search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரபத்திரசாமி கோவிலில் சிவராத்திரி விழா-தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
    X

    வீரபத்திரசாமி கோவிலில் சிவராத்திரி விழா-தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

    • ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கும்.
    • ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ளது பூச்சியூர் கிராமம்.

    இந்த கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபத்திரசாமி, மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கும்.

    இதில் இந்த கிராமத்தை சுற்றி இருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டும் மகா சிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவராத்திரியையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இன்று அதிகாலை மகாலட்சுமி சுவாமி முன்பாக பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து கோவில் பூசாரி வீரபத்திர சுவாமி முன்பு கூர்மையான ஆணிகள் பொருத்திய காலணிகளை அணிந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தார்.

    வேட்டைக்காரசாமி ஊர்வலத்தின் போது, பூசாரி வரும் பாதையில், பெண்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற மனதில் வேண்டியபடி, தரையில் படுத்துக் கொள்வர்.

    ஆணிக்காலணி அணிந்த பூசாரி நடந்து வருவார். பூசாரியின் காலடி பட்டால், கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பெண்களின் நம்பிக்கை. ஆனால் தற்போது இதற்கு அனுமதி இல்லை என்பதாலும், நீதிமன்ற தடை விதித்ததாலும் கடந்த 14 ஆண்டுகளாக முள் படுக்கை எனும் ஆணி காலணி அணிந்து, பூசாரி நடந்து செல்லும் போது பெண்கள் யாரும் தரையில் படுப்பதில்லை.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கூறும்போது, கடந்த 400 ஆண்டுகளாக நடந்து வரும் திருவிழாவில் வேண்டுதலுக்காக நடைபெறும் இந்நிகழ்ச்சியை தடை செய்ததை ரத்து செய்து பாரம்பரிய நிகழ்ச்சியை நடத்த அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த விழாவில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×