search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தீவிரம் - ராகுல் காந்தியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு
    X

    கார்கே, ராகுலை சந்தித்த நிதிஷ் குமார்

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தீவிரம் - ராகுல் காந்தியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு

    • பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை நிதிஷ் குமார் இன்று சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று புதுடெல்லி வந்தார். அங்கு அவர் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் லாலு மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருந்த அவரைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

    ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில் தொடர்புடைய பண மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜரானார்.

    லாலு பிரசாத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நிதிஷ் குமார் இன்று சந்தித்தார். அப்போது அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் உடனிருந்தனர். இச்சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

    இந்த சந்திப்பு தொடர்பாக நிதிஷ் குமார் கூறுகையில், மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நாங்கள் ஒன்றாக இந்த விஷயத்தில் முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை 100 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என நிதிஷ் குமார் கூறியிருந்தார்.

    Next Story
    ×