search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுராந்தகம் அருகே அரசு பஸ்கள் மோதல்- ஒருவர் பலி
    X

    மதுராந்தகம் அருகே அரசு பஸ்கள் மோதல்- ஒருவர் பலி

    • பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • பலியான அசோக்குமார் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    மதுராந்தகம்:

    திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    காலை 5.30 மணியளவில் அரசு பஸ் மதுராந்தகம் அருகே உள்ள தபால் மேடு என்ற இடத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது லேசாக மழை பெய்தது.

    இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் திடீரென முன்னாள் சென்று கொண்டு இருந்த திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் திருவண்ணாமலையில் இருந்து வந்த அரசு பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. திருநெல்வேலியில் இருந்து வந்த பஸ்சின் பின்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் திருவாரூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் கணேஷ் நகரை சேர்ந்த அசோக்குமார் (வயது 46) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த திருவண்ணாமலை போகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன், சென்னையைச் சேர்ந்த சதீஷ், சைதாப்பேட்டை கேபி கார்டன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரவண சங்கர், மாரியப்பன், சென்னை சூளையை சேர்ந்த வினோத் குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான அசோக்குமார் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    அதிகாலை நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.

    மேலும் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்த 2 பஸ்களையும் அப்புறப்படுத்துவதற்கு காலதாமதமானதால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×