search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அரசுக்கு தக்க பாடம் புகட்ட தயாராக வேண்டும்: சித்தராமையா
    X

    மத்திய அரசுக்கு தக்க பாடம் புகட்ட தயாராக வேண்டும்: சித்தராமையா

    • தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படியே ராணுவத்திற்கு ஆள்சேர்க்க வேண்டும்.
    • பொதுமக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.

    பெங்களூரு :

    அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடும் மத்திய பா.ஜனதா அரசுக்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட தயாராக வேண்டும் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு ராணுவத்திற்கு ஆள்சேர்ப்புக்கு அக்னிபாத் திட்டத்தை அறிவித்துள்ளது. நாட்டின் இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளும் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அபாயகரமான இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படியே ராணுவத்திற்கு ஆள்சேர்க்க வேண்டும்.

    ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால் வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளின் கதவுகளை ஒவ்வொன்றாக அவர் மூடி வருகிறார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை இல்லாத நிலையை உருவாக்கும் திட்டம் ஏதேனும் அவரிடம் உள்ளதா?. பணி பாதுகாப்பு இல்லாமை, எதிர்காலம் குறித்த பயம், பணியின் மீது பற்று இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் இருக்கும் இந்த அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்கள் தங்களின் தொழிலை முழுமையான காலத்திற்கு மேற்கொள்ள முடியுமா?.

    எதிரிகளுடன் போராடும் வீரர்களின் இந்த மனநிலை அபாயகரமானது அல்லவா?. நாட்டிற்காக உயிரை தியாகம் செய்யும் வீரர்களுக்கு பணி பாதுகாப்பு, நியாயமான சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியாத அளவுக்கு மத்திய அரசு திவாலாகிவிட்டதா?. மத்திய அரசு தனது திவால் நிலையை மூடிமறைக்க நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுவது சரியல்ல.

    ராணுவ வீரர்களின் வாழ்க்கையை பறிக்கும் இந்த தேசத்துரோக பா.ஜனதா அரசு வரும் நாட்களில் இதர துறைகளிலும் இதே நடைமுறையை அறிமுகம் செய்வது உறுதி. பொதுமக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. விவசாயிகளின் வாழ்க்கையை நாசப்படுத்த கருப்பு வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர். அதனால் மத்திய அரசுக்கு விவசாயிகள் பாடம் புகட்டினர். தற்போது இளைஞர்களின் வாழ்க்கையை நாசப்படுத்துவதுடன் அவர்களின் வாழ்க்கையில் விளையாடும் மத்திய பா.ஜனதா அரசுக்கு பாடம் புகட்ட பொதுமக்கள் தயாராக வேண்டும்.

    இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×