொழியாகும். இதற்கு சஷ்டி திதியில் விரதம் அனுஷ்டித்தால் அகத்தில் உள்ள கருப்பையில் கரு உருவாகி வளரும் என்று அர்த்தமாகும். சிலர் இதனை சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று வேறுவிதமான பழமொழியாக்கி பொருள் சொல்வது மிகவும் தவறாகும்.

    சஷ்டி என்பவள் ஓர் திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். இவள் பிரம்மதேவனின் மானச புத்ரி.

    முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்தால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தேவயானை யென்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியாகத் திகழ்ந்த (தேவசேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள். அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது.

    சஷ்டி எனும் இந்த திதி தேவதையானவள் குழந்தை இல்லாப் பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள். இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை. மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பாலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள்.

    அதனால் இந்த சஷ்டி திதி தேவதையை குழந்தை பாக்கியம் வேண்டி அக்கால மக்கள் வழிபட்டனர். இவளை பிரசவம் நடந்த வீட்டில் 6-வது நாளும், 21-வது நாளும் அவர்கள் வணங்கி பூஜித்துள்ளனர். அப்போது இவளை சம்பத் சொரூபிணியாக அவர்கள் வழிபடுவார்களாம்.

    ஒரு சமயம் சுவாயம்புவ மனு எனும் மன்னனுக்கும், அவன் மனைவி மாலினி தேவிக்கும் வாரிசாக ஓர் ஆண் குழந்தையின்றி புத்ரதோஷம் இருந்தது. அவர்கள் சஷ்டி விரதமிருந்து சஷ்டி தேவியின் அருளால் 12 ஆண்டுகள் கழித்து புத்ரபாக்யமும் ஏற்பட்டது.

    ஆனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளால் அக்குழந்தை இறந்தே பிறந்தது. அதனால் அக்குழந்தையை மயானத்தில் கொண்டு சென்று புதைப்பதற்கு முன்பு அழுது புலம்பினர். அப்போது அங்கு நேரில் தோன்றிய சஷ்டி தேவி அக்குழந்தையிடம் சென்று அதனை எடுத்து தம் மார்போடு அணைத்து தம் இதழ்களால் முத்தமிட்டு அதை ஆசிர்வதித்தாள். உடனே இறந்த அக்குழந்தை உயிர் பெற்றெழுந்தது. இதனைக் கண்டு அரசனும், அரசியுடம் அவன் சேனைகளும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

    அக்குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டழைத்த சஷ்டிதேவி, இவன் நெடுநாட்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து ஆட்சி புரிவான் என்று ஆசீர்வதித்து அக்குழந்தையை சுவாயம் புவ மனுவின் மனைவி மாலினியின் கைகளில் தந்து மறைந்தாள்.

    சுவிரதன் என்றால் நன்கு விரதம் அனுஷ்டித்ததால் பிறந்தவன் என்பது பொருளாகும். அதனால் தான் குழந்தை வரம் வேண்டும் அனைவருமே முருகப்பெருமானுக்கு மிகவும் பிரியமான தேவதையான இந்த சஷ்டி தேவியின் நாளில் சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானையும் சஷ்டி திதி தேவதையையும் வழிபட்டு புத்ரபாக்கியம் பெறுவதோடு மற்றும் பல பெரும்பேறுகளையும் பெற்று மகிழ்கிறார்கள்.

    கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி நீராடல் என்று தீபாவளி கங்கா நீராடல் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.

    இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு.

    இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர்.

    பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.

    கந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா?

    ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.

    தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.

    அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.

    சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும். ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நிராடி முருகனை வணங்கிப் பராணம் செய்தல் வேண்டும்.

    இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும். ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாரணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்.

    அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும். தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது.

    முருகப்பெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவா? தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.

    அதிகாலை 6 மணிக்கு முன்பே காப்பு கட்டிக் கொள்வது நல்லது

    சஷ்டி விரதம் இருப்பவர்கள் நல்ல நேரத்தில் காப்புக் கட்டிக் கொள்வது அவசியமாகும். நாளை (சனிக்கிழமை) இரவு 8.06 மணி வரை பிரதமை உள்ளது. எனவே நாளை அதிகாலை 6 மணிக்கு முன்பே அதாவது சூரியஉதயத்துக்கு முன்பு காப்புக் கட்டிக்கொள்வது நல்லது. நாளை சஷ்டி விரதம் தொடங்கும் போது முருகர் படத்தை அலங்கரித்து வைத்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கலாம். இல்லை யெனில் முருகரை கலசத்தில் ஆவாகனம் செய்து வழிபடலாம்.

    காப்புக் கட்டும் முன்பு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிப் பெற வேண்டும். அத்தகைய சூழ்நிலை இல்லாத பட்சத்தில் முருகரையே குருவாக ஏற்று காப்புக் கட்டிக் கொள்ளலாம். முருகருக்கு சிவப்பு மலர்களால் மாலை அலங்காரம் செய்வது நல்லது. நைவேத்தியமாக காய்ச்சிய பாலில் தேன் கலந்து வழிபடுவது உகந்தது.

     

    சஷ்டி விரத மகிமை

    கந்த சஷ்டி விரதத்தை கடைபிடித்ததாலேயே நாரத முனிவர் மேலான பதவி பெற்றார். இவ்விரதச் சிறப்பினை விநாயகப் பெருமானே நாரத முனிவருக்கு எடுத்துரைத்தருளினார்.

