search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூவர்ண விளக்குகளால் மணிமண்டபங்கள் ஜொலிக்கின்றன- நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம்- பாதுகாப்பு பணியில் 4,500 போலீசார்

    • பாளை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார்.
    • தென்காசி மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை:

    நாளை(திங்கட்கிழமை) சுதந்திரதினம் கொண்டாடப்படுவதை–யொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கலெக்டர்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளனர்.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நாளை காலை 9.05 மணிக்கு பாளை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதனால் அங்கு போலீசாரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், சாகசங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசார், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள், நற்சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றையும் கலெக்டர் விஷ்ணு வழங்குகிறார்.

    போலீஸ் பாதுகாப்பு

    சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், கூடங்குளம் அணு மின் நிலையம், பணகுடி இஸ்ரோ மையம் உள்பட அனைத்து இடங்களிலும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகர பகுதியில் நெல்லையப்பர் கோவில் உள்பட முக்கிய கோவில்கள், கல்லூரிகள், பஸ் மற்றும் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின்பேரில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்காசி ஐசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கலெக்டர் ஆகாஷ் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார்.

    இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அணை பகுதிகள், குற்றாலம் அருவிகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலமாக போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் பொதுமக்கள் தேசிய கொடி ஏற்றி வைத்துள்ளனர். அமுத பெருவிழாவையொட்டி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டனத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மணிமண்டபங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடியில் தருவை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    Next Story
    ×