search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது
    X

    கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது

    • வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • வரும் 20ம் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது.

    சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

    இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதனை அடுத்து மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். அவ்வழக்கில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உரிய பதிலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வரும் 20ம் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது. ஆதலால் வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதனையொட்டி, கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை காலை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    Next Story
    ×