    முன்னவன் அதனைக் கோளா முழுதருள் புரிந்து நோக்கி அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி பொன்னடி வழிபாடாற்றிப் பொருவில்கார்த்திகை நாள் நோன்மைப் பன்னிரு வருடங்காறும் பரிவுடன் புரிதி என்றான்.

    இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் தோற்று முப்புவனத்தி வேண்டும் முறையை அடைந்த நீரார் மெய்ப்படு தொகையை யாரே விளம்புவார் என்று கந்தபுராணம் இவ்விரத்தைப் போற்றுகின்றது.

    கந்த சஷ்டி விரதம் மேற் கொள்வோர் ஒரு கைத்தண்ணீரையே அருந்துதல், தருப்பையில் படுத்தல், கந்தபுராணம் படித்தல், கேட்டல், உறங்காது விழித்து இறைவனைச் சிந்தித்தல் ஆகியவற்றைத் தவறாது செய்து வழிபட வேண்டும். ஓர் ஏழை இவ்விரதமிருந்து மனு என்ற மன்னன் ஆனான்.

    சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்று பொருள்.

    கந்த சஷ்டி நாளுக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரத்தை அனுஷ்டிப்பது ஒரு முறை.

    அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒரு முறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. உண்ணாவிரதம் இருப்போர் போன்று உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை இவ்விரதமிருப்போர் அருந்தக் கூடாது. இவ்விரத நாட்களில் விடியற்காலையில் எழுந்திருந்து, நாட் கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும். ஏழாம் நாட்காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.

    கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி, நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலியவற்றை வெற்றி கொண்டு வாகை சூடிப் பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும். அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.

    • புத்தாடை உடுத்த நல்ல நேரம் அதிகாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வீட்டில் இருக்கும் அனைவரும் கங்கா நீராடல் செய்து விட வேண்டும்.
    • தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷமாகும்.

    வாழ்க்கையிலும், மனதிலும் இருக்கும் இருள், துன்பங்கள் நீங்கி, நன்மைகள் பெருகுவதற்கான நாளே தீபாவளி பண்டிகை. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் சிறப்பு அம்சங்களுள் ஒன்று கங்கா நீராடல். தீபாவளியை கங்கா நீராடலுடன் தான் துவங்க வேண்டும் என்பது மிக முக்கியமான விதிமுறையாகும். கங்கா ஸ்நானம் செய்வதற்கு நல்ல நேரம் மட்டுமல்ல, முறைகளும் உள்ளது. தீபாவளியன்று அனைவரும் கங்கையில் சென்று நீராட முடியாது. ஆனால் கங்கையில் குளித்த பலன் கிடைக்கப்பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் இருக்கும்.

    தீபாவளியன்று அனைத்து நீர் நிலைகளிலும் கங்கா தேவி எழுந்தருள்வதாக ஐதீகம். இந்த நாளில் கங்கையில் நீராடினால் பாவங்கள், துன்பங்கள், வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதனால் தான் தீபாவளி நாளில் கங்கா நீராடல் மிக முக்கியமானதாக கூறப்படுகிறது.

    புத்தாடை உடுத்த நல்ல நேரம் அதிகாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வீட்டில் இருக்கும் அனைவரும் கங்கா நீராடல் செய்து விட வேண்டும். குளித்து முடித்த பிறகு புத்தாடையில் மஞ்சள் தடவி புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டு முதலில் வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும். அதிகாலை நேரத்தை தவற விட்டவர்கள் காலை 9-10 மணி வரையான சுக்ர ஓரையில் புத்தாடை அணியலாம். அதன் பிறகு குல, இஷ்ட தெய்வத்தை வணங்கி வீட்டில் செய்த இனிப்பு பண்டங்களை சாப்பிடலாம். உறவினர்கள் நண்பர்களுடன் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கலாம். இயன்ற அளவு உணவு, உடை, இனிப்பு பொருட்களை தானம் வழங்கலாம்.

    ஸ்ரீ லஷ்மி குபேர பூஜை மனிதன்

    வாழ்க்கையை செம்மையாக நடத்த பொருள் மிகவும் அவசியம். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொருளை செல்வச் செழிப்பை அடைய முன்னோர்கள் கடைபிடித்த வழிபாடு தீபாவளித் திருநாளில் செய்யப்படும் லட்சுமி குபேர பூஜையாகும். பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன் இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் அவரை வழிபட்டவுடன் கோடீஸ்வரனாக்குவது குபேரனின் பணி. தீபாவளி மகாலட்சுமிக்கு உரிய நாளாக கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்வது விசேஷமானதாகும். தீபாவளி நாளில் தான் மகாலட்சுமியை வணங்கி, சகல செல்வ சம்பத்துக்களையும் குபேரர் பெற்றதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் லட்சுமி தேவியை வணங்குவதால், அவளின் பரிபூரண அருளை பெற முடியும். ஐப்பசி மாத அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகையும், லட்சுமி குபேர பூஜையும் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு 31.10.2024 வியாழக்கிழமை அன்று பகலில் சதுர்த்தசி திதியும் மாலை 3.55-க்கு மேல் அமாவாசை திதியும் வருகிறது. இந்த பூஜை மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலக்ஷமி தீபாவளித் திருநாளில் நமது இல்லம் தேடி வருவதாக ஐதீகம். எனவே தீபாவளியன்று மாலை 6 மணிக்குள் லக்ஷமி குபேர பூஜையை துவங்குவது நல்லது. சூரியனும் சந்திரனும் இணையும் அமாவாசைத் திதியில் துலா மாதத்தில் லட்சுமி குபேரனை வழிபாடு செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும். அன்று மாலை லஷ்மி குபேர பூஜை செய்பவர்கள் சகல ஐஸ்வர்யங்களையும் அடைய முடியும்.

