என் மலர்
செய்திகள்

எனது சாதி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்- ராஜஸ்தான் பெண் மந்திரி பேச்சால் சர்ச்சை
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அசோக் கெலாட் முதல்- மந்திரியாக பொறுப் பேற்றார்.
கெலாட் மந்திரி சபையில் மம்தாபூபேஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை மந்திரியாக உள்ளார். தனி பொறுப்புடன் அவர் இந்த இலாகாவை கவனித்து வருகிறார்.
கெலாட் மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள ஒரே பழங்குடியின உறுப்பினர் மம்தாபூபேஷ் ஆவார். மேலும் அவர் மந்திரி சபையில் உள்ள ஒரே பெண் மந்திரி ஆவார்.
இந்த நிலையில் எனது சாதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்று பெண் மந்திரி மம்தா பூபேஷ் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ரெனி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
எனது சாதிமக்களுக்கு வேலை செய்வதே எனது முதல் பணி. அவர்களை மேம்பாடு அடைய செய்வதற்கே முக்கியத்துவம் அளிப்பேன். எனது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் பலன் அடைய பாடுபடுவேன். இதுவே எனது நோக்கமாக இருக்கும். மற்ற சமூகத்திற்கு இணையாக எனது சாதியினரை கொண்டு வருவேன்.
இவ்வாறு மம்தா பூபேஷ் பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் முகேஷ்பரீக் கூறும்போது, “கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நாட்டில் உள்ள அனைவரும் சமம் என்று கூறி மம்தா பூபேஷ் பதவி ஏற்றார்.
தற்போது அவர் தனது சமூகத்துக்கு முன்னிரிமை அளிப்பேன் என்கிறார். இது தான் காங்கிரசின் நிலைப்பாடும். சாதி வாரியாக மக்களை துண்டாட நினைக்கிறது” என்றார்.
இந்த நிலையில் பெண் மந்திரி மம்தா பூபேஷ் தான் அப்படி பேசவில்லை என்று மறுத்துள்ளார். நாட்டில் உள்ள அனைவரையும் மதிக்கிறேன். அனைவருக்காகவும் பாடுபடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். #MamtaBhupesh #congress #bjp






