என் மலர்
இந்தியா

'தெலங்கானா காந்தி குடும்பத்தின் ஏ.டி.எம்.' - ரேவந்த் ரெட்டியை விமர்சிக்கும் பா.ஜ.க.
- காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா
- ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசிற்கு தெலங்கானா மக்கள் தகுதியானவர்கள் அல்ல
காந்திக் குடும்பத்திற்குத் தேவைப்பட்டால் தெலங்கானா காங்கிரஸ் தொண்டர்கள் ரூ.1,000 கோடி திரட்டி தருவார்கள் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறிய கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்தினர் நாட்டிற்காக மூன்று தலைமுறைகளாகத் தியாகம் செய்தவர்கள். உண்மையில், காந்தி குடும்பத்திற்கு பணம் தேவை என்றால், காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களுக்காக ரூ. 1,000 கோடியை ஏற்பாடு செய்ய முடியாதா? காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா எனப் பேசியிருந்தார்.
இதற்கு அம்மாநில பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கட்சியின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசியப் பொறுப்பாளர் அமித் மாளவியா,
"தெலுங்கானா இளைஞர்கள் டி.எஸ்.சி (ஆசிரியர் தேர்வு) அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கும் வேளையிலும், விவசாயிகள் ரைது பரோசா (விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டம்) உதவிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலிலும், காந்தி குடும்பத்தின் 'நிதித் தேவைகளுக்காக' ரூ.1,000 கோடியைத் திரட்டி தருவதாக முதலமைச்சர் பெருமை பேசுகிறார்.
சிறிது காலத்திற்கு முன்புதான், கடனைத் திருப்பிச் செலுத்தவும், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருந்தார். தெலங்கானா மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய வருவாய் பொது நலனுக்கா அல்லது டெல்லியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வம்சத்தினருக்கா?
காங்கிரஸ் கட்சிக்கு, தெலங்கானா என்பது வளர்ச்சி பெற வேண்டிய ஒரு மாநிலமா அல்லது வெறும் 10 ஜன்பத்க்கான ஏடிஎம் இயந்திரமா?
தெலங்கானா மக்கள் தங்கள் அபிலாஷைகள், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அரசிற்கு தகுதியானவர்கள்; ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசாங்கத்திற்கு அல்ல." என தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்திற்குப் பணம் ஒரு பொருட்டல்ல என்றும், அவர்கள் எப்போதும் நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார். மேலும், மோடி அரசாங்கம் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டுப் பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.






