search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்
    X
    மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்

    21-ந் தேதி பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

    9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 21-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் மாதந்தோறும் மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது, 4-ம் கட்ட தளர்வுகள் அமலில் உள்ளன.

    கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள், இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், பகுதி அளவுக்கு பள்ளிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் 21-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

    ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்


    இதுகுறித்து மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் 21-ந் தேதி முதல், பள்ளிகளின் செயல்பாடுகளை பகுதி அளவுக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தாங்கள் விருப்பப்பட்டால், பள்ளிகளுக்கு வரலாம். பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பெறலாம்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுடன் பள்ளிகளும் தங்களது சொந்த பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளிகளில் எச்சில் துப்பக்கூடாது. ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். கைகளை சோப்பால் அடிக்கடி கழுவ வேண்டும். ஒவ்வொரு மாணவரும் 6 அடி இடைவெளி விட்டு அமர வேண்டும்.

    முக கவசமோ அல்லது முகத்தை முழுமையாக மறைக்கும் தடுப்போ அணிய வேண்டும். தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். தங்களது உடல்நிலையை தாங்களே கண்காணிப்பதுடன், ஏதேனும் உடல்நல குறைவு ஏற்பட்டால், உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

    சாத்தியமான இடங்களில் ‘ஆரோக்ய சேது’ செயலியை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆன்லைன் கல்வி மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வரை, பள்ளிக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

    பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதியுடன்தான் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×