search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் - சித்தராமையா பேட்டி
    X

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் - சித்தராமையா பேட்டி

    வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறுகிக் கொண்டே வரும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என கர்நாடகா மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா உறுதியளித்துள்ளார். #Siddaramaiah #ElectionCommission
    மைசூர்:

    கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில்  பாராளுமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.  தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

    இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமையா பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உறுதியானவை அல்ல. விவிபேடுகளிலும் கோளாறுகள்  உள்ளதாக தெரிய வந்துள்ளது. நாட்டின் பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.



    ஆனால், தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. நெதர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் தேர்தலின் பாதுகாப்பு மற்றும் சரியான வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு, பழைய வாக்குச்சீட்டு முறைக்கே  மீண்டும் மாறிவிட்டன.  

    கடந்த 2014ம் ஆண்டு  தேர்தலிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்தன.  அதேப்போல் இந்த தேர்தலிலும் மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. எனினும், இந்த தேர்தலில் தேசிய அளவில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இயலாது.

    இந்திய அரசியலமைப்பு சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலையே வலியுறுத்துகிறது. மேலும் தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், பாரபட்சம் இன்றியும் செயல்பட வேண்டும். பாஜகவிற்கு மக்கள் நிச்சயம் நல்ல பாடத்தை இந்த தேர்தலில் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும்.  

    இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah #ElectionCommission 
    Next Story
    ×