search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம்: தற்கொலை நாடகமாடிய கணவர்-மாமியார் கைது
    X

    இளம்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம்: தற்கொலை நாடகமாடிய கணவர்-மாமியார் கைது

    • லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது.

    தாம்பரம் :

    தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது32), இவரது மனைவி லோகப்பிரியா (26), இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கோகுல கண்ணன் மனைவி லோகப்பிரியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகப்பிரியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு கோகுல கண்ணன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தகவல் தெரிவித்தனர். சோமங்கலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து மணிமங்கலம் உதவி ஆணையாளர் ரவி தலைமையிலான போலீசார் லோக பிரியாவின் கணவர் கோகுலகண்ணன் மற்றும் அவரது மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது. இதற்கு அவரது தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்து உள்ளார். இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் போலீசாரிடம் கூறும்போது, சம்பவத்தன்று வரதட்சணை தொடர்பாக மனைவி லோகப்பிரியாவுடன் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை தாக்கினேன். மேலும் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.பின்னர் கொலையை மறைக்க லோகப்பிரியாவின் உடலை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினோம். இதற்கு தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்தார் என்று கூறிஉள்ளார். இதையடுத்து கோகுலகிருஷ்ணன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வரதட்சணை கேட்டு தர மறுத்ததால் மனைவியை கணவரே கொலை செய்து விட்டு தற்கொலைநாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×