என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடம் அல்லாளபுரம் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்
- 5ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகவிழா இன்று நடைபெற்றது. அதன்படி நேற்று யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 4ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 5ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதற்கிடையே நேற்று அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வருகை தந்தார் .அவருக்கு கோவில் விழா குழுவினர் சார்பில் பரிவட்டம் கட்டி பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்று 8ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 5.15 மணி முதல் உண்ணாமுலை அம்மன், உலகேஸ்வரர், கரிய காளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி, பெருசலங்கை ஆட்டம், பவளக்கொடி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.






