என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • யாரையும் தோற்றம், உடையை வைத்து எப்போதும் எடை போட வேண்டாம்.
    • சித்தர்கள் அனைவருமே அஷ்டமா சித்திகளை அறிந்தவர்கள்தான்.

    அமைதி என்ற இந்த வார்த்தையினை இன்று இப்போது சொல்லும் போது யுத்தமற்ற நிலை- மக்களின் கூக்குரலற்ற நிலை என்பது தான் நம் மனதில் தோன்றும்.

    * அமைதி அழகானது. தெய்வீகமானது.

    * இருளை ஒளிதான் நீக்க முடியும். யுத்தம் நாட்டிலோ, வீட்டிலோ, மனதிலோ வந்தால் அமைதிதான் அதனை நீக்க முடியும்.

    * ஆனால் அமைதி என்பது யுத்தம், போராட்டம் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. அதற்கும் மேலான ஒரு ஆனந்த உணர்வு.

    * அன்பின் உயர்ந்த வெளிப்பாடு.

    * நம்மால் இந்த அமைதியினை நம் முன் பெற்றுக் கொள்ள முடியும்.

    * பரபரப்பான வாழ்க்கையினைத் தவிர்த்தாலே பாதி அமைதி வந்து விடும்.

    ஒரு கண்ணுக்கு மறு கண் என்று எதிர்ப்பது உலகில் அனைவரையும் பார்வை அற்றவராக ஆக்கி விடும்- மகாத்மா காந்தி.

    * ஏற்பட்ட மன வலியினை மறப்பது கடினம்தான். ஆனால் அதனை சுமந்து வாழ்வது என்பது அதனை விட கடினம்.

    * உங்கள் உள் அனுமதி இல்லாமல் யாரும் உங்களை காயப்படுத்த முடியாது.

    * பரபரவென்று எந்த வேலையினையும் செய்ய வேண்டாமே.

    * மன சோர்வு, கவலை இருக்கின்றதா? நீங்கள் கடந்த காலத்தில் வாழ்கின்றீர்கள். ரொம்ப படபடப்பு இருக்கின்றதா? நீங்கள் வருங் காலத்திற்கு சென்று விட்டீர்கள். அமைதியாக இருக்கின்றீர்களா? நீங்கள் இப்போது இந்த நொடியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.

    * ஓரளவு மற்றவர்கள் இடம் இருந்து சற்று தள்ளி இருந்து பாருங்களேன். நிறைய அமைதி இருக்கும்.

    * ஏதாவது தவறு செய்து விட்டால் மனதார 'Sorry' சொல்லி விடுங்கள். மனம் லேசாக இருக்கும்.

    * யாரையும் தோற்றம், உடையை வைத்து எப்போதும் எடை போட வேண்டாம்.

    * யாரைப் பற்றியும் தவறாக பேச வேண்டாமே. இது எத்தனை அமைதி தரும் தெரியுமா?

    * அவ்வப்போது ஒரு நிமிட தியானம் செய்யலாம்.

    இப்படி எதற்காக அமைதியினைப் பற்றி திடீரென பேசுகின்றோம். இன்றைய சூழலில் 'அமைதி' என்பது மனிதனுக்கு மிக அவசியம் ஆகி விட்டது.

    நாட்டில் அமைதியின்மை, வீட்டில் அமைதியின்மை, நண்பர்கள், உறவுகள் என எவ்விடத்திலும் அமைதியின்மை நிலவுகின்றது. பரபரப்பான செய்திகள், பதற வைக்கும் செய்திகள், பாதுகாப்பின்மை, நிதி பற்றாக்குறை, ஆரோக்கியமின்மை என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கின்றது.

    இதனால் தான் மனிதர் எப்போதும் மனநலம் கெட்டு இருக்கின்றான். இது உடல் நலத்தினையும் கெடுக்கின்றது.

     

    இந்த நிம்மதியினை, அமைதியினை தேடி அலையும் போது தியானம், யோகா, ஆன்மீகம், பக்தி, வழிபாடுகள் இவை மனதினை நிலை படுத்துகின்றன.

    யோகா, தியானம் இதனை முறையாக கற்று பிறகு பயிற்சி செய்ய வேண்டும். இது தரும் பலன்கள் அதிகம். ஆன்மீகம், வழிபாடு இவை அவரவர் குடும்ப வழக்கப்படி பின்பற்றப்படும். இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.

    அநேகர் குரு வழிபாடு, சித்தர் வழிபாடு என்றும் ஈடுபடுவர். பலரும் அன்றாட பிரச்சினைகளில் இருந்து விடுபடவே பல வழிபாட்டு தலங்களுக்கு செல்லவேண்டி உள்ளது. காரணம் தாங்க முடியாத பிரச்சினைகள்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தில் அதிக பிடித்தம் ஏற்படுகின்றது. கடவுளிடம் சொல்லி விட்டால் பாரம் நிறைந்து மனம் அமைதி பெறுகின்றது.

    கடைசியில் மனிதன் உடல் ஆரோக்கியம், மன நிம்மதி இதனை மட்டுமே அடைய படாத பாடு படுகின்றான். இதனைப் பெற ஆன்மீகம் சார்ந்த வாழ்க்கை அநேகருக்கு உதவுகின்றது.

    பிரபல கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் இவற்றிற்கு என்றும் மரியாதை இருக்கத்தான் செய்கின்றது. பல சித்தர் கோவில்கள் ஆக்கிய மா முனிவர், மச்ச முனிவர் என ஆரம்பித்து ஷீரடி பாபா, ராகவேந்திர சுவாமிகள், ராமானுஜர், ரமணர், காஞ்சி மகா பெரியவர் என புத்தகம் எழுதும் அளவு பட்டியல் நீளும். இப்படி அனைத்து மதங்களிலும் கூற முடியும்.

    அவ்வகையில் நான் மிகவும் லயித்து பார்த்த ஒரு சித்தர் கோவிலைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

    சர்க்கரை அம்மா சித்தர்

    சென்னையில் திருவான்மியூர், கலாஷேத்ரா சாலையில் அமைந்துள்ளது சக்கரை அம்மா திருக்கோவில். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ஆனந்தம்மா. இவரை பறவை சித்தர் என்றும் அழைப்பர். பறவையைப் போல் வானில் நொடியில் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தவர். அஷ்டமா சித்திகளைப் பெற்றவர். இடுப்பை சுற்றி நாகப் பாம்பினை அணிந்து நடமாடுவதனை அநேகர் பார்த்துள்ளனர்.

    1854-ம் ஆண்டு திருவண்ணாமலை அருகில் உள்ள தேவிகாபுரம் என்ற கிராமத்தில் சேஷ குருக்கள், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை பெரிய நாயகி அம்மன் கோவிலில் குருக்களாக சேவை புரிந்து வந்தார். சிறு வயதில் ஆனந்தம்மா மற்ற குழந்தைகளைப் போல் விளையாட்டில் ஆர்வம் காட்டாது சிவ சுலோகங்களைப் படிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்.

    அந்த கால முறைப்படி இவருக்கு 9 வயதில் திருமணம் நடந்தது. இவரது 20 வயதில் கணவன் இறந்தார். அதன் பின்னர் இவர் செங்கல்பட்டில் (அவர் கணவரது ஊர்) கோமளீஸ்வரர் கோவிலில் தியானத்தில் இருந்தார். பின்னர் தன் சகோதரர் இருந்த போலூர் என்ற ஊருக்கு வந்தார். அங்கு இருந்த நட்சத்திர குன்றில் உள்ள கோவிலில் தியானம் செய்ய சென்ற காலத்தில் அங்கிருந்த பெண் துறவி இவரை தன் சீடராக ஏற்றார். பெண் சித்தரின் பெயர் குளும்மா. இவர் பல ஆன்மீக ரகசியங்களை ஆனந்தம்மா அன்னைக்கு தீட்சையாக வழங்கினார். மேலும் ஸ்ரீ சக்கர உபாசன முறையினையும் அருளினார். இதில் லகிமா சக்தி முறையினையும் கற்று தன் உடலை எளிதாக்கி பறவை போல் வானில் பறந்து செல்லும் முறையினையும் அறிந்தார். கவுதம புத்தர் அவரது சீடர்களும் இப்படி வானில் பறக்கும் முறையினை அறிந்து இருந்தனர். சித்தர்கள் அனைவருமே அஷ்டமா சித்திகளை அறிந்தவர்கள்தான்.

    ஆனந்தம்மா தன் வீட்டு மாடியிலேயே கடும் தவத்தினை தொடர்ந்த நிலையில் பிரபஞ்சத்தில் இருந்து பேரருள் அவருள் இறங்கியது. அது பேரானந்த நிைல அல்லவா. குடும்ப நபர்களால் இந்த நிலையினை புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது அன்னையின் சகோதரருக்கு உடல் நலம் இல்லாது போகவே டாக்டர் நஞ்சுண்ட ராவ் அவர்கள் இந்த வீட்டிற்கு வந்து செல்ல ஆரம்பித்தார். அவரால் அம்மாவின் ஆன்மீக உயர்வினை புரிந்து கொள்ள முடிந்தது.

    அவர் செல்லும் கோவில்களுக்கு டாக்டர் நஞ்சுண்ட ராவும் பின் தொடர்ந்தார். சீடரானார். இந்த நிலையில் இவர் ஸ்ரீ சக்கரத்தினையும், சிவபெருமானையும் பூஜித்ததால் சக்கர அம்மா என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் அது சக்கரை அம்மா என்று மாறியது. சக்கரை அம்மாவை தரிசனம் செய்தவர்கள் வாழ்வில் பல நன்மைகள் நடந்தன. அம்மாவின் மகிமை தானே பரவியது. இவர் விண்ணில் பறந்து திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியினை தரிசித்ததாகவும் கூறப்படுகிறது.

     

    1900 வருடம் சக்கரை அம்மா மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்றார். திரும்பும்போது ஒரு இடத்தினை டாக்டரிடம் வாங்கி அன்னையின் மறைவுக்குப் பிறகு அவர் அந்த இடத்தில் இருந்து தன் ஆசியினை வருபவர்களுக்கும், வேண்டுபவர்களுக்கும் அளிக்கப் போவதாக கூறினார். டாக்டரும் அந்த இடத்தினை வாங்கினார். 1901 பிப்ரவரி 28-ல் அம்மாவின் பூவுலக மறைவுக்குப் பின் அந்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு டொனேஷன் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்வதில்லை. பூ வாங்கி பலர் வருகின்றனர். பலர் தீபம் ஏற்றுகின்றனர். இது அவரவர் விருப்பம்.

    ஆனால் இங்கு வந்தவுடன் இனம் புரியாத அமைதி ஒருவரை ஆட்கொள்கின்றது. மனதிற்கு இதமாய் இருக்கின்றது. வருகின்ற அனைவரும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதை மகிழ்ச்சியாய் கூறுகின்றனர். மிக சுத்தமான சூழ்நிலை. சத்தம் இல்லா சூழ்நிலை. அம்மாவின் கருணை, அருள் இதனை ஒவ்வொருவரும் உணர முடிகின்றது. கருவறை, தியான மண்டபம் இதனை விட்டு வெளிவர மனதில்லை. அமைதியின் அர்த்தம் புரிகின்றது. இந்த அமைதிக்காகத் தானே மனிதன் அலையாய் அலைகின்றான்.

    சக்கரை அம்மா என்று தேடினால் இணையத்தில் அனைத்து விவரங்களும் கிடைக்கும். மேற்கூறப்பட்ட செய்திகள் இணையத்தில் சேகரித்து எழுதப்பட்டுள்ளது. நேரில் சென்ற அனுபவமும் சேர்ந்துள்ளது.

    வெளியூரில் இருக்கின்றீர்களா? வர முடியவில்லையா? 'சக்கரை அம்மாவை மனதில் நினைத்து தியானம் செய்யலாமே. ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வழிபாடுகளில் ஜாதி, மதம் என்று எதுவும் இல்லை. இப்படி நம்பதான் வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. விருப்பம் இருப்பவர்கள் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. காஞ்சி மகா பெரியவர் 5 நாட்கள், தொடர்ந்து இங்கு தியானம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இங்கு வருபவர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அதிசயங்களைப் பற்றி கூறுகின்றனர். ரோஜா பூ மாலை விரும்பி அணிவிக்கின்றனர். அடிமுடி சித்தர் அம்மா அளித்த கூழை குடித்து மறவாதிருந்தால் பிறவாது இருக்கலாம். பிறவாது இருந்தால் இறவாது இருக்கலாம். என்று ஆசி அருளினார். ரமண மகரிஷி அவர்களோ பிறக்கும் போதே முழு தெய்வ அருளோடு பிறந்தவர் என்று அருளி உள்ளார்.

    பாம்பன் சுவாமிகள், விவேகானந்தர் போன்றவர்கள் தரிசித்தவர். நம் நாட்டின் மிகப்பெரிய பெருமை சித்தர்கள் தான். ஒளியை விட வேகமாக பயணித்து அண்டத்தை கண்டு வந்து அதனை பதிவும் செய்தவர் திருமூல சித்தர். வெவ்வேறு சித்தர்களை அங்கு பார்க்க முடியும் என்றவர் அவரே.

    உலக வாழ்வில் சில கோட்பாடுகள் நமக்கு அவசியம்

    * இறப்பை பற்றிய பயம் இருக்கக் கூடாது. இருந்தால் நாம் வாழும் காலமும் இறந்தது போல்தான்.

    * நமது ஒவ்வொரு நாள் வாழ்வும் நமக்கு போனஸ்தான்

    * தடைகள் பாதையில் இயல்புதான்

    * வாழும் போதே நம் வாழ்நாள் குறுகியது என்பதனை உணர்ந்து நேரம் வீணடிக்காமல் வாழ வேண்டும்

    * எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையில் அமைகின்றது

    * இல்லாத ஒன்றுக்காக ஏங்கி தவிக்க கூடாது

    * நம்பிக்கை வாழ்வில் ஒளியேற்றம் ஒன்று. எதனையும் ஆராய்ந்து பிறகு நம்புங்கள்

    * ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். 40 வயதில் படித்தவரும் சரி படிக்காதவரும் சரி உழைப்பு, சம்பாத்தியம், குடும்ப பொறுப்பு என்று இருக்கின்றனர்.

    * 50 வயதில் அனைவருக்கும் முக சுருக்கம் வரத்தான் வரும்.

    * 60 வயதில் ஓய்வு பெற்ற பின் அவர் உயர் அதிகாரியினை நிமிர்ந்து பார்ப்பதில்லை.

    -இதெல்லாம் வாழ்வின் யதார்த்தம் தானே!

    • சொற்களால் காயப்படுத்திய செயலுக்கு மன்னிப்பே கிடையாது என்றுதான் பொருள்.
    • மன்னிப்புக் கேட்பதால் கேட்பவர் தாழ்ந்தவர் என்றோ மன்னிப்பு வழங்குவதால் வழங்குபவர் உயர்ந்த மனிதர் என்றோ அர்த்தமில்லை.

    'தவறு செய்துவிட்டால், மன்னிப்புக் கேட்பது மனிதனின் குணம்! மன்னிப்பது மாமனிதனின் குணம்!' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடைய அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    உலக மனிதர் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் கோபமின்றி, ஒருவருக்கொருவர் பரபரப்பும் பதற்றமுமின்றி, ஒருவரையொருவர் குறைப்பட்டுக் கொள்ளாமலும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமலும் நிம்மதியாகவும் அமைதியாகவும் அன்பு மயமாகவும் வாழ்வதற்கு அடிப்படை மூலமந்திரமாகத் திகழ்வது 'மன்னிப்பு' என்கிற செயல்மட்டுமே ஆகும்.

    'மன்னிப்பு' என்பது ஒருவர் மீது உருவாகும் தேவையற்ற கசப்புணர்வுகளுக்கும், தேவையற்ற எரிச்சலுக்கும் கோபத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது. நாம் செய்யும் ஒரு செயலாலோ அல்லது நாம் சொல்லும் ஒரு சொல்லாலோ அடுத்தவர் துன்பப்பட நேரிடும் என்கிற நிலை வந்துவிட்டால் அங்கே மன்னிப்புக் கேட்பது அவசியமாகிறது.

    மன்னிப்புக் கேட்பதன்மூலம் காயப்படுத்தியவர் வேண்டுமானால் சமாதானம் அடையலாம்; ஆனால் காயப்பட்டவர், காயப்படுத்தியவர் கேட்ட மன்னிப்பை வழங்கினாலும் வழங்காவிட்டாலும் அந்த ரணம் ஆறி மறைவதற்குப் பல காலம் ஆகலாம். அதிலும் செயலால் காயப்படுத்தியதைவிடச், சொல்லால் காயப்படுத்தினால் அந்தப் புண் ஆறவே ஆறாது என்கிறார் திருவள்ளுவர்.

    "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

    நாவினாற் சுட்ட வடு"

    அப்படிப் பார்க்கும்போது சொற்களால் காயப்படுத்திய செயலுக்கு மன்னிப்பே கிடையாது என்றுதான் பொருள். ஆயினும் அத்தருணங்களிலும் மன்னித்து மறக்கின்ற பெருமைக்குரிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    மன்னிப்புக் கேட்பதால் கேட்பவர் தாழ்ந்தவர் என்றோ மன்னிப்பு வழங்குவதால் வழங்குபவர் உயர்ந்த மனிதர் என்றோ அர்த்தமில்லை. வீணான பழிவாங்கும் எண்ணம், வீணான மனக்கசப்பு, இருபக்கமும் உருவாகி வளரும் அமைதியற்ற மனப்போக்கு, இவற்றால் வளரும் எதிர்மறை எண்ணங்கள் இவையனைத்தும் மன்னிப்பு என்கிற சொல்லிலும் செயலிலும் மாயமாகிப் போகின்றன.

    சுந்தர ஆவுடையப்பன்

     

    இப்போதெல்லாம் அறிமுகம் இல்லாத மனிதரிடம் அறிமுகம் ஆகும்போதே, 'தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்! அந்த இடத்திற்கு எப்படிப் போகவேண்டும்?" என்றுதான் உரையாடலைத் தொடங்குகிறார்கள். பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பினாலும்கூட, ' மன்னித்துக் கொள்ளுங்கள்! உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?' என்றுதான் பேச்சை ஆரம்பிக்கிறார்கள். வழி சொல்வதும் பெயர் சொல்வதும் அவருக்குச் சங்கடமாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தொந்தரவிற்கு முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுவிடுகிற புதுமையான பழக்கம் இது.

