

குஜராத்தில் பல மணி நேரம் போலீசாரையே திக்குமுக்காட வைத்த ஒரு குற்றவாளியின் வீடியோ வைரலாகி வருகிறது.
துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த அபிஷேக் தோமர் என்பவன், போலீசார் தன்னை தேடி வந்ததை அறிந்ததும் ஐந்தாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான்.
அபிஷேக் தோமர் அகமதாபாத்தில் உள்ள சிவம் அவாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டின் கதவைத் தட்டியபோது, அபிஷேக் திறக்கவில்லை.
இதற்கிடையே, அபிஷேக் ஐந்தாம் மாடியில் உள்ள சமையலறை கதவு வழியாக வெளியே வந்து, சுவற்றின் ஓரத்தில் நின்றபடி தற்கொலை மிரட்டல் விடுத்தான்.
"சரணடைவதை விட சாவது மேல்" என்று அவன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தான். வீடியோ ஒன்றில் , "நீங்கள் என்னை எவ்வளவு மோசமாக நடத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். மரணம் அதைவிட சிறந்தது" என்று அபிஷேக் கூறுவது பதிவாகியுள்ளது.
அபிஷேக் தோமர் சுவற்றின் ஓரத்தில் நின்று மிரட்டல் விடுத்ததை பார்த்ததும், ஏராளமானோர் கீழே கூடினர்.
இதற்கிடையில், இந்த ஆபத்தான சூழ்நிலையை கையாள போலீசார் திணறினர். போலீசார் அவனை கண்ணியமாக நடத்துவதாக பலமுறை உறுதியளித்தும், அபிஷேக் சமாதானமாகவில்லை.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து சுமார் மூன்று மணி நேரம் போராடி, அபிஷேக்கை பத்திரமாக கீழே இறக்கினர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தின் பின் அபிஷேக் இறுதியாக கைது செய்யப்பட்டான்.