என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆதார், ஜி.எஸ்.டி., கிரெடிட் கார்டு நடைமுறையில் புதிய மாற்றங்கள்- நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது
    X

    ஆதார், ஜி.எஸ்.டி., கிரெடிட் கார்டு நடைமுறையில் புதிய மாற்றங்கள்- நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

    • இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது.
    • புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    நவம்பர் 1-தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதிகள் மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.

    இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், ஆதார் புதுப்பித்தலில் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டணங்கள், என்.பி.எஸ்-ஐ யு.பி.எஸ்-க்கு மாற்றும் காலக்கெடு நீட்டிப்பு, மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை ஆகியவை அடங்கும்.

    நவம்பர் 1-ந்தேதி முதல், வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்பு காப்பகப் பொருளுக்கு 4 நபர்கள் வரை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இந்த நடவடிக்கை அவசர காலங்களில் குடும்பங்களுக்கான நிதி அணுகலை எளிதாக்குவதையும், உரிமை தொடர்பாக எழும் சட்டப் பிரச்சனைகளைக் குறைக்க கொண்டு வரப்படுகிறது. மேலும் காப்பாளர்களைச் சேர்ப்பது அல்லது மாற்றுவது போன்ற நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு மற்றும் கட்டண அமைப்புகளிலும் மாற்றங்கள் காணப்பட உள்ளன. கல்வி தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.1,000-க்கு அதிகமாகச் செய்யப்படும் மூன்றாம் தரப்பு கட்டண செயலிகள் மற்றும் வாலெட் டாப்-அப்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு இனி 1 சதவீத கட்டணம் விதிக்கப்படும்.

    இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது. இதன் மூலம் ஆவணங்களைப் பதிவேற்றாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே திருத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்கள் போன்ற பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு, ஒரு நேரடி ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியது இன்னும் அவசியமாகும்.

    புதிய கட்டண அமைப்பின்படி, பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தல்களுக்கு ரூ.75-ம், பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு ரூ.125-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து தடையின்றி ஓய்வூதியம் பெற, ஓய்வு பெற்றவர்கள் நவம்பர் 1 முதல் 30 வரை தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்.) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யு.பி.எஸ்.) மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இது பதிவு செயல் முறையை எளிதாக்குவதற்கும், சிறு வணிகங்கள் இணங்குவதைச் சுலபமாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×