    தவறு செய்துவிட்டுக், கைதாகி விடுவோமோ என்கிற எதிர்பார்ப்பில் 'முன் ஜாமீன்' வாங்கி வைப்பதைப் போல 'எக்ஸ்கியூஸ் மீ' என்கிற மன்னிப்புக் கேட்கிற ஆங்கிலச் சொல்லை முன்கூட்டியே போட்டு எந்தப் பேச்சையும் தொடங்குகிற முறை. இதுவும் ஒரு நாகரீக முறைதான்; ஆனாலும் பல நேரங்களில் இது அபத்தப் பயன்பாடாகவும் போய் விடுகிறது. கோபப்படும்போதும், எரிச்சலடையும் போதும், ஆச்சரியப்படும்போதும், கெஞ்சிக் கேட்கும்போதும்கூட 'எக்ஸ்க்யூஸ் மீ" என்பதை உண்மை அர்த்தமில்லாமல், சூழலுக்கேற்ற உணர்ச்சிப் பெருக்குடன் பயன்படுத்தும் போது நகைப்புக்கு இடமாகி விடுகிறது.

    பேருந்து நடத்துநரிடம், மீதிச் சில்லரையைப் பல தடவை கேட்டபிறகு, எத்தனை முறைதான் கேட்பது? 'ஹலோ! எக்ஸ்கியூஸ் மீ' என எரிச்சலோடு கேட்கும்போதும், வரிசையில் வராமல் முந்திச் செல்ல முயல்பவரை, 'ஹலோ! எக்ஸ்கியூஸ் மீ' என்று எச்சரிக்கும் தொனியில் ஆள்காட்டி விரலைக்காட்டி, வரிசையில் வரச் சொல்லும்போதும், 'ஹலோ! எக்ஸ்கியூஸ் மீ'! டீ சாப்பிடப் பத்துரூபாய் கிடைக்குமா?' எனப் பிச்சை எடுக்கும்போதும், அர்த்தங்கள் மன்னிப்புக் கேட்கும் தொனியைத் தாண்டி, மற்ற பிற உணர்வுகளைப் பீறிட வைத்து விடுகின்றன.

    மனிதர் யாரும் இவ்வுலகில் தனியர் இல்லை. அவர்கள் இந்த உலகில் தோன்றி வாழத் தொடங்கிய உடனே சமூக மனிதர் ஆகிவிடுகின்றனர். மனிதர்கள் எந்த வகையிலாவது சக மனிதர்களைச் சார்ந்து, அல்லது இயற்கையோடு இயைந்து, கொண்டும் கொடுத்தும் வாழவேண்டிய கட்டாயம். அப்படியானால் வாழ்க்கையின் போக்கில், பலதிறப்பட்ட மனிதர்களைச் சந்திக்கவும், அவர்களோடு இணைந்தோ அல்லது மாறுபட்டோ வாழவும் வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. வாழ்க்கையும் எந்த நேரமும் இன்பமயமானதாகவே அமைந்து விடுவதில்லை; அழவும் சிரிக்கவும் இரக்கப்படவும், அச்சப்படவும், ஆச்சரியப்படவும், கோபப்படவும், சந்தோஷப்படவும் எனப் பல்வேறு உணர்ச்சிநிலைகளை அழுந்தி அனுபவிக்க வேண்டிய தருணங்களும் அவ்வப்போது ஏற்படும்.

    மனிதனுக்கு எப்போதும் சகமனிதர்களால் உதவிமட்டுமே கிடைப்பதில்லை; அவ்வப்போது உபத்திரவங்களும் தாராளமாகவே கிடைக்கக் கூடும் . அந்த உபத்திரவங்களை உருவாக்கியவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்பதும், பாதிக்கப்பட்டவர்கள் பெரிய மனது வைத்து மன்னித்துவிடுவதும், இரு தரப்பினருக்குமே நீண்ட மன அமைதியையும் நிம்மதியையும் உருவாக்கும். பிளவுபட இருந்த உறவு அல்லது நட்புச் சங்கிலி அறுபடாமல் நிலைத்திருக்கும்.

    நம்மைச் சார்ந்திருக்கும் ஒருவர் நம்மால் கடுகளவுத் தொந்தரவுக்கும் ஆளாகக் கூடாது என்று நினைப்பது சரியான உறவுநேயம்; அதே நேரத்தில், நம்மைச் சார்ந்தவராக இல்லாவிட்டாலும், நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு உயிரினமும் நம்மால் எந்தவிதத் துன்பத்திற்கும் ஆளாகிவிடக் கூடாது என நடந்துகொள்வது ஆழ்ந்த மனித நேயம். 'மன்னிப்பு' என்னும் மாபெரும் கோட்பாடுதான் இந்த ஆழ்ந்திருக்கும் மனித நேயத்தை பூமியில் வெளிக்கொணரும் மகத்தான வேலையை மாண்புடன் செய்கிறது.

    ஒரு சீடர், தன்னுடைய குருநாதரின் ஆசிரமத்திலிருக்கும் குருநாதர் அறைக்குள் வெகு கோபமாகவும் வெகு பதற்றமாகவும் உள்ளே நுழைந்தார்; மின்னல் வேகம்! இடி வேகம்! என்பார்களே, அறைக்குள் நுழையும்போதே காலில் அணிந்திருந்த செருப்புகளை வடக்கும் தெற்குமாகக் காலால் விசிறியெறிந்தார்; கதவுகளைப் படாரெனத் திறந்து படீரென மூடிவிட்டு உள்ளே வந்தார். உள்ளே அறையில் அமைதியாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குருநாதர் சீடரை அருகே அழைத்து, "ஏனிந்தப் பதற்றம்? ஏனிந்தக் கோபம்?" என்று கேட்டார். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை குருநாதரே!" என்றார் சீடர்.

    "அப்படியானால், முதலில் அறைக்கு வெளியே சென்று, திசைக்கு ஒன்றாக நீ கழற்றியெறிந்த செருப்புகளை ஒன்றாகச் சேர்த்து எடுத்துவந்து என் கண்முன்னே ஜோடியாக வைத்து அவற்றிடம் மன்னிப்புக்கேள்!" என்றார் ."செருப்பிடம் மன்னிப்பா?" ஆச்சரியமாகக் கேட்டார் சீடர். "ஆம்!. முதலில் செருப்பிடம்!, அடுத்து நீ படாரெனத் திறந்து படீரென மூடிவிட்டு வந்தாயே கதவுகள்! அவற்றிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார் குருநாதர்.

    "செருப்புக்கும் கதவுக்கும் உயிரில்லையே! உயிரற்ற ஜடப்பொருள்களிடமா மன்னிப்புக் கேட்பது?; நான் மன்னிப்புக் கேட்பதால் அவற்றிற்கு என்ன நன்மை வந்துவிடப் போகிறது?" கேட்டார் சீடர். இனிமேல் எதிர்க்கேள்வி தேவையில்லை; குருநாதர் நான் சொல்வதை முதலில் செய்!" ஆணையிட்டார் குருநாதர். மிகுந்த பணிவோடு, தன்னுடைய செருப்பிடமும், தான் தள்ளிவிட்டு வந்த கதவிடமும் மன்னிப்புக் கேட்டார் சீடர். மன்னிப்புக் கேட்டுவிட்டு குருநாதரைப் பார்த்தார்.

    " இப்போது எப்படி இருக்கிறது?" கேட்டார் குருநாதர். "மனம் பாரம் குறைந்ததுபோல இலகுவாக இருக்கிறது குருநாதா!" என்று அமைதியாகப் பதிலிறுத்தார் சீடர். "உயிரற்ற பொருள்களிடம் மன்னிப்புக் கேட்கும்போதே மனம் இலேசாக இருக்கிறதே! இந்த மன்னிப்புக் கேட்கும் மகத்துவ குணத்தை மனிதர்களிடம் பயன்படுத்திப் பார்த்தால் மனித குலம் எவ்வளவு மகிழ்ச்சி மயமானதாக இருக்கும்?" என்று கேட்டுவிட்டு குருநாதர் சொன்னார், செருப்பு, குடை மற்றும் கதவு போன்ற வீட்டுப் பொருள்கள் நமக்கு உதவுகின்ற நண்பர்களைப் போன்றவர்கள்; அவற்றிடமும் அன்பின் கனிவோடு நாம் நடந்துகொண்டால், அவையும் நம்மிடம் அந்நியோன்யமாய் நீண்டநாள் வாழ்ந்து நம்மிடம் ஒத்துழைக்கும்; அவற்றிற்கு உயிர் இருக்கிறதோ இல்லையோ நாம் பயன்படுத்துவதால் நம்மைச் சார்ந்த உணர்வு கட்டயம் இருக்கும்!" என்றார்.

    "பிறர் வாடச் செயல்கள் பலபுரிந்து!" சில வேடிக்கை மனிதர்கள் இந்த உலகில் வாழ்வதாக மகாகவி பாரதி குறிப்பிடுவான். தாம் வாழவேண்டும் என்பதற்காக, அடுத்தவர் வாடச் செயல்கள் செய்வது தவறுதானே!; அப்படிச் செய்வதற்குத் தயங்கவேண்டும்; மீறிச் செய்துவிட்டாலும் நிகழ்ந்து விட்டதற்காக வருந்தி மன்னிப்பும் கேட்க வேண்டும். உலக வாழ்வில் மனிதர்முன் இருக்கின்ற பெரிய சவால், சகமனிதர்களால் அன்றாடம் உண்டாகின்ற வருத்தங்களையும், எரிச்சல்களையும் சமாளித்து எவ்வாறு இனிமையுடனும் அமைதியுடனும் வாழ்வது என்பதே!.

    சாலையில் நாம் நடந்து செல்லும்போதோ அல்லது நாமும் வாகனம் ஓட்டிச் செல்லும்போதோ, இடைவிடாது ஒலியெழுப்பிக் கொண்டே நம்மை எரிச்சலுக்கு ஆளாக்கி, அந்தக் குரூரச் செயலிலும் ஒருவித மகிழ்ச்சித் திருப்தியோடு சிரித்துக்கொண்டே முந்திச்செல்லும் வாகன ஓட்டுயை வாய்க்கு வந்தபடி திட்டுவீர்களா? அல்லது நீங்களும் ஒலியெழுப்பி அவனை முந்திச்சென்று எரிச்சலுக்கு உள்ளாக்குவீர்களா? அல்லது சாலைக்கு வந்துவிட்டால் இதுவெல்லாம் சாதாரணம் என்று ஒரு புன்முறுவலோடு கடந்து போய் விடுவீர்களா?. முதலிரண்டு செயல்களால் பாதிப்படையப் போவது நமது மனமும் உடலும்தான்; எனவே அந்த ஒலியிரைச்சல் ஆசாமிமீது நீங்களாகவே ஒரு வழக்கை உருவாக்கி, அவருடைய செயலுக்கு அவர் கேட்காமலேயே ஒரு மன்னிப்பையும் நீங்களே வழங்கி, அமைதிப் புன்னகையோடு கடந்துவிடுவதே ஆகச் சிறந்த செயலாகும். இந்த உலகம் மன்னிப்புக் கேட்கிறவர்களைவிட மன்னிப்பு வழங்குகிறவர்களாலேயே அமைதி நந்தவனமாகத் திகழ்கிறது.

    மன்னிப்பு என்னும் மனப் பக்குவத்தை ஒவ்வொரு மனிதரும் தனது வீட்டிலிருந்தே பழகக் கற்றுக் கொள்ளவேண்டும். வீடாயினும் நாடாயினும் தவறு செய்வது மனித இயல்பு. தெரிந்து செய்வதல்ல தவறு; தவறுதலாக நிகழ்வதே தவறு. அது வீட்டில் நிகழும்போது, உறவு என்கிற உரிமையின் அடிப்படையில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்பவும், மன்னிக்கவும் செய்யவேண்டும். வீட்டில் மன்னிக்கவும் மன்னிப்புக் கேட்கவும் உறவு என்கிற உரிமை காரணமாக அமைவது போல, சமூகத்தில் சக மனிதம் என்கிற மனித நேய உரிமை அடிப்படையில் அது நிகழ்ந்தால் அமைதி கொடிகட்டிப் பறக்கும். மாண்புக்குரிய மனித நேயத்தைச் சற்று, சகல ஜீவராசிகளுக்கான உயிர்நேயமாக, சகல பொருள்களுக்குமான உலக நேயமாக விரிவு செய்தால், மன்னிப்புக் கேட்பதும் மன்னிப்பதும் தன்னிகரற்ற குணமாக உலகில் செழிக்கும்.

    தொடர்புக்கு - 9443190098

    • வலிப்பு என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல.
    • நம் மூளையில் பல பகுதிகள் உள்ளன.

    காக்காய் வலிப்பு என்று நாம் கூறும் இந்த வலிப்புக்கும் காக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கை, கால், வெட்டி, வெட்டி இழுப்பதை, கைகால் வலிப்பு என்று கூறப்பட்ட சொல் தான் நாளடைவில், காக்காய் வலிப்பாக மாறி விட்டது.

    வலிப்பு என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. இது உண்மையில் மூளை மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்படுகின்ற நோய்களின் தாக்கத்தினால், ஏற்படும் பாதிப்புதான். மூளையில் எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது என்பதை பொறுத்து அறிகுறிகள் மாறுபடுகின்றன.

    மூளையின் எந்தப்பகுதி பாதிப்பதால் வலிப்பு வருகிறது?

    நம் மூளையில் பல பகுதிகள் உள்ளன. அதில் பெருமூளை பாதிப்பதால் வலிப்பு வருகிறது. இதில் ப்ரான்டல், பரைட்டல், டெம்போரல், ஆக்சிபிட்டல் என்று நான்கு பகுதிகள் உள்ளன. மூளையின் ஒரு சில பகுதிகளில் வலிப்பைத் தூண்டக்கூடிய நியூரான்கள் உள்ளன. அதாவது, இந்தப் பகுதியிலுள்ள நியூரான்கள் பாதிக்கப்படும் போது வலிப்பு அதிகமாக வருகிறது.

    உதாரணத்திற்கு, டெம்போரல் பகுதியில் பாதிப்பு ஏற்படும் போது வலிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் குறிப்பாக, ஹிப்போகாம்பஸ் என்னும் பகுதியிலிருந்து வலிப்பு வரும் போது, அதை மாத்திரைகளால் கட்டுப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறு குறைவாக உள்ளது.

    இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பெருமூளையில் பாதிப்பு ஏற்பட்டால் வலிப்பு வரும் என்பதும், அதிலும், டெம்போரல் பகுதியில் பாதிப்பு ஏற்படும் போது, வலிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்பதுதான். இந்த நான்கு மடல்களும் பாதிக்கப்படும் போது என்ன மாதிரியான அறிகுறிகள் வருகிறது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

    ப்ராண்டல் என்னும் மூளையின் முன்மடல் பாதிக்கப்படுவதால் வரும் வலிப்பு

    ப்ராண்டல் எனப்படும் மூளையின் முன்மடல், நமது நெற்றி இருக்கும் இடத்திற்குப் பின்னால் அமைந்துள்ளது. இந்தப்பகுதி உடலின் அசைவுகள் உட்பட பல இயக்கங்களுக்கு, பேச்சு, அறிவுத்திறன், பகுத்தறிவுத்திறன் மற்றும் ஒருவரின் தனித்தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த மூளையின் முன்மடல் பாதிக்கப்படுவதால் வலிப்பு வருவதை ப்ராண்டல் லோப் எபிலெப்சி என்கிறோம். இதன் அறிகுறிகள் சற்று வேறுபட்டவையாக இருக்கிறது. இவ்வகை வலிப்பின் அறிகுறிகள் இரவில் மட்டுமே சிறிது நேரம் வரக்கூடிய வலிப்பு. கண்கள் மட்டும் ஒரு புறமாகப் போகும் தன்மையுடன் வரும் வலிப்பு. பேசுவதில் சிரமம் மற்றும் சுயநினைவின்மை. அதிக ஓசையுடனான சிரிப்பு அல்லது கத்துவது.

    மீண்டும் மீண்டும் சொல்வதையே சொல்வது அல்லது செய்வது. இயல்பு பிரண்ட தோரணைகள். அடிப்பது போன்று அல்லது போராடும் தன்மையுடைய கை, கால் அசைவுகள். படுக்கையில் சிறுநீர் கழித்தல். தற்காலிக ஞாபகமறதி. குழப்பமடைந்தவர்கள் போலவோ, தொலைந்து போனவர்கள் போலவோ காணப்படுதல். இவ்வகை வலிப்பைக் கண்டறிவது சிறிது சிரமமான விஷயம் தான். ஏனென்றால் மனரீதியான சிக்கல்கள் மற்றும் தூக்கமின்மைக் கோளாறுகள் என்று தவறாகக் கணிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

    பரைட்டல் என்னும் மூளைமடல் பகுதி பாதிக்கப்படுவதால் வரும் வலிப்பு

    மூளையின் மையப்பகுதியில் பரைட்டல் என்னும் மூளையின் மடல் அமைந்துள்ளது. தொடுதல், வலி மற்றும் வெளியிடம் குறித்த தகவல்களைப் பெற்று மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பி ஒருங்கிணைக்கச் செய்கிறது. இந்தப் பகுதி பாதிக்கும் போது ஏற்படும் வலிப்பிற்கான அறிகுறிகள் பின்வருமாறு,

    தொடுஉணர்வில் மாற்றங்கள் (அதாவது மரத்துப் போகும் தன்மை, எரிச்சல் மற்றும் மின்பாய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு), உடல் பலவீனம், தலைசுற்றல், மாயத்தோற்றங்கள் பார்ப்பது போலும், கேட்பது போலும் தோன்றுவது, சிதைந்த தெளிவற்ற வார்த்தைகள் வெளிவருதல், பேச்சிழந்து போகுதல், தன்னியக்கவாதிகளாகத் தோன்றுதல் (அதாவது யார் சொல்வதையும் காதில் வாங்காமல் தன்னிச்சையாக இயங்குவது).

    டெம்போரல் என்னும் மூளைமடல் பகுதி பாதிக்கப்படுவதால் வரும் வலிப்பு

    இந்த மடல் தலையினுள் காதுப்பகுதியின் உள்புறம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் ஹிப்போகாம்பஸ் எனப்படும் ஞாபகத்திறனுக்கான பகுதி அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் வலிப்பைத் தூண்டிவிடும் இயல்பு அதிகமாக உள்ளது. இந்தப் பகுதி பாதிக்கப்படுவதால் வரும் வலிப்பின் அறிகுறிகள் பின்வருமாறு, வயிற்றுப் பகுதி அல்லது இருதயப்பகுதியில் அசௌகரியமான உணர்வுகள் ஏற்படலாம். வலிப்பு வருவதற்கு முன் ஒருவித வாசனை, சுவை, சப்தம், பார்வையில் மாற்றம் அல்லது உணர்வில் மாற்றங்கள் ஏற்படலாம். முறைத்துப் பார்ப்பது, நாக்கைக் கடித்துக் கொள்வது மற்றும் கைகளைத் தேய்த்துக் கொள்வது மற்றும் சுயநினைவின்மை ஏற்படலாம்.

