என் மலர்
இந்தியா

கோப்புப் படம்
போலீசிடம் சரணடைய முயன்ற தளபதி.. சுட்டுக் கொன்ற நக்சல் தலைவர்
- அவர் தலைக்கு ரூ. 22 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
- போலீசாரிடம் சரணடைவது தொடர்பாக மாவோயிஸ்ட் குழுக்களுக்கு இடையே முரண்பட்டு நிலவுகிறது.
நாடு முழுவதும் நக்சலைட்டுகள் என்கவுன்டரும் சரணடைதலும் அண்மைக் காலமாக அதிகளவில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சரணடைய முயன்ற மாவோயிஸ்ட் தலைவரை உடன் இருப்பவர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்திலுள்ள பாகரி காப்புக்காடு பகுதியில், அன்வேஷ் (என்கிற ரேணு) என்பவரின் சிதைந்த உடலை போலீசார் நேற்று தோண்டி எடுத்தனர்.
கொல்லப்பட்ட அன்வேஷ், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கலகாண்டி-கந்தமால் நக்சல் பிரிவின் படைத் தளபதியாக இருந்தார். அவர் தலைக்கு ரூ. 22 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்வேஷ் மற்ற சில மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து ஒடிசா போலீசாரிடம் சரணடையத் திட்டமிட்டிருந்தார். இந்த முடிவை மாவோயிஸ்ட் தலைமை எதிர்த்ததால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மாநில மண்டலக் குழு தலைவர் சுக்ரு, கூட்டாளிகள் சிலா மற்றும் ஜாகேஷ் உதவியுடன் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
இதில் ஜாகேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம், போலீசாரிடம் சரணடைவது தொடர்பாக மாவோயிஸ்ட் குழுக்களுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






