search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
    X

    கொள்ளையடிக்க முயற்சி செய்யப்பட்ட ஏ.டி.எம். மையம். கைதான கார்த்தி.

    குடியாத்தத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    கடந்த மாதம் திருவண்ணாமலையில் ஏடிஎம் எந்திரங்கள் தொடர்ச்சியாக உடைக்கப்பட்டு ரூ.73 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கியது.

    இதனைத் தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தினம்தோறும் இரவு வேலைகளில் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் இருந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் பக்கத்திலேயே வங்கிகள் உள்ளன.

    அதில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள ஏடிஎம் மையத்தை இன்று அதிகாலை மர்மநபர் உள்ளே புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து தன் கையில் இருந்த சுத்தியலால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் அந்த வழியாக சென்றனர். அப்போது ஏடிஎம் எந்திரம் உள்ள இடத்தில் உள்ளே ஒருவர் இருப்பதை கண்டதும் சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பார்த்தபோது கையில் சுத்தியலுடன் வாலிபர் ஒருவர் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்தார்.

    சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் லட்சுமி அவனை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏடிஎம் ஏந்திரத்தை உடைக்க முயற்சி செய்தவர் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் பின்புறம் உள்ள நரசிம்மர் கோவில் தெருவை சேர்ந்த முரளி மகன் கார்த்தி (வயது 24) என்றும் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து அவரிடமிருந்து சுத்தியல் கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு ஏடிஎம் கொள்ளை முயற்சியை தடுத்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசாரை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

    Next Story
    ×