    தேவையற்ற வாய், கைகால் மற்றும் அங்க அசைவுகள் அல்லது தன்னிச்சையான அங்கஅசைவுகள் ஏற்படக்கூடும்.

    வலிப்பின் ஆரம்ப நிலையில், தனக்குள் ஏற்படும் மாற்றங்களைச் சிலநேரங்களில் உணரமுடியும். பிறகு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போய்விடலாம்.

    மரு.அ.வேணி

     

    ஆக்சிப்பிட்டல் என்னும் மூளை பின்மடல் பகுதி பாதிக்கப்படுவதால் வரும் வலிப்பு

    இது தலையின் பிடரிப்பகுதிக்குப் பின்புறம் உள்ளது. இது நம் பார்வையுடன் தொடர்புடையது. இப்பகுதியில் தோன்றும் வலிப்பு, பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதன் அறிகுறிகள் பின்வருமாறு,

    தேவையற்ற கண் அசைவுகள், காதுகளில் இரைச்சல், தலைச்சுற்றல், கண் பார்வை விலகிக் காணப்படுதல், வாந்தி, கண் இமை துடிப்பு

    கண்களை இறுக மூடிக்கொள்ளுதல், உருவம் பெரிதாக அல்லது இரட்டையாக அல்லது அதற்கும் மேலாக தெரிதல், வண்ண வண்ண பிம்பங்கள் வந்து வந்து செல்வது, ஒரு உருவம் பாதியாக வெட்டுப்பட்டது போல் அல்லது முழுமையாகத் தெரியாமல் பாதி தெரிவது, கண் ஒரு பக்கமாகத் திரும்பிப் வெறித்துப் பார்ப்பது.

    என்ன கொடுமை இது? என்று தானே சிந்திக்கிறீர்கள். இவை அனைத்துமே வலிப்பு நோயின் அறிகுறிகளே. வலிப்பு நோயாளிகள் வலிப்பு ஏற்பட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மிகவும் நன்றாக இருப்பர். எனவே மருத்துவ கவனிப்புக்கு உடனே அழைத்து வருவதில்லை. 4 அல்லது 5 முறை வலிப்பு வந்து விட்ட பின்னரே, மருத்துவ கவனிப்புக்கு அழைத்து வருகிறார்கள். இது மிகவும் தவறான செயல். ஒரு வலிப்பானது அடுத்த வலிப்பை வரவழைக்கக் கூடியது. எனவே, அறிகுறி தென்பட்டவுடன் மூளை நரம்பியல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    செல்: 75980-01010, 80564-01010

    • சுக்கிர மேட்டில் ஒரே ஒரு கோடு மட்டும் காணப்பட்டால் அவர்களுக்கு உலக வாழ்வில் மட்டுமே பிடிப்பு அதிகம் இருக்கும்.
    • அதுவே சுக்கிர மேட்டில் பல கோடுகள் காணப்பட்டால் அந்தநபர்களுக்கு எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு இருக்கும்

    சென்ற வாரம் புதன்மேடு ரேகைகளும் அவற்றில் இருக்கும் குறிகளை பற்றியும் பார்த்தோம். இன்று சுக்கிர மேடு ரேகை குறியீடுகளை பற்றி பார்க்க போகிறோம்...

    சுக்கிர மேடும் ரேகை குறியீடுகளும்: கட்டை விரலுக்கு கீழே ஆயுள் ரேகையை ஒட்டி உள்ள பகுதி தான் சுக்கிர மேடு ஆகும். ஒருவர் வாழ்வில் அவர் அடையும் மகிழ்ச்சி, திருமண வாழ்க்கையில் அவர் அடையும் சந்தோஷங்கள், அவருக்கு கிடைக்கும் காதல் அனுபவங்கள் என இவை அனைத்தையும் விளக்கும் பகுதி தான் இந்த சுக்கிர மேடு. இதில் உள்ள குறியீடுகளும் அவை தொடர்பான பலன்களையும் தான் தற்போது நாம் காண இருக்கிறோம்.

    சுக்கிர மேட்டில் உள்ள குறியீடுகள் சொல்லும் பலன்கள் வருமாறு:-

    சுக்கிர மேட்டில் ஒரே ஒரு கோடு மட்டும் காணப்பட்டால் அவர்களுக்கு உலக வாழ்வில் மட்டுமே பிடிப்பு அதிகம் இருக்கும். அதிக காமம் காணப்படும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கத்துடன் இருப்பார்கள். வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்று நன்கு சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிக்கும் திறமையை வளர்த்துக் கொள்வார்கள். உறவுகளை விட பணத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். இதனால் உறவுகளை இழக்க நேரிடலாம். அதனால் அந்த குணத்தை மட்டும் மாற்றிக் கொள்வது நல்லது.

    அதுவே சுக்கிர மேட்டில் பல கோடுகள் காணப்பட்டால் அந்தநபர்களுக்கு எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு இருக்கும். உலக விஷயங்கள் அனைத்தையும் அறிந்து வைத்து இருப்பார்கள். முற்கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கையில் நல்ல செல்வ செழிப்புடன் இருப்பார்கள்.

    சுக்கிர மேட்டில் குறுக்கும், நெடுக்குமாக பல கோடுகள் காணப்பட்டால் அன்பு மற்றும் காதலில் எதிர்பாராத தோல்வியை அவர்கள் சந்திக்க நேரிடும். காதல் விவகாரங்களில் ஈடுபடாமல் இருந்தாலே அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். செய்யும் வேலையில் கண்டிப்பும் கறாறும் நிறைந்து இருக்கும். நல்ல உழைப்பாளிகளாக சிறந்து விளங்குவார்கள்.

     

    சுக்கிர மேட்டில் கரும் புள்ளி காணப்பட்டால் வீடு வாங்கும் யோகம் தாமதப்படும். அதிக பொருளாதார பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாவார்கள். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு உடல் நல பாதிப்பும் கூட ஏற்பட இடம் உண்டு. சுக்கிர மேட்டில் நட்சத்திரம் காணப்பட்டால் அவர்களுக்கு அந்த அமைப்பு அதிக பொருள் நஷ்டத்தை தரும். அதிக மனக் கஷ்டத்தை ஏற்படுத்தும். பிறருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்தல் நலம். பேச்சில் அதிக கவனம் தேவை. பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மேற்கண்ட இவற்றில் மட்டும் கவனமாக இருந்து விட்டீர்கள் என்றால் மற்றபடி அனைத்து விதத்திலும் நன்மையை அடைவீர்கள். பிற்காலத்தில் பொருளாதார வசதி நல்ல படியாக மேம்படும்.

    சுக்கிர மேட்டில் சதுரம் காணப்பட்டால் எந்த சமயத்திலும் தன்னிலையை இழக்க மாட்டார்கள். இதனால் குற்றம் புரியும் எண்ணத்தில் இருந்து காக்கப்படுவார்கள். அதிகம் உணர்வு பூர்வமாக யோசிப்பவர்கள். சத்திய வாக்கை கொண்டு இருப்பார்கள். இதனால் அவர்கள் சொல்வது பலிக்கலாம். அதனால் சாபம் தரும் வார்த்தைகளை பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது. கூர்மையான புத்தியையும், தரும சிந்தனையையும் கொண்டு இருப்பார்கள். சொத்துக்களை விருத்தி செய்யும் குணத்துடன் இருப்பார்கள்.

    சுக்கிர மேட்டில் பெருக்கல் குறி காணப்பட்டால் அவர்களுக்கு ஆசை, பற்று, காதல் ஆகியவற்றில் தோல்வி ஏற்படும். எதிர்பாராத வகையில் பொருள் ஈட்டி வாழ்வில் வளர்ச்சி பெறுவார்கள். வாழ்வின் பிற்பகுதியில் நிலம், வீடு என அனைத்து வித சொத்துக்களுடன் இருப்பார்கள். சொந்தங்களுடன் கூடி வாழும் பாக்கியம் உண்டு.

    சுக்கிர மேட்டில் வட்டம் காணப்பட்டால் எதிர்பாராத விபத்துக்கள் அவர்கள் வாழ்வில் ஏற்பட இடம் உண்டு. அதனால் வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் கவனமுடன் சென்று வருதல் வேண்டும். சதா ஊர் சுற்றும் குணம் இருக்கலாம். வரவுக்கு மேல் செலவு செய்யும் குணம் இருக்கலாம். இவற்றை தவிர்த்தால் வாழ்வில் வெற்றி அடைவீர்கள்.

    சுக்கிர மேட்டில் வலை போன்ற அமைப்பு காணப்பட்டால் ஆரோக்கியம் பாதிக்கும், அடிக்கடி மருத்துவ செலவுகள் தரும். மன அழுத்தம் கூட சற்று அதிகம் காணப்படும். மனம் மிகவும் சஞ்சலம் அடைந்து கொண்டே இருக்கும். பேச்சினால் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளலாம். அதனால் யோசித்து பேசுவது நல்லது. வாழ்க்கையில் வரவும், செலவும் உடனுக்குடன் நேரிடலாம். உடன் பிறந்தவர்களுடன் அதிக கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தாராள மனது உடையவர்களாக இருப்பீர்கள். இதனால் அதிகம் ஏமாற்றப்படலாம். எதிலும் சிந்த்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி!

    சுக்கிர மேட்டில் முக்கோணம் காணப்பட்டால் அவர்களுக்கு மிக அதிகமான பாலியல் தொடர்புகள் ஏற்படும்.

    உங்களை சுற்றி எதிரிகள், விரோதிகள், அவதூறு பேசுபவர்கள் அதிகம் இருக்கலாம். குடும்பம் அடிக்கடி இடமாற்றத்தை சந்திக்கும்படியாக இருக்கும். வாழ்வில் அலைச்சல் அதிகம் இருக்கும். திறமைகள் இருந்தும் கூட அவை வெளியில் வராமலே போகலாம். அதனால் உங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்.

    சுக்கிர மேட்டில் சூரியனின் சின்னம் காணப்பட்டால் உண்மையாக பிறரை நேசிப்பார்கள். காதல் உணர்வு அவர்களிடம் அதிகம் காணப்படும். மனதார அன்பையும் பாசத்தையும் காட்டத் தெரிந்தவர்கள். வருமானத்தை விட செலவு அதிகம் இருக்கும். தாயார் வழியில் விரோதங்கள் ஏற்பட இடம் உண்டு. எதிர்காலத்தில் ஞாபக சக்தி குறைய வாய்ப்பு உண்டு என்பதால் இப்போதில் இருந்தே அதனை நீங்கள் மேம்படுத்திக் கொள்வது நல்லது.

    சுக்கிர மேட்டில் சந்திரனின் சின்னம் காணப்பட்டால் சரீர சுகங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். நல்ல சுகவாசியாக இருப்பார்கள். ஆனாலும் கூட, சில சருமப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மனைவியினால் சில தொல்லைகள் ஏற்பட இடம் உண்டு.

    அ.ச.இராமராஜன்

     

    சுக்கிர மேட்டில் செவ்வாயின் சின்னம் காணப்பட்டால் ஆசைகள் நியாயம் இல்லாமல் இருக்கும். அதிக ஆசைகளுடன் அவற்றை எல்லாம் எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணங்களுடன் இருப்பார்கள். உங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில் படித்த அறிவாளிகளின் சமூகத்தில் பிரசித்தி பெற்று புகழுடன் இருப்பார்கள். சுக்கிரன் மேட்டில் புதன் சின்னம் இருந்தால் பணம் சம்பாதிப்பதில் அதிக நாட்டம் இருக்கும். உறவுகளை விட செல்வத்தை அதிகம் சேர்ப்பார்கள். நோக்கத்தில் வெற்றியும் அடைவார்கள்.

    சுக்கிரன் மேட்டில் குருவின் சின்னம் காணப்பட்டால் புகழ் மீது ஆசை அதிகம் இருக்கும். புகழுக்காக எதையும் செய்வார்கள். எதிர்காலத்தில் மாளிகை போன்ற வீட்டில் வாசம் செய்யும் பாக்கியம் கிடைக்கப்பெறும். குடும்பத்தை நன்றாக போஷிக்கும் குணம் இருக்கும். பிறர் உங்களின் வாக்கிற்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். பேச்சில் மட்டும் எப்போதும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுக்கிர மேட்டில் சுக்கிரனின் சின்னம் காணப்பட்டால் அவர்கள் அதிக சுயநலம் கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஆசைகள் அனைத்தும் தங்கள் தனிப்பட்ட தேவைகளை பற்றியே சிந்திக்கும்.

    பிறரை பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். வாழ்வில் எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்தால் அநேக நன்மைகளை பெறலாம்.

    அயர்ச்சியை பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள். எதிர்காலத்தில் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுடன் இருப்பார்கள்.

    சுக்கிர மேட்டில் சனியின் சின்னம் காணப்பட்டால் பொறாமை குணம் அதிகம் இருக்கும், பிடிவாத குணம் அதிகம் காணப்படும். விருப்பு - வெறுப்புகளுடன் பிறரிடம் சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற் போல பழகுவார்கள். வாழ்க்கையில் சோதனைகள் பல வந்தாலும் கூட அவற்றை எல்லாம் கடந்து வெற்றி பெறுவார்கள். எனினும் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நன்மைகளை கோபத்தால் நீங்களே கெடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆயுள் தீர்க்கம் உண்டு. பிற்காலத்தில் நிறைய தனம் சம்பாதிப்பார்கள்.

    சுக்கிர மேட்டில் ராகுவின் சின்னம் காணப்பட்டால் விரும்பியதை எப்படியாது அடைந்து விட வேண்டும் என்ற பிடிவாத குணம் இருக்கும். தந்தை வழி பூர்வீக சொத்துக்களை இழக்கலாம், சொந்தங்கள், நண்பர்கள் கூட பல சமயங்களில் அவிப்பிராய பேதத்துடன் நடந்து கொள்ளலாம். எனினும் மேற்கண்ட இவற்றை எல்லாம் கடந்து நீங்கள் அநேக விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்காலத்தில் பிறர் பொறாமைப்படும் அளவிற்கு செல்வ செழிப்புடன் இருப்பீர்கள்.

    சுக்கிர மேட்டில் கேதுவின் சின்னம் காணப்பட்டால் அவர்களிடம் தந்திரமும், சாமர்த்தியமும் நிறைந்து காணப்படும். வாழ்வில் அநேக விஷயங்களில் போராடி வெற்றி பெறுவார்கள். எதிரிகளை வெல்லக் கூடிய ஆற்றலும் காணப்படும். சொத்துக்களை விருத்தி செய்யும் குணத்துடன் இருப்பார்கள். அதிகாரப் பதவி, அரசு ஆதரவு போன்ற நல்ல பலன்களை இந்த அமைப்பு பெற்றுத் தரும்.

    செல்பேசி 9965799409

    • சில வங்கிகளின் டெபிட் கார்டில் இன்சூரன்ஸ் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
    • போஸ்ட் ஆபீஸ்கள் வழங்கும் போஸ்டல் லைப் இன்சூரன்சும் குறைந்த பிரீமியத்தில் மனி பேக் திட்டங்களை வழங்குகிறது.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் நோக்கிய நம் பயணத்தில் வருமானம், முதலீடுகள் போன்றவை அதி முக்கியம் என்றாலும், அவற்றை வரவேற்கவும், கையாளவும் சில முன்னேற்பாடுகள் தேவைப்படுகின்றன என்று பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்போது நாம் பார்க்கப் போவது இன்சூரன்ஸ் - காப்பீடு.

    பங்குச் சந்தையும், மியூச்சுவல் பண்டும் நமக்கு அறிமுகமாவதற்கு முன், இதை ஒரு முதலீட்டு வழி என்று தவறாக எண்ணிக் கொண்டிருந்தோம். இதில் கிடைக்கும் 5 சதவீதம்-6 சதவீதம் வருமானம், போனஸ், அடிஷன்ஸ் போன்ற பெரிய வார்த்தைகளுடன் வந்ததாலும், இதன் ஏஜென்ட்டுகள் பொதுவாக நம் குடும்பத்தாராக அல்லது நலம்விரும்பிகளாக இருந்ததாலும் முதலீடு என்றாலே இன்சூரன்ஸ் என்றாகிவிட்டிருந்தது. ஆனால் முதலீடு என்றால் அதில் பணத்தை பன்மடங்காக்கும் மேஜிக் இருக்கவேண்டும். அது இன்சூரன்சில் இல்லை என்று அறிந்தபின்னரே காப்பீடு என்பது முதலீடு அல்ல; பாதுகாப்பு என்று நமக்குப் புரியவந்துள்ளது.

    எதிர்பாராது ஏற்படும் சில கஷ்டங்களில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாப்பதே இன்சூரன்ஸின் வேலை. வானம் பொய்த்து, மழை இல்லாவிட்டால் பயிரை எப்படிக் காப்பது என்று விவசாயி யோசிக்கிறார். ஒரு அவசர நிலை ஏற்பட்டால், எங்கே, எப்படி தரையிறங்குவது என்ற திட்டத்துடன்தான் விமானத்தை செலுத்தும் பைலட் களத்தில் இறங்குகிறார். வந்தாலும் வரலாம்; வராமலும் போகலாம் என்ற ரிஸ்க்குகள் பற்றி இவ்வளவு திட்டமிடும் நாம், கண்டிப்பாக ஒவ்வொருவர் வாழ்விலும் வந்தே தீரக்கூடிய ரிஸ்கான மரணம் பற்றி யோசித்து திட்டமிடவேண்டும்தானே? அதற்கு நமக்கு உதவுவதுதான் இன்சூரன்ஸ்.

    லைப் இன்சூரன்ஸ் / நான்-லைப் இன்சூரன்ஸ்:

    பொதுவாக இன்சூரன்ஸை லைப், நான்-லைப் என்று இரண்டாகப் பிரிப்பார்கள். குடும்பத்தின் செலவுகளுக்குப் பணம் ஈட்டும் முக்கிய நபர் உயிரிழக்கும் பட்சத்தில், அந்த வலியை இறைவனாலும் ஈடு செய்ய இயலாது. ஆனால் அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக தாழ்ந்துவிடாமல் காக்க முடியும். ஒருவர் இல்லை என்பதால் அந்தக் குடும்பம் தன் வழக்கமான செலவுகளைக் குறைக்கவோ, குறிக்கோள்களை மாற்றவோ தேவையில்லாத அளவுக்கு அந்தக் குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியும். அதைத்தான் லைப் இன்சூரன்ஸ் செய்கிறது.