    பூஜை செய்யும் முறை

    எந்த பூஜை செய்தாலும் முதலில் வீடு, வாசலை சுத்தம் செய்ய வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மஞ்சள் பிள்ளையார் மற்றும் குல, தெய்வத்தை மனதார வேண்டி பூஜையில் ஆவாஹனம் செய்வது மிக முக்கியம். அதன் பிறகு பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் வைத்து தலை வாழை இலை விரித்து, அதில் நவதானியங்களைப் பரப்பி புனித நீர் நிரம்பிய கலசத்தை அதன் மேல் வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நைவேத்தியப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைத்து மகாலட்சுமி மற்றும் குபேரனை பூஜையில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    பிள்ளையாரின் மூல மந்திரம் மற்றும் அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்ட பிறகு, குல தெய்வத்தினை வழிபட வேண்டும். அதன் பிறகு மகாலட்சுமியின் அஷ்டோத்திரம், ஸ்ரீ சூக்தம் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். பூஜையில் குபேர லட்சுமியின் திருவருளால் அனைத்துச் செல்வங்களும் அதாவது தனம், தானியம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற வேண்டும் என சங்கல்பம் செய்ய வேண்டும்.

    தொடர்ந்து, குபேரனுக்கும் கலசத்திற்கும் உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை மஞ்சள் துணியில் முடிந்து பணப் பெட்டியில் அல்லது மணிப்பர்சில் வைப்பது சிறப்பு.

    நாணய வழிபாடு

    தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷமாகும். குபேர பகவானுக்கு உகந்த எண் ஐந்து என்பதால், 108 ஐந்து ரூபாய் நாணயங்களை சுத்தம் செய்து அதனைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமாகும். குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபாடு, அர்ச்சனை செய்யவேண்டும்.

    தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை பெற்றுத் தரும். அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்ய வேண்டும்.

    பொதுவாக வியாழக்கிழமை லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு.

    அமாவாசை திதியும் வியாழக்கிழமையும் இணைந்த தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வது மிக மிக சிறப்பு. வாழ்வாதாரம் பெருக லட்சுமி குபேரருக்கு பச்சை குங்குமம் அர்ச்சனை செய்து வழிபட சுப மங்களம் உண்டாகும்.

    பூஜை முடிவில் ஆரத்தி எடுக்கையில்,

    ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே

    நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே

    ஸமேகாமான் காம காமாய மஹ்யம் !

    காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது !

    குபேராய வைஸ்ரவணாய மகாராஜாய நம:

    என்ற மந்திரத்தைக் கூறி வழிபட பூஜை பலன் எளிதில் வசப்படும்.

    கேதார கவுரி விரதம்

    சிவ பெருமானுக்குரிய விரதங்களில் ஒன்றாக போற்றப்படுவது கேதார கவுரி விரதம். மனிதர்கள் மட்டுமின்றி கடவுள்கள் பலரும் இந்த விரதத்தை கடைபிடித்து வேண்டிய வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. பெரும்பாலும் கேதார கவுரி விரதம் தீபாவளியுடன் சேர்ந்து வருவதால் இந்த நாளில் லட்சுமி பூஜையுடன் சேர்த்தே கேதார கவுரி விரதத்தையும் கடைபிடிப்பதுண்டு. தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அதிகரிக்கவும், கணவன் மனைவி ஒற்றுமையை மேம்படுத்தவும், பெண்களுக்கு திருமணத் தடையை அகற்றவும் கேதார கவுரி விரதம் உதவுகிறது. ஒரு சிலர் புரட்டாசி மாத வளர்பிறை தசமி திதியில் தொடங்கி 21ம் நாளான ஐப்பசி அமாவாசை நாளில் நிறைவு செய்வார்கள்.

    சிலர் தீபாவளி நாளில் மட்டும் விரதம் இருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். மாதம் முழுவதும் சூரியன் நீசமாக தனது வலிமை முழுவதையும் இழந்து இருப்பார். அமாவாசையன்று சூரியனுடன் சந்திரன் இணையும் காலம் சூரியனுக்கு வலிமை அதிகரிக்கும்.சூரியன் பிதுர்காரகன் - தந்தை. சந்திரன் மாதுர்காரகன் தாய். சூரியனின் அதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனின் அதி தேவதை கௌரி. நீசம் பெற்ற தந்தை சூரியனோடு தாயான சந்திரன் இணையும் நாள் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கருத்தை உணர்த்த பலம் இழந்த நீசம் பெற்ற நிலையில் இருக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது.

    சிவசக்தி இணைவு நடைபெறும் அந்த அமாவாசை நாளில் சிவ சக்தியை நினைத்து கேதார கவுரி விரதத்தினை கடைபிடித்தால் கணவனின் ஆயுள், ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஐக்கியமும் பெருகும். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும். அதாவது கணவன் வலிமை குறைந்தவராக இருந்தால் கூட மனைவி துணை நிற்க கணவன் நிலை சீராகும். கணவனும் மனைவியை சம உரிமை தர வேண்டும் என்பதை உணர்த்துவதே கேதார கவுரி நோன்பு. இந்த விரதம் கடைபிடிக்கும் வழக்கம் எல்லா குடும்பத்திற்கும் கிடையாது. வழக்கம் இல்லாதவர்கள் பார்வதி பரமேஸ்வரரை மனதார வேண்டி இயன்றவரை அசைவ உணவை தவிர்த்து வழிபட்டால் தம்பதிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடு மறையும். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் ஏன் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.

