

நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இலங்கை வாலிபர் ஜாய்(வயது 35) என்பவர், தனது குடும்பத்தினருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி ரகளை செய்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வாசலின் இருபுறமும் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்யும் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை சோதனை செய்யப்பட்ட பின்னரும், மனு அளிக்க வரும் அனைவரும் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வாசலில் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாநகர தலைமை இடத்து துணை கமிஷனர் அனிதா தலைமையில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பாளை உதவி கமிஷனர் பிரதீப் மேற்பா ர்வையில், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.