search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஜூன் 7, 8 வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி
    X

    வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஜூன் 7, 8 வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

    அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியுடன் கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 

    இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிரை விட 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 78 ஆயிரத்து 816 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார்.

    அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார். இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு வரும் ராகுல் காந்தியை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில் காங்கிரசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×