search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா கமிஷனர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகியது சிபிஐ - நாளை விசாரணை
    X

    கொல்கத்தா கமிஷனர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகியது சிபிஐ - நாளை விசாரணை

    கொல்கத்தாவில் போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த விடாமல் தடுத்தது தொடர்பாக, சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #CBI #KolkataCommissioner
    புதுடெல்லி:

    சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.



    அதேசமயம் சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் மெட்ரோ சேனல் அருகே மம்தா பானர்ஜி நேற்று இரவு தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார். மம்தாவின் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

    இந்நிலையில், கொல்கத்தா விவகாரம் தொடர்பாக, சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது.  

    பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஒத்துழைக்க மறுப்பதாகவும், விசாரிக்க சென்றால் தடைகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிரான ஆதாரங்களை நாளை தாக்கல் செய்யும்படி சிபிஐக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்தார்.

    வலுவான ஆதாரங்கள் இருந்தால் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வருந்தும் அளவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். #CBI #KolkataCommissioner
    Next Story
    ×