    நான்-லைப் இன்சூரன்ஸை ஜெனரல் இன்சூரன்ஸ் என்போம். இது உயிர் தவிர்த்த மற்ற இழப்புகளுக்குக் காப்பீடு வழங்குகிறது. வீட்டுக்காப்பீடு, நகைக்காப்பீடு, வாகனக்காப்பீடு, விவசாயக்காப்பீடு, திருட்டு, பூகம்பம், வெள்ளம், பயங்கரவாதம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புக்கான காப்பீடு ஆகியவற்றைத் தருவது ஜெனரல் இன்சூரன்ஸ்.

    லைப் இன்சூரன்ஸ்

    நம்மில் பலருக்கும் லைப் இன்சூரன்ஸ் மிகவும் பரிச்சயமான ஒன்று. ஏனெனில் போன தலைமுறை வரை நம் குடும்பங்களில் ஒருவர் கட்டாயம் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக இருப்பார்; அவர் கூறுவது புரியாவிட்டாலும் முக தாட்சண்யத்திற்காக ஒன்றிரண்டு பாலிசி எடுத்திருப்போம். லைப் இன்சூரன்ஸில் பல வகை உண்டு.

    எண்டோமென்ட் பாலிசி

    சென்ற தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமான பாலிசி இது. ஏனெனில், முதலீடு, பாதுகாப்பு என்று நாம் விரும்பக்கூடிய இரண்டு தலையாய விஷயங்களையும் ஒன்றாக வழங்குகிறது. பாலிசி காலம் தாண்டி பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் காப்பீட்டுத் தொகையுடன் போனஸ், அடிஷன் போன்றவை சேர்க்கப்பட்டு, மொத்தமாக அவரிடமே திருப்பித் தரப்படும். இந்த மொத்தப் பணம் சொந்த வீடு, பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம், ஓய்வுக்காலம் போன்ற அவருடைய பொருளாதாரக் குறிக்கோள்களை நிறைவேற்ற உதவுகிறது. இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் காப்பீட்டுத் தொகை (Sum Assured) அவரது நாமினிக்குத் தரப்படும்.

    மனி பேக் பாலிசி

    எண்டோமென்ட் பாலிசி போலவே மனி பேக் பாலிசியும் செயல்படும். இதில் உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு குறிப்பிட்ட கால கட்டத்திலும் திரும்பத் தரப்படும். உதாரணமாக, பதினைந்து வருட மனி பேக் பாலிசியில் ஐந்து வருடத்திற்கொரு முறை மூன்றில் ஒரு பங்கு தொகையைப் பெறலாம். இதனால் இடைப்பட்ட காலங்களில் வரக்கூடிய செலவுகளுக்கும் பணம் கிடைக்கிறது. பாலிசி முடிவில் மீதித் தொகையுடன் போனஸ்களும் கிடைக்கும்.

    சுந்தரி ஜகதீசன்


     யூலிப் பாலிசி

    இதிலும் உயிருக்கான பாதுகாப்பு மற்றும் முதலீடு என்ற இரண்டு நன்மைகளும் கிடைக்கின்றன. ஆனால் ரிஸ்க் குறைந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், ரிஸ்க் நிறைந்த சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் லாபம் அதிகரிக்கிறது. மற்ற திட்டங்களில் 5 சதவீதம்-6 சதவீதம் வருமானம் கிடைத்தால் யூலிப் பாலிசியில் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை திட்டங்களைப் பொறுத்து வருமானம் கிடைக்கிறது என்பதால் இது அதிகம் விரும்பப்படுகிறது.

    ஹோல் லைப் பாலிசி

    பொதுவாக 70 வயதுக்கு மேல் லைப் இன்சூரன்ஸ் கிடைக்காத நிலையில் இந்தப் பாலிசியின் கீழ் நூறு வயது வரை நமக்கு கவரேஜ் கிடைக்கும். இதனால் நாம் ப்ரீமியம் கட்டும் காலம் வரை இன்சூரன்ஸ் பாதுகாப்பு நமக்கு இருக்கும். நூறு வயதுக்குள் நாம் எப்போது இறந்துபோக நேர்ந்தாலும், நம் குடும்பத்தாருக்கு பொருளாதார உதவி கிட்டும். உயிருக்கான இன்சூரன்சில் மிகப் பிரபலமானது டெர்ம் இன்சூரன்ஸ். மிகவும் முக்கியம் வாய்ந்த இது குறித்து அடுத்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

    நான்-லைப் இன்சூரன்ஸ் அல்லது ஜெனரல் இன்சூரன்ஸ்

    உயிருக்கான இன்சூரன்ஸ் லைப் இன்சூரன்ஸ் என்று பார்த்தோம். உடமைகளுக்கானது ஜெனரல் இன்சூரன்ஸ். வீடு/வாகனம்/ஆரோக்கியம்/ பயணம் போன்ற விஷயங்களில் இயற்கைச் சீற்றங்களாலோ, மனிதத் தவறுகளாலோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சேதாரங்களை ஈடுகட்டுவது ஜெனரல் இன்சூரன்ஸ்.

    வாகனக்காப்பீடு

    நம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் 53 வாகன விபத்துக்கள் நடக்கின்றன. அவற்றில் 19 விபத்துக்கள் உயிரிழப்பில் முடிவதாக அரசு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் திருட்டு, கலவரம் போன்றவைகளும் வாகனங்களுக்கும், அவற்றில் பயணிப்பவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை ஈடு செய்ய வாகனக் காப்பீடு உதவுகிறது.

    இதில் தேர்ட் பார்ட்டி, காம்ப்ரிஹென்ஸிவ் என்று இரண்டு வகை உண்டு. தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ், விபத்தில் காயம் பட்ட எதிராளிக்கு மட்டும் இன்சூரன்ஸ் வழங்குகிறது. வாகனத்திற்கோ, ஓட்டுனருக்கோ கவரேஜ் இல்லை. காம்ப்ரிஹென்ஸிவ் இன்சூரன்ஸ், வாகனத்திற்கும், ஓட்டுனருக்கும், காயம் பட்ட தேர்ட் பார்ட்டிக்கும் கூட கவரேஜ் தந்து எல்லாவித இழப்புகளையும் ஈடு செய்கிறது.

    வீட்டுக்காப்பீடு

    இயற்கைச் சீற்றங்களாலோ, மனிதத் தவறுகளாலோ வீட்டுக்கும் அதில் உள்ள நகைகள், ஆர்ட் வேலைப்பாடுகள், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றுக்கும் ஏற்படும் சேதத்தை ஈடு செய்ய இந்தக் காப்பீடு உதவுகிறது. வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்தால் வாடகை வராத பட்சத்தில் அதையும் சில பாலிசிகள் ஈடு கட்டுகின்றன இன்னும் சில பாலிசிகள், சேதமடைந்த வீடு சரியாகும் வரை வீட்டு உரிமையாளர்கள் வேறு இடங்களில் தங்க நேர்ந்தால் அந்த வாடகையையும் ஈடு செய்கின்றன.

    வீட்டுக் கடன் காப்பீடு

    குடும்பத் தலைவர் இறந்ததும், வீடு கட்டக் கடன் கொடுத்த நிறுவனம், அவரது விதவை மனைவியையும், சிறு பிள்ளைகளையும் கதறக் கதற வீட்டை விட்டுத் துரத்தும் காட்சிகளை எத்தனை சினிமாக்களில் பார்த்திருப்போம்! அது போன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, வீட்டுக் கடன் காப்பீடு உதவும். கடனைக் கட்டி வரும் குடும்பத்தலைவர் இறந்து விட்டால் இன்சூரன்ஸ் நிறுவனம் கடன் நிறுவனத்துக்கு மீதி இருக்கும் தொகையை மொத்தமாகக் கட்டிவிடும். இதனால் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படாது.

    பயணக்காப்பீடு

    இது வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் உபயோகமானது. லக்கேஜ் இழப்பு, பயணத் தாமதங்கள் மற்றும் ரத்து போன்றவை ஏற்படுத்தக்கூடிய இழப்புகளை பயணக் காப்பீடு ஈடு செய்கிறது. பயணத்தின் போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற நேர்ந்தால் அதற்கான இழப்பீடு தரக்கூடிய பாலிசிகளும் உள்ளன. ஜெனரல் இன்சூரன்ஸில் மிக முக்கியமானது ஹெல்த் இன்சூரன்ஸ். இதுவும் விரிவாகப் பார்க்கப்படவேண்டிய ஒன்று என்பதால் தனி ஒரு கட்டுரையில் காணலாம்.

    காப்பீடு என்று வரும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

    நாம் தெரிவு செய்யும் காப்பீட்டுக் கம்பெனி அநாவசியமாக இழுத்தடிக்காமல் இழப்பீட்டுத் தொகையைத் தரும் வழக்கம் உடையதா என்று கவனிப்பது முக்கியம். நம் தேவைகளை லிஸ்ட் போட்டு அவை எல்லாம் இருக்கின்றனவா, தேவை இல்லாத விஷயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

    விண்ணப்பப்படிவத்தை நிரப்பும்போது தவறின்றி முழுவதுமாக நிரப்ப வேண்டும். ஒரு நகலை நம்மிடம் வைத்துக் கொள்வது நல்லது.

    பாலிசி வந்ததும் அதில் இருக்கும் விவரங்களை சரி பார்க்கவேண்டும். அதில் தவறு இருந்தால் பிற்காலத்தில் தொகை கிடைப்பது கஷ்டம் என்பதால், 15 நாட்களுக்குள் பாலிசியை திருப்பி அனுப்பி திருத்தங்கள் செய்யலாம் அல்லது ப்ரீமியத்தைத் திரும்பப் பெறலாம்.

    க்ளெய்ம் (பணத்தைத் திருப்பிப்பெறும்) பத்திரங்களை நிரப்பும்போதும் தவறின்றி நிரப்ப வேண்டும்.

    பொதுவாக க்ளெய்ம் என்று வரும்போது தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை விட அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வேகமாகவும், நியாயமாகவும் செயல்படுவதாக அமெரிக்க சர்வே ஒன்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

    இன்சூரன்ஸ் நிறுவனங்களை விட எளிமையாக போஸ்ட் ஆபீசும், வங்கிகளும் இன்சூரன்ஸ் வழங்குகின்றன. உங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்குக்கு இன்சூரன்ஸ் வழங்கும் வசதி இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். பல வங்கிகளில் வருடத்திற்கு ரூ.200/ கட்டினால் ஒரு லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. சில வங்கிகளின் டெபிட் கார்டில் இன்சூரன்ஸ் இலவசமாகவே வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபீஸ்கள் வழங்கும் போஸ்டல் லைப் இன்சூரன்சும் குறைந்த பிரீமியத்தில் மனி பேக் திட்டங்களை வழங்குகிறது.

    இவற்றில் உங்கள் நிலைமைக்குப் பொருத்தமான இன்சூரன்ஸ்கள் எவை? ஏற்கெனவே எடுத்திருந்தால் அவற்றின் அவசியத்தை மறுபரிசீலனை செய்திருக்கிறீர்களா?

    • காதில் தேன் பாய்ந்தது போல இருக்கிறது என்று சொல்வது கூட தேனை மேன்மைப்படுத்தும் சொல்லே.
    • பழைய காலங்களில் தீக்காயங்கள் மற்றும் தோலின் காயங்களை குணப்படுத்துவதற்கு தேனை மருந்தாக பயன்படுத்தினர்.

    தேன், இதன் சுவையில் விழாதவர்களே இருக்க முடியாது! எத்தனை நாட்கள் ஆனாலும், எந்த புட்டியில் ஊற்றி வைத்தாலும் துளிகூட சுவை மாறாமல் இருப்பது தேன் ஒன்றே. இந்த உலகம் தோன்றும் போதே தோன்றியதோ என்று என்ணும் வண்ணம் தேனைப் பற்றி பாடாத சங்க இலக்கியங்கள் கிடையாது. புகழாத சினிமா பாடல்களும் கிடையது.

    உதாரணத்திற்கு குணா படத்தைக் கூட எடுத்துக் கொள்ளலாம். கவிதை எழுதச் சொல்லும் போது மானே! தேனே! என்று போட்டுக்கோ! என்று கமல் கூறுவார். அந்த அளவிற்கு சொல்லும் போதே இனிப்பது தேனாகும். காதில் தேன் பாய்ந்தது போல இருக்கிறது என்று சொல்வது கூட தேனை மேன்மைப்படுத்தும் சொல்லே.இப்படி கவிதை, வர்ணிப்பு, பேச்சு, பாட்டு, மருந்து, விருந்து என்று எல்லாவற்றிலும் தேன்... தேன்... தேன்தான்.

    அப்படிப்பட்ட தேன் உண்மையில் நமக்கானது அல்ல அது தேனீக்களுக்கானது. அவற்றின் உணவே அதுதான். கஷ்டப்பட்டு தேனீ தயாரிக்கும் தேனை எடுத்து "ஆஹா! என்ன ருசி!" என்று இஷ்டப்பட்டு சாப்பிடுகிறோம், ஒரு கூட்டை தயாரிப்பதற்க 60 ஆயிரம் தேனீக்கள் உழைக்கின்றன, குறைந்தது 2 மில்லியன் மலர்களில் இருக்கும் மதுவை உறிஞ்சி எடுத்து தன் வயிற்றில் உள்ள நொதிகளோடு கலந்து, அதிகப்படியான ஈரப்பதத்தை தன் இறக்கையால் விசிறி காய வைத்து, கெட்டுப்போகாத, கெட்டியான தேனாக மாற்றினால் தான், தேவையான தேன் தேறும். இவ்வாறு தயாரிக்க ஒரு வாரம் முதல் பத்து நாட்களாகும்.

    இந்த தேனில் அப்படி என்னதான் இருக்கிறது?

    ஒன்றும் வேண்டாம்!. ஒரு கரண்டி தேனை எடுத்து சாப்பிட்டால் போதும் !அதிலேயே 64 கலோரிகள் உள்ளது. எளிதில் செரிக்க கூடிய மாவுச்சத்து உள்ளது. பி காம்ப்ளக்ஸ் விட்டமின்கள், கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. தேனில் இயற்கையாகவே பாக்டீரியாக்களை கொல்ல கூடிய, புண்ணை ஆற்றக்கூடிய சத்துகள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்று சொல்லக்கூடிய வயதாவதை தள்ளி போடக்கூடிய சத்தும் உள்ளது. அதனால்தான் பழைய காலங்களில் தீக்காயங்கள் மற்றும் தோலின் காயங்களை குணப்படுத்துவதற்கு தேனை மருந்தாக பயன்படுத்தினர். ஏராளமான ப்ரோபயாட்டிக் நுண்ணுயிரி சத்துக்கள் இருப்பதால் செரிமானத்தை சரிப்படுத்தும். செரிமானத்திற்கு உதவி செய்யும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.

    ஜெயஸ்ரீ சர்மா

     

    இரவில் தேனை எடுத்துக் கொள்ளும் பொழுது தூக்கம் வரும். இது தவிர முகத்திற்கு சிறந்த பேஸ் பேக்காகவும் தேனை உபயோகிக்கலாம். முகச்சுருக்கங்கள் குறையும். உண்மையில் கஷ்டமான வேலை, அசல் தேனை கண்டுபிடிப்பதுதான்.

    அசல் தேன்!... அசந்தேன்!... இந்த வார்த்தையை டி.வி., பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு பல முறை பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்.

    தேனை விற்பதற்கான ஒரு நிறுவனத்தின் பிரபலமான வசனம் அது! அசல் தேனை தண்ணீர் நிறைந்த கண்ணாடி டம்ளரில் விட்டால் கரையாமல் டம்ளரின் அடியில் அப்படியே தங்கும். அப்படி தங்கினால் அது அசல் தேன். ரொம்ப சிரமம் வேண்டாம் நம்பகமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இப்போது நல்ல தரமான தேன் கிடைக்கிறது. அதை வாங்கிக் கொள்ளுஙகள்!

    மருத்துவ பயன்பாட்டுத் தேன் என்றும் மெடிக்கல் கிரேட் தேன் என்றும் 100 சதவீதம் சுத்தமான தேன் என்றும் எழுதி இருப்பதையே உபயோகிப்பது நல்லது.

    ஒவ்வொரு குறிப்பிட்ட பூக்களில் இருந்து உருவாக்கப்படும் தேன் சுவையும் நிறமும் திடமும் வித்தியாசமாக இருப்பதோடு அந்த மருத்துவ குணத்தோடும் விளங்குகிறது என்பது அதிசயமான உண்மை. எடுத்துக் காட்டாக யூகலிப்டஸ் மரங்கள் அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில் கிடைக்கக்கூடிய தேன், சளி இருமலை குணமாக்குகிறது.

    உலகில் நியூசிலாந்தின் மனோகா மற்றும் அகஸியா மிகச் சிறந்த தேனாக கருதப்படுகிறது. தமிழகத்தில் மிகவும் சிறந்த தேன், முருங்கைப்பூ தேனாகும்.

    இனிப்பு தேவைப்படும் எல்லா இடங்களிலும் வெள்ளை சக்கரையை தவிர்த்து விட்டு தேனை தாராளமாக உபயோகிக்கலாம். குறிப்பாக பழ சாலடுகள், பலாப்பழத்தோடு தேனும் கலந்து உண்பது நம்முடைய வழக்கம். செரிமான சக்தி தேனுக்கு அதிகமாக இருப்பதால் பலாப்பழத்தோடு சேர்த்து உண்ணும் பொழுது எளிதில் செரிக்கிறது என்பது உண்மை, சுவையும் கூடுகிறது என்பது கூடுதல் நன்மை.

    இது தெரிந்ததால்தான் தேனை சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் அதிகம் உபயோகப்படுத்துகிறது. எனக்கு இப்போது கூட ஞாபகம் இருக்கிறது. 8 வயதில் இருமலும் தொண்டை வலியும் இருந்த போது சித்த மருத்துவர் சிறுசிறு பொட்டலங்களாக மருந்து கொடுத்தார். அம்மா அதை தேனில் குழைத்து நாக்கில் தடவி விடுவார். மருந்து கசந்தால் கூட தேனின் இனிப்பிற்காக அந்த மருந்தை விரும்பி சாப்பிட்டது நினைவில் இருக்கிறது. தேனோடு கொடுக்கப்படும் மருந்து வேலை செய்வதற்கு உதவுவதோடு செரிமானத்திற்கும் உதவும் என்பதால் சித்த மருத்துவம் பெரும்பாலும் தேனை உபயோகப்படுத்துகிறது.

