என் மலர்
இந்தியா

24 ஆண்டுகால கொலை வழக்கு: ரவுடி சோட்டா ராஜனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
- சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
- 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது
பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.
இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை கடந்த வருடம் அக்டோபரில் விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவானது.
இதனை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.
சோட்டா ராஜன் 4 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவருக்கு ஏன் தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது? என உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தை எழுப்பியது.
சாட்சிகள் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வரவில்லை. அதனால், பல வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில், வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.






