என் மலர்
இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையர் பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் - இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆவேசம்
- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடுகிறார்.
- மக்களவையை கலைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் SIR சர்ச்சை தொடர்பாக 'இந்தியா' கூட்டணி தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளது.
நேற்று இந்த குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் நேற்று மாலை காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ, சமாஜ்வாடி கட்சி, திமுக, டிஎம்சி மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.
அதில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவின் ஊதுகுழலாக (mouthpiece) பேசுவதாகவும், SIR பட்டியல் மற்றும் முறைகேடுகள் குறித்த தங்கள் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கத் தவறிவிட்டதாகவும் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் பேசுகையில், " தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடுகிறார். வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை. ஜனநாயகம் அதைச் சார்ந்ததுதான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் அதைப் பாதுகாக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளை கேள்வி எழுப்பி தாக்குகிறது. தேர்தலுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் ஏன் இவ்வளவு அவசரமாக SIR மேற்கொள்ளப்பட்டது என்பதை விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். அவர்களின் விவகாரங்களை மறைப்பது ஜனநாயகத்தின் உணர்வை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த காலங்களில் போலி வாக்காளர் அட்டைகள் பிரச்சினையை எழுப்பியதாகவும், அது இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மைத்ரா கூறினார்.
மோசடி வாக்காளர் பட்டியல்களுக்கு துணைபோன தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தல்கள் மோசடி வாக்காளர் பட்டியலுடன் நடத்தப்பட்டன என்பது உண்மையாக இருந்தால், தேர்தல் ஆணையம் மீது வழக்குத் தொடர வேண்டும், மக்களவையை கலைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சமாஜ்வாடி காட்சியை சேர்ந்த தலைவர் ராம்கோபால் யாதவ் பேசுகையில், "ராகுல் காந்தி புகார் அளித்த பிறகு தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கோருகிறது. 2022 ஆம் ஆண்டில் 18,000 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக சமாஜ்வாதி கட்சி புகாருடன் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தது. ஆனால் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார்.
பீகாரில் வாக்காளர் பட்டியல் அவசரமாக திருத்தம் செய்வது குறித்து ஆளும் கட்சி ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்கவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்தார்.