    பார்வதி பரமேஸ்வர வழிபாடு

    பிரிந்து வாழும் பல தம்பதியினரை ஒன்று சேர்க்கும். மேலும் ஜனன கால ஜாதகத்தில் 8-ம் இட வலிமை குறைவால் திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள் 21 சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் குங்குமம் தந்து வணங்கி ஆசி பெற சிவ பார்வதி அருளால் விரைவில் திருமணத் தடை அகன்று விரைவில் திருமணம் நடைபெறும்.

    இந்த தீபாவளித் திருநாள் அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும், இன்பமானதாகவும் அமையட்டும். ஸ்ரீ லட்சுமி குபேரர் அருளும், பார்வதி பரமேஸ்வரர் அருளும் நிரம்ப பெற்று வாழ நல்வாழ்த்துகள்.

    • அருள் வடிவாக கருணையின் உருவமாக திகழும் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ய விரும்பவில்லை.
    • சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கும் கருவறையில் அந்த சீர்வரிசை பொருட்கள் வைக்கப்படும்.

    முருகப்பெருமானுக்கு நாம் எடுக்கும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கந்தசஷ்டி விழா. சூரபத்மன் எனும் அசுரனை முருகப்பெருமான் திருச்செந்தூர் கடற்கரையில் ஒரு சஷ்டி திதி தினத்தில்தான் வதம் செய்தார். இதை அடிப்படையாக கொண்டுதான் கந்தசஷ்டி விரதம் உருவானது.

    திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கும், சூரபத்மனுக்கும் 6 நாட்கள் போர் நடந்தது. இந்த 6 நாள் போர் பற்றி சங்க இலக்கியங்களிலும், புராணங்களிலும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதை பிரதிபலிக்கும் வகையில் திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் சூரசம்கார நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது.

    அருள் வடிவாக கருணையின் உருவமாக திகழும் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ய விரும்பவில்லை. அவனை திருத்தவே முயற்சி செய்தார். எனவேதான் தனது படை தளபதியாக திகழ்ந்த வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி பேச சொன்னார்.

    ஆனால் ஆணவம் கொண்டிருந்த சூரபத்மன் யார் பேச்சையும் கேட்கவில்லை. போருக்கு தயார் என்று கொக்கரித்தான். முருகனை எளிதில் வென்று விடலாம் என்று நினைத்தான் அவன். எனவே தனது சகோதரர்கள், மகன்கள் அனைவரையும் படைதிரட்டி முருகனை எதிர்க்க துணிந்தான்.

    இதை அறிந்த முருகப்பெருமான் வேறு வழியின்றி சூரபத்மனுடன் போரிட்டு அவனை அழித்தார். இதைத்தான் தமிழர்கள் உலகம் முழுக்க சூரசம்காரமாக கொண்டாடுகிறார்கள். எத்தனையோ தலங்களில் இந்த விழா நடத்தப்பட்டாலும் திருச்செந்தூர் கடலோரத்தில் நடக்கும் சூரசம்காரம் உணர்வுப்பூர்வமானது. முருகப் பக்தியை மேலும் ஓங்கச் செய்யக் கூடியது.

    ஐப்பசி மாதம் திருச்செந்தூரில் இந்த விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கும். இந்த பூஜை முடிந்ததும் திருச்செந்தூர் ஆலயத்துக்குள் இருந்து ஜெயந்திநாதர் தன் தாய் பார்வதி கொடுத்த வேலை ஏந்திக்கொண்டு படை வீரர்கள் புடைசூழ சப்பரத்தில் கடலோரத்துக்கு வருவார். அவருக்கு முன்பாக சூரபத்மன் திருச்செந்தூரின் மையப்பகுதியில் உள்ள சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடலோரத்துக்கு வந்து காத்து இருப்பான்.

    ஜெயந்திநாதர் வந்ததும் போர் தொடங்கும். சூரனின் தலைகளை ஜெயந்திநாதர் வெட்டி வீழ்த்துவார். இறுதியில் மாமரமாக மாறி நிற்கும் சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொள்வார். அதன் பிறகு ஜெயந்திநாதர் திருச்செந்தூர் ஆலயத்துக்கு திரும்பி மகாதேவர் சன்னதியில் எழுந்தருள்வார். அங்கு மிகப்பெரிய கண்ணாடி வைக்கப்பட்டு இருக்கும். அதில் தெரியும் ஜெயந்திநாதர் பிம்பத்துக்கு அபிஷேகங்கள் செய்யப்படும்.

    சூரனை வதம் செய்து வெற்றி கொண்டதற்காக ஜெயந்திநாதரை குளிர்விக்க இந்த அபிஷேகங்கள் நடத்துவார்கள். அந்த அபிஷேகத்தை அவரே கண்ணாடியில் பார்த்து ரசித்து மகிழ்வார் என்பது ஐதீகம். அத்துடன் சூரசம்காரம் நிறைவு பெறும்.

    6 நாட்கள் சஷ்டி விரதம் இருந்த பக்தர்களும் மகிழ்ச்சியுடன் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்டு தங்களது விரதத்தை நிறைவு செய்வார்கள். அதன் பிறகு 7-வது நாள் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெறும்.

