என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருட்டு - தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்
    X

    VIDEO: கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருட்டு - தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்

    • எதிர்பாராத விதமான நாங்கள் தோற்ற 7 தொகுதிகளில் கவனம் செலுத்தினோம்.
    • ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது.

    தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இன்று மதியம் டெல்லியில் இதுதொடர்பான சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.

    அதில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல், மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.

    அப்போது பேசிய அவர் " கர்நாடகாவில் 16 இடங்களை வெல்வோம் என்று எங்கள் உள் கருத்துக்கணிப்பு தெரிவித்தது. ஆனால் நாங்கள் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம்.

    எதிர்பாராத விதமான நாங்கள் தோற்ற 7 தொகுதிகளில் கவனம் செலுத்தினோம். அதில் நாங்கள் மகாதேவபுரா என்ற ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்தோம். இந்த மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம்.

    ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் அரியானா தேர்தலில் பார்த்தீர்கள், மத்தியப் பிரதேசத் தேர்தலில் பார்த்தீர்கள். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒன்றைச் சொல்கின்றன. பின்னர் திடீரென்று முடிவு முற்றிலும் மாறுபட்ட திசையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்களுடன் செல்கிறது.

    எனவே, கருத்துக் கணிப்புகள் நமக்கு ஏதோ ஒன்றைக் காட்டுகின்றன. திடீரென்று முடிவு எதிர் திசையில் செல்வதை காண்கிறோம்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து சிறப்பு திருத்தம் மூலம் 65 வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×