என் மலர்
இந்தியா

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி: பிரதமர் மோடி உரை ரத்து... மக்களவை ஒத்திவைப்பு!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.
- இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனா உடனான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பிரதமர் உரையாற்றாமலேயே மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனா உடனான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேலும் முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள கருத்துகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
"சரணடைந்த மோடி" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய மக்களவை, பகல் 12 மணி, மதியம் 2 மணி மற்றும் மாலை 5 மணி எனப் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