    தேனுடன் இஞ்சி சாறு, தேனுடன் துளசி சாறு மிளகுத்தூள் போன்றவற்றை கலந்து கஷாயமாக இருமலுக்கு கொடுப்பது நம் வீடுகளில் பாட்டி வைத்தியமாக செய்யப்படுகிறது. தொண்டை புண்ணை குணப்படுத்தக்கூடிய ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி, ஆன்டி செப்டிக் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் இருப்பதால் இது இருமலை குணப்படுத்தும்.

     

    உடல் எடை குறையுமா?

    சுடுநீரில் தேன், எலுமிச்சை சாறில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்பர். செரிமானத்தை பலப்படுத்துவதோடு மெட்டபாலிசம் என்று சொல்லக்கூடிய வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கும், அதனால் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது எடை குறைப்புக்கு இது உதவும். ஆனால், சரியான உணவு, உடற்பயிற்சியின் மூலமாகத்தான் கணிசமாக எடையை குறைக்க முடியும். என்னதான் தேனாக இருந்தாலும் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. தேனும் அதிகப்படியாக எடுத்தால் கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கலாம்.

    குழந்தைகள் பிறந்த உடன் நாவில் தேனை வைப்பர். இது பல காலமாக இருக்கக்கூடிய பழக்கம். ஆனால் ஆங்கில மருத்துவம் ஒரு வயதுக்குள் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை ஊக்குவிப்பதில்லை.

    தலை நரைக்குமா?

    தலைமுடியில் தேன் பட்டால் உடனே நரைத்து விடும் என்று நம்மூரில் நம்பிக்கை உண்டு, இயல்பாகவே தேனிற்கு லேசாக நிறத்தை குறைக்கும் தன்மை உண்டு. ஆனால் தேன் பட்டால் தலைமுடி நரைக்கும் என்பது முற்றிலும் தவறு. எதிர்பாராமல் பட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம். நீர் விட்டு கழுவி விட்டாலே போதும்.

    உண்மையில் சில இடங்களில் இயற்கை ஈரப்பதத்தை அதிகரிக்கும் பொருளாக தேனை தலைமுடிக்கு கூட பயன்படுத்துவர்.

    தினமும் ஒரு சிறு கரண்டி தேனை சுவையுங்கள்! செரிமானம் சரிப்படும், நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். வயதாவது தள்ளிப்போகும். தடவினால், முகம் இளமையாகும். மொத்தத்தில் தேன் இயற்கை கொடுத்த சஞ்சீவினி!. அதை அளவோடு எடுத்துக் கொண்டு வளமோடு வாழ்வோம்.

    வாட்ஸ்அப்: 8925764148

    • செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எண்பேராயத்தில் உறுப்பினராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
    • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது உள்பட இன்னும் பற்பல முக்கியமான விருதுகள் பெற்றவர்.

    தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் (1935 - 2025), பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாதமி பரிசுபெற்றவருமான வல்லிக்கண்ணன் காலமானபோது இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அங்கே அவரைப் பார்த்தவர்கள் அனைவரும் பெரிதும் ஆச்சரியப் பட்டார்கள்.

    காரணம் அப்போது பெருங்கவிக்கோவின் மனைவி திருமதி சேதுமதி காலமாகி மிகச் சில நாட்கள்தான் ஆகியிருந்தன.

    `உறவு முக்கியம்தான். சந்தேகமில்லை. அதுபோலவே உறவுக்கு இணையாக நட்பும் எனக்கு மிக முக்கியம். என் வாழ்வில் எனது நண்பர்களுக்கு மிக உயர்வான இடம் உண்டு!` என்பதைத் தம் வாழ்க்கைக் கோட்பாடாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர்.

    அவரது உற்ற நண்பர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. ஏராளமான வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த அவருக்கு உலகின் எல்லா நாடுகளிலும் அவரை நேசிக்கும் நண்பர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். (அவர் சென்றுவந்த வெளிநாடுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய அறுபது என்று சொல்லப்படுகிறது. அந்த எண்ணிக்கை இன்னும் சற்றுக் கூட இருக்கலாமே அன்றிக் குறையாது.)

    பெருங்கவிக்கோ சேதுராமன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர்.

    இளமைக் காலங்களில் கடும் வறுமையைச் சந்தித்தவர். சாப்பாட்டிற்குக் கூடச் சிரமம் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் கல்வியை விட்டுவிடக் கூடாது என்று கருதினார். அதனால் தனது விடாமுயற்சியால் படிப்படியாகப் படித்துத் தேறி, மிக விரைவில் தமிழில் புலவர் பட்டமும் பெற்றார்.

    அதன்பின் தமிழ் முதுகலைப் பட்டத்தையும், ஆசிரியப் பணிக்கு அடிப்படையான பி.எட் பட்டத்தையும் பெற்று சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரானார். அந்தப் பள்ளியில் அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர் அவரை அன்போடும் மரியாதையோடும் இப்போதும் நினைவு கூர்கிறார்கள்.

    பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார் பெருங்கவிக்கோ. `பழந்தமிழ் நூல்களில் கவிதை பற்றிய கருத்துகளும் கற்பனைகளும்` என்பதுதான் அவர் எடுத்துக்கொண்ட ஆய்வுத் தலைப்பு. தாமே ஒரு கவிஞராக இருந்ததால் இந்தத் தலைப்பில் ஆய்வு செய்வது அவருக்கு எளிதாக இருந்திருக்க வேண்டும். எந்த வயதிலும் தொடர்ந்து கல்வி கற்பதற்கு அவர் ஒருசிறிதும் தயங்கியதே இல்லை. எழுதுவதற்கும் புத்தகங்கள் படிப்பதற்கும் தம் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்தார்.

    இவர் எழுதிய `காலக்கனி` என்ற காவியம் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்தது. அந்த நூல் அதன் தகுதி காரணமாக சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலைப் படிப்புக்குப் பாடமாக இருந்தது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எண்பேராயத்தில் உறுப்பினராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு. பெருங்கவிக்கோ தான் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்களுக்குப் பேருந்திலும் ஆட்டோவிலும் தான் செல்வார். பந்தா, படாடோபம் போன்றவை அவரிடம் அறவே கிடையாது. மிக எளிய வாழ்வு வாழ்ந்த உயர்நிலைத் தமிழறிஞர் அவர்.

    திருப்பூர் கிருஷ்ணன்


    மிகுந்த ஆன்மிக நாட்டம் உடையவர். சபரிமலை ஐயப்பன் மேல் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். `ஐயப்பன் பாமாலை, ஐயப்பன் ஆற்றுப்படை` போன்ற தலைப்புகளில் ஆன்மிகச் செய்யுள் நூல்கள் இயற்றியுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட பட்டங்களில் ஒன்று `ஐயப்பன் அருள்கவி` என்பது.

    இவருக்குப் பல்வேறு நிறுவனங்களாலும் தனி நபர்களாலும் `பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கொண்டல், செந்தமிழ்க் கவிமணி, கவிஞர் குல திலகம்` போன்ற பல பட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன.

    தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது உள்பட இன்னும் பற்பல முக்கியமான விருதுகள் பெற்றவர். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய திருவள்ளுவர் விருது, முரசொலி விருது போன்றவை அவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்க சில.

    தினத்தந்தி நாளிதழ் `சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது` என்ற உயர்வான விருதை இவருக்கு வழங்கி இவரை கெளரவித்துள்ளது.

    தீவிர ஐயப்ப பக்தராக இருந்தாலும் அவர் மத நல்லிணக்கத்தைப் போற்றிய உயரிய பண்பாளர். அவர் இயற்றிய நூல்களில் ஒன்று `இயேசு அந்தாதி` என்பது கவனத்திற்குரிய செய்தி.

    மரபுக் கவிதையாக நிறையச் செய்யுள்களை எழுதிக் குவித்தவர். ஏறக்குறைய ஒரு லட்சம் செய்யுள்கள் அவர் எழுதியுள்ளார் என்று ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. எண்ணிக்கையில் அவரளவு மரபுக் கவிதைகளை எழுதியவர்கள் அண்மைக்காலத்தில் யாரும் இல்லை என்றே கூறலாம். கவிதை எழுதுவதை தினசரிப் பணியாகக் கொண்டு அவர் எழுதியிருக்க வேண்டும். அல்லாவிட்டால் எண்ணிக்கையில் அவ்வளவு கவிதைகளைப் படைப்பது இயலக் கூடியதல்ல. அவரது கவிதைகள் தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடும் பல தீபாவளி மலர்களை அலங்கரித்ததுண்டு.

    மகாத்மா காந்தியின் வாழ்வால் பெரிதும் கவரப்பட்ட பெருங்கவிக்கோ, காந்தியக் கொள்கைகளில் தீவிர நாட்டமுள்ளவர். `வாழ்க நீ எம்மான்!` என்ற தலைப்பில் காந்தி பற்றிய பன்மொழிக் கவிதை நூல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அந்தாதி, ஆற்றுப்படை போன்ற பழைய இலக்கண மரபுகளில் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ளவர். இவ்வகையில் இவரது `தாயுமானவர் அந்தாதி, ஐயப்பன் ஆற்றுப்படை` போன்ற நூல்கள் குறிப்பிடத் தக்கவை.

    இவை தவிர `நெஞ்சத் தோட்டம், தமிழ் முழக்கம், தாய்மண், எண்ணச் சுடர், உலகை உயர்த்திய ஒருவன், பற்றிலான் பற்று` என்பன போன்ற பல தலைப்புகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். `மலைநாட்டின் மீதினிலே` என்று பயணக் காப்பியமாகவும் ஒரு செய்யுள் நூல் இயற்றியுள்ளார். பயண இலக்கிய வரிசையில் உரைநடை நூல்கள் நிறைய வந்துள்ளன. செய்யுள் நூல்கள் மிகக் குறைவு என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

    `சேது காப்பியம்` அவர் எழுதிய நூல்களில் முக்கியமானது. அது ஒரு வித்தியாசமான தன்வரலாற்றுச் செய்யுள் நூல். பன்னிரண்டு காண்டங்களை உடைய அந்நூலின் அமைப்பு இதுவரை யாரும் செய்யாத வகையில் புதுமை நிறைந்தது.

    தனது தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றைத் தமிழ்ச் சமூகத்தின் பொது வரலாற்றோடு இணைத்துப் புனைந்துள்ளார் நூலாசிரியர். பெருங்கவிக்கோவின் வாழ்க்கையைப் பேசும் அந்த நூலில், `ப·றுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொண்ட` தமிழின் பழைய வரலாற்றுச் செய்திகளும் இணைந்தே பேப்பட்டுள்ளன. அவ்வகையில் இந்த நூலை ஓர் ஆவணப் பதிவு என்றே கூற வேண்டும்.

    எங்கே தவறு கண்டாலும் அதை உடனே கண்டிக்கும் இயல்புடையவர் பெருங்கவிக் கோ. அந்த நக்கீரப் பண்பினால் தாம் செய்த ஆசிரியப் பணியிலும் சரி, தமது குடும்ப வாழ்விலும் சரி, அவருக்குப் பலவகை சிரமங்கள் நேர்ந்தன. அவற்றையெல்லாம் சேதுகாப்பியத்தில் விறுவிறுப்பாக விவரிக்கிறார்.

    சமகாலத் தமிழகத்தின் அரசியல், கலை, இதழியல் தொடர்பான பல நிகழ்வுகள் சேது காப்பியத்தில் ஆங்காங்கே பொருத்தமாக இடம்பெற்றுள்ளன. அதனாலேயே இந்தத் தன்வரலாறு தனி வரலாறாக இல்லாமல் தமிழக வரலாறாக உருக் கொள்கிறது. மீசையால் அடையாளம் காணப்பட்ட தமிழறிஞர்கள் வரிசையில் டி.கே.சி. என்கிற டி.கே. சிதம்பரநாதன்போல் இவரும் ஒருவர். பெருங்கவிக்கோவின் பெரிய மீசையைப் பார்ப்பவர்கள் அவரை முரட்டு மனிதர் என்றே எடைபோடுவார்கள். ஆனால் அது நூறு சதவிகிதம் தவறு. அவரைப் போன்ற குழந்தை மனம் படைத்தவர்கள் மிக அபூர்வம். வாழ்நாள் முழுதும் சூதும் வஞ்சனையும் இல்லாத வளர்ந்த குழந்தை போலவே அவர் இருந்தார்.

    எளிய பாராட்டுகளுக்குக் கூட உளமார மயங்குபவர். பெருந்தன்மையும் நன்றி உணர்வும் உடைய சான்றோர்களில் இவரும் ஒருவர். தொண்ணூறு வயதான முதுமைக் காலத்திலும் மிகுந்த நினைவாற்றல் கொண்டிருந்தார். பழைய சம்பவங்களைத் துல்லியமாக விவரிப்பதிலும், இலக்கிய மேற்கோள்களைப் பிசகில்லாமல் சொல்வதிலும் அவருக்கு நிகர் அவர்தான்.

    `தமிழ்ப் பணி` என்ற தலைப்பில் மாத இதழ் நடத்தியவர். தமிழ் அறிஞர்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்த பத்திரிகை அது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக அந்த மாத இதழ் இடைவெளியின்றி வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சூழல்களில் தமிழ் உரிமை காப்பதற்காகப் பல போராட்டங்களை நடத்தி அதன் காரணமாகப் பலமுறை சிறைசென்றவர் இவர் என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கது. தமிழுக்காகப் பலமுறை நடைப்பயணம் மேற்கொண்டவர்.

    மூதறிஞர் கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் உலகக் கவிஞர்களைக் கவிதை அடிப்படையில் ஒருங்கிணைக்க உலகக் கவிஞர் பெருமன்றம் தொடங்கினார். அம்மன்றம் நிகழ்த்திய உலகளாவிய கவியரங்கங்களில் இருபது முறைக்கும் மேல் பெருங்கவிக்கோ கலந்துகொண்டு கவிதை வழங்கியிருக்கிறார். 1972இல் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தைப் பெருங்கவிக்கோ தொடங்கினார். தமிழ்ப் போராளியாகவும் உலகத் தமிழ்த் தூதராகவும் ஒருசேர விளங்கியவர் என இவரைப் பற்றிச் சொல்வது பொருத்தமானது.

    பெருங்கவிக்கோவின் மக்கட் செல்வங்கள் `கவியரசன், ஆண்டவர், திருவள்ளுவர், தமிழ் மணிகண்டன்` என்ற நான்கு புதல்வர்கள் மற்றும் `பூங்கொடி` என்ற புதல்வி என ஐவர். வெள்ளை மனம் படைத்தவராய், வளர்ந்த குழந்தைபோல் தொண்ணூற்று ஓராண்டுகள் வாழ்ந்த பெருங்கவிக்கோ அண்மையில் ஜூலை நான்காம் தேதியன்று முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார். அவரது வற்றாத தமிழ்ப் பற்றை அவர் எழுதிய சேதுகாப்பியம் உள்ளிட்ட செய்யுள் நூல்கள் என்றென்றும் புலப்படுத்திக் கொண்டிருக்கும்.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    • போலிக் ஆசிட், வைட்டமின் பி 12 ஆகியவற்றை பற்றி எல்லோருமே ஓரளவு தெரிந்து வைத்து இருப்பார்கள்.
    • அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அந்த கருவின் மூக்கு பகுதியில் உள்ள நாசி எலும்பு உருவாக்கத்தையும் பார்க்க முடியும்.

    ஒரு பெண் கருவுற்று இருக்கிறார் என்றால் அவர் மகப்பேறு அடைவதற்கு முன்பு அவரது வயிற்றில் உள்ள கருவின் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமானது. எனவே கருவின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் கருத்தரிக்கும் முன்பு ஆரோக்கி யமான கருவை உருவாக்குவதற்கு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? கர்ப்பகாலத்தின்போது குழந்தை ஆரோக்கியமாக வளருகிறதா என்பதை கண்டறிய என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

    குழந்தை பெற விரும்பும் பெண்கள் முதலில் தங்களுக்கு பால்வினை நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏதாவது இருந்தால் அதை சரிசெய்த பிறகுதான் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    ரத்த மாறுபாடுகள் இருந்தால் முன் எச்சரிக்கை தேவை:

    அதேபோல் சில வகையான ரத்தப்பிரிவுகளில் மாறுபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளது. இதுவும் கர்ப்பத்தில் இருக்கும் கருவுக்கு பாதிப்புகளை உருவாக்கும். சிலருக்கு ரத்த சிவப்பணுக்கள் வட்ட வடிவமாக இருப்பதற்கு பதிலாக அரிவாள் போன்ற வடிவில் இருக்கும் சிக்கில் செல் நோய் இருக்கலாம்.

    இன்னும் சிலருக்கு ஆர்.எச். நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருக்கலாம். மேலும் சிலருக்கு தலசீமியா பாதிப்புகளும் இருக்கலாம். எனவே இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கும் வரக்கூடும். எனவே அவர்கள் முதலிலேயே அதற்குரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    மேலும் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும் நிலையில் கருவில் இருக்கும் குழந்தைக்கு பரிசோதனை செய்து அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கும்போது, கர்ப்ப காலத்தின்போது என்னென்ன பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்னரே அறிந்து கொள்ள முடியும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் முடியும்.

    இதுதவிர கர்ப்பம் தரிக்க இருக்கும் சில பெண்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் அல்லது வலிப்பு நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் நிலையில் அவர்கள் அதற்குரிய மருந்து மாத்திரை சாப்பிட்டு வருவார்கள். அந்த மாத்திரைகளால் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். கருவில் உள்ள குழந்தைக்கு குறைபாடுகள் வரலாம்.

    எனவே அதை முன்னரே தெரிந்துகொண்டு கர்ப்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பாதுகாப்பான வகையில் மருந்து மாத்திரைகளை மாற்றிக் கொள்வது முக்கியம். இதுதான் இந்த மாதிரியான பிரச்சினைகள் வருவதை தடுப்பதற்கான வழிறையாகும்.

     

    கர்ப்பத்தை எதிர்நோக்க முறையான திட்டமிடுதல்:

    மேலும் போலிக் ஆசிட், வைட்டமின் பி 12 ஆகியவற்றை பற்றி எல்லோருமே ஓரளவு தெரிந்து வைத்து இருப்பார்கள். குழந்தைக்கு முதுகு தண்டுவட குறைபாடுகள் மற்றும் மூளை குறைபாடுகள் ஆகியவை வராமல் தடுப்பதற்கு இவை அனைத்தையுமே முதலிலேயே கொடுக்க வேண்டும்.