    சூரனை வதம் செய்து காப்பாற்றினால் தனது மகள் தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து கொடுப்பதாக இந்திரன் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி திருப்பரங்குன்றத்தில் முருகன்-தெய்வானை திருமணம் நடந்தது. என்றாலும் சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

    சூரன் சம்ஹாரம் செய்யப்பட்ட மறுநாள் காலை தெய்வானை திருச்செந்தூரில் உள்ள தபசு மண்டபத்துக்கு சென்று முருகனை திருமணம் செய்ய தவம் இருப்பாள். அன்று மாலை முருகப்பெருமான் அதாவது உற்சவர்களில் ஒருவரான குமரவிடங்கர் மயில் வாகனத்தில் தபசு மண்டபத்துக்கு சென்று தெற்கு ரத வீதியில் தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்வார். அன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறும்.

    அதன் பிறகு 5 நாட்கள் ஊஞ்சல் சேவை நடைபெறும். இறுதி நாள் அன்று பக்தர்கள் முருகன்-தெய்வானை மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி குளிர்ச்சிப்படுத்துவார்கள். இதன் மூலம் கந்தசஷ்டி விழா இனிமையாக நிறைவு பெறும்.

    முருகப்பெருமானுக்கு தெய்வானையை திருமணம் செய்து கொடுத்த இந்திரன் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு திருச்செந்தூர் தலத்துக்கு வந்து மகளுக்கும், மருமகனுக்கும் புத்தாடை உள்பட சீர்வரிசை கொடுப்பதாக ஐதீகம். பெண்ணை பெற்றவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் தங்களது மகளுக்கும், மருமகனுக்கும் புத்தாடை, பட்டாசு, இனிப்பு சீர்வரிசை வழங்கி வாழ்த்து சொல்வார்கள்.

    அதைத்தான் திருச்செந்தூர் தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்திரன் செய்வதாக வரலாற்று பதிவுகள் உள்ளன. சீதையை திருமணம் செய்து கொடுத்த ஜனக மகாராஜா தனது சொத்தில் பாதி அளவுக்கு தீர்ந்து விடும் வகையில் தீபாவளி சீர் கொடுத்ததாக ராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மதுரையில் சொக்கநாதருக்கு மீனாட்சியை திருமணம் செய்து கொடுத்த பிறகு கள்ளழகர் ஆண்டுதோறும் சீர்வரிசை கொடுப்பதை இப்போதும் விழாவாக கொண்டாடுகிறார்கள். அதே போன்றுதான் திருச்செந்தூரிலும் இந்திரன் தனது மகள் தெய்வானைக்கு மருமகன் முருகனுக்கும் தீபாவளி சீர்வரிசை கொடுக்கிறார்.

    முருகன்-தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தாலும் அவர்களுக்கு இந்திரன் தீபாவளி சீர் கொடுப்பது திருச்செந்தூர் தலத்தில் மட்டுமே நடப்பது குறிப்பிடத்தக்கது. சூரபத்மனை வதம் செய்து வெற்றி வாகை சூடிய பிறகு முருகன் திருச்செந்தூர் ஆலயத்தில் நிரந்தரமாக குடியேறி விட்டார் என்ற வகையில் இந்த விழா அமைகிறது.

    தீபாவளி சீரை முருகப்பெருமானும், தெய்வானை மட்டும் பெறுவது இல்லை. திருச்செந்தூர் ஆலயத்தில் ஒவ்வொரு சன்னதியிலும் இடம் பெற்றிருக்கும் இறைமூர்த்தங்களும் பெறுவதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு தீபாவளியின் போதும் திருச்செந்தூர் தலத்தில் மிக மிக கோலாகலமாக நடப்பதை காண முடியும்.

    தீபாவளி தினத்தன்று அதிகாலை திருச்செந்தூர் முருகனுக்கு கொடுக்க வேண்டிய தீபாவளி சீர்வரிசையான பட்டு வேஷ்டி, பட்டு துண்டு, பட்டு பீதாம்பரம், மலர் மாலைகள், இனிப்பு பண்டங்கள் வகை வகையாக பெரிய பெரிய தாம்பூலங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். பழ வகைகள், பூ வகைகளும் அந்த வரிசையில் இடம் பெற்று இருக்கும்.

    அந்தப் பொருட்களை சிவாச்சாரியர்கள் கடற்கரைக்கு எடுத்துச் செல்வார்கள். அங்கு வரிசையாக வைத்து மந்திரங்கள் சொல்லி பூஜைகள் நடத்துவார்கள். பிறகு அவற்றை மேளதாளம் முழங்க வெள்ளி பல்லக்கில் வைத்து ஆலயத்துக்குள் எடுத்து வருவார்கள்.

    சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கும் கருவறையில் அந்த சீர்வரிசை பொருட்கள் வைக்கப்படும். அப்போது இசைக் கலைஞர்கள் முருகனை புகழ்ந்து பாடுவார்கள். இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் முருகப்பெருமான் தீபாவளியை கொண்டாட தொடங்குவார்.

    நாம் எண்ணை தேய்த்து குளிப்பது போல முருகப்பெருமானுக்கும் எண்ணை குளியல் நடத்தப்படும். அதன் பிறகு பால், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகங்கள் செய்யப்படும். இதையடுத்து அற்புதமாக மனம் வீசும் சந்தன கலவையால் முருகப்பெருமான் அலங்கரிக்கப்படுவார். அந்த சந்தனக் காப்பில் முருகப்பெருமானை பார்க்கும்போது மனம் மயங்கும்.

    இதைத் தொடர்ந்து மாமனார் இந்திரன் கொடுத்த தீபாவளி சீர்வரிசையான பட்டு வேஷ்டி, பட்டு அங்கவஸ்திரம், முத்து மாலைகள், வைர நகைகள் ஒவ்வொன்றாக முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்படும். விதவிதமான மலர்களாலும் முருகன் அலங்கரிக்கப்படுவார்.

