என் மலர்
இந்தியா

பீகாரில் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை- மு.க.ஸ்டாலின்
- 1 மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது.
- கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாறி விட்டது தேர்தல் ஆணையம்.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* உங்களையெல்லாம் பார்ப்பதற்காக 2000 கி.மீ. கடந்து வந்திருக்கிறேன்.
* பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ் தான் நினைவிற்கு வருவார். கலைஞரும் லாலு பிரசாத்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
* பா.ஜ.க.வின் அடக்குமுறையை தாண்டி அரசியல் செய்வதால் லாலு பிரசாத் உயர்ந்து நிற்கிறார்.
* எத்தனையோ வழக்கு இருந்த போதிலும் தைரியமாக எதிர்கொண்டதால் உயர்ந்த அரசியல்வாதியாக இருக்கிறார் லாலு பிரசாத்.
* லாலுவின் வழியில் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
* 1 மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது.
* தேசத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் போர்க்குரல் எழுப்பி உள்ளது பீகார் மாநிலம்.
* ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவின் நட்பு அரசியல் நட்பு மட்டுமல்ல, 2 உடன்பிறப்புகளுக்கு இடையேயான நட்பு. இந்த நட்பு வெற்றியை பெற்று தரும்.
* பீகாரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை பறிக்க நினைக்கின்றனர்.
* மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர் பா.ஜ.க.வினர்.
* ஜே.பி.நாராயணன் செய்த பணியை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார்.
* 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை.
* கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாறி விட்டது தேர்தல் ஆணையம்.
* ராகுல் முன்னெடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்துவதற்காக பீகார் வந்துள்ளேன்.
* ராகுல் காந்தி வாக்கு திருட்டு மோசடிகளை அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறார்.
* சொந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குபவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






