search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவில் 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி
    X

    அதிமுகவில் 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
    சென்னை:

    மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பதவி ஏற்க உள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல வெளிநாட்டுத் தலைவர்கள் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வர இருப்பதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே புதிய அமைச்சரவையில் யார்- யாரை மத்திய மந்திரிகளாக சேர்த்துக் கொள்ளலாம் என்று மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் 303 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால் மத்திய மந்திரி சபையில் முக்கியமான, பெரும்பாலான மந்திரிகள் பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

    என்றாலும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியினரையும் மத்திய மந்திரி சபையில் இடம்பெற செய்ய மோடி முடிவு செய்துள்ளார். எனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., அகாலி தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

    பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா 18 எம்.பி.க்களை வைத்துள்ளது. கடந்த தடவை 3 மந்திரி பதவி பெற்ற சிவசேனா இந்த தடவை 4 மந்திரி பதவிகளை கேட்கிறது. 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், அப்னா தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடன்ட்ஸ் யூனியன், ராஜஸ்தானில் லோக் தந்திரிக் கட்சி, நாகலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி, மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் வென்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் 38 இடங்களில் அ.தி.மு.க. மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அ.தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முடிவு செய்துள்ளார். அந்த ஒருவர் யார் என்பதை தெரிவிக்கும்படி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.


    இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் 2 மத்திய மந்திரி பதவிகளை தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இரு மந்திரி பதவிகளில் ஒரு பதவி, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலாகாவை பெற காய்களை நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வைத்திலிங்கம் மத்திய மந்திரி பதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மேல்- சபையில் எம்.பி. ஆக இருக்கும் வைத்திலிங்கத்தை மத்திய மந்திரியாக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் மேல்-சபையான மாநிலங்கள் அவையில் தற்போது அ.தி.மு.க.வுக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற ஜூலை மாதம் மேல்-சபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும்.

    டெல்லி மேல்-சபையில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் இல்லை. எனவே மேல்-சபையில் அ.தி.மு.க.வின் தயவு பாரதிய ஜனதாவுக்கு தேவை என்ற நிலை உள்ளது. மேல்- சபையில் 12 எம்.பி.க்களை வைத்திருப்பதால் அ.தி.மு.க.வுக்கு இரண்டு மத்திய மந்திரிகள் தருவதுதான் நியாயமானதாக இருக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த வாதத்தை பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க.வுக்கு இரு மந்திரி பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் இருவரும் மந்திரி ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜாங்க இலாகா கொடுக்கப்படலாம்.

    இதற்கிடையே டாக்டர் அன்புமணியையும் மேல்- சபை எம்.பி. என்ற அந்தஸ்துடன் மத்திய மந்திரியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மீண்டும் அவருக்கு சுகாதாரத் துறையை பெற காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால் பா.ம.க.வின் விருப்பத்தை பாரதிய ஜனதா நிறைவேற்றுமா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
    Next Story
    ×