    தீபாவளி சீர்வரிசை ஏந்தி புன்னகை தவழ காட்சியளிக்கும் முருகனுக்கு தீபதூப ஆராதனைகள் நடக்கும். அர்ச்சனைகள் செய்யப்படும். வகை வகையான நைவேத்தியங்களும் முருகப் பெருமானுக்கு படைக்கப்படும். தீபம் காட்டி இந்த சீர்வரிசையை ஏற்கும்படி செய்வார்கள்.

    திருச்செந்தூர் முருகப்பெருமானும் அந்த தீபாவளி சீர்வரிசைகளை ஏற்று மனம் குளிர பக்தர்களுக்கு ஆசி வழங்குவர். அந்த சமயத்தில் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    முருகனை மனம் குளிர செய்யும் வகையில் தீபாவளி தினத்தன்று செய்யப்படும் சந்தனக் காப்பு அபிஷேகம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்பார்கள். வாய்ப்பு இருப்பவர்கள் அதை கண்ணார கண்டு களியுங்கள். முருகப்பெருமான் தீபாவளி சீர்வரிசை ஏற்று புத்தாடை அணிந்து காட்சி அளிக்கும் அதே சமயத்தில் மற்ற சன்னதிகளிலும் சுவாமிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்படும்.

    தெய்வானைக்கும் வள்ளி குகையில் வள்ளிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பட்டாடை உடுத்தி நகைகள் அணிவித்து வழிபடுவார்கள். கருவறை முருகருக்கு பின்புறம் உள்ள பாம்பறையில் இருக்கும் பஞ்சலிங்கங்களுக்கும் தீபாவளி அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள்.

    அன்று மதியம் உச்சிகாலத்தில் கங்காதேவி திருச்செந்தூருக்கு வந்து முருகனை தரிசிப்பதாக ஐதீகம். அதாவது திருச்செந்தூர் கடலில் கங்கை கலந்திருப்பதாக சொல்வார்கள். இதனால்தான் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்து முடித்ததும் ஒரு வெள்ளி பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்தியங்களை சிவாச்சாரியார்கள் கடலோரத்துக்கு எடுத்து வந்து கட லுக்கு பூஜை செய்து நைவேத்தியத்தை கடலில் கரைத்து விட்டு செல்வார்கள்.

    முருகப்பெருமானே கங்காதேவிக்கு தீபாவளி தினத்தன்று பிரசாதம் அனுப்பி வைப்பதாக இதன் மூலம் கருதப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வழிபட்டால் இந்திரன் முருகப்பெருமானுக்கு சீர்வரிசைகளை அள்ளி அள்ளி கொடுப்பது போல நமக்கும் கொடுப்பார் என்பது ஐதீகம்.

    இந்திரன் மட்டுமல்ல நீங்கள் விரும்பினாலும் தீபாவளிக்கு திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள சுவாமிகளுக்கு புத்தாடைகளை சீர்வரிசையாக வழங்கலாம். தீபாவளி அன்று அதிகாலை கோவிலை சுற்றி உள்ள வீதிகளில் வெள்ளிப்பல்லக்கு எடுத்து வரப்படும். முருனுக்கும் மற்ற சன்னதி தெய்வங்களுக்கும் புத்தாடை கொடுக்க விரும்புபவர்கள் அந்த பல்லக்கில் புத்தாடைகளை கொடுக்கலாம்.

    அப்படி சேரும் புத்தாடைகள் ஆலயத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு சன்னதிக்கும் பிரித்து வழங்கப்படும். இதன் மூலம் திருச்செந்தூர் ஆலயத்துக்கு நீங்களும் தீபாவளி சீர்வரிசை கொடுத்த ஆத்ம திருப்தி ஏற்படும். முருகன் அருளை பெறலாம்.

    இதையடுத்து நடைபெறும் சூரசம்ஹாரம் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • தாலிக்கு தங்கமும், திருமணத்தில் மோதிரம் தங்கத்திலும் இருப்பது அவசியமாகக் கருதப்படுகின்றது.
    • தங்கம் விற்கும் விலையினைப் பார்த்தால் பெண்ணைப் பெற்றவர்களுக்கு தலை சுற்றி விடுகிறது.

    தங்கம்-இந்த வார்த்தையினை சொன்னாலே அனைவரின் முகத்திலும் ஒரு பரவசம், புன்முறுவல், மகிழ்ச்சி ஏற்படும். பல உணர்ச்சிகள் பொங்கும். அப்படியொரு ஈர்ப்பு சக்தி தங்கத்திற்கு உண்டு. தங்க நகை அணிவதில் நமது இந்திய பெண்களை மிஞ்ச முடியாது. சுமார் 13 சதவீதம் தங்கம் இந்திய பெண்களிடம்தான் இருக்கின்றது என்கின்றனர்.

    நம் கலாசாரம், பாரம்பரியம் இவற்றில் தங்கத்திற்கு மிகப்பெரிய இடம் உண்டு. கடவுள் முதல், நம் மூதாதையர், தாய் வரை இன்று நாம் மற்றும் நம் பிள்ளைகள் (குறிப்பாக பெண்கள்) வரை தங்கம் இல்லாத ஒருவரோ, ஒரு விழாவோ பார்த்திருக்க முடியுமா? தங்கம் ஒரு பலம். பொருளாதார ரீதியாக மட்டும் இதனை கூறவில்லை. ஞானம், அறிவு இவற்றிற்கு கூட இந்த உலோகத்தினைக் குறிப்பிடுவர்.

