என் மலர்
இந்தியா

146 கோடி இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களை புறக்கணித்தால் என்ன ஆகும்?.. டிரம்புக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்
- அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவிடம் இருந்து யுரேனியம், பல்லேடியம் போன்ற முக்கிய பொருட்களை வாங்குகின்றன.
- இந்தியா ஒரு 'இறந்த பொருளாதாரம்' என்று நீங்கள் கூறினீர்கள்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது தெரிந்ததே.
இந்நிலையில் அதிபர் டிரம்ப்புக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. அசோக் குமார் மிட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், " இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்தியர்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்?. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை கண்டித்து எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவிடம் இருந்து யுரேனியம், பல்லேடியம் போன்ற முக்கிய பொருட்களை வாங்குகின்றன.
அமெரிக்காவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. இந்தியா ஒரு 'இறந்த பொருளாதாரம்' என்று நீங்கள் கூறினீர்கள், ஆனால் எங்கள் பொருளாதாரம் உலகின் நான்காவது பெரிய மற்றும் வேகமாக வளரும் நாடாக உள்ளது. இரு நாடுகளின் பொருளாதாரங்களும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன" என்று தெரிவித்தார்.
மேலும், சுதேசி இயக்கத்தை மேற்கோள் காட்டி, அமெரிக்க நிறுவனங்களை இந்தியா கட்டுப்படுத்தினால் அமெரிக்காவுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும் என்று அவர் எச்சரித்தார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம், வற்புறுத்தல் வேண்டாம் என்று டிரம்ப்பை கேட்டுக்கொண்டார்.






