search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்தேஷ்காளி வழக்கு: சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க எதிர்த்து மேற்கு வங்காள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு
    X

    சந்தேஷ்காளி வழக்கு: சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க எதிர்த்து மேற்கு வங்காள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

    • ஷேக் ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த விவகாரத்தை கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தவர் ஷேக் ஷாஜகான்.

    இவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததாகவும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த விவகாரத்தை கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. பின்னர் ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஷேக் ஷாஜகானுக்கு எதிராக அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

    ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவரை கைது செய்துள்ளதாக மேற்கு வங்காள போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு மேற்கு வங்காள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மாநில போலீசார் முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். எனவே வழக்கை சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும் ஷாஜகானின் காவலையும், வழக்கு தொடர்பான பொருட்களையும் மாலை 4.30 மணிக்குள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கு வங்காள போலீஸ் தலைமை அலுவலகத்திற்குச் சென்று வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி ஷேக் ஷாஜகானை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர்.

    ஆனால் மேற்கு வங்காள போலீசார் அவரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்பு வரும் வரை ஷேக் ஷாஜகானை ஒப்படைக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்காள அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அவசர மனுவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

    Next Story
    ×