    பெண்களாக இருந்தால் ஒரு காதணி, ஒரு செயின், இரண்டு வளையல், மூக்குத்தி இவை அவசியம் என்பர். ஆண்கள் கழுத்தில் மெலிதான செயின், மோதிரம், கடுக்கன் இவற்றினை பயன்படுத்துவர்.

    தாலிக்கு தங்கமும், திருமணத்தில் மோதிரம் தங்கத்திலும் இருப்பது அவசியமாகக் கருதப்படுகின்றது.

    இன்றைய கால கட்டம் ரொம்பவே மாறி விட்டது. மணப்பெண் ஒரு நகை கடையே நடந்து வருவது போல் அலங்கரிக்கப்படுகின்றாள். விதவிதமான நிகழ்ச்சிகளாகக் கொண்டாடுகின்றனர். விதவிதமான அலங்காரங்களில் மணப்பெண் தேவதை போல் காட்சி அளிக்கின்றார். தவறேயில்லை. அவரவர் ஆசைக்கேற்ப நிகழ்த்துகின்றனர். காணக்கண் கொள்ளா காட்சியாகத்தான் இருக்கின்றது. கல்யாண வீடே இந்திர லோகம் போல் காட்சி அளிக்கின்றது. ஜொலிக்கின்றது. எல்லாம் சரி. இதனை எல்லாம் நல்ல கண்கள் மட்டுமா ரசிக்கின்றது? எத்தனை பொல்லாத திருட்டுக் கண்களும் பார்க்கின்றன. இதனாலேயே சதி திட்டங்களின் மூலம் கொள்ளைகள், மிரட்டல்கள், பணம் பறித்தல் போன்றவை நிகழ்கின்றன.

    இது ஒரு புறம் இருக்க மற்ற பெண்களுக்கும் இது போல் தனக்கும் நடக்க வேண்டும் என்று தங்கத்தின் மீது ஆசை ஏற்படுகின்றது.

    மாயை ஆட்டிப் படைக்கின்றது

    மத்திய வகுப்பு பெண்களின் மனதினை இது சிதைக்கின்றது.

    இன்றைக்கு ஒரு கிராம் தங்கம் விற்கும் விலையினைப் பார்த்தால் பெண்ணைப் பெற்றவர்களுக்கு தலை சுற்றி விடுகிறது.

    வயிறு வாயினை கட்டி, மாதா மாதம் சிறுக சிறுக சேமித்து 1 சவரன், 2 சவரன் சேகரிக்கின்றனர். இதனை காதை அறுத்து, கழுத்தை அறுத்து, தலையில் அடித்து ஏன் கொலை கூட செய்து திருடர்கள் எடுத்துச் சென்று விடும் நிகழ்வுகளையும் அடிக்கடி செய்திகளாகப் பார்க்கின்றோம்.

    இன்னமும் நம் நாட்டில் கல்யாணம் என்று பேச்சு வந்தாலே 'எத்தனை சவரன்' என்ற கேள்விதான் முதலில் வருகின்றது.

    காவல் துறையினரும் பாதுகாப்பு அறிவுரைகளை கூறித்தான் வருகின்றனர்.

    அவர்கள் அறிவுரையினையும், நாம் இன்னமும் பெற வேண்டிய விழிப்புணர்வு பற்றியும் பார்ப்போம்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    தங்கம் பாதுகாப்போம்

    கல்யாணம், விசேஷம் என்று செல்லும்போது கவரிங் நகைகளை அணிந்து செல்வது சற்று சங்கடமாய் இருக்குமே என்று அனைவரும் முணுமுணுப்பர்.

    சரிதான், உள்ளூருக்குள் என்றால் கூட பரவாயில்லை. வெளியூர் செல்ல வேண்டும் என்றால் கவலையுடன் இவைகளை எடுத்து சென்று பாதுகாத்துவருவதற்குள் போதும்... போதும் என்றாகி விடுகிறது. சரி வெளியூர் பயணம் செய்யும் போது என்னென்ன செய்ய வேண்டும்.

    * முதலில் அளவான நகைகள் போதும். அண்டா, பக்கெட் சைசில் நகைகளை அணிந்து உங்கள் செல்வ வளத்தினை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

    * இந்த நகைகளை வைப்பதற்கு என்றே முறைப்படுத்துதல் எனப்படும் வகையில் சிறு பெட்டிகள், துணியால் கூட இவை, உருவாக்கப்பட்டிருக்கலாம். இவற்றில் இதனை வைக்கும் போது நகைகள் சிதறாமல், தவறி கீழே விழாமல் இருக்கும். இதை உங்கள் ஹாண்ட் பேக் உள் அறையில் வைப்பது நல்லது.

    * எடுத்து செல்லும் நகைகளை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்.

    * ஜிப் பிய்ந்த அல்லது பழைய நைந்த பைகளை பயன்படுத்தாதீர்கள்.

    * கண்ட இடங்களில் பைகளை வைக்கக் கூடாது.

    * உங்கள் கண்காணிப்பில் பை இருக்கட்டும்.

    * விழிப்புணர்வு தேவை.

    * இரவு நேர பயணத்தினைத் தவிர்க்கவும்.

    * சிலர் டிஜிட்டல் லாக் செய்வதும் உண்டு.

    * நடந்து கொண்டே காதணிகளை அணிவதும், கழட்டுவதும் வேண்டாம். திருகாணி தேடுவது பெரிய வேலை. தொலைந்து போய் கிடைக்காவிட்டால் குறைந்தது இன்றைக்குத் தங்கம் விற்கும் விலையில் 10 ஆயிரம் ரூபாய் போனது போல் ஆகி விடும்.

