என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ரூ.109.71 கோடி மதிப்பில், 7 தளங்கள் கொண்ட கலெக்டர் அலுவலகம்
    • 21-ந் தேதி விழா நடக்கிறது.

    திருப்பத்துார்:

    ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு திருப்பத்துார் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவானது.

    இதனைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான அலுவலகங்கள் தனியார் கட்டடங்கள் மற்றும் அரசு கட்டடங்களில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 28க்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார்ந்த மாவட்ட அளவிலான அலுவலகங்கள் செயல்படும் வகையில் ரூ.109.71 கோடி மதிப்பில், 7 தளங்கள் கொண்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணி நடந்து வருகிறது.

    இந்த பணி விரைவில் முடிந்து வரும் 21ம் தேதி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்துார் மாவட்டத்திற்கு வருகிறார்.

    இது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நேற்று நடந்தது. சி.என். அண்ணாதுரை எம்பி, எம்எல்ஏக்கள் க. தேவராஜி (ஜோலார்பேட்டை), ஏ.நல்லதம்பி (திருப்பத்துார்), சி.வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

    திருப்பத்துார் மாவட்டத்தில் நடக்கும் முதல்வர் நிகழ்ச்சியில், வருவாய் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பால்வளத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, வேலைவாய்ப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பழங்குடியினர் நலத்துறை, சுகாதாரத்துறை, நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம், தாட்கோ, மின்சாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    மேலும், கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.அரசு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக பணியாற்ற வேண்டும். அனைத்து துறை சார்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஆணைகளை தயாரிக்க வேண்டும். துறை சார்ந்த அலுவலர்கள் பேரூராட்சி., நகராட்சி ஊராட்சி ஒன்றிய, கிராமப்பகுதியில் உள்ள பயனாளிகளின் விவரங்களை தனித் தனியாக பட்டியலை தயார் செய்து கலெக்டரிடம் வழங்க வேண்டும்.

    விழா மேடை அருகில் திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள பெருமைகளை பறைசாற்றும் வகையில் கண்காட்சி அமைக்க வேண்டும். ஆம்பூர், வாணியம்பாடி, மற்றும் திருப்பத்துார் நுழைவு வாயிலில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். கலெக்டர் அலுவலகம் மற்றும் விழா நடைபெறும் இடத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்.

    குறிப்பிட்ட பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கப்பட்ட பின்பு அனைத்து பயனாளிகளுக்கும் அங்கேயே வழங்க வேண்டும்.எனவே அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குநர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதனைத்தொடர்ந்து ரூ.109.71 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருப்பத்துார் கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் பிரதான நுழைவாயில் சாலைகள் போடுவது குறித்தும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புல்வெளி அமைத்தல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார், உடன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், ஜிஎம்எஸ். செந்தில்குமார், திட்ட இயக்குனர் எஸ் பி முத்து., உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் அபேஸ்
    • கொள்ளையன் வெளியே ஓடி சென்றார்.

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த லட்சுமிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சேட்டு விவசாயி இவரது மனைவி சுதா இவர்கள் இருவரும் தனது நிலத்தில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு வழக்கம் போல தூங்க சென்றனர்.

    அவர்களது வீட்டின் பின்புற கதவை மர்ம கும்பல் உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். சேட்டு வீட்டில் சத்தம் கேட்தால் பக்கத்து வீடான ஜெயபிரகாஷ் என்பவர் எழுந்து வந்து பார்த்துள்ளார்.

    அப்போது சேட்டு வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளிேய ஓடி சென்றார்.அவரை பார்த்ததும் ெஜயபிரகாஷ் கூச்சலிட்டார். மர்ம நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். பின்னர் சேட்டு வீட்டில் திருட்டு போன தெரியவந்தது. போலீசில் பாணாவரம் சேட்டு புகார் அளித்தார்.

    போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஏற்கனவே ஒரு மகள் இறந்து விட்டார்.
    • பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி ராணி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் ஏற்கனவே ஒரு மகள் இறந்து விட்டார். இந்த நிலையில் இன்னொரு மகளான நேத்ரா (வயது 25) என்பவரை பாம்பு கடித்துள்ளது.

    சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு நேத்ராவுக்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு.
    • தமிழக அரசின் ஓராண்டு சாதனை புத்தகம் வெளியீடு. தமிழக அரசின் ஓராண்டு சாதனை புத்தகம் வெளியீடு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.

    இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர், மாவட்ட ஊராட்சி செயலர், நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், ஆகியோர் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி நன்றி கூறினார். முன்னதாக தமிழக அரசின் ஓராண்டில் செய்த சாதனைகள் குறித்த புத்தகத்தை அமைச்சர் காந்தி வெளியிட்டார்.

    ×