என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகம் எதிரே குழந்தைகளுடன் பெண் திடீர் போராட்டம்
- சொத்துக்களை உறவினர்கள் அபகரித்ததாக குறைதீர்க்கும் முகாமில் கதறல்
- நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவர்களது கோரிக்கைகளை தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள காந்திபுரம் 1-வது வீதியை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை தனது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று பெண்ணை அகற்ற முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எங்களது குடும்ப சொத்து 8½ ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை எனக்குத் தெரியாமல் எனது உறவினர்கள் சிலர் சேர்ந்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தி.மு.க பிரமுகருக்கு விற்று விட்டனர்.
அந்த இடத்தில் எனக்கு பங்கு வர வேண்டும். ஆனால் எனக்கு எந்தவித பங்கும் தரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை. 3 ஆண்டுகளாக தொட ர்ந்து மனு அளித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வர வேண்டிய பங்கை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி மனு அளிக்க அந்த பெண்ணை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