    * இந்த பாதுகாப்பான பையை பயன்படுத்துவதன் மூலம் நகைகள் சுருண்டு முடிச்சு விழாமல் இருக்கும் என்பதனையும் அறிய வேண்டும்.


    * பையினை இரண்டு கைகளாலும் இறுக பிடித்து, பட பட வென்ற பார்வையோடு திருடர்களை அழைப்பதுப் போல் முழித்து எளிதாகச் சொல்லித் தர வேண்டாம். அமைதியாய் விழிப்புணர்வுடன் இருங்கள்.

    * இழப்பு ஏற்பட்டால் உடனடியாக போலீசை அணுகவும்.

    * இன்சூரன்ஸ் செய்பவர்களும் உண்டு. இது அனைவருக்கும் ஒத்து வருவதில்லை.

    * தனித்து எங்கும் செல்வதனை தவிர்ப்பது நல்லது. முடிந்தால் பயணம் செய்யும் போது தங்க நகைகளை தவிர்த்து விடுங்கள்.

    வீட்டில் இருக்கும் போது கூட மேஜை மீதோ, மேஜை டிராயரிலோ அக்கறையின்றி நகைகளை அப்படியே போடாதீர்கள். நீங்கள் நகையினை இழப்பது மட்டுமின்றி மற்றவர்களை தவறு செய்யவும் தூண்டுகிறீர்கள் என்பதனையும் கருத்தில் கொள்ளுங்கள். வீட்டில் பீரோவில் சாவியினை எப்போதும் தொங்க விடுவது கூடாது. பாங்கி லாக்கரில் உங்கள் நகைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

    * வீட்டில் வைப்பதாக இருந்தால் உயர்ரக தீ விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு, டிஜிட்டல் லாக் முறையில் சிறிய பெட்டகங்களைப் பயன்படுத்தலாம்.

    * பிறருக்கு வீட்டில் நீங்கள் பத்திரமாக தங்கம் வைத்திருப்பதனை சொல்ல வேண்டாம்.

    * வீட்டில் கேமரா, அலாரம் இவற்றினைப் பொருத்தலாம்.

    * வீட்டில் வைத்தாலும், வங்கி லாக்கரில் வைத்தாலும் முறையான கணக்கு விவரங்கள் இருக்க வேண்டும். இந்த விவரங்களை உங்கள் ஆடிட்டர் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

    * உங்கள் தங்கத்தின் தரத்திற்கு வாங்கும் போதே ஆல்மார்க் தர சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இந்த சான்றிதழ் நீங்கள் தங்கத்தினை விற்க நேர்ந்தாலோ, மாறுபட்ட டிசைன் நகை செய்ய முற்படும் போதோ முழு பணமும் குறைவின்றி கிடைக்க உதவும்.

    * அடிக்கடி பாலிஷ் போட வேண்டும் என்று நினைத்த இடங்களில் நகைகளை கொடுக்காதீர்கள். மிருதுவான துணி, புதிய மென்மையான பல் துலக்கும் பிரஸ், அதிக காரமில்லாத மென்மையான சோப்பு கொண்டு சுத்தமாக துடைத்து மெல்லிய துணியில் சுற்றி வைக்கலாம்.

    * தங்கத்தின் மீது அதிக சென்ட், லோஷன் போன்றவை படக்கூடாது.

    ஆக தங்கத்தின் மதிப்பினை அறிவோம். தக்க முறையில் பாதுகாப்போம்.

    * தங்கம் என்பது வளம், சொத்து, கவுரவம், மரியாதை, பலம் என பல குணங்களை சொல்லலாம்.

    * காலம் காலமாக தங்கம் என்றாலே தனி மரியாதைதான்.

    * சுமார் 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பண்டமாற்றுமுறை இருந்த போதும் பெரிய வியாபாரங்களில் தங்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    * அனைவராலும் விரும்பப்படும் உலோகம் இது, வீணாகாதது. புனிதமாய் கருதப்படுவது. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களை அளிப்பது.

    * இதற்கு சமுதாயத்தில் முக்கிய பங்கு உண்டு. தாலி, கல்யாண மோதிரம் இவை தங்கத்தால் மட்டுமே அநேகமாய் செய்யப்படுகின்றன.

    * தங்கம் என்று சொன்னாலே செல்வம், செல்வம், செல்வம் என்ற பொருள் கொண்டது எனலாம்.

    * தங்க பல் என்பது அவரின் செல்வ நிலையினை காண்பிக்கின்றது என்பது மட்டுமல்ல. தங்க பல் கிருமி, ஆசிட் என பல பாதிப்புகளில் இருந்து காக்கின்றது என்பதற்காகவும் தங்க பல் கட்டிக் கொள்பவர்கள் உண்டு. இப்போது எல்லாம் நாகரீகம் கருதி இதனை தவிர்க்கின்றனர். தங்க பல் என்பது பார்ப்பதற்கு எளிதில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

    * செல்போன் உருவாக்கத்தில் கூட சிறிதளவு தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

    * தங்கம் இருந்தால் ஒருவருக்கு வாழ்வில் கூடுதல் தன்னம்பிக்கை ஏற்படும்.

    * பிளாட்டினமும் அதிக விலை கொண்டது. என்றாலும் உடனடியாக பணம் பெறுவது என்றால் அது தங்கத்தால் மட்டுமே முடியும்.

    * தங்கம் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றது.

    * தங்கம் இயற்கையாகவே ஒளியில் மினு மினுக்கும் தன்மை கொண்டது.

    ×