

பெங்களூரு:
கர்நாடகாவில் அமைந்துள்ள சித்ரதுர்கா மாவட்டத்தின் மூலகல்முரு தாலுகாவில் அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. உள்நோயாளிகள் படுக்கை பிரிவுகளுடன் கூடிய இந்த மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் சிலர் உள்நோயாளிகளாக அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு இரவுநேரப் பணியில் இருந்த டாக்டர் உள்நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருந்தார். மின்தடை ஏற்பட்ட நிலையில், அங்கே அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளை செல்போனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் பரிசோதனை செய்தார்.
மருத்துவமனை ஊழியர் ஒருவர் செல்போன் டார்ச் லைட்டைப் பிடித்துக் கொண்டு நிற்க, டாக்டர் நோயாளிகளைப் பரிசோதனை செய்யும் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மின்தடை ஏற்பட்ட நிலையிலும் செல்போன் டார்ச் உதவியுடன் சிகிச்சை அளித்த டாக்டரை பாராட்டியும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.