ராமர் கோவில் திறப்பு விழா கட்சி நிகழ்வாக மாறியுள்ளது- சித்தராமையா

தீண்டாமை, சாதிவெறி, மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்க்கிறோம்.அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என்ற அரசியல் சாசனக் கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.
ராமர் கோவில் திறப்பு விழா கட்சி நிகழ்வாக மாறியுள்ளது- சித்தராமையா
Published on

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் அழைப்பை நிராகரித்ததாக அறிவித்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ராமர் கோவில் திறப்பு விழா, பிரதமர் மோடியின் கட்சி நிகழ்வாக மாறியுள்ளது" என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

ராமர் கோவில் திறப்பு விழாவில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் சௌத்ரி ஆகியோர் பங்கேற்காததை ஆதரிக்கிறேன்.

சாதி, மதம், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வு, பிரதமர் மோடியின் கட்சி நிகழ்வாக மாறியுள்ளது. இது ராமர் மற்றும் 140 கோடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை.

பக்தியுடன் நடத்த வேண்டிய மதச் சடங்கை அரசியல் பிரசாரமாக மாற்றி, இந்துக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தீண்டாமை, சாதிவெறி, மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்க்கிறோம்.

பாஜக மற்றும் சங்பரிவார் தங்களின் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தும் தவறான இந்துத்துவத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என்ற அரசியல் சாசனக் கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com