search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல்
    X
    தேர்தல்

    வேலூர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு

    பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் நாளை திங்கட்கிழமை நடக்கிறது. ஓட்டு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது.

    இதற்காக 1553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 7500 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 3752 ஓட்டு பதிவு எந்திரங்களும், 1876 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 1876 விவிபேட் எந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

    வாக்கு பதிவு எந்திரம் மற்றும் தேர்தல் பொருட்கள் அனைத்து அந்தந்த தொகுதி தாலுகா அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று அங்கிருந்து வாக்கு பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து ஆயிரத்து 351 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

     

    வேலூர் தொகுதி

    தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை.

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முதல்- அமைச்சர் பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 30 அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குகளை சேகரித்தார்.

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1,600 பேர் கொண்ட 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 ஆயிரம் போலீசாரும், 400 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்றியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. துணை ராணுவத்தினரும் அங்கு பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க 114 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ‘‘உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 57 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ரூ.89 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 890 கிராம் தங்கம், ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 13 கிலோ 800 கிராம் வெள்ளி, 23 ஆயிரத்து 350 லிட்டர் மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆம்பூரில் திருமண மண்டபத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

    அந்த மண்டபத்தில் திருமண ஏற்பாடுகளை செய்திருப்பதாக கூறி சம்பந்தப்பட்ட ஒரு குடும்பத்தினர் மனு அளித்தனர். இதனை ஏற்று, நேற்று மாலை 6 மணி அளவில் தற்காலிகமாக 'சீல்' அகற்றப்பட்டு திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் மீண்டும் மண்டபத்துக்கு 'சீல்' வைக்கப்பட உள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது.

    வேலூரில் அ.தி.மு.க. சார்பில் இறுதிகட்ட பிரசாரமாக தொரப்பாடியில் தொடங்கி சத்துவாச்சாரி வரை வாகன பேரணி நடந்தது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம், அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    தி.மு.க. சார்பில் வேலூர் மண்டித் தெருவில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கே.சி.அழகிரி, வைகோ, முத்தரசன், ரங்கராஜன், திருமாவளவன், காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, பாலகிருஷ்ணன், பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் இருசக்கர வாகன பேரணி நடந்தது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வருகிற 9-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகிறது. 9 மணியில் இருந்து முன்னணி நிலவரம் தெரியவரும்.

    Next Story
    ×