என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானாவில் அரசுப் பணம் ரூ.590 கோடி மோசடி - யாரும் தப்ப முடியாது என முதல்வர் எச்சரிக்கை
    X

    அரியானாவில் அரசுப் பணம் ரூ.590 கோடி மோசடி - யாரும் தப்ப முடியாது என முதல்வர் எச்சரிக்கை

    • ஒரு குறிப்பிட்ட அரசுத் துறை மட்டுமல்லாது, அந்த கிளையில் உள்ள அரியானா அரசின் பல கணக்குகளிலும் நடந்துள்ளது
    • ஒரு பைசாவை கூட விடமாட்டோம், அனைத்தும் மீட்கப்படும்.

    பாஜக ஆட்சியில் உள்ள அரியானாவில் மக்களின் பொதுப்பணம் ரூ. 590 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சண்டிகரில் உள்ள IDFC First Bank கிளையில் அரியானா அரசு நிறுவனங்களின் கணக்குகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்த வங்கி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

    அரியானா அரசுத் துறை ஒன்று தனது வங்கிக் கணக்கை மூடிவிட்டு, நிதியை வேறு வங்கிக்கு மாற்ற முயன்றபோது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆவணங்களில் காட்டப்பட்டத் தொகைக்கும், வங்கிக் கணக்கில் இருந்த உண்மையான இருப்புத் தொகைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.

    தற்போது வரை சுமார் ரூ.590 கோடி முறைகேடு நடந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

    இது ஒரு குறிப்பிட்ட அரசுத் துறை மட்டுமல்லாது, அந்த கிளையில் உள்ள அரியானா அரசின் பல கணக்குகளிலும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

    IDFC வங்கி வெளியிட்ட அறிக்கையில், "சண்டிகர் கிளையில் பணிபுரியும் சில ஊழியர்கள், பிற நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்களை செய்துள்ளனர்.

    இது அரியானா அரசின் குறிப்பிட்ட கணக்குகளில் மட்டுமே நடந்துள்ளது. மற்ற வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

    இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறை புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து நேற்று (பிப்ரவரி 23) அரியானா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, இந்த மோசடி குறித்து அரசுக்கு ஏற்கனவே தெரிந்ததா என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த முதல்வர் நயாப் சிங் சைனி, "இது குறித்து மாநில ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் விஜிலென்ஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    ஒரு பைசாவை கூட விடமாட்டோம், அனைத்தும் மீட்கப்படும். வங்கி ஊழியராக இருந்தாலும் சரி, அரசு ஊழியராக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட எவரும் தப்பிக்க முடியாது" என்று தெரிவித்தார். .

    இந்தச் சம்பவத்தை அடுத்து, அரசு தொடர்பான பணிகளை செய்ய அந்த வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×