என் மலர்
உலகம்

நாங்கள் செய்த தவறு.. பாகிஸ்தான் மோதலில் இந்திய போர் விமானங்கள் இழப்பை ஒப்புக்கொண்ட முப்படைத் தலைமை தளபதி
- இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.
- நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது
மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற ஷாங்க்ரி-லா மாநாட்டில் பங்கேற்ற இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.
பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததா என்றும், 3 ரஃபேல் உட்பட ஆறு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது குறித்தும் அவரிடம் செய்தித் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசுகையில், மே 7 ஆரம்ப கட்ட தாக்குதல்களில் அவற்றை இழந்தோம், ஆனால் எத்தனை போர் விமானங்கள் இழந்தோம் என்பது முக்கியமல்ல, அவற்றை ஏன் இழந்தோம் என்பதுதான் முக்கியம்.
அவை ஏன் சரிந்தன, என்ன தவறுகள் செய்யப்பட்டன என்பதுதான் முக்கியம். நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் சரிசெய்தோம், இரண்டு நாட்களுக்குப் பிறகு எங்கள் அனைத்து விமானங்களும் மீண்டும் நீண்ட தூர இலக்குகளைத் தாக்கின" என்று அனில் சவுகான் கூறினார்.
இருப்பினும் பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அவர் மறுத்தார்.
மே 7 அன்று பாகிஸ்தானுடனான மோதல்களில் இந்திய போர் விமானங்களின் நிலை குறித்து இந்திய அரசாங்கமோ அல்லது இராணுவ அதிகாரியோ வெளிப்படையாக பேசியது இதுவே முதல் முறை.






