என் மலர்
இந்தியா

இம்ரான் கான், பிலாவல் பூட்டோ எக்ஸ் பக்கங்கள் இந்தியாவில் முடக்கம்
- சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் ரத்தம் ஓடும் என பேசியிருந்தார்.
- மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் கண்டிப்பதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆகியோரின் எக்ஸ் சமூக வலைத்தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் அவர்களின் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டதாக எக்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா முன்னர் தடை செய்தது. பாகிஸ்தான் நடிகர், நடிகைகளின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன.
மேலும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் ரத்தம் ஓடும் என பேசியிருந்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு நீர் தடுக்கப்பட்டதன் பின்னணியில் அவர் இவ்வாறு பேசினார்.
மேலும் இம்ரான் கான் தனக்கு எக்ஸ் பக்கத்தில், "மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் ஒரு நாடாக வன்மையாகக் கண்டிக்கிறது" என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.