    அந்த வகையில் மகப்பேறுக்கு முன்பே இந்த மாதிரியான, முறையான பரிசோதனைகளை செய்ய வேண்டும். அதன்மூலம் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு என்னென்ன குறைபாடு உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு தீர்வு இருந்தால் அந்த தீர்வை கொடுக்க வேண்டும்.

    ஒருவேளை அதற்கு தீர்வு இல்லாவிட்டால் அந்த குறைபாடானது எத்தனை சதவீதம் அடுத்த குழந்தையை பாதிக்கும் என்பதை தெரிந்துகொண்டு, ஒரு சரியான திட்டமிடுதலுடன் தான் அடுத்த கர்ப்பத்தை அந்த தம்பதிகள் எதிர்கொள்ள வேண்டும்.

    அந்த வகையில் கர்ப்பம் தரித்த பெண்கள், என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு முதல் முக்கியமான பரிசோதனை என்பது அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை தான். மேலும் குழந்தையின் வடிவமைப்பில் ஏற்படும் குறைபாட்டை கண்டுபிடிப்பதற்கு இன்னும் சில பரிசோதனைகளை செய்ய வேண்டும். இந்த பரிசோதனைகள் மூலமாக கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை கண்டறியலாம்.

    பாதிப்புகளை உறுதி செய்வதற்கான பரிசோதனை:

    இப்போது ஒருவருக்கு சர்க்கரை அளவை பரிசோதித்து பார்க்கிறோம் என்றால், அவருக்கு எப்போது எடுத்தாலும் ரத்த சர்க்கரை அளவு 150-க்கு மேல் இருக்கும் நிலையில் அவருக்கு கண்டிப்பாக சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கருதலாம்.

    எனவே அதை உறுதி செய்வதற்கான பரிசோதனையை செய்ய வேண்டும். அதன்மூலம் அவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா அல்லது சிலநேரங்களில் சாப்பிட்டவுடன் ஏறுகிற சர்க்கரை அளவை ஏற்கனவே கண்டு பிடித்தோமா என்பதை நாம் வித்தியாசப்படுத்தி பார்க்க முடியும்.

    அதேபோல் ஒரு பரிசோதனை முறை என்றால், இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது தெரியும். ஒருவேளை நோய் வருவதற்கான சாத்தியக்கூறு இருந்தால், அதன்பிறகு அவர்களுக்கு அதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு நோய் தாக்கம் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு பரிசோதனை முறை என்பது மிகவும் எளிமையான முறையாக இருக்க வேண்டும். அத்துடன் தரமானதாகவும் இருக்க வேண்டும். அந்த பரிசோதனையானது எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய விஷயமாக இருக்க வேண்டும். இந்த பரிசோதனைகளை நகரங்களுக்கு வந்து தான் செய்ய வேண்டும் என்றால், எல்லா கர்ப்பிணியாலும் இந்த பரிசோதனைகளை செய்ய முடியாது.

    அப்படியென்றால் இதற்கு சில குறிப்பிட்ட இடங்கள் மட்டும் என்று இல்லாமல், பல இடங்களில் எளிமையான முறையில் கிடைப்பதாக இருக்க வேண்டும். மேலும் விலை குறைவாகவும், நல்ல ஒரு தொழில்நுட்ப வசதியுடன் கிடைக்க வேண்டும். இதுதான் ஒரு முழுமையான பரிசோதனை முறை ஆகும்.

    மேலும் கர்ப்பகாலத்தின்போது, குறிப்பாக கருவில் உள்ள குழந்தைக்கு எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வகையிலான கருவுக்குள் ஊடுருவும் வகையிலான பரிசோதனை முறைகளை (இன்வேசிவ் மெத்தட்) செய்யக்கூடாது. இன்வேசிவ் மெத்தட் முறையில் பரிசோதனை செய்யும்போது கருச்சிதைவு ஏற்படுவதற்கோ அல்லது குறை பிரசவம் ஆவதற்கோ வாய்ப்புகள் உண்டு. எனவே எந்தவொரு மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனையும், இன்வேசிவ் மெத்தட் இல்லாமல் வருகிறதோ, அதுதான் ஒரு பாதுகாப்பான பரிசோதனை முறை ஆகும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    கருவில் உள்ள குழந்தைகளுக்கு டவுன் சின்ட்ரோம், முதுகு தண்டுவட குறைபாடுகள்:

    அந்த வகையில் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனையாக எல்லா கர்ப்பிணிகளுக்கும் 12 முதல் 14 வாரத்துக்குள் ஒரு சரியான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். இதில் நியூக்கல் டிரான்ஸ்லுசென்சி பரிசோதனை என்பது மிகவும் முக்கியமானதாகும். இது கருவின் கழுத்தின் பின்புறத்தில் திரவம் நிறைந்த பகுதியை அளவிடும் பரிசோதனையாகும். இந்த பரிசோதனை என்பது கருவில் குரோமோசோம் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது பிற உடல்நல பிரச்சினைகள் இருந்தாலோ அதை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அந்த கருவின் மூக்கு பகுதியில் உள்ள நாசி எலும்பு உருவாக்கத்தையும் பார்க்க முடியும். அதன் மூலம் ஏதாவது பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பதை முன்பே கண்டறிய முடியும். குறிப்பாக டவுன் சின்ட்ரோம் மற்றும் முதுகு தண்டுவட குறைபாடுகள் வருவதற்காக பாதிப்பு காரணிகளை அறிய முடியும். இவைதான் ஒரு அல்ட்ராசவுண்ட் மூலம் செய்யக்கூடிய பரிசோதனை முறையாகும்.

    இதுதவிர பயோ கெமிக்கல் பரிசோதனை முறைகளும் இருக்கிறது. பயோ கெமிக்கல் முறையில் ரத்தத்தில் சில பரிசோதனைகளை செய்ய வேண்டும். சரியாக 12 முதல் 14 வாரத்துக்குள் ஒரு ஆல்பா பீட்டா புரோட்டின், பீட்டா எச்.சி.ஜி. ஆகிய பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

    இதில் பீட்டா எச்.சி.ஜி. பரிசோதனை என்பது முதன்மையாக கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. மேலும் கருவின் வளர்ச்சியை கண்காணிக்கவும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. ஆல்பா பீட்டா புரோட்டின், பீட்டா எச்.சி.ஜி. ஆகிய அனைத்துமே, முதுகு தண்டுவட குறைபாடு இருக்கின்ற குழந்தை களாக இருந்தால் அதன் அளவீடு அதற்கு மாறுபட்டு அதிகமாக இருக்கும். மேலும் வைட்டமின் பி 12 குறைபாடு மற்றும் இரும்பு சத்து குறைபாடு உள்ளிட்ட சில குறைபாடுகளும் கருவின் வளர்ச்சியை பாதிக்கும்.

    இந்த வகையில் ஒரு மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பது கருவை பாதிக்கும் முறையில் இல்லாமல் இருக்க வேண்டும்.

    அதாவது எளிதாக ஒரு ரத்த பரிசோதனை செய்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வரப்போவது இல்லை. ஆனால் இதுவே ஒரு பனிக்குடத்தில் இருந்து நீர் எடுப்பதோ, அதேபோல் கருவில் இருந்து ஒரு திசுவை பயாப்சி பரிசோதனைக்காக எடுப்பதோ ஆபத்தை விளைவிக்கும் பரிசோதனை முறையாகும்.

    எனவே ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்வதற்கு, கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் ஆரோக்கியமான குழந்தை பெற என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • ஜோதிடம் பார்க்க வருபவர்கள் பலருக்கு வக்ர கிரகம் குறித்து பல்வேறு கருத்து நிலவுகிறது.
    • பெரிய பாதிப்பு இருப்பவர்கள் சுய ஜாதகத்தை ஒப்பிட்டு உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கவும்.

    சென்ற வாரம் கடகம் ராசிவரை சனி பகவானின் வக்ர பலன்கள் பார்த்தோம். இந்த வாரம் மீதம் உள்ள ராசியினருக்கான பலன்களை பார்க்கலாம்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு 6,7ம் அதிபதியான சனி பகவான் கோட்ச்சாரத்தில் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டமச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். கணவன்-மனைவி உறவில் ஏற்பட்ட சச்சரவுகள் சீராகும். விவாகரத்து வரை சென்று வழக்குகளில் திருப்பம் ஏற்படும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் அனுகூலமான பலன்கள் உண்டு.

    அஷ்டமச் சனி முழுமையாக முடியும் வரை திருமணம் தொடர்பான விஷயங்களை ஒத்தி வைப்பது நல்லது. புதிய கூட்டுத் தொழிலை தவிர்க்கவும். 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். உடல் நலனில் நிலவிய பாதிப்புகள், மனசஞ்சலம் அகலும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையத் துவங்கும். பூர்வீகச் சொத்து மற்றும் பாகப் பிரிவினையில் மாற்றுக் கருத்துக்கள் பேச்சு வார்த்தையில் சீராகலாம். வழக்கம் போல் தொழிலில் நல்ல முன்னேற்றப் போக்கு தென்படும். காப்பீட்டு பணம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் கிடைக்கலாம். மேலும் சுப பலனை அதிகரிக்க தினமும் ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும்.

    கன்னி

    கன்னி ராசிக்கு 5,6-ம் அதிபதியான சனி பகவான் கோச்சாரத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் ராசிக்கு 7ல் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். நல்ல பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. உங்களின் குணங்கள் மற்றவர்களால் விரும்பக் கூடியதாக, போற்றப் படக்கூடியதாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் காரண காரியத்தோடு நன்கு யோசித்துச் செய்ய கூடிய திறன் பெற்றவராக இருப்பீர்கள்.

    யாருடைய உதவியுமின்றி புதியவற்றை கற்றுக் கொள்ளக் கூடிய திறமை இருக்கும். பார்ப்பதற்கு இளமையான தோற்றம் இருக்கும். 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார்.வெளிநாட்டுப் பயண முயற்சி சித்திக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். திருமண முயற்சியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. புதிய சொத்து வாங்கும் முயற்சியில் நிலவிய தடைகள் அகலும். வீடு, வாகன, தொழில் கடனால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும். மேலும் நன்மைகளை அதிகரிக்க ஸ்ரீ காயத்திரி தேவியை வழிபடவும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு 4,5ம் அதிபதியான சனி பகவான் கோட்ச்சாரத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் ராசிக்கு 6ல் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். வியாபாரத்திலும் வருமானத்திலும் ஏற்பட்ட தடைகள் அகலும். வாழ்க்கையை செம்மையாக நடத்த தேவையான ஜீவனங்கள் வரத் துவங்கும். கல்வித்தடை, உற்றார் உறவினர் பகை, டென்ஷன், ஆரோக்கியக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. அரசு வேலை முயற்சி கைகூடும்.

    ஐ.ஆனந்தி

     

    4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். கடன்களை அடைக்கும் மார்க்கம் தென்படும். இடமாற்றத்தால் ஏற்பட்ட சங்கடங்கள் மாறும். வழக்குகளில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். தலைமறைவாக வாழ்ந்தவர்கள், காணாமல் போனவர்கள், முதியோர் இல்லம் சென்றவர்கள் வீடு திரும்புவார்கள். வீடு, வாகன, தொழில் கடனால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் நிலவிய தடைகள் அகலும். வீடு கட்டும் பணி துரிதமாகும். பிரிந்த தம்பதிகள் கூடி வாழ்வார்கள். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    விருச்சிகம்

    விருச்சிகராசிக்கு 3,4-ம் அதிபதியான சனி பகவான் கோட்ச்சாரத்தில் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் தொடர்பான விசயங்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். காதல் விசயங்கள், எதிர்பாலின நட்பால் அசிங்கம், அவமானம் ஏற்படலாம். பிள்ளைகளை சொந்த பொறுப்பில் பாதுகாப்பது நல்லது.

    4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ர கதியில் பயணிக்கும் காலத்தில் உற்றார், உறவினர்கள், குடும்ப உறவுகளுடன் கனிவுடன் பேச வேண்டும். தவறான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான பணிகளை ஒத்தி வைக்கவும். தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயர்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழலாம். சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். சிறு பிரச்சினைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து உதவுவது நல்லது.

    தனுசு

    தனுசு ராசிக்கு 2,3ம் அதிபதியான சனி பகவான் கோட்ச்சாரத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் ராசிக்கு 4ல் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். மிக மோசமான பிரச்சினைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடிய நல்ல நேரம் ஆரம்பமாகி விட்டது. பள்ளி, கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். தாயுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.

    சொத்து வாங்குவது, விற்பது போன்றவற்றை ஒத்தி வைக்கவும். புதிய தொழில் முயற்சியில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம். 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். கண், பல் தொடர்பான பிரச்சினைக்கு வைத்தியம் செய்ய நேரும். சகோதரர்களால் வீண் விரயம் உண்டு. கடன் பெற்று சொந்த வீடு வாங்குவீர்கள். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். மறுமண முயற்சி சித்திக்கும். தகப்பனாருடன் ஏற்பட்ட வருத்தம் மறையும். முன்னோர்கள் வழிபாடு மிக அவசியம்.

    மகரம்

    மகர ராசிக்கு ராசி அதிபதி மற்றும் தன ஸ்தான அதிபதியான சனி பகவான் ராசிக்கு 3ம் இடமான சகாய ஸ்தானத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். திருமண முயற்சிகள் இழுபறியாகும். எந்த செயலிலும் உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுக்க வேண்டிய நேரம்.

    குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். பிறர் பிரச்சினைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகத்திற்கு சென்று வருவதை ஒத்தி வைப்பார்கள். மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. வயதானவர்களின் தேவையறிந்து உதவ வேண்டும்.

    கும்பம்

    கும்ப ராசியின் அதிபதி மற்றும் விரய அதிபதியான சனி பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். சிலர் தொழில், வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். அரசியல் நாட்டம் மிகும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிர்ஷ்டம் சற்று குறைவுபடும்.

    ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிப்பார். கடனி்ல இருந்து மீளக் கூடிய வாய்ப்புகள் தேடி வரும். வீண் விரயங்கள், இழப்புகள், நஷ்டங்கள் குறையும். எதிரிகளின் நெருக்கடி மெல்ல மெல்ல விலக ஆரம்பிக்கும். புதிய நட்பு வட்டாரங்கள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். எதிர்பாராத சுபச் செலவு உண்டாகும். வழக்குகள் இழுபறியாகும்.சனிக்கிழமை சிவ வழிபாடு செய்யவும்.

    மீனம்

    மீன ராசிக்கு லாபஸ்தான அதிபதி மற்றும் விரய ஸ்தான அதிபதியான சனி பகவான் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். ஜென்ம சனியின் தாக்கம் குறையும். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும்.

    நீண்ட நாட்களாக அவதிப்படுத்திய நோய்க்கு நிவாரண காலம். திருமண முயற்சிகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கும். வேலை பார்த்த இடத்தில் சக ஊழியர்கள், உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். இதுவரை இருந்த காரியத் தடைகள் நீங்கி குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வீடு கட்டுதல், வாங்குதல், சொத்துக்களை விற்றல் தொடர்பான பணிகள் தடையில்லாமல் நடந்து முடியும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தினமும் விலங்குகள் மற்றும் பட்சிகளுக்கு உணவிட முன்னேற்றம் அதிகரிக்கும்.

    ஜோதிடம் பார்க்க வருபவர்கள் பலருக்கு வக்ர கிரகம் குறித்து பல்வேறு கருத்து நிலவுகிறது. பலர் வக்ர கிரகம் என்ன பலன் தரும் என்று அறியாத நிலையிலேயே இருக்கிறார்கள். ஜோதிடம் என்பது ஒரு புரியாத புதிர். அதை புரிந்து கொள்ள முயன்றவர்கள் புரிந்து கொண்டவர்கள் தெளிவாக வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ முடியும். புரியாத பல புதிர்களை அடங்கிய ஜோதிடத்தில் வக்ரகிரகங்களுக்கு பலம் எடுப்பதும் ஒரு சாமானியமான செயல் அல்ல. நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்துவிடும். ஒருவரின் தொழில் உத்தியோகத்தை நிர்ணயிக்கக்கூடிய சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலத்தில் தொழில் உத்தியோக ரீதியான வாழ்க்கையை பாதிக்கும் பெரிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பெரிய பாதிப்பு இருப்பவர்கள் சுய ஜாதகத்தை ஒப்பிட்டு உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கவும். மற்றவர்களுக்கு மேலே கூறிய பரிகாரங்கள் சிறப்பான பலன்களைத் தரும். உரிய பரிகார வழிபாட்டு முறைகளை கடைபிடித்து வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    செல்: 98652 20406

    • மனம் வருந்திய வைணவர், இதுவும் செந்தில்நாதனின் சூழ்ச்சியாக இருக்குமோ என்று சந்தேகம் கொண்டார்.
    • இருவைணவர் வரலாறு சிறந்த சான்றாக கூறப்படுகிறது.

    தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கிய இருவைணவர் மீது, தமிழ்க்கடவுளான திருச்செந்தூர் முருகனுக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது.

    திருச்செந்தூருக்கு வடக்கே 24 கி.மீ. தூரத்தில் ஆழ்வார் திருநகரி என்னும் ஊர் உள்ளது. அங்கு இரு வைணவர் என்னும் புனைபெயருடன் ஓர் அந்தணர் வாழ்ந்து வந்தார். அவர் வடமொழி தென்மொழியில் புலமை பெற்று இனிய தமிழ்ப்பாடல்கள் பாடுவதில் வல்லவராக விளங்கினார். இவர் பெருமாள் மீது ஆழ்ந்த தீவிர பக்தி கொண்டவர். ஆனால் ஆழ்வார்திருநகரியில் நின்று அருள்புரியும் ஆதிநாதக் கடவுளைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து வந்தார்.

    அவரது பாடல்கள் மீது ஆசை கொண்டார் செந்திலாண்டவர். அவரைச் சோதிக்க வேண்டும் என்று கருதி ஒரு நாள் அவர் கனவில் தோன்றினார். எப்படி தோன்றினார் தெரியுமா, ஆதிநாதர்வடிவத்தில் தோன்றினார். அதை பார்த்து இரு வைணவர் பரவசமடைந்தார். ஆதிநாதர் கையிலே வேலாயுதம் இருக்கக் கண்டு திகைத்தார். காட்சியளிப்பவர் முருகப்பெருமானே என தெரிந்து கொண்டார். செந்திலாண்டவர் தம்மைப் பற்றி பாடுமாறு பணித்தார். 'பெருமாளைப் பாடிய வாயால் பெருமானைப் பாட மாட்டேன்' என மறுத்தார் வைணவர்.

    தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கிய இருவைணவர் மீது, தமிழ்க்கடவுளான திருச்செந்தூர் முருகனுக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. இவரை ஆட்கொண்டு அதன்மூலம் பாடல் பெற விரும்பினான். அதனால் முருகப்பெருமான் இவர் கனவில் தோன்றி தன்னைப் பற்றிப் பாடுமாறு மீண்டும் கேட்டுக்கொண்டான். ஆனால், பெருமாளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் மதிக்காத அந்தத் தீவிர இருவைணவர், கனவில் வந்து முருகன் இடையூறு செய்துவிடுவாரோ என்று பயந்து, மறுநாள் தூங்காமலேயே விழித்திருந்தார்.

    அதன்பின், தமது இஷ்டதெய்வமான ஆழ்வார் திருநகரி ஆதிநாராயணரிடம், பெருமாளே! நீயே எனக்கு தெய்வம். உன்னை அன்றிச் செந்தில்நாதனை நான் பாடினால் என் கற்புநெறி பிழைபடுமல்லவா? அவ்வாறு ஏற்படாமல் என்னை நீ காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீடு திரும்பினார்.

     

    மறுநாள் இரவு அந்த வைணவரின் கனவில் பெருமாளே தோன்றினார். சங்கும் சக்கரமும் தாங்கிய கோலத்தில், ஆதிநாராயணர் தோன்றித் திருச்செந்தூர் வேலவனை வழிபடுவதில் உனக்குத் தயக்கம் ஏன்? நீ பேதம் பார்க்க வேண்டாம் என்று கூறினார். கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்த இருவைணவர் மீண்டும் விழித்திருந்து பெருமாள் கோவிலுக்கு ஒடினார்.

    அப்போது மூலஸ்தான மூர்த்தியாக விளங்கிய ஆதிநாராயணன், தம் அடையாளங்களாகிய சங்கு சக்கரத்தை மறைத்து, மயிலின் மீது வேலாயுதம் தாங்கிய கரத்தோடு காட்சி தந்தார். தாம் கண்ட காட்சி கனவா நனவா என்று பயந்த இருவைணவர், உற்று நோக்க, மயில் மீது அமர்ந்த வேலவனே காட்சி தந்தார். அதைக் காண விரும்பாத அவர், வீடு திரும்பினார். அவரது மனம் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தது.

    உணவு உண்ணாமல் உறக்கமும் இல்லாமல் தவித்துத் தம்மை அறியாமல் அயர்ந்து தூங்கினார். அப்பொழுது மீண்டும் அவருக்கு ஒரு கனவு தோன்றியது. அக்கனவில் ஆதிநாராயணப் பெருமாள் காட்சிதந்தார். இக்காட்சியைக் கண்ட இருவைணவர், மனம் மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

    நாராயணனை நோக்கி, "உன்னைத் தவிர எனக்கு வேறு தெய்வம் இல்லை என்பதில், நான் உறுதியாக இருக்கின்றேன். இந்நிலையில் தாங்கள் மயில் மீது முருகன் தோற்றத்தில் காட்சி தருவது முறையோ? மனைகள்தோறும் மண்டையோட்டில் பலிகொண்டு உழலும் பித்தனாகிய சுடலையாண்டியின் மகனான பித்தனையா நான் பாடுவது? கோவிந்தனைப் பாடித் திளைத்து நின்ற நான், கோவண ஆண்டியைப் பாடுவது முறையோ? பேயுடன் ஆடி புலித்தோல் உடுத்தித் திரியும் ஒருவனின் மகனையா நான் பாடுவது? "என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் கூறிய நாராயணர், "அன்பரே! திருச்செந்தூர் முருகப் பெருமானை நீ இகழ வேண்டாம். அவனே பரம்பொருள். நாங்கள் அனைவரும் அப்பரம்பொருளின் துணைகொண்டு நிற்கும் சக்திகள். ஈசன் ஒருவனே. அவனே ஆடலால் ஆறுமுகன் தோற்றத்தில் எழுந்தருளியுள்ளான். பிறப்பு, இறப்பு இல்லாத தெய்வமே முருகன். முருகன் வேறு யாருமில்லை. என்னுடைய மருமகன் தான். எனவே, அவனைத் தயங்காமல் பாடுவீராக" என்று கூறக் கனவு மறைந்தது.

     

    இதனால் மனம் வருந்திய வைணவர், இதுவும் செந்தில்நாதனின் சூழ்ச்சியாக இருக்குமோ என்று சந்தேகம் கொண்டார். என்றாலும், முருகனைப் புகழ்ந்து பாடிட அவர் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பாடுவதும், வணங்குவதும் பெருமாளை அன்றி வேறு எவரையும் வணங்குவதில்லை. இதை நான் கற்பு நெறியாகவே வைத்துள்ளேன். ஆனால், இன்றோ எனது திருமாலே என்னைப் பாடச்சொல்லி ஆணையிடுவதால், நான் உயிர் வாழ விரும்பவில்லை என்று முடிவு எடுத்தார். எனவே, இருவைணவர் தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில், திருநெல்வேலியின் குறுநில மன்னரான வடமலையப்ப பிள்ளையன் ஆழ்வார் திருநகரியில் தங்க நேர்ந்தது. அப்போது அவரது கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றினார். இருவைணவரின் நிலையைக் கூறி, அவரது உயிரைக் காப்பதற்காகப் பொன் விலங்கிட்டுப் போற்றுக என்று கூறி, மறைந்தார்.

    உடனே திடுக்கிட்டு எழுந்த மன்னன் வடமலை இருவைணவரின் வீட்டிற்குச் சென்றார். வீட்டின் கதவை உடைத்தார். அப்போது இருவைணவர் உயிரைப் போக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். உடனே வடமலையப்ப பிள்ளை, தமது மார்பில் அணிந்திருந்த பெரிய தங்கச் சங்கிலியால் அவர் கைகளைக் கட்டி விலங்கிட்டார். என்றாலும் அவரை உரிய மரியாதையுடன் நடத்திவருமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.

    தற்கொலை முயற்சி தவறியதாலும், மன்னனின் அறிவுரையாலும் இருவைணவர் கலக்கம் மறைந்து, தெளிவு ஏற்பட்டது. முருகப்பெருமானின் பெருமையும் புலப்பட்டது. இதனால் திருச்செந்தூர் முருகன் மீது விருப்பம் ஏற்பட்டது.

    திருச்செந்தூர் முருகன் மீது பதிற்றுப் பத்தந்தாதி பாடத் தொடங்கினார். அதில் எட்டாவது பாடலைப் பாடும் போது அவரது கையில் கட்டி வைக்கப்பட்ட விலங்கு படீரென உடைந்தது. அந்தப் பாடல்,

    செய்வதொன் றறிகிலேன் செழுமென் போதுதாட்

    பெய்வதொன் றறிகிலேன் பேதையேன்சுடர்

    வைதிகழ் வேற்படை முருக! என்றளை

    கொய்தெனக் கிரங்கியாட் கொள்ளவேண்டுமால்

    இதைக் கண்ட காவலர்கள், மன்னர் வடமலையிடம் இதுபற்றி கூறினர். உடனே வடமலையும், அந்த இருவைணவரை வணங்கி, அவருக்கு அனைத்து மரியாதைகளையும் செய்து சிவிகையில் ஏற்றித் திருச்செந்தூருக்கு அழைத்து வந்தார். ஒரு நன்னாளில் புலவர்கள் மடாதிபதிகள், சிற்றரசர்கள் நிறைந்திருக்க, சிறைவிடு அந்தாதி என்ற பெயரில் அவர் பாடல்கள் அரங்கேறின.

    இந்தப் பாடல், அதன் சிறப்புக் கருதி, அப்பகுதியில் அக்காலத்து அனைத்துத் திண்ணைப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கடவுளான முருகன், புலமை வாய்ந்த தமிழ் எங்கிருந்தாலும் அதைத் தேடிப் பெற்றுக்கொள்வதில் பேதம் பார்க்காதவன் என்பதற்கு, இருவைணவர் வரலாறு சிறந்த சான்றாக கூறப்படுகிறது.

    இதே போன்று திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • ஒரு மணி நேரமாவது செல்போன், கம்ப்யூட்டர் பார்க்காது இருங்கள்.
    • நாளை மூன்று வேலை உணவு, பழங்கள், காய்கறிகளை இன்றே ரெடி செய்து விடுங்கள்.

    உடல் எடையை குறைக்க வேண்டும் என அன்றாடம் போராடுபவர்கள் ஏராளம். இதில் முயற்சி பலன் அளிக்கவில்லை என்று நொந்து பேசுபவர்கள் ஏராளம். 30 வகையான ஒழுக்க விதிகளை நாம் மேற்கொண்டு சுற்று முயன்றுதான் பார்ப்போமே.

    * எப்போதும் எழும் நேரத்தினை விட 15 நிமிடம் முன்னால் எழுந்து பாருங்களேன். பொதுவில் 7 அல்லது 8 மணி நேர தூக்கம் வலியுறுத்தப்படுகின்றது. காலை 6 மணிக்கு எழும் பழக்கம் உள்ளது என்றால் 5.45 மணிக்கு எழும் பழக்கத்தினை ஏற்படுத்தி பாருங்களேன்.

    * எழுந்தவுடன் முதல் வேலையாக உங்கள் படுக்கையினை தட்டி சீர் செய்வது, போர்வையினை மடிப்பது என்று செய்யுங்கள். பல் சுத்தம் செய்த பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்.

    * நாலு நல்ல வேலைகள் அன்று செய்ய வேண்டியதனை எழுதுங்கள்.

    * 5 நிமிடம் நீங்கள் வேலை செய்யும் இடத்தினை சுத்தம் செய்து முறைப்படுத்துங்கள்.

    * 5 நிமிடம் யோகா செய்ய வேண்டும்.

    * கடந்த வாரம், கடந்த சில நாட்களில் எவை நடந்தது? எவை நடக்கவில்லை? ஏன் நடக்கவில்லை? என்று ஆராயுங்கள்.

    * ஒரு மணி நேரமாவது செல்போன், கம்ப்யூட்டர் பார்க்காது இருங்கள்.

    * 25 நிமிடம் அதிக கவனத்துடன் கூடிய வேலை, பின்னர் 5 நிமிடம் ஓய்வு என்று பழகுங்கள்.

    * நாளை மூன்று வேலை உணவு, பழங்கள், காய்கறிகளை இன்றே ரெடி செய்து விடுங்கள்.

    * காலையில் தேவையற்ற விஷயங்களை செல்போனில் பார்ப்பதனை அடியோடு நிறுத்துங்கள்.

    * 20 நிமிட நடைபயிற்சி அன்றாடம் கட்டாயம் செய்ய வேண்டும்.

    * 5 நிமிடமாவது தியானம் செய்யலாம். எதனையும் நினைக்காது, உடல் அசையாது இருக்கலாம்.

    * தள்ளி.... தள்ளி போகும் ஒரு சாதாரண வேலையினை உடனடியாக முடியுங்கள். ஒரு கெட்ட பழக்கம் (உதாரணம்) 4 காபி குடிப்பது போன்றதினை ஒரு நாளாவது நிறுத்திப் பாருங்களேன்.

    * இந்த நேரத்திற்குள் இந்த வேலையினை முடிக்க வேண்டும் என்று நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அதனை நிதானமாய், பரபரப்பின்றி முழுமையாய், வெற்றியாய் செய்து முடியுங்கள்.

    * மனதார நன்றி சொல்லுங்கள்.

    * புது முயற்சியாக ஏதாவது கற்றுக் கொள்ளலாம்.

    * சமீபத்தில் நீங்கள் செய்த தவறின் மூலம் கற்றுக் கொண்ட பாடத்தினை எழுதுங்கள்.

    * காலை, மாலை என வேலையினை பிரித்து செய்யுங்கள்.

    * ஒரு வாரத்திற்கான உணவு பட்டியலை யோசித்து தயார் செய்யுங்கள்.

    * ஒரு சிறு தர்மம் அன்றாடம் இருக்கட்டும்.

    * செல்போனில் மூழ்குவது என்பதனை நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் தான் என ஒதுக்குங்கள்.

    * உங்கள் முன்னேற்றத்தினை அளவிடுங்கள்.

    * பெரிய எண்ணங்கள், உதாரணம் டாக்டர் ஆவது போன்றவை. இவற்றிற்கு அன்றாடம் சிறிது நேரம் கவனம், உழைப்பு தர வேண்டும்.

    * நொறுக்கு தீனி ஒன்றினை ஆரோக்யமானதாக மாற்றுங்கள்.

    * 30 நிமிடங்கள் அன்றாடம் நல்ல புத்தகம் ஒன்றினை படியுங்கள்.

    * உங்கள் முன்னேற்றங்களை கர்வமின்றி மனதில் கொண்டாடுங்கள்.

    இவையெல்லாம் உடல் இளைப்பிற்கு உதவுமா? என்றால் உதவும். ஒழுக்கமான ஒவ்வொரு பழக்கமும் உடலுக்கும், மனதிற்கும் நிறைந்த ஆரோக்கியத்தினைத் தரும். நீங்களே ஒவ்வொரு வரியினையும் படித்து சிந்தித்துப் பாருங்கள்.

    மேற்கூறிய அறிவுரைகளை ஆய்வு கட்டுரையாக ஒரு மருத்துவர் வெளியிட்டுள்ளார்.

    பலர் உடல் எடை குறைப்பிற்காக இரவில் பசி எடுத்தால் பச்சை காய்கறி 'சாலட்' எடுத்துக் கொள்கின்றனர். இவை பலருக்கு செரிமான கோளாறு, வயிறு உப்பிசம் போன்றவற்றினை ஏற்படுத்தி விடுகின்றது.

    கமலி ஸ்ரீபால்

    காலை, மதிய உணவில் இவ்வாறு எடுத்துக் கொள்ளும் பொழுது பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. காரணம் சீரண மண்டலம் அப்பொழுது நன்கு இயங்குகின்றது. பொதுவில் 'சாலட்' என்பது சிறிதளவு எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு, சீரக தூள், மிளகு தூள், புதினா, கொத்தமல்லி இலை இவை கலந்து சாப்பிடுவது நல்லது.

    * ஏன் நம் உடம்பில் கொழுப்பு குறையாது இருக்கின்றது. எடை குறையாது இருக்கின்றது என்பதற்கு கீழ் கண்டவையும் காரணமாக இருக்கலாம்.

    * போதுமான அளவு தூக்கமின்மை. உணவில் போதுமான அளவு நார்சத்து இன்மை. போதிய அளவு நீர்சத்து இன்மை.

    * அதிக எண்ணெய் சேர்த்து பொரித்த, வறுத்த உணவுகளை உட்கொள்ளுதல் தேவையான அளவு புரதம் இன்மை.

    * முறையான அங்கீகரிக்கப்பட்ட உடற்பயிற்சி இன்மை.

    * அதிக கலோரி சத்து உள்ள உணவுகள். அதிக சர்க்கரை உணவு. அதிக பதப்படுத்தப்பட்ட உணவு. அதிக கார்போஹைட்ரேட் உணவு ஆகியவையும் முக்கிய காரணங்கள் ஆகின்றன.

    * சிலர் உணவுக்குப் பின் பழங்களை உட்கொள்ளும் போது உப்பிசம், காற்று என்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. உணவுக்கு அரை மணி நேரம் முன்பு பழங்களை எடுத்துக் கொள்ளும் போது ஆரோக்கிய குடல், சக்தி, நச்சு நீங்குதல், போன்ற நன்மைகள் ஏற்படுவதாக ஆயுர்வேதம் கூறுகின்றது.

    * ஆரோக்கியம் என்பது 80 சதவீதம் முறையான சரியான உணவிலும், 20 சதவீதம் முறையான, சரியான உடற்பயிற்சியிலும் உள்ளது.

    * வளமை என்பது 80 சதவீதம் குணம், பழக்க வழக்கங்களாலும், 20 சதவீதம் கணக்காக வாழ்வதிலும் இருக்கின்றது.

    * பேச்சு என்பது 80 சதவீதம் பிறர் பேசுவதை கவனிப்பதிலும், 20 சதவீதம் தேவையான அளவு பேசுவதிலும் இருக்கின்றது.

    * கற்பது என்பது 80 சதவீதம் புரிந்து கொள்வதிலும், 20 சதவீதம் படிப்பதிலும் உள்ளது.

    சாதிப்பது என்பது 80 சதவீதம் உழைப்பிலும் 20 சதவீதம் அதனைப் பற்றிய எண்ணத்திலும் இருக்கின்றது.

    * உறவு என்றாலே 80 சதவீதம் கொடுப்பதும், 20 சதவீதம் பெறுவதும் ஆகும்.

    * முன்னேற்றம் என்பது 80 சதவீதம் விடா முயற்சியும், 20 சதவீதம் அதனைப் பற்றிய சிந்தனையிலும் இருக்கின்றது.

    இதெல்லாம் செய்கின்றோமா?

    ஒருவரோடு பிரச்சினை என்றால் அந்த எதிர் நபர் மீது மென்மையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த பிரச்சினையை கடுமையாக கையாண்டு நீக்கி விட வேண்டும்.

    நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பாடத்தினை நமக்கு சொல்லித் தருவதற்காகவே வருகின்றார்கள்.

    பொறுமையாய், நிறுத்தி நிதானமாய், நேராக பார்த்து, தன்னம்பிக்கையுடன் பேசுகின்றோமா?

    பிறரை முக்கியத்துவம் வாய்ந்தவராய் நடத்துகின்றோமா?

    பிறரின் பெயரினை ஞாபகம் வைத்து அழைக்கின்றோமா?

    மற்றவர் முன் ஒருவரை பாராட்டி, தனிமையில் அவரது தவறுகளை சுட்டிக் காட்டி திருத்துகின்றோமா?

    அலுவலகமோ, வீடோ அவர்களின் செயல்களுக்கு கருத்து கூறும் பொழுது அவரை கவனிக்கின்றோம் என்ற உணர்வு ஏற்படும். செய்கின்றோமா?

    பிறருக்கு உதவுகின்றோமா?

    ஒருவர் அழைத்தால் அதற்கு பதில் அளிக்கின்றோமா?

    குற்றம், குறைகள் என சதா கூறாமல் இருக்கின்றோமா?

    பிறருக்கு உண்மையாக இருக்கின்றோமா?

    அதிகமாக, மிக அதிகமாக நண்பர்களை நம்புவதனை கட்டுப்படுத்து கின்றோமா?

