search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசை கண்டித்து உடுமலை-அவினாசியில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம் - திரளானோர் பங்கேற்பு
    X

    உடுமலையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள். அவினாசியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற காட்சி. 

    தி.மு.க. அரசை கண்டித்து உடுமலை-அவினாசியில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம் - திரளானோர் பங்கேற்பு

    • தி.மு.க. அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பெட்ரோல், டீசல், மீதான வாட் வரியை குறைக்கவில்லை.
    • தமிழகம் முழுவதும் நடைபெறும் லாக் - அப் மரணங்கள், கொலை கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    மடத்துக்குளம் :

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி தலைமையில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு உடுமலை நகரத்தலைவர் எம்.கண்ணாயிரம் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பி.கனகசபாபதி, கர்னல் பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். உண்ணாவிரத போராட்டத்தின் போது திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பெட்ரோல், டீசல், மீதான வாட் வரியை குறைக்கவில்லை. மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படவில்லை.தமிழகம் முழுவதும் நடைபெறும் லாக் - அப் மரணங்கள், கொலை கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசு போக்குவரத்துக்கு கழக ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்வீட் பாக்ஸ், தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஹெல்த் மிக்ஸ், பிஜிஆர் எனர்ஜி, ஜி ஸ்கொயர் உள்ளிட்ட ஊழல்களை கண்டித்து இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

    மேலும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு செய்யாமல், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா, போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சட்ட விரோத விற்பனையை அதிகரித்துக் கொண்டிருப்பதை கண்டித்தும் , தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்காததை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் தொடரும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    உண்ணாவிரத போராட்டத்தில் உடுமலை நகர முன்னாள் தலைவர் பி.என்.ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஆடிட்டர் ஏ.வடுகநாதன், முன்னாள் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் குரு பிரசாத், மாவட்ட மகளிர் அணி தலைவர் கார்த்திகா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் விஜய் கண்ணா, பிரச்சார பிரிவு தலைவர் சி.ஆர்.சின்ராஜ், மாவட்ட பட்டியல் அணி தலைவர் சித்தார்த், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பாலகுரு, மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் விஷ்ணு, உடுமலை நகர பொருளாளர் எம்.ஐயப்பன் உள்ளிட்ட மாவட்ட, மண்டல, கிளை கழக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரே தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட தலைவர் . செந்தில்வேல் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாநில விவசாய அணி தலைவர் ஜி. கே. நாகராஜ் மற்றும் முன்னாள் எம்.பி., கார்வேந்தன் மற்றும் மாவட்ட,மாநில, ஒன்றிய நகர, அணிப்பிரிவு நிர்வாகிகள், 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×