search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை சாகுபடிக்காக காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்- ராமதாஸ்
    X

    குறுவை சாகுபடிக்காக காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்- ராமதாஸ்

    • மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டால், 15-ஆம் நாள் கல்லணைக்கு தண்ணீர் வந்து விடும்.
    • குறுவை சாகுபடி உழவர்களுக்கு லாபமாக அமைவது உறுதி செய்யப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டால், 15-ஆம் நாள் கல்லணைக்கு தண்ணீர் வந்து விடும். கல்லணையிலிருந்து ஜூன் 15 அல்லது 16-ஆம் நாள் காவிரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படக் கூடும். அதற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் தூர் வாரும் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையான பகுதிகளில் இன்னும் பாதியளவு பணிகள் கூட நிறைவடையவில்லை. இதே வேகத்தில் பணிகள் நடைபெற்றால், கல்லணை திறப்பதற்கு முன்பாக தூர்வாரும் பணிகள் நிறைவடையாது.

    மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஏறக்குறைய 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் என நான்கு மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

    காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த சிக்கலில் நீர்வளத்துறை அமைச்சர் தலையிட்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மற்றொருபுறம், காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்துறை மூலம் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் உழவர்களுக்கு குறுகிய கால கடன்கள் தடையின்றி கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் குறுவை சாகுபடி உழவர்களுக்கு லாபமாக அமைவது உறுதி செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×