    தேவையை விடவும் கூட அளவாக பேசுகின்றோமா?

    எதிலும் மிகவும் சரியானவன், நேர்த்தியானவன் என்று காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றோமா?

    நேரத்தினை சரியாக கையாளுகின்றோமா?

    செயல்கள் மூலமே வெற்றி, தாக்கத்தின் மூலம் அல்ல என்பதனை கடைபிடிக்கின்றோமா?

    நாம் இல்லாததனை அங்குள்ளவர்கள் இல்லையே என ஏங்குகின்றார்களா? அல்லது கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்களா?

    மற்றவர்களுடன் இருக்கும் போது நம் நாக்கு நல்ல கட்டுப்பாட்டில் நன்கு இருக்கின்றதா?

    தனிமையில் நம் மனம் நன்கு நம் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா?

    * கோபம் தலைக்கேறி ஆடாது இருக்கின்றோமா?

    * கண்ட நேரத்தில் உணர்ச்சி கொந்தளிக்காது இருக்கின்றோமா?

    * நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட, வசதியான, மகிழ்ச்சி காலத்தில் மண்டை கனம் பிடித்து ஆடாமல் இருக்கின்றோமா?

    இந்த பதில்கள் உங்கள் மன நலனையும், உடல் நலனையும் தீர்மானிக்கின்றது.

    மேலும் மன நலம் என்பது மிக முக்கியமானது. நம் மரியாதையை நாம் காப்பாற்றிக் கொண்டாலே நம் மன நலம் நன்று இருக்கும்.

    ஆகவே * யாரிடமும் எதற்காகவும் கெஞ்சாதீர்கள். ஆனால் கெஞ்சுவது இறைவனிடம் இருக்கட்டும். சித்தர்களிடம் மன்றாடுங்கள், கெஞ்சுங்கள்.

    * பிரபஞ்சத்திடம் கையேந்துங்கள். உங்கள் ஆத்மாவோடு அழுது பேசுங்கள். உங்கள் தன்னம்பிக்கையினை விடாது பிடித்துக் கொள்ளுங்கள்.

    * யார் உங்களை மதிக்கவில்லையோ அவர்களை திரும்பி கூட பார்க்க வேண்டாம்.

    * உங்கள் உடல் நலம், உங்கள் தேவை இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

    * மரியாதை இல்லாத இடம் நம் நிழல் கூட படக்கூடாத இடம்தான்.

    * சுத்தமான ஆடை, சீவிய தலை, சுத்தமான நகங்கள் என நல்ல தோற்றத்தோடு இருங்கள்.

    * பிறரைப் பற்றிய ஊர் வம்பினை கிட்ட வர விடாதீர்கள்.

    * பிறர் உழைப்பில் வாழாதீர்கள்.

    * வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள். கவனமாகக் கையாளுங்கள்.

    * மவுனம் மிகவும் பலமானது. வார்த்தைகள் பலவீனமானவை.

    * நம்பிக்கை உடைந்து விட்டால் மன்னிப்பு வேண்டுதல் அங்கு எடுபடாது.

    * நாம் உண்மையாய் இருந்தாலே போதும். வேண்டாதவர்கள் நம்மை விட்டு விலகி விடுவார்கள்.

    * அதிகமாக எதற்கும் எரிமலை ஆக வேண்டாம். இவை இருந்தால் மனநலம் நன்றாக இருக்கும்.

    • மென்மை என்பது ஒரு பொருளோ அல்லது ஒரு செயலோ எதற்கும் வளைந்து கொடுக்கக் கூடியது
    • 'அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவ மாட்டார்கள்' என்று ஒரு பழமொழிகூட வன்மைக்கு ஆதரவாக இருக்கிறது.

    ஒரு காரியத்தைச் சாதிக்க நாம் கைக்கொள்ள வேண்டிய அணுகு முறை மென்மையா? அல்லது வன்மையா? என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    ஒரு நாட்டின் நிருவாகமாக இருந்தாலும் சரி!, ஓர் அலுவலகத்தின் நிருவாகமாக இருந்தாலும் சரி!, ஒரு குடும்பத்தின் நிருவாகமாக இருந்தாலும் சரி!, அதில் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள், தம் உடன் இருக்கக் கூடியவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டுமா? அல்லது மென்மையாக நடந்து கொள்ள வேண்டுமா?. இல்லத்தில் பெற்றோர் தொடங்கி, பள்ளி, கல்லூரி, அலுவலகம், காவல் துறை, நீதிமன்றம், அரசாங்கத்தை ஆட்சி செய்வோர் வரை எல்லா இடங்களிலும் சற்றுக் கடுமையாக நடந்துகொண்டால்தான் எண்ணிய காரியம் எண்ணியதைவிட விரைவாகவே நடக்கிறது; சரியாகவே நடக்கிறது என்று சிலர் வன்மைக்கு ஆதரவாகக் கூறலாம். இனிமையாக எடுத்துக் கூறி, அன்போடு சாதக பாதகங்களை எடுத்து விளக்கி வேலை வாங்கினால் நடக்காத காரியம்கூட அன்புக்குக் கட்டுப்பட்டு நடக்கும் என்று சிலர் மென்மைக்கு வக்காலத்து வாங்கலாம்.

    'அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவ மாட்டார்கள்' என்று ஒரு பழமொழிகூட வன்மைக்கு ஆதரவாக இருக்கிறது. 'அடியாத பிள்ளை படியாது' என்று அந்தக் காலப் பள்ளிக்கூடங்களில், அடிக்கு ஆதரவாகக் கூடப் பழமொழிகள் உண்டு. சேட்டை செய்யும் மாணவரின் பெற்றோரே ஆசிரியரிடம் நேரில் வந்து, 'கண்ணு மூக்கு காது தவிர உடம்பின் மற்ற எல்லா பாகங்களின் தோலையும் உரியுமளவுக்கு அடியுங்கள் ஆசிரியரே' என்று சொந்தப் பிள்ளையை அடித்துக் கண்டிக்க ஆசிரியருக்கு அனுமதி வழங்கிய காலங்களும் உண்டு.

    ஆனால், இன்று பள்ளிக் கூடங்களில் அடி மட்டுமல்ல; கடுமையான வாசகங்களைப் பேசித், திட்டிவிடக்கூடக் கூடாது என்பது நடைமுறை உத்தரவாக இருக்கிறது; ஆசிரியர் வகுப்பறைக்குள், அளவெடுக்க அடிஸ்கேலை எடுத்துச் சென்றால்கூட அது பெருங்குற்றம் என்று கூறப்படுகிறது.

    வீடுகள் ஒரு காலத்தில் அடி உதைகளின் ஏகபோகக் குடியிருப்பாக இருந்தது. கணவன் மனைவியை அடிப்பது; மனைவி கணவனை அடிப்பது, பெற்றோர் பிள்ளைகளை அடிப்பது; இளையோர் மூத்தோர்மீது கை ஓங்குவது… என இப்படிச் சகல நிலைகளிலும் அடி உதைகள் வீடுகளில் கூடிக் கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தன.

    இன்று குரலை உயர்த்தித் திட்டினாலே அது குடும்ப வன்முறைக் கணக்கில் சேர்ந்து விடுகிறது. "நீ எடுத்திருக்கிற மதிப்பெண்களுக்கு, எதிர்காலத்தில் நீ மாடுதான் மேய்ப்பாய்!" என்று பெற்றோர்கள் திட்டுவதுகூட பிள்ளைகள் திருந்தி நல்ல நிலைக்கு மாற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பின் காரணமாகத்தான். ஆனால் அந்தத் திட்டுதலைக்கூட அவமானமாக எடுத்துக் கொண்டு, பிள்ளைகள் எதிர்மறையான போக்கில் எதிர்வினை ஆற்றினால் என்ன செய்வது?.

    சுந்தர ஆவுடையப்பன்


     

    அரசாங்கங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும், அலுவலகங்களில் நிருவாகத் தலைமைகளில் இருப்போரும், தங்களுக்குக் கீழே பணியாற்றக் கூடியவர்களிடமிருந்து, உரிய நேரத்தில், உரிய காரியங்கள் நடந்தாக வேண்டும் என்பதற்காகக், கடிந்து கொள்வது, விளக்கக் குறிப்புக் கேட்டு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவர். ஒரு பெரிய நிருவாகத்தில், தனித்தனியே மென்மையாக நடந்து கொண்டாலும், ஒட்டு மொத்தமாகக் கடுமையாக நடந்துகொள்வதே எதிர்பார்க்கும் பலனை அளிக்கும்.

    எனவே மென்மையும் வன்மையும் செயலின் தன்மை மற்றும் செயலாற்றுவோரின் குணாதிசயம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையவும் வாய்ப்புண்டு. திருவள்ளுவர், கல்லையும் பிழிந்து அதிலிருந்து தண்ணீர் கசியச் செய்யவேண்டும் என்கிற நிலையிலுள்ள கடின ஆசாமிகளிடம் நிருவாகத்தில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பின்வரும் குறளில் எடுத்துரைக்கிறார்.

    கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

    நீங்காமை வேண்டு பவர்

    அதாவது நிருவாகத்தில், ஒருவர் இழைத்து விட்ட தவறுக்கு தண்டனை வழங்க வேண்டிய சூழல் வந்து விட்டாலும், ஓங்கி அடிக்கக் கை ஓங்குவதுபோல ஓங்கிப், பிறகு மெல்லத் தட்டுதல் மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார். இந்த இடத்தில் வள்ளுவர் வலியுறுத்துவது, நிருவாகத்தில் ஒன்றைச் சரிசெய்வதற்கு, வன்மையைக் கையில் எடுப்பதுபோல எடுத்து, மென்மையான முறையில் அதனை முடித்து வைக்க வேண்டும் என்கிறார்.

    வன்மைக்கும் மென்மைக்கும் என்ன வேறுபாடு?.

    ஒரு பொருளோ அல்லது ஒரு செயலோ எதற்கும் வளைந்து கொடுக்காமல் உறுதியோடு இருப்பது வன்மை ஆகும். வன்மையான செயல்களில் அல்லது சொற்களில் காயங்கள் உடலிலும் மனத்திலும் உண்டாகலாம்; மேலே உள்ளவர்களுக்கும் கீழே உள்ளவர்களுக்கும் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். வேறு என்ன செய்ய? நிருவாகத்தில் எனக்குக் காரியம் நடந்தாக வேண்டுமே? அதற்காகக் கடுமையாகப் பேசித்தான் ஆகவேண்டும். கடுமை என்பது நிருவாகம் சார்ந்ததே தவிரத் தனிப்பட்ட முறையில் அதனை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சிலர் கூறுவர்.

    மென்மை என்பது ஒரு பொருளோ அல்லது ஒரு செயலோ எதற்கும் வளைந்து கொடுக்கக் கூடியது; எந்த வடிவத்திற்கும் மாறிவிடக்கூடியது; எதற்கும் உருகிவிடக் கூடியது; இலகுத் தன்மையும், எளிதில் துண்டுபடக் கூடியதுமாகிய மிருதுத் தன்மையும் கொண்டது. எதிலும் எளிதில் கரைந்துவிடக் கூடியது; கையாளக் கடினமற்றது. வன்மையை உறுதியான கல்லுக்கு உதாரணமாகக் கூறினால், மென்மையை மிருதுவான மலருக்கு இணையாகக் காட்டலாம்.

    நிருவாகத்தில் கல் நெஞ்சம் தேவையா? அது கக்குகின்ற எரிமலை வார்த்தைகள் தேவையா?. அல்லது மலர்போன்ற மெல்லிய இதயம் வேண்டுமா? அது பிலிற்றுகின்ற தேனினிமை வார்த்தைகள் வேண்டுமா?. வன்மையா? மென்மையா?.

    ஒரு நாட்டின் அரசன் அறிவிற் சிறந்தவன்; தன் காலத்திற்குப்பிறகு தன்நாட்டை நிருவாகம் பண்ணத் தனது மகனுக்குப் பயிற்சிதர விரும்பினான். அறிந்த அமைச்சர், அந்த நாட்டிலுள்ள தலைசிறந்த வில் வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம், யானையேற்றம், தேர்ப்படை ஆகியவற்றின் வீரர்களைக் கொண்டுவந்து அரசன்முன் நிறுத்தினான்.

    பார்த்த அரசன் அமைச்சரிடம் கூறினான்," இந்தப் பயிற்சிகளை எடுப்பதற்குமுன் ஒரு முக்கியமான பயிற்சி இருக்கிறது; அதற்கு இளவரசன், அடர்ந்த காட்டிற்குள் சென்று, அங்கே தவம் இயற்றிக் கொண்டிருக்கும் முனிவரிடம் பயிற்சியெடுத்துத் திரும்ப வேண்டும்" என்றார். இளவரசனும் காட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டு, முனிவரிடம் முறையான பயிற்சியும் தொடங்கினான்.

    " பயிற்சி ஒன்றுமில்லை!. நீ இந்தக் காட்டின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து, உன் காதில்விழும் காட்டின் ஓசையெல்லாம் கேட்டுவந்து சொல்!. ஒன்றும் அவசரமில்லை; பத்துநாள் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொண்டு பிறகு என்னிடம் வந்து, காட்டின் ஓசைகளாக என்னென்ன கேட்டாய் என்பதைச் சொல்!" என்று அனுப்பி வைத்தார் முனிவர். இளவரசனும் மிகுந்த பணிவோடு குருநாதரின் ஆணைக்கிணங்க காட்டிற்குள் சென்று, ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு காட்டின் ஓசைகளைக் கவனிக்கத் தொடங்கினான். பத்து நாட்களுக்குப் பிறகு முனிவரைப் பார்க்க ஆசிரமம் வந்தான் இளவரசன். " சொல்! காட்டின் ஓசைகளாக என்னென்ன கேட்டாய்?" முனிவர் கேட்டார்.

    " பறவைகளின் ஓசைகளைக் கேட்டேன்!; அவை ஒவ்வொன்றன் குரலையும் வேறுபடுத்தி அறியவும் கற்றுக்கொண்டேன்; புலி, சிங்கம், கரடி, மான், யானை முதலான விலங்குகளின் ஓசைகளைக் கேட்டேன்; ஆறு, அருவி, இடி, மின்னல் இவற்றின் ஓசைகளையும் கேட்டேன்" என்றான் இளவரசன். " மகிழ்ச்சி!. அதே காட்டிற்குள் மீண்டும் செல்!; இப்போது ஒரு மாதம் அங்கேயே தங்கியிருந்து ஓசைகளைக் கூர்ந்து கவனித்துவிட்டு என்னிடம் வா!" என்று அனுப்பி வைத்தார் முனிவர். ஒரு மாதம் கழித்து, கூடிய முகப்பொலிவோடு முனிவரிடம் திரும்பிய இளவரசன், " குருநாதரே! இந்த முறை காட்டில், தேனீக்களின் ரீங்கார ஓசையைக் கேட்டேன்; சில் வண்டுகளின் ஓசை, இலைகள் காற்றில் படபடக்கும் ஓசை இவற்றையும் கேட்டேன் என்றான் இளவரசன்.

    "இப்போது மூன்றாவது முறையும் அந்தக் காட்டிற்குள் செல்!. மீண்டும் ஒருமாதம் அங்கேயே இரு. ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்தபடியே என்னென்ன ஓசைகளை உணரமுடிகிறது என்பதை உணர்ந்து வா!" என்று அனுப்பி வைத்தார் முனிவர். ஒருமாதம் கழித்து, இளவரசன் ஒரு முனிவரைப்போலவே சாந்த சொரூபத்துடன் முனிவர்முன் வந்து நின்றான்.

    "ஐயா!," இம்முறை பூக்கள் மலரும் ஓசைகளைக் கேட்டேன்!; பனித்துளிகள் புற்களில் உடைபடும் ஓசையினைத் துல்லியமாகக் கேட்டேன். சூரியக்கதிர்கள் பூமியைச் சூடேற்றும் ஓசையையும் உணர்ந்தேன்!" என்றான் இளவரசன். முனிவர் இளவரசனைப் பார்த்துச் சொன்னார், "உனக்குப் பக்குவம் வந்துவிட்டது. உனது நாட்டிற்குச் சென்று, நாடாளும் பொறுப்பை உடனே ஏற்றுக்கொள்!. வாய்திறந்து சொல்லப்படுகிற குறைகளுக்கும் மேலாக, உணர்ச்சிப் பிழம்பாய் உலவும் மக்களின் மனவோட்டங்களைக் கேட்டுப் பழகு!. உணர்வுகள் புலப்பட்டால் உண்மை புலப்படும்; உணர்வுகளைப் புரிந்துகொண்டால் உண்மைகளைத் தாமாகவே உணர்ந்து கொள்ளலாம்".

    ஆம்!. நாம் மனத்தில் எண்ணும் எண்ணங்களே வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. மனிதர்கள் வாய்திறந்து பேசுகின்ற சொற்களை நமது செவிகள் கேட்கின்றன என்றால், அவர்கள் பேசாத, பேச நினைக்கின்ற சொற்களை நமது இதயம் உணர வேண்டும். ஆளுகின்ற தலைவன், மக்கள் கூறுகின்ற குறைகளை மட்டுமல்லாது கூற விழைகின்ற குறைகளையும் உணர்ந்துகொண்டு களைபவனாக இருக்க வேண்டும். அதைப்போலத்தான் அலுவலகத்திலும். நாம் எதிர்பார்க்கிற பலனை மற்றவர்கள் மூலம் நாம் பெற வேண்டுமென்றால் அவர்கள் எதிர்பார்க்கின்ற பலனை அவர்கள் கூறாமலேயே நாம் செய்து முடிக்க வேண்டும்.

    குடும்பத்திலும் கடுமையேதும் இல்லாமல் மென்மையாகவே நாம் எதிர்பார்த்தபடி எல்லாம் நடைபெற வேண்டுமென்றால், உணர்வுரீதியாக உணர்ந்துகொண்டு செயல்படும் மென்மைத் தன்மையை வளர்த்தெடுக்க வேண்டும். உணர்வுகள் மென்மையானவை; அவற்றை இயந்திரங்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. நிருவாகத்தில் எல்லாம் இயந்திரம்போலத் துல்லியக் கணக்கில் துரிதகதியில் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. மனிதர்களுக்குள் எல்லாம் மாண்புடன் நடைபெற வேண்டுமானால், 'கடிதோச்சி மெல்ல எறியும்' உத்தியே சிறந்த முறையில் கையாளப்பட வேண்டும். அப்போதுதான் நிருவாகம் மனித நேயம் சார்ந்ததாகப் பயன் விளைவிக்கும்.

    தொடர்புக்கு - 9443190098

    ×