search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் - புதுவையில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: நாளை மனுக்கள் பரிசீலனை
    X

    தமிழகம் - புதுவையில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: நாளை மனுக்கள் பரிசீலனை

    தமிழகம் மற்றும் புதுவையில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. #LokSabhaElections2019 #Nomination
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி 2-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 19-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. மனுதாக்கலுக்கு 26-ந்தேதி (இன்று) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    23, 24-ந்தேதிகளில் (சனி, ஞாயிறு) வேட்பு மனுதாக்கல் செய்யப்படவில்லை. இதனால் வேட்பு மனுதாக்கலுக்கு 6 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

    முதல் 2 நாட்கள் வேட்பு மனுதாக்கல் மந்தமாக இருந்தது. வியாழன், வெள்ளிக் கிழமைகளில் மனுதாக்கலில் விறுவிறுப்பு ஏற்பட்டது. நேற்றும் இன்றும் கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கலால் தேர்தல் களம் சூடுபிடித்தது.



    நேற்று மாலை வரை நிலவரப்படி தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 613 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதிக பட்சமாக தென்சென்னை தொகுதியில் 28 பேர், திருவண்ணாமலையில் 27 பேர், சேலத்தில் 25 பேர், நாமக்கல்லில் 24 பேர், ஸ்ரீபெரும்புதூர், திருநெல்வேலியில் தலா 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    வேலூர், விழுப்புரம், நீலகிரி, கடலூர், விருதுநகர், ராமநாதபுரம் தொகுதிகளில் வேட்பு மனுதாக்கல் சற்று குறைவாக இருந்தது.

    18 சட்டசபை தொகுதிகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தல்களில் போட்டியிடவும் கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பான மனுதாக்கல் நடந்தது. 18 தொகுதிகளிலும் நேற்று மாலை வரை 232 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிக பட்சமாக 36 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

    பூந்தமல்லி, அரூர், மானா மதுரை சட்டசபை தொகுதிகளில் மனுதாக்கல் மந்தமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் தேர்தலில் போட்டியிட அதிக ஆர்வம் இல்லாத நிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் நேற்று மாலை வரை தாக்கலான 613 மனுக்களில் 75 பேர் மட்டுமே பெண்கள் ஆவார்கள். 2 பேர் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள். அதுபோல 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு மனு செய்துள்ள 232 பேரில் 38 பேர் மட்டுமே பெண்கள் என்று தெரியவந்துள்ளது.

    வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளான இன்று வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் எண்ணிக்கை 650 வரை உயர வாய்ப்புள்ளது. அதுபோல 18 தொகுதி இடைத்தேர்தல்களில் களம் இறங்குபவர்கள் எண்ணிக்கையும் 250 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பு மனுதாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். இன்று பிற்பகல் 3 மணியுடன் மனுதாக்கல் முடிந்தது. நாளை (27-ந்தேதி) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

    வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (28, 29-ந்தேதி) 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. மாற்று வேட்பாளர்கள் அனைவரும் அன்றைய தினம் தங்களது வேட்புமனுவைத் திரும்ப பெறுவார்கள். 29-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை இதற்கான அவகாசம் உள்ளது.

    29-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு பிறகு வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள். அன்றைய தினமே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களுக்கு உரிய சின்னங்களும், மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கி அறிவிக்கப்படும்.

    அதன்பிறகே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு விபரம் தெரியவரும். தேர்தல் பிரசாரத்துக்கு 30-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை 18 நாட்கள் அவகாசம் உள்ளது. 16-ந்தேதி பிரசார ஓயும். ஏப்ரல் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே மாதம் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #LokSabhaElections2019 #Nomination
    Next Story
    ×